திங்கள், ஜூலை 17

கண்ணகிக்கும் காமம் உண்டு


அன்பின் புதிய வாசகர்கள்  பேசாப் பொருளா காமம்   அறிமுகப்பதிவு , 2 ஆம் பாகம்    வாசித்தப் பிறகு இப்பதிவைத்  தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி.

* * * * *

ஆலோசனைக்காக என்னிடம் வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகுந்த தயக்கத்திற்கு பிறகு  உணர்ச்சிகளால் தனக்கு  ஏற்படும் அவஸ்தையை கண்கலங்க கூறத் தொடங்கினார்... இதுவரை யாரிடமும் இதை பற்றி  சொல்லாத அவர் எனது தாம்பத்தியம் பதிவுகளை படித்தப்  பிறகு என்னை நாடி இருக்கிறார் ... அவரது கண்ணீர்  தன்னை விட வயது குறைந்த பெண்ணிடம் இதை சொல்கிறோமோ என்பதால் இருக்கலாமே தவிர பிரச்சனைக்கானது அல்ல என்பது புரிந்தது.    வசதிக்கு குறைவில்லாத வீடு, இந்த மாத லாபத்தை இரட்டிப்பாக்க வேறு எதில் இன்வெஸ்ட் பண்ணலாம் என்ற சிந்தனையில் தூங்க வரும் கணவர். முதுகு காட்டி உறங்கும் கணவரை பார்த்தபடி தூங்க முயற்சி செய்யும் ஒவ்வொரு இரவும் தூக்கமின்றியே கழிந்திருக்கிறது. எண்ணத்தை வேறு பக்கம் திருப்பி கடவுள் பூஜை தியானம் எல்லாம் முயற்சித்தும் தோல்வியே. உணர்ச்சிகளின் அதி உந்துதலில் ஏற்படுகிற  'ஆத்திரத்தில் உடல் உறுப்புகளை அப்படியே பிச்சி எறிஞ்சிடலாம்னு வெறி வருது, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் சராசரி பெண் இல்லையா எனக்கு காமவெறி பிடிச்சிருக்கா' என கேட்டவர் இறுதியாக 'நானும் கண்ணகிதான் மேடம், இவரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினைச்சது இல்லை'  என்று முடித்து மௌனமானபோது பல பெண்களின் பிரதிநிதியாக தான் எனக்கு அவர் தோன்றினார்.

'எல்லோருக்கும் இது இயல்புதான்  நீங்க உடலளவில் மிக  ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அவ்வளவுதான் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை'  என்று சமாதானம் செய்து சில முக்கிய உபாயங்களைச்  சொல்லி அனுப்பினேன்.
பணம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் எல்லாம் இருந்தும்/இல்லாமலும்  உணர்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் மல்லுகட்டுகிறார்கள் பெண்கள். வெளியே சொல்ல வாய்ப்பில்லாததால் பிறருக்கு தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலான கணவர்கள்  மனைவியின் தேவையறிந்து நடந்துக் கொள்வதில்லை.  உணர்ச்சி ஏற்பட்டாலும் கணவன் தப்பா எடுத்துப்பாரோ   என தனக்குள் வைத்து புழுங்கி கொள்கிறாள்... கண்ணகி இல்லை என்றாகிவிடுவோமோ என்ற பயம் மனைவிகளுக்கு ! தனது மனைவி கண்ணகி மாதிரி இருக்கவேண்டும் என்பது  ஆண்களின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்டது.

கண்ணகி ஒரு டிஸைன்! பத்தினி  ஒரு பிராண்ட் !!  

சிறு வயதில் காலில் கட்டப்பட்ட  சிறிய  சங்கிலியை வளர்ந்த  பின்னும்  உடைக்கத்    தெரியாத கோவில் யானையின்  நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் நிலை. பிறந்தது  முதல் 'நீ இப்படி நடக்கணும்' என்ற சமூக சங்கலியால் கட்டி பயிற்றுவிக்கப்பட்ட  பெண்ணால் வளர்ந்து பின்னும் தன்னால் இச்சங்கிலியை உடைத்து வெளியேற இயலாது என்றே இருந்துவிடுகிறாள். அதிலும் குறிப்பாக தனது உடலுக்குள் நிகழும்/எழும்   உணர்வுகளையும் அலட்சியப் படுத்தி அடக்கிவிடுகிறாள்...அதன் கொடிய விளைவுகளை அவளும் அறிவதில்லை  சமூகமும் கண்டுக் கொள்வதில்லை... பிறன்மனை செய்திகள் வெளிவந்ததும் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது...இந்த சமூகத்தால் அதிகபட்சம் இதை மட்டும்தான் செய்யமுடியும்...தீர்வுகளைத்  தேடத் தெரியாத முட்டாள் சமூகம் இது !

உணர்ச்சிகளுடன் போராடிப் போராடி தோற்று தனக்குள்ளேயே சுருண்டு  கணவனிடம் கூட தெரிவிக்க தைரியமற்று ஏதோ பெயருக்கு வாழ்ந்து ஒருநாள் செத்தேப்  போகிறாள். தைரியம் உள்ள பெண்களும் கண்ணகி கான்செப்ட்டுக்கு பிரச்சனையாகி விடும் என்று 'மறைவில் நடத்தி' பத்தினி பிராண்ட்டை காத்துக் கொள்கிறார்கள்.  தங்களுக்கு பிடித்த மாதிரி வாழும்  பெண்கள் மிக மிக சந்தோசமாக வாழ்கிறார்கள், மாறாக வாழ்வதைப்  போலவே  நடிக்கிறார்கள் கண்ணகிகள் !

ஒரிஜினல் கண்ணகி கதையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தாம்பத்தியம் என்றால் என்னவென்று முழுமையாக அறிவதற்குள் உணர்வுகளைத்  தூண்டிவிட்டவன் பிரிந்துச்  சென்றுவிடுகிறான். அதன் பிறகான ஒவ்வொரு இரவையும் இன்னதென்று தெரியாத உணர்ச்சிக்  குவியலுக்குள் புதையுண்டு விடியலில் உள்ளுக்குள் கனன்ற நெருப்பை நீரூற்றி அணைத்திருக்கக் கூடும்.  கணவன் வேறோருவளிடம் இருக்கிறான் அவளிடம் இன்பம் துய்க்கிறான்  என்பதும்  உணர்வுகளை அதிகப்படுத்தி இருக்கலாம், (இருந்தும் அத்தனையையும் உள்ளுக்குள் மறைத்து பிறந்தவீடு போதித்தவைகளை அடிப்பிறலாமல் நிறைவேற்றி இருக்கிறாள்)  ஒருநாள் திரும்பி வந்தவனைக்  கண்டு குதூகலித்த அவளது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு,  அடுத்ததாக  கோவலன் மாண்டதும் இனி வரவே வழியில்லை என்றானப் பின் ஒட்டுமொத்த உடலியக்கமும் ஸ்தம்பித்து வெறுப்பை உமிழ அது கட்டுக்கடங்காத பெரும் நெருப்பாக மாறி இருக்கலாம்... ஆம் மதுரையை எரித்தது கண்ணகியின் காமமாகக்  கூட இருக்கலாம்,   ஆனால் கற்பு என்று சொன்னால் தானே  கண்ணகி தெய்வம் ஆவாள்.  ஆணாதிக்கச்  சமூகம் தனது  வசதிக்காக சிலப்பதிகாரம் எழுத  நமது சமூகம்  'புனிதம்' என்ற போர்வையை போர்த்திக் கொண்டது.   கோவலன் ஒருவனை மட்டுமே தனக்கானவனாக வரித்து காமத்தை தனக்குள் எரித்து அவன் நினைவாக மட்டுமே வாழ்ந்து மறைந்த தாசிக்குலத்தில் பிறந்த மாதவியை பத்தினி லிஸ்டில் சேர்க்க ஏனோ நம்மால் முடியவில்லை!?

கண்ணகி விசயத்தில்  இப்படியும் நடந்திருக்கலாம், மாதவியிடம் சென்று திரும்பிய கோவலனை ஏற்றுக் கொண்டதால் தான் கண்ணகி பத்தினியானாள், கண்ணகி பத்தினியாக வேண்டும் என்றால் மாதவி என்றொருவள் தேவை,  ஆண் செய்யும் துரோகத்தை மனைவி என்பவள் ஏற்றுக்  கொண்டாக வேண்டும் என்பதை பெண்களின் மனதில் பதிய வைக்க கிடைத்தவள் தான் இந்த கண்ணகி. நடக்கவே முடியவில்லை என்றாலும் கூடையில் சுமந்துச்  சென்று தாசி வீட்டில் விட்டால் தான் அவள் பத்தினி.  பெண்ணை தெய்வமாக்கி மூலையில் உட்கார வைப்பதன் பின்னணியில் இருப்பது ஆணின் பெருந்தன்மை அல்ல  ஆதி பயம்.

எல்லா காலத்திலும் கண்ணகிகள் இருக்கிறார்கள் , என்னவொன்று அவர்கள் மதுரைக்கு மாற்றாக தன்னையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் உடன் இருப்பவர்களையும் சேர்த்து எரித்து விடுகிறார்கள்... ஏற்படும் அத்தனை சமூக அவலங்களுக்கும் இது மறைமுகக் காரணமாகிறது. குழந்தை வளர்ப்பில் இருந்து அவளது பொறுப்பில் இருக்கும் அத்தனையிலும் குளறுப்படிகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியம் குறைந்த வீடுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் நோயாளியாக்கி விடுகிறது.

கற்பு என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கு 'நெறி' வகுத்தவர்கள்  கண்டிப்பாக பெண்ணுடன் அன்னியோனியமாக சரிக்கு சமமான உரிமையை பகிர்ந்து வாழ்ந்தவர்களாக இருக்க முடியாது. கண்ணகி  சென்று, திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோவலன்கள் இருந்தால் அதுவே சம  தர்ம சமூகம் !

பெண்களின் காமம் பேசப்படுவதே இல்லை ஆண்களின் காமம் 'அவன் ஆம்பள அப்படித்தான்' என்பதில் மறைந்துவிடும். ஆனால் பெண்களின் காமம் வலுக்கட்டாயமாக ஆணுக்குள் அடக்கிவைக்கப் படுகிறது. அவனை மீறி வெளிப்படக் கூடாது அப்படி வெளிப்பட்டால் அது காம வெறி, அவளுக்கு பெயர் வேசி. நடுஇரவில் 'இப்படித்   திரும்பு' என்று கணவன் சொல்வதைப்  போல மனைவி சொல்ல முடியாது. காமத்தை மறைக்கத் தெரிந்தவள் மட்டுமே பத்தினி.   'அவனுக்கு தேவை என்றால் படு' என்பதே காலக்காலமாக பெண்ணின் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. இதில் இருந்து வெளிவர பெண்ணும் விரும்புவதில்லை. சில பெண்கள் மட்டும் ஆணுக்கு கட்டுப்பட்டவள் இல்லை நான் சுதந்திரமானவள் என பிரகடனப்படுத்தி பெண்ணியவாதியாகிறார்கள். வெகுசீக்கிரத்தில் அவர்களும் பெண்ணுக்கு வியாதியாகி விடுகிறார்கள் !!??

குழந்தை வளர்ப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் பெண்களின் காமம் கரைந்துவிடுவதாக எண்ணும் ஆண்களும் ஏன் பெண்களுமே  மாறவேண்டும். ஆண் பெண் இருவருமே தனது தேவை எது என உணர்த்த வேண்டும் பரஸ்பர தேவைகளை வெளிப்படுத்தி திருப்தி அடைவதுதான் ஒரு நல்ல தாம்பத்தியம். சந்தோசமான தம்பதிகளிடம் வளரும் குழந்தைகளால் தான் நல்ல வீடும் நல்ல சமூகமும் உண்டாகும். 

அடக்கி வைக்கப்பட்ட பெண்ணின்  உணர்ச்சிகள்  கண்டிப்பாக ஒரு கட்டத்தில் வெளிப் பட்டேத் தீரும் ஆனால் அது எதிர்கொள்ளவே முடியாத உக்கிர கோபம் வெறுப்பு எரிச்சல் கலந்த  கடுஞ்சொற்களாக/வாதங்களாக  இருக்கும்.  எப்போதும் அமைதியாக இருப்பவள் ஏன் இன்று இவ்வாறு  நடக்கிறாள் என்ற குழப்பத்தில் ஆண் அதிர்ந்துப்  போவான், கூடவே அந்த பெண்ணுக்கும் தான் ஏன் இப்படி நடக்கிறோம் என்பது தெரியாதது தான் உச்சபட்ச பரிதாபம்.  விவாகரத்து கள்ளக்காதல் முதல் மாமியார் மருமகள் பிரச்சனைகள் வரை ஏதோ ஒரு வடிவத்தில் அங்கே பெண்களின் காமம் மறைந்திருக்கிறது. மனைவியை புரிந்து மதித்து உணர்வுகளை  திருப்திப்படுத்தும் ஆண்  இருக்கும் வீட்டில் அதே ஆண் சகல சந்தோசங்களையும் அனுபவிக்கிறான். அவன் வெளி விடும் ஒவ்வொரு மூச்சும் சந்தோஷத் தூறலாய் மழையாய் அந்த வீட்டை மூழ்கடிக்கும்.

மனைவிக்கும்  நடு இரவில் விழிப்பு ஏற்படும் என்பதைப்  புரிந்து உணர்ந்து நடக்கும் கணவன் இருக்கும் வீட்டில்தான்  நல்லவை மட்டுமே நடக்கும்!!!


                                                                              * * * * *

ஆண்கள் நெருங்கினால் விலகும்/வெறுக்கும்  பெண்களை குறித்தும் பேசியாக வேண்டுமே !

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

செவ்வாய், ஜூலை 11

வீட்டுத்தோட்டம் - தக்காளி வளர்ப்பதில் சில எளிய முறைகள் + டிப்ஸ்

ஒரு தக்காளி செடியில் இருந்து வேறு சில தக்காளி செடிகளை உருவாக்கலாம்...

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ? எனக்கு முதலில் இதை கேள்விப்  பட்டபோது அவ்வாறுதான் இருந்தது. தோட்டக்கலையை பொறுத்தவரை நாம் தினமும் புதுப்  புது பாடங்களைக்  கற்றுக் கொண்டே இருக்கலாம். நாம சும்மா இருந்தாலும், இந்த இயற்கை தூண்டிக் கொண்டே இருக்கும் இப்படி முயற்சி செய்யலாமா அப்படி முயற்சி செய்யலாமா என்று! இயற்கையின் தூண்டுதலால் மேலும் மேலும் பல வளர்ப்பு முறைகளை முயற்சித்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் ஒரு முறை தான் தக்காளிக் கிளைகளின் மூலம் புது செடியை உருவாக்குவது... இந்த முறைப்படி பயிரிடுவதால் வருடம் முழுவதும் தக்காளிக்குத்  தட்டுப்பாடில்லை.

க்ளோனிங் முறை

தக்காளியின் ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வேர்களை பரப்பக்  கூடிய அளவிற்குப்  போதுமான செல்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிசயம்.
ஒரு தக்காளி செடியில் இருந்து இரண்டு மடங்கு அறுவடையை எடுத்துவிடலாம். ஒரு தக்காளி விதை முளைத்து பலன் தர 2 மாதம் ஆகிறது ஆனால் இந்த முறை  என்றால் 1 மாதம் போதும்.

கிளைகளை கட் பண்ணும் முறை

வளர்ந்தச்  செடியின் பக்கக்  கிளைகளை சிறு கத்தி அல்லது சிசர் வைத்து நறுக்கி எடுத்து மேலே  இரண்டு இலைகளை மட்டும் விட்டுவிட்டு இலை பூ மொட்டு போன்ற மற்றவற்றை அகற்றிவிடவேண்டும்.  கிளைத்தண்டு  ஆறு இஞ்ச் நீளம் இருந்தால் நலம்.

என் வீட்டுத்தோட்டத்து தக்காளி செடி

நாலு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள சிறிய தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் கோகோபீட் மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி நடுவே விரல்  வைத்து ஒரு துளை ஏற்படுத்தி அதில் தக்காளி தண்டை வைத்து மெதுவாக மண்ணை அழுத்திவிடுங்கள்...இந்த தொட்டியை ஜன்னலின் ஓரத்தில் வெயில் படும் இடத்தில் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் போதுமான அளவிற்கு வெயில் கிடைத்ததும்(ஒரு வாரம் போதும்)  வேறு தொட்டிக்கு  இடம் மாற்றிவிடுங்கள்.  அவ்வளவுதான். இதன் தாய்ச்செடி  காய்த்து முடியும் நேரத்தில் இது பலன் கொடுக்கத் தொடங்கி விடும்...

மற்றொரு முறை

pic-google

மேலே இரு இலைகளை விட்டுவிட்டு  நறுக்கப்பட்ட கிளையை   நீர் நிரம்பிய கண்ணாடி  ஜாடி அல்லது டம்ளரில் வைத்து  விடுங்கள். இதனை ஜன்னல் ஓரத்தில் வைத்து தினமும் நீரை மட்டும் மாற்றி வாருங்கள், நான்கு நாளில்  வேர் விட ஆரம்பித்து விடும் நன்கு வேர் விட்டதும்  வேறு தொட்டிக்கு மாற்றிவிடுங்கள்.  இந்த முறையில் செடி பலன் தர சிறிது காலம் அதிகமாகுமே தவிர உற்பத்தியில் எந்த குறைவும் இருக்காது.

இந்த இரு  முறைகளின் படி செய்து வந்தால்  வருடம் முழுவதும் நம் வீட்டில் இருந்து தக்காளி  பழங்களைப்  பறித்துக் கொண்டே இருக்கலாம்.

என் வீட்டுத்தோட்டம் - பறிக்க தயார் நிலையில்

தக்காளிச் செடியில்  பூச்சிகள் தாக்கத் தொடங்கியதும் செடியின் அந்த பகுதி  'சிஸ்டமின்' என்ற ஹார்மோனை சுரந்து பூச்சிகள் மேலும் முன்னேறாதபடி தடுத்துவிடுகின்றன. இது தக்காளியின்   சிறப்பு குணம். 

 பொதுவான டிப்ஸ் 

 * விதைகளை  கடையில் வாங்குவதை தவிருங்கள். வீட்டில் இருக்கும்  நன்கு கனிந்த  தக்காளியை  பிசைந்து விதைகளை சேகரித்து  கோகோபீட்+மண்+மண்புழு உரம் நிரப்பிய தொட்டியில் போட்டு நீர் தெளித்து வந்தால் போதும் விதைகள் முளைத்து விடும். சிறிது வளர்ந்ததும்   வேருடன் அப்படியே எடுத்து தனித்தனியாக வேறு வேறு தொட்டிகளில் நட்டு விடுங்கள்.தக்காளியை குறுக்கு வாட்டில் வெட்டி மண்ணில் புதைத்து வைத்தாலும்போதும் விதைகள்முளைத்து வந்துவிடும்.

* குளிர் காலத்தில் வீட்டினுள் இருக்கும் தக்காளி செடிக்கு தண்ணீரும் உரமும் தவறாது கொடுத்து வரவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது லேசாக செடியை அசைத்து விட்டால் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கும்.

* பக்கக் கிளைகளை   எடுத்துவிடுவது தாய்செடிக்கு மிக சிறந்த நன்மையை  கொடுக்கிறது , சத்துக்கள் பிற கிளைகளுக்கு பரவுவது தடுக்கப் பட்டு தாய் செடி மிகுந்த செழிப்புடன் வளரும். விரைவில் பூ பூத்து காய் காய்ப்பதுடன் மட்டுமல்லாமல் அகன்று விரிந்தும் உயரமாகவும் வளரும்.

* தக்காளி செடி நடும் போதே அதனுடன் ஒரு குச்சியைச்  சேர்த்து கட்டிவிடுங்கள்... இல்லையென்றால் செடி காற்றில் அசைந்து மண்ணில்  வேர் பிடிப்பது பாதிக்கப்படும்.

* முட்டை ஓடுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மிக்ஸ்யில் போட்டு தூள் செய்துக்கொள்ளுங்கள்.வாரத்திற்கு ஒருமுறை  ஒரு ஸ்பூன் ஒரு செடிக்கு என கொடுங்கள் . முட்டை ஓட்டில்  கால்சியம் இருப்பதால்  தக்காளி செடிக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.

* வாழைப்பழத்  தோல்களை சிறிதுச்  சிறிதாக நறுக்கிக்   காய வைத்து மிக்ஸ்யில் போட்டு தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்...இதையும் ஒரு ஸ்பூன் வீதம் 

* சத்துக்களை உறிஞ்சிவிடும் எனச் சொல்லப்படும் suckers என்பவை செடியின் பக்கவாட்டில் வளருவது.  அவை சிறிதாக வளரும்போதே   அதனை கிள்ளி  அகற்றிவிடுங்கள். இது காய் கொடுக்காது என்பதால் இதனை வளரவிடுவது சரியல்ல. இதனை அகற்றியப்பிறகு   செடியின் வளர்ச்சி அபரீதமாக இருக்கும், தக்காளியும் நிறைய காய்க்கும்.

(pic - google) sucker

* தக்காளிச் செடியைப் பொறுத்தவரை பூச்சிகளை அழிக்க தக்காளி இலைகளே போதும். இலைகளில் இருக்கும் விஷம் பூச்சிகளை கொன்றுவிடும், பூச்சிகள் தென்பட்டால் இலைகளை அரைத்து சாறு எடுத்து பூச்சிகளின் மீது தெளிக்கவேண்டும்.

* தவிர 3G (greenchilli, ginger, garlic)என்று சுருக்கமாக சொல்லப்படுகிற பூண்டு +இஞ்சி+பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து  வடிகட்டிய  சாறை  தண்ணீர்(1-10)  சேர்த்து  கலந்து செடியின் மீது  தெளித்தால் பூச்சிகள்  அழிந்துவிடும்.  

* பழுத்த ,காய்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.  அழுகிய  தண்டுகள் கிளைகளையும் எடுத்துவிடுங்கள். செடி எப்பொழுதும் சுத்தமாக பசுமையாக இருக்குமாறுப்  பார்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளிக்கு வெயில் மிக பிடிக்கும். 14 - 18 மணி நேர நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. பசுமைக்குடிலில்  செடிகள் இருந்தால் செயற்கையான முறையிலாவது வெளிச்சம் வர செய்யவேண்டும்.

* காய் காய்க்கத் தொடங்கியதும்  தண்ணீர்  விடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆழமாக வேர் வரை தண்ணீர் சென்று தொட்டியின் துவாரங்கள் மூலம் வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும். துளைகள் அடைத்திருந்தால் சிறு குச்சியால் குத்தி சரிப்  படுத்த வேண்டும்.

* எப்போது தண்ணீர் ஊற்றினாலும் செடியின் மீது தெளிப்பதை போல ஊற்றவேண்டும்...இலை, தண்டு கிளைகள் தண்ணீரால் நனைவது சிறப்பு.

* தக்காளிச்  செடியை நடும்போது ஆழமாக நடவேண்டும், அப்போதுதான் நிறைய வேர்கள் உருவாக்கி செடியை பலமுள்ளதாக்கும்.தொட்டியின் ஆழம் கம்மியாக இருந்தால் செடியை சிறிது வளைத்து மண் அணைத்து வைக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மண்ணுக்குள் இருக்கும் செடியின் பக்கக் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

இப்போதைக்கு இவைப்  போதும் என நினைக்கிறேன் ... ஆரம்ப நிலையில் இருக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்காகப்  பதிவை எளிமையாக்கி இருக்கிறேன்... வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்ட்,மெயிலில் கேளுங்கள். நன்றி.



Happy Gardening !!

கௌசல்யா


செவ்வாய், ஏப்ரல் 4

மனதோடு மட்டும்...!



‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால்,   பதிவுலகத்  தொடர்பு எல்லைக்கு வெளியேச்  சென்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது என அர்த்தமாகும். எதிரில் பார்க்கும் எதையும் எழுத்தாக்கி பகிரும் வேகம், துடிப்பு, உத்வேகம் எல்லாம் மலையேறி புதிதாய் எழுதவருவதைப்  போல  என் போன்றோர் நிலை கொஞ்சம் பரிதாபம்தான். என்னத்த எழுத என்ற சலிப்பு, வேலை பிஸி என்ற முகமூடி போட்டுக்கொள்கிறதோ என்னவோ!

மறுபடி எழுத வந்ததற்கு தோழி  ஏஞ்சல் ஒரு முக்கிய காரணம். (எழுத போறிங்களா இல்லையானு பேஸ்புக் இன்பாக்ஸ், ஜிமெயில் போதாதுன்னு போன் செய்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்) தவிர எங்க போனிங்க என்ன ஆச்சு என்று அடிக்கடி என்னை "அன்புடன்" விசாரித்துக்கொண்டிருக்கும் அந்த நாலு பேருக்கு என் நன்றிகள். மனிதர்களுக்கு எப்போதும் போன், இணையம் என ஏதோ ஒரு தொடர்பில் இருந்தாகவேண்டும்...இல்லனா மத்தவங்க நம்மள சுத்தமா மறந்து போய்டுவாங்க இல்லையா (நினைச்சுகிட்டே இருக்குற அளவுக்கு நாம பெருசா ஒன்னும் பண்ணலன்றது வேற) உயிருடன் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடன் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள் என்றால் மரணித்தப் பின்னால் பெரிதாக என்ன இருக்கப்போகிறது  .....முதல் நாள்  கண்ணீர் மறுநாள் சோகம் அடுத்தநாள் அவங்க அவங்க சொந்த வேலை கவலை ... நமது பெயரும் அடுத்த சில வருடங்களில் மறந்துப்  போகும் ....இவ்வளவுதான் வாழ்க்கை! இதை புரிந்துக் கொள்ள இமயமலை தேடி ஓட வேண்டியதில்லை, கண் முன் கடந்து போகும் ஒரு மரணம் போதும்...  

என்னைப்  பொறுத்தவரை எந்த ஊர்ல இப்ப இருக்கிறேன்னு பக்கத்தில் இருக்கிறவங்க நினைவுப் படுத்துகிற அளவுக்கு அதி பிரமாதமாகப்  போகுது வாழ்க்கை...  ஓடி ஓடி   களைத்துச்  சாய ஒரு தோள் கிடைக்காதா என ஏங்கி அவ்வாறு  கிடைத்தாலும் சாய நேரம் இல்லை போன்றதொரு நிலை.  

எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு அது கொடுத்த வலி சோகம் துக்கம் இவை எல்லாவற்றையும் கடக்க அதிகப்  பிரயத்தனம் எடுத்தும் அதுக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிந்ததும் சரி ஒரு ஓரமாக அதுவும் இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒருவரை இழந்த பிறகே, ‘அவருடன் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே , பிடிச்சதைச்  சமைச்சு  கொடுத்திருக்கலாமே, உடன் ஊர் சுற்றி இருக்கலாமே, அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையேனும் போன் செய்து எப்டி இருக்குற என விசாரித்து இருக்கலாமே என தோன்றுகிறது. இதில் ஒன்றையுமே செய்யாமல் போனப் பின்பு ஐயோ போயிட்டியே என அரட்டுவதை என் மனசாட்சியே சும்மா நடிக்காதே என பரிகசித்தது. ஆமாம் உண்மைச்  சுடுகிறது. இதுநாள் வரை அப்படிதானே நடந்திருக்கிறேன், நான் எனது வீடு குடும்பம் தொழில் என சுயநலமாகவே வாழ்ந்துவிட்டு அன்றைக்கு துக்க வீட்டில் அழுதது கூட அபத்தமாக தோன்றியது.

மரணமல்ல ஜனனம்!

ஒரு மரணம் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது... பிறரிடம் இருக்கும் நல்லது தீயது இரண்டில் நல்லதை மட்டுமே பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்... இதுவரை பிறரின் தவறுகளை மன்னித்த நான்  இப்போது அதை மறக்கவும் முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் பெற்றுவிட்டேன். ஒரு தெளிந்த நீரோடையாக மனதை வைத்துக் கொள்ள  முயற்சி செய்கிறேன். உண்மையில் இது மிக பிடித்திருக்கிறது. முன்பை விட அதிகமாக எல்லோரையும் நேசிக்கவேண்டும், இன்னும் அதிகமாக பிறருக்கு உதவவேண்டும், இன்னும் அதிகமாக  இந்த சமூகத்திற்காக   உழைக்கவேண்டும், தெரிந்த சமூக அவலங்களை எழுத்திலாவது எழுதி வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது.

நந்தினி,ஹாசினி ரித்திகா என்ற அழகான பெயர்கள் துக்கக்கரமாக மாறிப்போனபோது பச்ச குழந்தைகளை போய் எப்படிடா என்னடா வேணும் உங்களுக்கு என கதறியே விட்டேன். இரவுகளில் தூங்கவிடாமல் ஓலமிடும் மனதிடம் இதோ எழுதி ஆதங்கத்தை தீர்த்துவிடுகிறேன் என சமாதானம் செய்வேன். பாலியல்  பிரச்சனைகளின்  மூலம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால்  குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கட்டுரையை இனி தொடரலாம்... மூலம் என்று தேடிப்போனால் பேசாப்  பொருளா காமம் பற்றி பேசணும் சரி அதை பற்றியும் தொடர்ந்து எழுதலாம்... இதற்கு  பெற்றோர்கள் எவ்விதம் காரணமாகிறார்கள் என்பதை  தாம்பத்தியம் தொடரில் கொஞ்சம் தொட்டுக்  காட்டலாம்.......அப்படி இப்படி என்று மறுபடி பதிவுகள் எழுத காரணங்களை நானாக யோசித்ததன் விளைவு இதோ எழுத தொடங்கியாயிற்று... எது ஒன்றுக்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும், தூண்டுகோல்  வெளியில் இருந்து வரவேண்டும் என்றில்லை நாமாக உருவாக்கிக் கொள்ளலாம் ... நமக்கு தெரிந்ததை பிறரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான இடத்தில்(பதிவுலகம்) இருந்துக் கொண்டும் வாளாவிருப்பது வீண்தானே.

என்ன செய்துவிடும் எழுத்து 

இந்த ஒரு வருடத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் !! மக்களை எப்போதும் பரபரப்பாக்கி வைத்துவிடுகிறது ஊடக உலகம். அதிலும் சமூக வலைத்தளம் முன்னணி, காபி போட்டு குடிகிறார்களோ இல்லையோ காபி கப் போட்டோ வந்துவிடும். மனித மனம் எப்போதும் பிறரது அங்கீகாரத்திற்காகவே காத்துக்கிடக்கிறது... எல்லோருக்கும் பிடித்தவராக யாராலும் இருக்கமுடியாது என்றாலும் தனக்கென்று ஒரு சிறு கூட்டத்தை சம்பாதித்தே தீரவேண்டும் என்ற ஆசை வெறியாக மாறுவதை கண் முன்னால்  பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்களை மதிக்கவேண்டும் என மகளிர்தின வாழ்த்துக்கள் கூறி மறுநாளே இவ மூஞ்சிக்கு ஐநா கேக்குதா என பகடி செய்யும் முரண்பாட்டு மூட்டைகள் நிறைந்த உலகிது!  'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் ' பாரதி எத்தனை பாடினாலும் போகப் பொருளாகவே  பார்த்து பழகிய கண்கள், எம்பி குதிக்கும் டென்னிஸ் வீராங்கனையின் உள்ளாடையை க்ளோஸ்அப்பில் படம் பிடித்து போடும் பத்திரிகை கேமரா அனர்த்தங்கள்.  

சிறிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்த அனுபவம் கூட இல்லாமல் தான் பதிவுலகம் வந்தேன்...பொன்னியின் செல்வன் பற்றி பலரும் சிலாகிக்கும்போது படிச்சுத்தான் பார்ப்போமே என்று வாங்கிப்  படித்தேன், புத்தகம் படிங்க என்று வற்புறுத்தி ஐந்து புத்தகங்கள் அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர் அப்படியாவது எனக்கு எழுத்து கைவராதா என்று...  புத்தகங்கள் படித்ததற்கு பிறகு  ‘நாம எழுதுறதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற பயம்  வேறு வந்துவிட்டது. ஆனால் உணர்வுகளை கொட்ட ‘தெரிந்த/பழகிய வார்த்தைகள்’  வேண்டுமே தவிர இலக்கியம் இலக்கணம் தேவையில்லை... வாசிப்பவர்களின் மனதோடு எனது எழுத்துக்கள் பேசினால் போதும்... மேடை ஏறி பரிசுகளை வெல்லவேண்டும் என்று இல்லையே... என்றெல்லாம் மனதைத்  தேற்றி என்னை நானே சமாதானம் செய்து இதோ பேச வந்தேவிட்டேன் மறுபடியும் உங்களின் மனதோடு மட்டும்...

“யார் சூறையாடியது காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
புன்னகைபுரிந்த முற்றிலும் முழுமையான காலம்
எனது ‘நான்’ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே
கவிதை அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டதும் அங்குதானே !”

-சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்

 பிரியங்களுடன்
கௌசல்யா

pic : google 

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...