வெள்ளி, பிப்ரவரி 13

PM 1:00
30


இன்றைய சூழலில் எது முக்கியமோ இல்லையோ  சினிமா ரொம்ப ரொம்ப முக்கியம்... அப்படின்னு பத்திரிக்கை ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் சொல்கின்றன.  சமூகத்தில் பல்வேறு  பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து கண்முன்னால் நின்றாலும் அனைத்தையும்    அசட்டை செய்து  தமிழ் கூறும் நல்லுலகம் கேளிக்கையின் பின் மட்டுமே போய்  கொண்டிருக்கிறது.  சினிமாக்கள் பற்றிய செய்திகள் , கருத்துக்கள் , தத்துவம் ஆதங்கம்,கோபம்  என்று எங்கும் இதே  பேச்சு ! வலைத்தளங்களில் விழிப்புணர்வு பேசியவர்களும் சினிமா விமர்சனத்தை  கையில் எடுத்தது காலத்தின் கஷ்டம்  !! 

முன்பு சினிமா விமர்சனத்தை ஒரு சிலர் எழுதினார்கள், இன்று பெரும்பாலோர் இதே வேலையாக இருக்கின்றனர். கொடுமை என்னவென்றால் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூட சினிமா பற்றி எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டதுதான். சினிமாவை பற்றி  எழுதினால் பலரால் தாம் கவனிக்கப் படுவோம் என்பதால் கூட இருக்கலாம் என்றே எனக்கு தோன்றுகிறது. 

விழிப்புணர்வுப்  பதிவு என்றால் ஒரு செகண்டில் கடந்து செல்பவர்கள் சினிமா என்றால் மட்டும் அதீத கவனம்?  மக்களின் மனநிலையை புரிந்த சினிமாக்காரர்களும் தங்கள் மனம் போனப்படி ஒவ்வொரு நாளும்  ஒரு  கதையை பின்னி இளைஞர்களின் நேரத்தை பணத்தைப்  பறிக்கிறார்கள். சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்பது மாறி பலரின் பொழுதை வீணாகப் போக்கிக் கொண்டிருக்கிறது. 

உலக நாடுகள் சினிமாவை கையாளுவதற்கும் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் கையாளுவதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தமிழர்களுக்கு சினிமாதான் சுவாசம் வாசம் எல்லாம். ஐந்து முதல்வர்களை கொடுத்த பெருமை போதாதென்று நாளைய முதல்வர்களையும் சினிமாவிற்குள் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். சினிமா பிரபலங்கள் யாரிடமும் ஒரு நன்றியோ மன்னிப்போ கேட்டுவிட்டால் அவ்வளவுதான் என் ஹீரோ மனசு மாதிரி யாருக்கு வரும் என்று புகழ்ந்து அந்த ஹீரோவை தெய்வமாக்கி விடுவார்கள் ரசிகர்கள்.  கேமராவிற்கு முன்னால் என் நாடு என் மக்கள் என்று வேற ஒருத்தர் சொல்லிக் கொடுத்த வசனத்தை பேசியவுடன் தமிழன் இங்கே தலைவானு  உணர்ச்சிவசப்படுவான் . கோவில் கட்டுவான் சிலை வைப்பான் பாலுத்துவான் பைத்தியமாவான் செத்தும் போவான் ... மகா கேவலம்!!?

இதையெல்லாம் விட கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைத்தளங்களில் உலவும் படித்தவர்கள் புரியும் அதிகப் பிரசங்கித்தனங்கள் தான் சகிக்க முடியவில்லை. இவங்களே  தங்களை  இணைய மொன்னைகள் நொன்னைகள் வெண்ணைகள் தொன்னைகள் என்று அழைத்துக் கொல்லுவார்கள். சினிமாவை சினிமாவாக மட்டும் பார்க்காமல் டாக்டரேட் வாங்குமளவு ஏ(க்)கப்பட்ட ஆராய்ச்சிகள் புரிவார்கள் !!  

இன்றைய விமர்சனங்களின் தரம் ?!

'ஐ' படம் பற்றி ஒரு பேஸ்புக் பிரபலம் இப்படி விமர்சனம் செய்திருந்தார், எமியின் மார்பகத்தை (இதை விட நாகரீகமாக எனக்கு சொல்ல தெரியல) நம்பி மட்டுமே படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் என்று. மூன்று மணி நேர படத்தில் இவ்வளவோ காட்சிகள் இருக்க இவர் கண்ணுக்கு இப்படி. நடிகையை தீவிரமாக ரசித்து வரிக்கு வரி ஆபாசமாக விமர்சனம் எழுதியதோடு மட்டுமில்லாமல் படத்தில் பெண்களை மோசமாக சித்தரிச்சிருக்காங்கனு வேற வருத்தப்படுறாரு இன்னொரு நல்லவர். இவர்களை போன்றவர்கள் இணையம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். அப்புறம் 'ஐ' படத்துல வில்லன்கள் பழிவாங்கல் காட்சிகளை பார்த்து குழந்தைகள் பயப்படுவாங்க கூட்டிட்டு போகாதிங்கன்னு ஒருத்தரோட அட்வைஸ்.  படம்  பார்த்திட்டு இருக்கும்போது பக்கத்துல ஒரு சின்ன பையன் வில்லன் HULK மாதிரி மாறிட்டான்னு சிரித்தான். ஆங்கிலப் படங்கள் கார்ட்டூன்கள் என பார்த்து பழகிவிட்டார்கள் இன்றைய குழந்தைகள். ரத்தம் தெறித்து விழும் பல சினிமாக்களின் கொடூரக் காட்சிகளுக்கு இது தேவலாம்.

செல்போன் கேமரால ஒரு செல்பி கூட சரியா எடுக்கத் தெரியாத ஆட்கள் எல்லாம் கேமரா கோணத்தை பத்தி இரண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க...கொடுமை! ஒன்றை பற்றி பேச அதை குறித்த அறிவு தேவையில்லை ஆனா விமர்சிப்பதற்கு அதை பற்றிய அடிப்படை கொஞ்சமாவது தெரிந்திருப்பது நல்லது. குறை மட்டும் சொல்வதற்கு பெயர் விமர்சனம் அல்ல,  இணையவாசிகள் பொழுதை சந்தோசமாக கழிக்க வேண்டும் என்று படம் பார்க்க போவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு குறையை கண்டுப் புடிச்சு சொல்றவங்களைத்தான் இந்த தமிழ் கூறும் இணைய உலகம் அறிவாளியா நினைச்சுக்குமாம்னு வரிஞ்சு கட்டிட்டு எழுதி தள்ளுறாங்க...

காடு என்று ஒரு படம், காட்டை பற்றி மரத்தை பற்றி மலைமக்களின் வாழ்வுரிமையை பற்றிய படம். அங்குள்ள  மனிதர்கள் மிருகங்கள், பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் , மரங்கள் வெட்டப்படுவதையும் அரசாங்கம் கவனிப்பதில்லை என்பதை இப்படம் சிறிது தொட்டு சென்றது. சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் அருமை ரகம்.  இப்படத்தை விமர்சனம் செய்த ஒரு மேதாவி ‘இதில் காதல் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை, இருவருக்குமிடையிலான காதல் சரியாக சொல்லப் படவில்லை என்று தனது அறிவுக்கு எட்டியதை சொல்லி இருந்தார்.

தலைப்புலேயே காடு  எதை  பற்றிய படம் என்று தெரிகிறதே இருந்தும் ஒரு சினிமானா இதெல்லாம் இருக்கணும் என்று இவர்களாக ஒரு இலக்கணத்தை வரையறுத்துக் கொள்வார்கள்.    

சிஜி வெளிநாட்டுக்காரணுது மாதிரி இல்ல கிராபிக்ஸ்ல அவனுங்கள அடிச்சிக்க முடியாது , இப்டி எடிட் பண்ணி இருக்கலாம், திரைக்கதையை வேறு விதமா கொண்டு போய் இருக்கலாம்  என்று ஏகப்பட்ட லாம்கள் சொல்றவங்களுக்கு ஒன்னு மட்டும் ஏன் புரியமாட்டேங்குது, பணம் போட்டு படம் எடுக்கிறவங்க  அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, தெரிஞ்ச அளவுக்கு தானே எடுப்பாங்கனு.

நிறைய எதிர்ப்பார்த்து போனேன், டிக்கெட், வண்டிக்கு பெட்ரோல், பார்க்கிங் செலவு, பாப்கான், ஐஸ்க்ரீம் செலவு என ஒரு லிஸ்ட் போட்டு அத்தனையும் வீணா போச்சே என்பார்கள். உங்களுக்காக நீங்க   பண்ணிய  செலவுக்கு ஒரு நடிகனோ இயக்குனரோ எப்படி  பொறுப்பாக முடியும்? அவங்களா கையை புடிச்சு இழுத்துட்டு வந்து படத்தை பாருங்கனு  சொன்னாங்க....உங்களுக்கு பொழுது போகலன்னு போகலாம், அல்லது பேஸ்புக்கு ஒரு ஸ்டேடஸ் தேத்தலாம்னு போலாம் தானே...

சினிமா துறையினரைப் பொறுத்தவரை அது அவங்க  தொழில். தொழிலுக்காக ஆயிரம் பொய்  சொல்லுவாங்க.  படத்தை ப்ரோமோட் பண்ண என்ன ஜிகினா வேலையும் காட்டத்தான் செய்வாங்க,  ஆஹா ஓஹோன்னு பண்ற விளம்பரத்தை பார்த்து ஏமாந்து படம் பார்த்துட்டு இது நொட்டை  இது நொள்ளை குறை  மட்டுமே சொன்னா எப்படி? ஆறு வாரத்துல சிவப்பா மாறலாம்னு கூடத்தான் விளம்பரம் பண்றாங்க ... அப்டி யாராவது மாறி இருக்காங்களா, இல்ல சிவப்பா மாத்தலையேன்னு யாரும் வாங்காம இருக்காங்களா?

சினிமா மூலமா சமூக சேவையா செய்ய வராங்க ...சினிமா என்பது ஒரு கற்பனை உலகம், நம்மவங்க  சாதாரண புத்திசாலியா இருப்பாங்க  ஆனா  தியேட்டர்க்குள்ள  போனதும் டக்குனு  அதிமேதாவியா மாறிடுவாங்க. லாஜிக்னு ஒன்ன கிளைமாக்ஸ் வரைக்கும் தேடோ தேடுன்னு தேடி அது கிடைக்காதது தன்னோட தவறுனு கூட புரிஞ்சுக்காம லாஜிக்கே இல்லாம படம் எடுத்திருக்கானுங்க முட்டாப்பசங்கனு திட்டுவாங்க பாருங்க...., வேடிக்கை !! கேளிக்கை சினிமாவில் மெசெஜ் இருந்தே ஆகணும்  என்ற எதிர்பார்ப்பும் அதீதம்தான். பேஸ்புக்கில் இரண்டு வரி  மெசெஜ் சொல்ல முடியாத ஆட்கள் எல்லாம் சினிமாவில் மெசேஜ் தேடுவாங்க :-) 

ஒரு நடிகனோட ரசிகர்கள்  அடுத்த நடிகனை இழுத்துப் போட்டு கதற கதற வார்த்தை  வன்கொடுமை பண்ணுவாங்க. அப்புறம் அந்த நடிகனோட ரசிகர்கள் இந்த நடிகனை உண்டு இல்லன்னு பண்ண இப்படியே படம்  வெளிவந்த ஒரு வாரத்துக்கு ரணகளமா  இருக்கும். அதுக்கப்பறம் தான் வேற படம் வேற நடிகன் கிடைச்சிடுவானே.... சக மனிதனை படு ஆபாசமான வார்த்தைகளால் குத்திக் கிழிக்கும் உரிமையை  யார்  கொடுத்தாங்களோ தெரியல,... என்றாவது அதே வார்த்தைகள் திரும்பி அவர்கள்  மீதே எறியப்பட்டால் அன்றி அந்த வலி எவருக்கும் புரிய வாய்ப்பே  இல்லை.   

உங்களின் எதிர்மறையான விமர்சனமே தரமற்ற சினிமாவையும் பிரபலப் படுத்திவிடுகிறது.  ஆபாசமான காட்சிகள், வசனங்கள் என்ன என்ன இருக்கிறது உடை விலகுவது வரை  மிக தெளிவாக எடுத்துச் சொல்லி விமர்சித்து விடுகிறீர்கள். இசை படத்தை எடுத்த சூர்யாவுக்கு கூட  தெரியாது நாம இவ்ளோ ஆபாசமா காட்சிகள் வச்சோமான்னு ஆனா நம்ம விமர்சன சிங்கங்கள் அக்குவேறு ஆணிவேரா பிரிச்சு எரிஞ்சிட்டாங்க ... தேமேனு இருந்தவங்களையும் பார்க்க வச்ச புண்ணியம் உங்களுக்கு, இந்த லட்சணத்தில் தான் பல படங்கள் ஹிட்டாவுது. 'என்னை அறிந்தால்' அழகான தமிழ் டைட்டில் ஆனால் படத்துல ஏகப்பட்ட   ஆங்கில வசனங்கள், புரியவேயில்லை. கிளைமாக்ஸ்ல வில்லனை சர் சர்னு சீவித்தள்ளார் அஜித், திக்குன்னு இருந்துச்சு.,  அரைத்த மாவையே அரைத்ததை தவிர வேறு என்ன இருக்குனு எல்லோரும் ஆஹா ஓஹோ சொல்றாங்கன்னு கடைசிவரை என் புத்திக்கு எட்டவேயில்லை.

அதிகபிரசங்கித்தனமான சினிமா விமர்சனம் தேவையா ?

நாட்டுல எவ்வளவோ நடக்குற மாதிரி சினிமாக்களும்   வரட்டும் போகட்டும். நல்ல படங்களை ரசிக்கலாம் பாராட்டலாம் மாறாக அதை பற்றி மட்டுமே பேசி பேசி எழுதி எழுதி இதை தவிர வேறு ஒன்றுமே முக்கியம் இல்லை என்பதை போல ஏன் செய்யவேண்டும். விமர்சிக்கிறேன் பேர்வழினு வேலை மெனக்கிட்டு பக்கம் பக்கமா எழுத அதை ஒரு நூறு பேர் படிக்க அதுல பாதி பேர் அந்த சினிமாவ  பார்க்க, பார்த்த அவர்கள் மறுபடி அதே படத்தை விமர்சிக்க என்று விமர்சனங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. வெள்ளிக்கிழமை வந்தால்  போதும் எங்கும் புதுப்படங்களை பற்றிய அப்டேட்ஸ் தான். அன்னைக்கு  முக்கியமானவர்  யாராவது இறந்தாலும் கண்டுக்கொள்ளப் படமாட்டார்கள் என்பதே உண்மை...

சினிமாவை பற்றி இணையம் எங்கும் பேசி  இன்றைய இளைய சமூகத்தையும் அதை நோக்கி 'மட்டுமே' திருப்பும் வேலையை நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதாவது புரிகிறதா?   

நம் மாணவர்களிடம் பாட புத்தகங்கள் தவிர  வேறு புத்தக வாசிப்பு என்ற ஒன்று சுத்தமாக இல்லை, பாடங்களை தவிர்த்து வெளி உலகம் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை, தெரிய வைக்கப்படவும் இல்லை. இதுதான் நம் கல்வியின் நிலை.  வகுப்பு பாடங்களுக்கு அடுத்ததாக அவர்களுக்கு அதிகம் தெரிபவை சினிமா ...சினிமா மட்டுமே ! எந்த நடிகன் எந்த படம் எந்த காட்சியில் சிறப்பாக நடித்தான் என்பது முதல் குறிப்பிட்ட வசனங்கள் வரை அவர்களுக்கு மனப்பாடம். பள்ளி, கல்லூரி மாணவர்களின் விளையாட்டு, பொழுதுப் போக்கின் இடங்களை  சினிமா பிடித்துக் கொண்டது.. அவர்களின் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் தளங்களை பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம். அவர்களின் ஸ்டேடஸ், கமென்ட்ஸ் இன்பாக்ஸ் மெசெஜ்களில் அதிகம் பேசப்படுபவை சினிமாவை பற்றி மட்டுமே.

சினிமாவும் தனது பங்குக்கு பாடல் வெளியீடு, First Look, டீசர், டிரைலர் என்று ஒரு படத்தை குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு இளைய சமுதாயத்தினரை சினிமாவை சுற்றியே வலம் வர செய்கிறது. ரிலீஸ் ஆனதும் சமூக வலைதளங்களில் வேறு விமர்சனம் என்ற பெயரில் அக்குவேறு ஆணிவேராக படத்தைப் பிரித்து ஆராய்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளி கல்லூரி  மாணவர்களை அங்கே இங்கே திரும்பவிடாமல் சினிமாவைச் சுற்றியே சுழற்றிச் சுழற்றி  அடிக்கிறது.  இந்த சிக்கலில் இருந்து மாணவ சமூகம் என்று மீளுவது , யார் மீட்பது ??  

பிற துறைகளை போல திரைத்துறையும் பலருக்கு வாழ்வளிக்கிறது, அதை நம்பி பல குடும்பங்கள் ஜீவிக்கின்றன, அவ்வளவு ஏன்  இணையத்தில் சாதாரணமாக எழுத வந்த பலருக்கும்  ஒரு அடையாளம் கொடுத்திருக்கும் ஒரு நல்ல தொழில் சினிமா, அவ்வளவே. இதைத் தாண்டி தலைமேல் தூக்கிவச்சு கொண்டாடியே ஆகணும் என்ற எந்தவித அவசியமும் இல்லை.

சமூக ஊடகங்களில் இயங்குபவர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து நமது மாணவ சமுதாயம் சரியான பாதையில்  செல்ல உதவவேண்டும்.  நம் வீட்டு குழந்தைகளும் இங்கேதான் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  சினிமாவை தாண்டியும் உலகம் இருக்கிறது, அங்கே தான் தங்கள் வாழ்க்கைக்கான பொருள் புதைந்துக் கிடக்கிறது என்பதை மாணவர்கள் உணரும் காலம் வரவேண்டும்.

தெருவில் இறங்கி புரட்சியோ, மரக்கன்று நட்டு சமூக சேவையோ செய்யவேண்டும் என்று கூட இல்லை, சினிமாவைப்  பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசுவதை நிறுத்தினாலே போதும், சமூகத்திற்கு மிக பெரிய நன்மை செய்தவர்களாக  ஆவோம், (இந்த பதிவை எழுதிய என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்)
  
எங்களுக்கு எது தெரியுமோ அதை தான் பேசுவோம், எழுதுவோம் என பிடிவாதம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய  முடியாது, ஆனால் அவர்கள் இனிமேலாவது கொஞ்சம் யோசிக்கலாமே...!


Tweet

30 கருத்துகள்:

  1. 'சினிமா' அவ்வளவு முக்கியமானதா என்ன ?! = செல்போன் கேமரால ஒரு செல்பி கூட சரியா எடுக்கத் தெரியாத ஆட்கள் எல்லாம் கேமரா கோணத்தை பத்தி இரண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுதுறாங்க...கொடுமை! = சினிமாவைப் பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசுவதை நிறுத்தினாலே போதும், சமூகத்திற்கு மிக பெரிய நன்மை செய்தவர்களாக ஆவோம், = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Kousalya Raj - மனதோடு மட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. பதிவுகளை தேடித் பிடித்து பகிரும் உங்களின் ஈடுபாட்டிற்கு என் அன்பு வணக்கங்கள் !

      மிக்க நன்றிகள் ஐயா

      நீக்கு
  2. சினிமாவைப் பற்றி அதிகம் பேசாமல் இருப்பதே
    சமூகத்திற்குச் செய்யும் நலன்தான்
    உண்மைதான் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  3. நிழல் தான் வாழ்க்கை... அதுவே பதிவும்... 99% சினிமா பதிவர்கள் தான்...

    // என்னை சேர்த்தே... // - இதை புரிந்து கொள்ளக்கூட தெரியாது பலருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ! புரியும் ஆனாலும் மாற்றிக் கொள்ள முயலவில்லை என்று எடுத்துக்கொள்வோமே...

      நன்றிகள் தனபாலன் சார்.

      நீக்கு
  4. ஹிட்ஸ் வாங்க மட்டும்தான் பதிவர்களுக்கு சினிமா உதவும் ,அதனால்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் விமர்சிக்கிறார்கள் :)
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாசிப்பிற்கும் என் அன்பான நன்றிகள்.

      நீக்கு
  5. ****தெருவில் இறங்கி புரட்சியோ, மரக்கன்று நட்டு சமூக சேவையோ செய்யவேண்டும் என்று கூட இல்லை, சினிமாவைப் பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசுவதை நிறுத்தினாலே போதும், சமூகத்திற்கு மிக பெரிய நன்மை செய்தவர்களாக ஆவோம், (இந்த பதிவை எழுதிய என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்) ***

    என்ன சொல்ல வர்றீங்க?? இந்தப் பதிவை நீங்கள் எழுதாமல் இருந்து இருந்தால்..சினிமா பத்தி இவ்வளவு பேசியிருக்கவேண்டிய அவசியம் வந்து இருக்காது.. அது சமூகத்திற்கு நீங்கள் செய்த பேருதவி யா இருந்து இருக்கும்ணா??:))))

    வரிக்கு வரி விவாதிக்கலாம் உங்க பதிவை. நேரமில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வருண்... நலம் தானே? நேற்று மதியம் சாதி பற்றிய ஒரு பதிவில் உங்களின் விரிவான பின்னூட்டங்கள் பார்த்ததும் நினைத்தேன், இதோ இங்கே வந்திருக்கிறீர்கள் :-)

      என்னையும் சேர்த்து என்பதன் அர்த்தம் , அதிகப் பிரசங்கித்தனமா விமர்சிப்பவர்களை பற்றிய ஆதங்கத்தை சொல்லிய இதே பதிவில் நானும் சில சினிமாக்களை விமர்சித்திருக்கிறேனே , அதை குறிப்பிட்டேன் வருண் .

      //வரிக்கு வரி விவாதிக்கலாம் உங்க பதிவை // உண்மைதான்...அப்படிப்பட்ட ஒன்றைத்தான் இங்கே பதிவாக்கி இருக்கிறேன். மேலும் இது எனது பார்வை, எனது கருத்து அவ்வளவே. இது குறித்த அவரவர் கருத்தை அவரவர் தளத்தில் தனி பதிவாகவே எழுதலாம், ஏன் நீங்களே ஆரம்பித்து வையுங்களேன், நேரம் இருப்பின் :-)

      நன்றி வருண்.

      நீக்கு
    2. நான் சொல்ல வந்தது பொதுவாக என் மனசாட்சிக்கும் எனக்கும் நடக்கும் விவாதம்தான். நீங்க என்னை சரியா புரிஞ்சுக்குவீங்க என்கிற நம்பிக்கையில் சொன்னேன். :)

      ஒரு சில நேரங்களில் "இது தப்பு"னு சொல்ல முயல்கிறோம். "இது" என்னனு தெரியாமல் இருந்தவர்களுக்கு "இதை"பத்தி அறிய ஒரு வாயப்பை உருவாக்குகிற "பாவி"யாய் நாம் ஆகிவிடுகிறோம்.

      அதேபோல் சினிமாக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணுமா?னு சொல்ல வரும்போது, இதை பத்தி பேசாமலே விட்டு இருக்கணுமோ? என்கிற கேள்வி என் மனசாட்சி கேட்கும்? அதைத்தான் இங்கே முன் வைத்தேன்.

      உங்க ஆதங்கம் புரியுது..சினிமானு பேச ஆரம்பித்துவிட்டால் கமல் செஞ்சா அது கலைச் சேவை, ரஜினி செய்தால் அது ஊரை ஏமாத்துவது என்கிற எண்ணம்தான் பொதுவாக பலரிடம் இருக்கு..

      எட்டாப்பு முடிக்காதவன் கமல் ரசிகனாக இருந்தால் அவன் "மேதை"..பி எச் டி முடித்தவன் ரஜினி ரசிகனாக இருந்தால் அவன் "அறிவில்லாதவன், காட்டுமிராண்டி" என்கிற "தியரி" எல்லாம் மறைந்து இருக்கிறது. பல காலமாக இதுபோல் சிந்தனைகளின் வெளிப்பாடை வேடிக்கை பார்ப்பவன் நான்..அதனால் இதைப் பத்தி நெறையா விமர்சிக்கலாம், விவாதிக்கலாம் என்றேன்..

      Talk to you later, Mrs.Raj! :)

      நீக்கு
    3. //நீங்க என்னை சரியா புரிஞ்சுக்குவீங்க என்கிற நம்பிக்கையில் // நன்றி :-)

      //அறிய ஒரு வாயப்பை உருவாக்குகிற "பாவி"யாய் நாம் ஆகிவிடுகிறோம்.// இந்த எண்ணம் தேவையில்லை வருண்... இவ்வாறே எல்லோரும் எண்ணிவிட்டால் சரி எது தவறு எது என்று தெரியாமலே போய்விடும். தெரிந்தவர்களும் கண்டுக்காமல் இருந்தாமல் தான் பாவி ஆகிறோம் . மிகைப்பட்டது நிறைந்து விடும். இது சினிமாவுக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் பொருந்தும்.

      கமல் ரஜினி வித்தியாசத்தை நானும் கவனித்திருக்கிறேன்... இதை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என யோசித்தால் அந்த குரூப்பாகத்தான் இருக்குமோனு லைட்டா தோன்றது :-))

      கண்டிப்பா தொடர்ந்து பேசுவோம் வருண்.

      நீக்கு
    4. மிகைப்பட்டது //மட்டும் //நிறைந்து விடும் ,
      ஆஆமாம் ! நிறைய விஷயங்களில்நடக்கிறது :) சரியான பாயிண்டுக்கு வந்திட்டீங்க கௌசி

      நீக்கு
  6. எனக்குள் இருந்த பல ஆதங்கங்கள். உங்கள் எழுத்தின் வாயிலாக. மிகச் சிறப்பான ஆக்கம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாள் முன்பு உங்களை இங்கே பார்த்திருக்கிறேன் , மீண்டும் இந்த பதிவின் மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

      வருகைக்கும் வாசிப்பிற்கும் என் அன்பான நன்றிகள் ஜோதிஜி .

      நீக்கு
  7. 100 வீதமும் உங்க கருத்தை ஏற்றுக்கிறேன்.
    பலரை சிந்திக்க வைத்திருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் அக்கா....
    சினிமா விமர்சனம் என்பதைவிட படம் வந்து பத்து இருபது நாள் ஆனாலும் உண்மையில் வெற்றியா? பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டா? ரசிகர்களுக்கு திருப்தியா? இப்படி ஏகப்பட்ட பகிர்வுகள்...
    இந்த சினிமாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமால அந்த கொடுமை வேற நடக்குமே ... உருப்படியா வேற வேலை வெட்டி ஏதும் இருக்காதோ என்னமோ ?! :-)

      நன்றி குமார்.

      நீக்கு
  9. என்னைப்போன்றவர்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நானும் சில சினிமா விமர்சனங்களை எழுதியதுண்டு. இனி தவிர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதலுக்கு மகிழ்கிறேன்... வாசிப்பிற்கு என் நன்றிகள்

      நீக்கு
  10. யாராவது எதாச்சும் controversy கிளப்பினா மட்டுமே கியூரியாசிட்டியில் படம் பார்ப்பேன் .
    அதுகூட dvd யில் ff செய்துகொண்டே ..மற்றபடி எனக்கு படம் பார்ப்பதில் ஆர்வம்லாம் இல்லை ..
    சினிமா நடிகன் மற்றும் இண்டஸ்ட்ரி சேர்ந்த அனைவருக்கும் சோறுபோடும் ..ஆனா நமக்கு ???
    ஆகவே இதையெல்லாம் இக்னோர் பண்ணுவதே சிறந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாத்திங்களா யாராவது தூண்டிவிட்டாதான் நீங்களே படம் பாக்குறிங்க, இதுதான் அவர்களின் வெற்றி...இதற்காகத்தான் எதிர்மறையா விமர்சனம் பண்றாங்களோ என்னவோ :-)

      ///இதையெல்லாம் இக்னோர் பண்ணுவதே சிறந்தது//

      எஸ் !!!

      நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  11. padhittamaikku nandri, thangaludaiya karuththukku udanpadugiren

    பதிலளிநீக்கு
  12. நல்ல தகவல்..... தொடர்கிறேன்.. என் தளம் www.naveensite.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. இருக்கட்டும் விடுங்க. இதெல்லாம் காலத்தின் கட்டாயம்னு வேணா சொல்லலாம். நடிகர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் அரசியலுக்கு வந்து ஆட்சி செய்யறாங்க? அல்லது குறைந்த பட்சம் சினிமாவின் வரையறைக்குள் இருக்க வேண்டுமல்லவா? நாலு படம் வெற்றியடைந்தால் உலகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்றதென்ன? இதெல்லாம் பே-பேக் டைம்.

    பதிலளிநீக்கு
  14. நல்லதோர் கட்டுரை....

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. தமிழ்நாட்டுக்கு வரும் முதல்வர்கள் எல்லாம் கூத்தாடிகளின் சகவாசம்தான்.நடிக்க வந்த நடிகர் நடிகைகளுக்கு நாடாளும் ஆசை.வெக்கமும் வேதனையும்தான் வருகிறது.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...