வெள்ளி, ஜனவரி 23

திருநெல்வேலியில் பேஸ்புக், வலைப்பதிவு நண்பர்கள் சங்கமத் திருவிழா

அன்பு நண்பர்களே! 

திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நடந்த பிறகு தற்போது பெரியளவில் நடக்க இருக்கும் ஒரு சந்திப்பு ‘தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம்’
பேஸ்புக் நண்பர்கள் அதிக அளவில் கலந்துக் கொள்வதால் பெயரை முகநூல் நண்பர்கள் என்று வைத்துவிட்டோம்.  தவிர இப்போது நம்ம பதிவர்கள் எல்லோரும் பதிவுலகத்தை விட அதிக நேரம் பேஸ்புக்கில் தானே இருக்கிறோம். அந்த வகையில் பார்த்தாலும் இந்த பெயர் சரிதானே !! :-)




நாள் - 25/1 /2015 ஞாயிற்றுக் கிழமை அன்று (நாளை மறுநாள்)

இடம் -  பதிவர் சந்திப்பு நடந்த அதே ஜானகிராம்  ஹோட்டலில் பெரிய ஹாலில் நடக்க இருக்கிறது. ஹோட்டலுக்கு வெகு அருகில்தான் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் இருப்பதால் வெளியூர் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். 

இந்த சங்கமத்தை நடத்துவதில் பெரும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்  எங்க மண்ணின் மைந்தன் எழுத்தாளர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள். என்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும் விழா குறித்த செய்திகள், தகவல்களை விரிவாக பகிர்ந்துக் கொள்வார். இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவமிக்கவர்.
(கத்துக்குட்டியா இருந்தாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதே நம்ம பொழப்பாப் போச்சு :-) ஆனா அவரு முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போற மாதிரியே படப்படப்பாகப்  பேசுவார். என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்) 

கடந்த மூன்று மாதங்களாக நடத்தப் பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நண்பர்கள் கலந்துக் கொண்டு அதன் அடிப்படையில் நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப் பட்டுள்ளது. அனுபவமிக்கவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இளைஞர்களுக்கும் கொடுக்கப்படுவது ஆரோக்கியமான நட்பை பலப்படுத்தும் என்பதை சங்கம ஏற்பாடுகளை கவனித்து புரிந்துக்கொண்டேன்.  

வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் இரு புத்தகங்கள் வெளியீடும், இணைய உலகத்தின் எதிர்ப்பார்ப்புகள் சில பற்றியும் இங்கே பகிரப் பட இருக்கின்றன. பல்வேறு மத இன மொழியினரை இணையம் இணைத்து வைத்திருக்கிறது என்ற சிறப்புடன் மட்டுமே நாம் நின்றுவிடாமல் இந்த சந்தர்ப்பத்தை ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நடைபெறப்போகும் இந்த சங்கமம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

நிகழ்ச்சி நிரல் 

கரிசல்குயில் இசை நிகழ்ச்சியுடன் துவக்கம்.
உறுப்பினர் பதிவு
வரவேற்புரை: இரா.நாறும்பூநாதன்.
முகநூல் நண்பர்கள் சுய அறிமுகம் (தன்னோட பெயர்,ஊர்,பணி, இயங்கும் துறை இதை மட்டுமே சொல்ல வேண்டும்.)
இரண்டு நூல்கள் வெளியீடு.
1.திரு.விமலன் எழுதிய "பந்தக்கால்"
2.திரு.மொஹம்மத் மதார் எழுதிய "வல்லினம் நீ உச்சரித்தால்..."
சிறப்பு விருந்தினர்கள்
எழுத்தாளர்கள் திரு.வண்ணதாசன்,கலாப்ரியா,உதயசங்கர்,மாதவராஜ்,தேவேந்திரபூபதி,சௌந்திரமகாதேவன்,இரா.எட்வின் மற்றும் மனநல மருத்துவர் ராமானுஜம்,கதிர் ஆகியோர் வலைத்தள பதிவுகள் பற்றி எளிமையான துவக்கவுரை

நண்பர்கள் கலந்துரையாடல்.
நன்றியுரை: திரு.மணிகண்டன்.
பிற்பகல் 2 மணி : மதிய உணவு.
நிறைவு.

நிகழ்வை ஒழுங்குபடுத்துபவர்கள் :-  
திரு.சுப்ரா.வே.சுப்ரமணியன்
திருமதி.ருபீனா ராஜ்குமார்
திரு.அனில் புஷ்பதாஸ்

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்குபவர் :-  
குறும்பட இயக்குனர் நெல்லை முத்தமிழ்.

நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவதாக தெரிகிறது. சுத்துப்பட்டி மாவட்ட மக்களை தவிர்த்து தொலைவில் இருந்து யாரெல்லாம் வராங்கனு பார்த்தால் (இதுவரை பெயர்  கொடுத்துத்தவர்கள்) கத்தாரில் இருந்து திருவாளர்கள் ஜூமாலி ரசூல், சென்னையில் இருந்து ராஜதுரை தமயந்தி, திருச்சியில் இருந்து இரா.எட்வின், கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி சிவாஜி, மதுரையில் இருந்து விசுவேஸ்வரன், குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து தக்கலை ஹலிமா, நாகர்கோவில் பாபு,விருதுநகரில் இருந்து மணிமாறன், சிவகாசியில் இருந்து ரெங்கசாமி மற்றும்    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நம்ம ரத்னவேல் ஐயாவும் அம்மாவும் வராங்க.  அப்புறம் சில படைப்புகளும் அங்கே விற்பனைக்கு வைக்கப் பட இருப்பதாக இருக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க பொறுப்பு மட்டுமே. 


சந்திப்பு குறித்த நேரத்தில் துவங்க நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் . தொலைவில் இருந்து நண்பர்கள் வருவதால் அவர்கள் ஊர் திரும்ப வசதியாக மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சியை கண்டிப்பாக நிறைவு செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தாலும் நாம நம் நண்பர்களுடன் எவ்ளோ பேசணுமோ போட்டோ எடுத்துகனுமோ எடுத்துக்க வேண்டியதுதான். எழுத்துக்களின் மூலமே பார்த்து பேசிப் பழகிய உள்ளங்கள் நேரில் என்றால் உற்சாகம் அளவிட முடியாதல்லவா...

சங்கமம் குறித்து பேஸ்புக் அப்டேட்ஸ் பார்த்தே பல நண்பர்கள் வருவதாக தெரிவித்தார்கள்...அதனால் தனிப்பட்ட அழைப்பு இல்லையே என்று எண்ணாமல் நம் குடும்ப விழாவாக எண்ணி வாருங்கள், வருகையை நாளை மதியத்திற்குள் உறுதி செய்துக் கொண்டால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

தொடர்பிற்கு - திரு.நாறும்பூநாதன் - 9629487873 

பல பெரிய படைப்பாளிகள் வாழ்ந்த, வாழும் நமது தெக்கத்தி மண்ணில் இன்னும் வெளியே தெரியாத படைப்பாளிகள் இருக்கக்கூடும், அத்தகையவர்கள் பலருக்கு தெரியாமல் பதிவுலகில் இருக்கலாம் அல்லது பேஸ்புக்கில் சில வரிகள் எழுதுவதுடன் நின்றிருக்கலாம். இந்த சங்கமம் அத்தகையவர்களை இனம் கண்டு உற்சாகப் படுத்தக் கூடிய ஒரு இடம். எனவே இது போன்ற அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நண்பர்கள் யாரும் தவறவிட்டுடக் க்கூடாது.  கண்டுக் கொள்ளப் படாத எழுத்துக்கள் இங்கே தெரிந்தக் கொள்ளப்படலாம். யாருக்கு தெரியும் இந்த சங்கமம் முடிந்ததும் பல எழுத்தாளர்கள் அடையாளம் கண்டு வெளிஉலகம் இழுத்துக் கொண்டுப் போகலாம். ஆம் ஆச்சரியங்கள் அதிசயங்கள் தானாக ஏற்படும் என்றில்லையே...நாமாகக் கூட ஏற்படுத்தலாம் !! 

புதிய கதவுகள் திறக்கட்டும் !!

வாழ்த்துக்கள் !!!
   
நன்றி!


ப்ரியங்களுடன் 
கௌசல்யா 



செவ்வாய், ஜனவரி 20

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3

முந்தையப் பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - அனுபவம் 1 
வீட்டுத்தோட்டம் - அனுபவம் 2 

வீட்டுத்தோட்டம் ஏன் அவசியம் என்ற கேள்வி கேட்டவர்களுக்காக
இந்த எச்சரிக்கை ரிப்போர்ட் :-

'எண்டோசல்பான்' என்ற  பூச்சிக்கொல்லியை  2 ஆம் நிலை விஷப் பொருள் என்று உலக சுகாதார நிறுவனமும் முதல் நிலையில் 2 ஆம் பிரிவை சேர்ந்த விஷப் பொருள் என அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் அறிவித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் எண்டோசல்பான் தயாரிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது...!! 

மேலும்

தடை செய்யப்பட்ட  இரசாயன பூச்சிக்கொல்லி  மருந்துகள் நமது உடலில் இருப்பதாக மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  Cypermethrinheptachlor, quinalphos, aldrin, chlorodane, dichlorvas, cypermethrin ஆகியவை அரசால் தடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிமருந்துகள் காலிப்ளவர் முட்டைகோஸ் கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் மீதும் பிற தானியங்களின் மீதும் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்றும்  கடைகளில் விற்கப் படும் காய்கறிகளில் அதிகளவு அதாவது ஆயிரம் மடங்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும்  கண்டறியப்பட்டுள்ளன .

Home Garden

* கத்திரிக்காயில் மட்டும் சாதாரண அளவை விட 860% தடை செய்யப்பட பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இருந்ததாம். இதற்கு அடுத்த இடத்தில் காலிபிளவரும் மூன்றாம் இடத்தில் முட்டை கோஸ் இருக்கிறதாம்.

இந்த இரசாயனப்  பூச்சி மருந்துகள் அனைத்துமே neurotoxins அதாவது நரம்பு மண்டலத்தை தாக்கிப்  பாதிப்புக்குள்ளாகும் நச்சுப் பொருள்கள். மேலும் இவை நாளமில்லா சுரப்பிகள் ஈரல் சிறுநீரகம் அனைத்தையும் பாதிப்பவை. உணவில் நச்சுத்தன்மை மற்றும் பல ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா ஆகியவற்றின் மூலக்காரணம் இந்த தடைச் செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளே !

கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் மரபணு மாற்றங்கள் placenta மூலம் கருவையும் தாக்குகின்றன. ஆப்பிள் சாப்பிட்டால் நோய் வராது என்பதெல்லாம்  அந்தகாலம். ஆப்பிள் , ஆரஞ்சு பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்ட அளவினை விட 140% அதிகம் இருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் மூன்று மடங்குக்கும் அதிக அளவு இரசாயனப்  பூச்சி மருந்துக்  கலவையில்  பழங்கள், காய்கறிகள் கீரைகளை  முக்கி எடுத்த பின்னர்தான் கடைகளுக்கு  விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். விரைவாக அழுகி விடக் கூடாது என்பதற்காக...!

பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் பளப்பளப்பாக பிளாஸ்டிக் கவர்களில் இருப்பவை சுத்தமானவை என்று நம்பிவிடாதீர்கள். அதில் எவ்வளவு இரசாயனம், மெழுகுப்பூச்சு இருக்குமோ ?  
(Reference :Times of India)

மேலும்

2025 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும்  இரண்டு குழந்தைகளில் ஒருவர் (பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர்) ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்ற  அதிர்ச்சித்  தகவலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். பாதிப்பிற்குக்  காரணமாக கூறப்படுவது மான்சான்டோ !! இந்நிறுவனத்தின் அரும் பெரும் கண்டுப்பிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி ஒரு எமன்.



நேரம் இருப்பின் இந்த லிங்க் சென்று படித்துப் பாருங்கள்.

தாவரங்களைத்  தாக்கும் பூச்சிகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நன்மை செய்யும் பூச்சி, மற்றொன்று தீமைச்  செய்யும் பூச்சி. சைவ பூச்சி, அசைவ பூச்சி என்றும் சொல்வார்கள். நன்மை செய்யும் பூச்சி, அசைவ இனம் பிற பூச்சிகளை ஸ்வாஹா செய்யும், இதனால் தாவரத்திற்குப்  பாதிப்பு இல்லை. இவற்றில் நன்மை செய்யும் பூச்சி இலையின் மேலே இருக்கும், தீமை செய்யும் பூச்சி இலையின் அடியில் இருக்கும். நாம் என்ன செய்கிறோம் பூச்சி மருந்து அடித்து நன்மைச்  செய்யும் பூச்சிகளைக்  கொன்றுவிடுகிறோம்,  (இது சின்ன உதாரணம்தான், தொடர்ந்து பூச்சிகளின் நன்மை, தீமை பற்றி பகிர்கிறேன்)

இவ்வளவும் தெரிந்துக்கொண்ட பிறகாவது  நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எப்படி? நம் வீட்டிற்குப்  பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது?? பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதாது. நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். தொடர்ந்து வாசிங்க, அந்த ஏதாவது என்ன என்று இப்போது உங்களுக்கு  புரியும்.

ஒன்றே செய் அதை இன்றே செய் 

ஒரே வழி இயற்கைக்கு மாறுவது தான் ! இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை  நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை   ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும்.  சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது.  இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா ? டாக்டரை பார்க்கிறோம், ஊசி போடுகிறார், சரி ஆனதும் அத்தோடு விட்டுவிடுகிறோம்...ஆனால் ஒவ்வொரு முறை காய்ச்சல், அலர்ஜி, வலி ஏற்படும் போதும் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என நாம் எண்ணுவதே இல்லை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறளின் பொருளை மறந்தேவிட்டோம்.

எவ்வாறு இயற்கையை நோக்கிச் செல்வது

இது பெரிய வித்தை எல்லாம் இல்லை, நமது சுற்றுப்புறத்தை பசுமைச்  சூழ இருக்குமாறுப்  பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போடப்பட்டவைகளை அறவேத்  தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த தானியங்கள்,காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான ஒரே தீர்வுதான்  வீட்டுத்தோட்டம். நெருக்கடி மிகுந்த அப்பார்ட்மென்டிலும் தோட்டம் போட வழிமுறைகள் இருக்கின்றன.  பலர் இணைந்தும் செய்யலாம்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.

how old are you என்ற ஒரு மலையாளப் படத்தை பலரும் பார்த்திருக்கலாம், ரசித்திருக்கலாம். அட இப்படியுமா என ஆச்சர்யப்பட்டிருக்கலாம். அந்த படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து எடுப்பதையும் கேள்விப்  பட்டிருக்கலாம். நிச்சயமாக அதில் சொல்லப்பட்ட விஷயம் பலரின்  மனதை பாதித்திருக்கும்,  மலையாளப் படம்  பார்க்காதவர்கள் தமிழில் வெளி வந்த பிறகாவது கட்டாயம் பாருங்கள்.

நடிகை மஞ்சுவாரியரின் முக்கியமான மேடைப் பேச்சு உங்களின் பார்வைக்காக...




வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தோட்டம் போடத் தொடங்குங்கள்...சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் எனது மெயில் ஐடியில் அல்லது கமெண்டில் தெரிவியுங்கள். பதில் சொல்லக்  காத்திருக்கிறேன்.



ப்ரியங்களுடன்...
கௌசல்யா.
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


தகவல் உதவி :Angelin 
படம்:கூகிள் 

செவ்வாய், ஜனவரி 13

பாதைத் தவறும் "டீன் ஏஜ்" குழந்தைகள் ??!! பகுதி - 2

"18 வயதிற்கு குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 40 சதவீதமாக இருக்கிறது. இவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலச் சமுதாயத்தின் நிலை மிக மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான அத்தனை பிரச்சனைகளிலும் உடனடித் தீர்வு காணப்படவேண்டியது அவசியம். கட்டுப் படுத்த முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் கிடைக்கும் நன்மைகளுக்கு சரிசமமாய் தீமைகளும் இருக்கின்றன" என்றெல்லாம் கவலை தெரிவித்திருப்பவர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி. சஞ்சய் கிஷன் அவர்கள்.

அவரது கவலை அர்த்தமுள்ளது, இந்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கவேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின்  நீரோட்டத்தில் உங்கள் பிள்ளைகள் மிதக்கப் போகிறார்களா?  மூழ்கப் போகிறார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். 



நாம்  அனுபவிக்காததை நம் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என்ற பெருந்தன்மை தான் அனைத்து பிரச்சனைகளின்  ஆணிவேர். நீங்கள் அனுபவிக்காத சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என எண்ணுவது சரி அது எத்தகைய சந்தோசம் என்பதில் கவனம் மிக மிக அவசியம்.

டீன் ஏஜ் பிள்ளைக்கு  அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அக்கவுன்ட் இருப்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அதில் அவர்கள் எவ்விதமாக நடைபோடுகிறார்கள் என்ற கட்டாய கவனிப்பு தேவை.   நம் பிள்ளைதானே தவறென்ன செய்யப்போகிறான்/ள்  என்ற மெத்தனம் இனியும் வேண்டாம். இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கியமானவை செல்போன், இணையம், சினிமா இவை மூன்றும். தவறுகள் ஏற்படவும் அவை தொடரவும் அதிகமாக துணை புரிகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தேவையானதும் கூட ...ஆனால் அதை நாம் கையாளுவதை பொறுத்தே நன்மை தீமைகளின் சதவீதம் அமைகிறது. 

வளர்ந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் இன்னும் குழந்தைகள் தான், பிறந்த குழந்தையை வளர்க்கும் போது கவனம் வைத்ததை விட அதிகளவு கவனத்தை டீன்ஏஜிலும் வைத்தே ஆகவேண்டும் என்பது  காலத்தின் கட்டாயம்.

தவறுகளின் ஆரம்பம் 

மாணவன் ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே பலரும் சுட்டிக் காட்டுவது ஆசிரியர்களை நோக்கியே... தங்களின் ஒரு குழந்தையை சரியாக வளர்க்க முடியாத பெற்றோர் நாற்பது குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரை குறைச்  சொல்வது எவ்விதம் சரி. வெகு சுலபமாக ஆசிரியர்களை கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பள்ளியில் தானே அதிக நேரம் இருக்கிறார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த இடத்தில், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை விட முக்கியம் பெற்றோர்களின் வளர்ப்பு எத்தகையது என்பதே.  தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கத்  தவறினால் அதுவே பல பெரிய தவறுகளின் ஆரம்பமாகிறது. தவறும் குழந்தைகளைக்  கண்டிக்கும் ஆசிரியர்களை ஆள் வைத்து அடிக்கும் அளவிற்கு இன்றைய பெற்றோர் மாறிப் போனது வருத்தத்திற்குரியது. 

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று பெருமிதம் கொள்வோர் அதிகம், அதனால் பிள்ளைகளின் வாழ்க்கை திசை மாறுவதையும் அவர்கள் கவனிப்பதில்லை. அவ்வாறு அவர்களை திசை மாற்றுவதில் முக்கியமானவை செல்போன் பைக் இணையம் சினிமா.   


பள்ளிக் குழந்தைகளின் கைகளில் விதவிதமான செல்போன்கள்...வாங்கி தருபவர்கள் பெற்றோர்! அதன் மூலம் பேஸ்புக் வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து தனித்தே இருக்கிறார்கள். பெற்றோர்களும் இதை பெரிதுப்படுத்துவதில்லை.. 'ஒருவருக்கு ஒரு காதல்' என்று இல்லாமல் பல சிம் பல காதல் என்றாகிப்போனது.

கிராமத்திற்கு சென்றால் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம் ஏதோ ஒரு மரத்தடி அல்லது கோவிலில் அரசு கொடுத்த விலையில்லா மடிகணினியை சுற்றி அமர்ந்து பள்ளிமாணவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை கண்டுக்களிக்கிறார்கள். நகரத்தில் தனி அறையில் மகன் /மகள் படிக்கிறான் என்ற எண்ணத்தில்  வெளியே பெற்றோர், உள்ளே நடப்பதோ வேறு. வரைமுறையற்ற இணையவெளியில் உலவும் இவர்களுக்கு எது சரி எது தவறு என்ற விழிப்புணர்வை கொடுக்கவேண்டிய பெற்றோர் கண்டும்காணாமல் இருப்பது பல விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது.  
   

மொபைல் போன் அதிகம் உபயோகிப்பதால் தூக்கமின்மை, அமைதியின்மை ஏற்பட்டு மறதியில் முடியலாம்.  தவிர கம்ப்யூட்டர் உட்பட அனைத்து நவீன சாதனங்களையும் தூங்கச்  செல்லும் வரை உபயோகித்தால்  இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற இதுவும் ஒரு காரணம். .

என் குழந்தை எந்த தவறும் செய்யமாட்டான்/ள் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை வைத்துக் கொள்ளாதீர்கள். இன்றையநாளில் இத்தகைய நம்பிக்கை ஆபத்தானது. எங்கள்  வீட்டிற்கு எதிரில் இருக்கும் நகரின்  பெரிய பள்ளியின் 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு இருபது பேர் காம்பவுண்ட் சுவரின் அருகே  மரத்தடியில் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வந்து கூடி விடுவார்கள், ஏழரை மணிவரை மொபைல் போனில் பாட்டு கேட்பது, வீடியோ, பேஸ்புக் என்று அரட்டை அடிப்பார்கள். இது தினமும் நடக்கும் காட்சி. இக்கூட்டத்தில் ஒரு மாணவன் (மூன்று மாணவிகளுடன் காதல் ?!)தனியாக சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போனில் பேசிக்கொண்டிருப்பான். அதே பள்ளியில் படிக்கும் என் மகனிடம் 'இந்த பசங்க மாதிரி கட் அடிக்காம  கேர்ள்ஸ்தான்  ஒழுங்கா ட்யூஷனுக்கு போய் படிக்கிறாங்க'  என்றேன் அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், 'இவங்க டியூசன் கட் அடிச்சிட்டு பேசுறாங்க, அவங்க டியூசன்ல போய் பேசுறாங்க அவ்ளோதான் வித்தியாசம் !?'

பள்ளி  மாணவர்களுக்கு எதுக்கு செல்போன்? ஏதாவது அவசரம் உதவி என்றால் செல்போன் அவசியம் என்கிறார்கள், செல்போன் வருவதற்கு முன் நாமெல்லாம் தினம்  செத்துச்  செத்தா பிழைத்தோம்?! மேலும் பல பள்ளிகளில் செல்போன், பைக் இரண்டுக்கும் அனுமதி இல்லை ஆனால் இரண்டும் அவர்களிடம் இருக்கிறது...ஒன்று அமைதியாக(சைலென்ட் மோட்) பையில், மற்றொன்று அடுத்தத்  தெரு மரத்தடியில்...! இரண்டையும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போனில் இவர்களால் பேசமுடிகிறது என்றால் தவறு எங்கே இருக்கிறது.  நம்ம குழந்தைகள் சரியாக டியூசன்,ஸ்கூல் அட்டென்ட் பண்ணுகிறார்களா என்று அந்த இருபது பேரில் ஒருவனின் பெற்றோர் கூடவா  கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களின் இத்தகைய மெத்தன அலட்சியப் போக்கு வருத்தத்திற்குரியது. 

ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் சொல்லிக்கொடுப்பதை மாணவர்கள்  அக்கறையுடன் கவனித்துப் படித்தாலே போதும் , தனியாக எதற்கு  டியூசன்? அதுவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு ஸ்கூலில் டியூசன் க்கு செல்லும் மாணவ மாணவிகள் 9-4 ரெகுலர் கிளாஸ் அட்டென்ட் செய்துவிட்டு அதன் பின் மாலை நேர  டியூஷன் முடித்து  வீடு வர இரவு எட்டு, ஒன்பது  மணிக்கு மேல் ஆகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றிச்  சிறிதும் அக்கறை இன்றி ஸ்கூல் டியூஷன் செல்லாதவர்களை பிரைவேட் டியூஷனில் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். சேர்த்துவிட்டால் மட்டும் போதும், குழந்தைகள் படித்து விடுவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை, சுத்த முட்டாள்தனம்.

சினிமா 

வன்முறை, வக்கிரம், ஆபாசம், விரசம், இரட்டை அர்த்த வசனங்கள் இவைதான்  இன்றைய சினிமா. குழந்தைகளைக்  கட்டி போட்டு வைத்திருக்கும் சினிமா அவர்களின்  மனதில் காதல் என்ற விச(ய)த்தை விதைக்கிறது.  பள்ளி  மாணவர்கள் காதலிப்பதைப்  போல படமெடுபவர்களின் வீட்டுப்  பிள்ளைகள் காதல் திருமணம் செய்தால் மட்டும் பெற்றோருக்கு துரோகம் ,  அவமானம் என்று கண்ணீர் விடுகிறார்கள். ஏதேதோ காரணம் சொல்லிப்  பிரித்தும் விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப்  பார்த்து திசை மாறும் குழந்தைகளைப்  பற்றி யாருக்கும் இங்கே அக்கறையில்லை.  அநேக படங்கள் டீன்ஏஜ் காதலை நியாயப்படுத்துவதை போன்றே எடுக்கப் படுகின்றன. ...இதெல்லாம் சினிமாவில் மட்டும்  தான் சாத்தியம் என்பதை டீன் ஏஜ் குழந்தைகளுக்கு  யார் புரிய வைப்பது.? 

மாணவர்களின் பெரும்பாலான பொழுதுகள் இன்று சினிமாவைச்  சுற்றி மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது...சினிமா ஒரு பொழுது போக்கு என்ற கட்டத்தைத்  தாண்டி சினிமா தான் வாழ்க்கை என்று என்று வந்ததோ அன்றே நம் மாணவர்கள் தொலைந்துவிட்டார்கள்...தங்களின் வாழ்க்கையைத்  தொலைத்துவிட்டார்கள். இன்றைய மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நடிகனின் ரசிகர்கள், அவ்வாறு காட்டிக்கொண்டால்தான்  மாணவர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கிறதாம்??!

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  

செவ்வாய், டிசம்பர் 23

பெற்றோர்களால் பாதைத் தவறும் "டீன் ஏஜ் " ??! ஒரு அலசல் - பகுதி - 1





"18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை வழங்குதில் தவறில்லை, அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும், ஆனால் திருமண பந்தத்தில் அடிஎடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு அந்த வயதில்  உடல், மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமணவயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே பெண்ணின் திருமண வயதை 21 என்று உயர்த்த வேண்டும், அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்" என்று சொல்கிறது  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.  

18-21 வயதுவரையான பெண்ணுக்கு  உடல் மன வளர்ச்சி இருக்காது என்கிறார்கள், ஆனால் அதற்கும் குறைந்த வயது   குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் கொடுமைக்கு என்ன தீர்வு எழுதப் போகிறது காலம்....? இளவயது கருத்தரிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எங்கே ஆரம்பிக்கிறது சிக்கல்? ஆண் பெண் இரு குழந்தைகளுமே வன்கொடுமையை அனுபவிக்கிறார்கள்.. நம் குழந்தைகளை  வன்கொடுமைக்கு ஆளாகாமல் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு    முக்கியம் நம் குழந்தைகளின் மூலமாக  இப்படி ஒரு கொடுமை நிகழாமல் இருப்பதும் ?! இதைப் படிக்க அதிர்ச்சியாக இருந்தாலும் இன்றைய நிஜம் இது. 

என் மகன்/மகள் அப்படி நடக்க மாட்டார்கள் என்ற எந்த உத்திரவாதமும் உங்களால் கொடுக்க முடியாது. இன்றைய தொழில்நுட்பம் தான் உங்களையும் அவர்களையும் பிரித்து வைத்திருக்கிறதே, அதன் மூலம் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தனி உலகத்தை பற்றியும் உங்களுக்கு அக்கறையில்லை. உங்களுக்கு உங்கள் கவலை , பணத்தின் மீதான கவலை. நல்லதை சொல்லிக் கொடுக்க பெற்றோரும் இல்லை வழிக்காட்ட சமூகமும் இல்லை...தவறுகிறார்கள் தவறிழைக்கிறார்கள்...எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் !! 

காதல் திருமணங்கள் 

டீன்ஏஜ் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சியை காதல் என்ற பெயரிட்டு பழகும் இவர்கள் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு என்றதும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அந்த பெண்ணுக்கு  பதினெட்டு வயது பூர்த்தியாகி இருந்தால் காவல்துறையினரே முன் நின்று திருமணமும் முடித்து வைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படியாகும் என்பதை பற்றி எல்லாம் சட்டத்திற்கு அக்கறை இல்லை. சட்டத்திற்கு தேவை வயது, பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21. 

அதே சமயம் 21 வயது பெண்ணுக்கே உடல், மன வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற இன்றைய வாதத்தையும் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் உடல் வளர்ச்சி என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை, அவ்வாறேதான் உளவியல் ரீதியிலான வளர்ச்சியும்...!   

திருமண வயது 18, 21 என்பதல்ல முக்கியம் அவர்கள் தகுந்த மனப்பக்குவம் அடைந்திருக்கிறார்களா என்பதே முக்கியம். 40 வயதாகியும் திருமணத்திற்கேற்ற உடல், மனநிலை பக்குவப்படாதவர்கள் உண்டு. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் குழந்தைகள் முந்தைய  தலைமுறையினரை விட சிந்தனையிலும் செயலிலும் அதிவேகமாக இருக்கிறார்கள், படிப்பாகட்டும் வேறு துறையாகட்டும் துணிந்து இறங்குகிறார்கள், சாதிக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் செய்யக் கூடிய வேலையை ஐந்து நிமிடத்தில் செய்துவிடும் இவர்கள் காதல், திருமணம் என்றதும் தடுமாறிவிடுகிறார்கள். 

உலகத்தில் 1.6 கோடி டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பமடைவதாக சர்வதேச புள்ளி விவரத்தை குறிப்பிட்டு ஐநா ஒரு அறிக்கையை வெளியிட்டது. தகுந்த உடல் வளர்ச்சி இன்றி ஏற்படும் கருத்தரிப்பின் காரணமாக அதிக மரணங்கள் ஏற்படுகின்றன என்று கூறுகிறது. இத்தகைய மரணங்கள் நமது இந்திய நாட்டில் அதிகம் என்ற புள்ளிவிவரத் தகவல் மகிழ்ச்சிக் கொடுக்கக் கூடியதல்ல. பெங்களுரூவில்  அபார்ஷன் செய்ய வரும் பெண்களில் முக்கால்வாசிப் பேர் 10, +1 படிக்கும்  மாணவிகளாம்!?

இளவயது கருத்தரிப்பினால் ஏற்படக்கூடிய மரணங்களுக்கு நம் நாட்டில் நிலவும் ஏழ்மை, கல்வியறிவு இன்மை, பாலியல் பற்றிய விழிப்புணர்வு இன்மை, ஆரோக்கிய உணவு பற்றாக்குறை இப்படி பல காரணங்களை பட்டியலிட்டாலும் காரணங்களை அறிந்ததுடன் நில்லாமல் தீர்வுகளை விரைந்து காண வேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கிறோம். பள்ளியின் கழிவறையில் சிறுமி குழந்தை பெற்றாள் என்ற செய்திகள் மகிழ்வை தரக்கூடியவை அல்லவே !?

பாலியல் கல்வி அவசியம் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் அதிகளவில் வந்துக் கொண்டிருக்கும் இந்நாளில் பள்ளிகளில்  மாணவ மாணவிகளுக்கு பாலியல் பற்றிய விழிப்புணர்வையாவது கொடுத்தாக வேண்டும். 

டீன் ஏஜ் கருத்தரிப்புக்கு காதல், கல்யாணம் மட்டுமல்ல காரணம், வன் புணர்வு, வன்கொடுமையினால் ஏற்படுவதும் அதிகம். இதற்கு என்ன செய்ய போகிறோம்? சமூகத்தை நோக்கி மட்டும் கையை நீட்டிவிட்டு அமைதியாக இருக்க போகிறோமா? இந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வோரு ஆண் பெண்ணுக்கும் சம பொறுப்புகள் இருக்கின்றன, காரணங்களை பட்டியல் இட்டுவிட்டு இத்துடன் என் பொறுப்பு தீர்ந்தது என்பதல்ல. தீர்வுகளை கண்டு அதை சமூகத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும். தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டும், பெற்றோர்களின் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு அவை பயிற்றுவிக்கப் படவேண்டும்.  
  
மேலும் 

சமச்சீரான சத்துள்ள உணவை நமது குழந்தைகளுக்கு  கொடுக்க முடியாத சூழல் இன்று. நொறுக்குத்தீனிகள், இரசாயனம்  கலந்த உணவுப் பொருட்கள், பாஸ்ட் புட் உணவு வகைகள் குழந்தைகளுக்கு அபரீதமான  வளர்ச்சியைக் கொடுக்கிறது, பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பூப்படைய இது ஒரு காரணம். இப்பருவ வயதில் ஏற்படும்  இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இவர்களுக்கு நண்பர்கள் கடவுளாகிறார்கள் ...பெற்றோர்கள் எதிரியாகிறார்கள் ...வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்...கோவிலோ போலிஸ் ஸ்டேசனோ ரெஜிஸ்டர் ஆபிசோ கல்யாணம் முடிந்துவிடுகிறது. இன்றைய எதார்த்த வாழ்வை எதிர்க்கொள்ள தேவையான பணம் படிப்பு வேலை எதுவும் இல்லாமல் அந்த திருமண வாழ்வு தற்கொலையில் முடிந்து விடுகிறது அல்லது கொலையில் முடித்து வைக்கிறார்கள் சாதிப் பிடித்தவர்கள். 

பொறுப்பற்ற பெற்றோர்கள் 

டீன்ஏஜ் பருவக் காதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப்  பொறுத்தவரை அவற்றின் ஆரம்பமும், தீர்வும் எங்கே இருக்கிறது என்று சிறிது யோசித்தோம் என்றால் புரிந்துவிடும் நம் வீடுகளில்,பெற்றோர்களிடத்தில் தான்  என்று. ஒரு வீடு நன்றாக இருந்தால் தான் அந்த சமுதாயமும் அதை தொடர்ந்து  நாடும்  நன்றாக இருக்கமுடியும்.  வீட்டிற்குள் ஆயிரம் சிக்கல்களை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே நின்று 'சமுதாயம் கெட்டுவிட்டது இதில் உலவும் என் மகன்/மகள் தடமாறிவிடுவார்கள்' என்று கூச்சலிடுவது முட்டாள்தனம். 

பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து வளர்த்தால் அவை நல்லவிதமாக வளரும், மாறாக குழந்தைகள் தானாக வளர்ந்தால் விபரீதங்கள் விளையத்தான் செய்யும்...தானாகவே வளருவது என்றால் பெற்றோரின் அக்கறை, கவனிப்பு, அரவணைப்பு, அன்பு போன்றவை கிடைக்காமல் பெற்றோர் இருந்தும் இல்லாத நிலையில் வளருவது ஆகும். இன்றைய இயந்திர  உலகில் பல பெற்றோர்கள்  இப்படித்தான் இருக்கிறார்கள்.



பருவ வயது வந்த எல்லோருமே இனக்கவர்ச்சியால் பாதிக்கப்படுவதில்லை. பெற்றோரின் கவனிப்பு அற்ற டீன்ஏஜ் குழந்தைகள் ஏதோ ஒன்றை வீட்டிற்கு வெளியே தேடும் போது சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக இருந்தால் எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.  பெற்றோரின் கருத்து வேறுபாடுகளினால் ஏற்படும் சண்டைகள், வீட்டிற்கு வெளியே புது உறவுகள் ஏற்பட முக்கிய காரணம்.  பொருளாதாரத் தேவைக்காக அலையும் பெற்றோரால் தனித்து விடப்படும் குழந்தைகள் பள்ளியில், வெளியிடங்களில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள், குழப்பங்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். சாய்ந்துக் கொள்ள தோள் தேடும் குழந்தைகளே, தவறுகிறார்கள். 

தனிமை, பாடச் சுமை கொடுக்கும் மன அழுத்தம் , மன உளைச்சலால் அவதியுறும் குழந்தைகளிடம் சிறிது நேரத்தையும்  செலவிடமுடியாத பெற்றோர் அவர்களுக்கான பணத்தைத்  தேடுவது வேடிக்கை!



---தொடரும்
                                                                 * * * * * *  * 

'டீன் ஏஜ்' என்பது பயப்படக்கூடிய ஒன்றா என்ன? 
தொடர்ந்துப்  பேசுகிறேன்...உங்களின் 'மனதோடு மட்டும்' 
---கௌசல்யா.

திங்கள், டிசம்பர் 8

குடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு போதைப் பழக்கம்

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே  விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல்  தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று அரற்றுவதில் பயனென்ன?!!

குடும்ப உறுப்பினரின் நடவடிக்கையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனே எச்சரிக்கை ஆவது எத்தகைய அவசியம் என்பதை ஒரு பெண்ணின் பரிதாப வாழ்க்கை எனக்கு புரியவைத்துவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல குடும்பப் பெண்களிடமும் தாராளமாக இப்பழக்கம் இருக்கிறது என்பதும் அதனால் அவர்களின் குழந்தைகள் படும் துன்பங்கள் மிக கொடுமை என்பதையும் நேரில் கண்டு  அதிர்ந்தேன். அதை பிறருக்கு தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.

அபாயகரமான ஒரு போதைப் பழக்கம் / inhalant addiction ..


சிறுப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   

விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான்  Whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்

சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.  

பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் ள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு  பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க  இந்த திரவத்தை நோட்டு புத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை  மீண்டும் மீண்டும் அதையே நுகர  தூண்டியுள்ளது. அப்படித்தான்  ஆரம்பித்தது இந்த  போதை பழக்கம்..

அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்த பிறகும் இப்பழக்கத்தை விடாமல் அதிகமாக நுகரத் தொடங்கினார். அதற்கு வசதியாக  சூழ்நிலைகளும் அமைந்தன. கணவர் இந்த பழக்கத்தை கண்டுப்பிடித்து கண்டிக்க ஆரம்பித்தார். சிறிது காலம் மறந்ததை போல இருந்துவிட்டு கணவர் வெளிநாடு சென்றதும் மீண்டும் ஆரம்பித்தாள். பாட்டில்களாக வாங்கி குவித்து இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறாள் என்று அவளது தாய் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தைகள் இருவரும் பாட்டி, தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். போதை மயக்கத்தில் இருக்கும்போது அருகில் வரும் குழந்தைகளை அடிப்பதும், கண்டபடி திட்டுவது, பொருட்களை அவர்கள் மீது வீசி எறிவதுமாக இருந்திருக்கிறாள், பயந்து போன இவளது தாய் பேரக்குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

வசதிக்கு குறைவில்லாத வீடு, வேலைக்கு ஆட்கள், தனிமை எல்லாம் வாய்ப்பாக அமைய ஒரு நாளைக்கு நாலு, ஐந்து பாட்டில்கள் என காலியாயின. இவளது நடவடிக்கை மோசமாக செல்வதை புரிந்துக் கொண்ட கணவன் மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகளை மட்டும் பார்த்து விட்டு வெளிநாடு போய்விடுவானாம். ஆரம்பத்தில் இதில் என்ன இருக்கிறது என்ற இந்த பெண்ணின் ஆர்வம் இப்போது ஒரு மன நோயாளியாக்கி விட்டது. கணவனை, குழந்தைகளை பிரிந்தாள், ஆனால் தன்னால் தனது குடும்பமும் சிதறி போனது பிள்ளைகள் தவிப்பது என இவை  எதை பற்றியும் கவலையின்றி தனக்குள் சிரிக்கிறாள், பேசுகிறாள்...பேசிக்கொண்டே இருக்கிறாள் !!?

இவள் மட்டுமல்ல இவளை போல பலர் இன்று இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் கிடக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.   

ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர்  போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச்  சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.

தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.

கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitner முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.


13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .

பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும்  நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் இருவரும் அடிமையாகி உள்ளனர்

இதன் தீமைகள்

* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை  மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .

* மனநிலை பாதிப்பு ஏற்படும்.  இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.

* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன்  மற்றும் trichloroethane,  நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு போதைத் தன்மை உண்டாகும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன. 

தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது  தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .

* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.

* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.

* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டுபிடிக்கலாம்

அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம். 

பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால்,  கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.
இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.


ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!


என்ன செய்யப் போகிறோம் நாம் ??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!

News :http://www.mid-day.com/articles/whitener-sniffing-teens-caught-with-us-made-pistol/15088096
                              * * * * * 


பின் குறிப்பு


இந்த போதைப் பொருளைப்  பற்றி எழுதி இதுவரை தெரியாதவர்களுக்கு தெரியவைத்து விடுவோமோ என்ற தயக்கத்திலேயே கடந்த மூன்று வருடமாக எழுதாமல் இருந்தேன். ஆனால் வெகு தாராளமாக இன்று பள்ளி கல்லூரிகளில் நடமாடுகிறது என்பதை அறிந்த பின்பே இதன் தீமைகளை பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். தயவு செய்து இப்பதிவை படித்தவர்கள் பிறருக்கும் இப்பழக்கத்தை பற்றி பகிர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.

இக்கட்டுரையை எழுத உறுதுணையாக இருந்த தோழி Angelin க்கு என் நன்றிகள்.

கௌசல்யா...

வியாழன், டிசம்பர் 4

இவள் ஒரு தேவதை ...!



பதிவுலகம் எனக்கு நிறைய நல்ல உறவுகளை கொடுத்திருக்கிறது. சகோதர உறவு என்பதிலும் தன்முனைப்பு தலைத்தூக்கும் நட்புகள் வந்த வேகத்தில் நின்றும் விடும். மனம் பார்த்து மலர்ந்த நட்பு ஒன்று தான் தொடரும் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகவும் சொல் செயல் எண்ணம் அனைத்திலும் சக மனிதர்களின் மீதான அக்கறை, அன்பும்  கொண்ட எனக்கு தெரிந்தவர் ஒருவர் உண்டு.

இருவருக்குமான சந்திப்பு எப்போது எப்படி ஏற்பட்டது என்ற நினைவு கூட எனக்கு இல்லை, சாதாரணமான விசாரிப்பில் ஆரம்பித்து இருவரின் அலைவரிசை ஒன்றாக இருக்க நட்பு மேலும் இறுகியது.  வெறும் பொழுது போக்கிற்கான ஒன்றாக இருக்காது எங்களின் பேச்சுக்கள். அவரிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி பேஸ்புக் இன்பாக்சில் எனக்காக எப்போதும் காத்திருக்கும். அந்த செய்தி நிச்சயமாக அவரை பற்றியதாகவோ பரஸ்பர நலம் விசாரிப்பாகவோ இருந்ததில்லை.  உலகின் ஏதோ ஒரு மூலையில் யாருக்கோ நடந்த பிரச்சனை, காஸா பற்றியதோ, மலாலாவின் பேச்சை குறித்தோ, மாவோயிஸ்ட் பற்றியதோ, ஒபாமா, மோடி, பெண்ணியவாதிகள் ,பேஸ்புக் பிரபலங்கள்  என்று யாரை பற்றியும் இருக்கலாம். மதம் சாதி அரசியல் சினிமா  இப்படி எல்லாவற்றையும்  பற்றிய வருத்தங்கள் கோபங்கள் கவலைகள் எல்லாம்  தாங்கியவை அவை.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி நிறைய எழுதுங்க என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் வித விதமான போதை பழக்கத்தை பற்றியும் நிறைய பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் அடுத்ததாக எழுத இருக்கிறோம்.    

சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் செய்யும் சிறு செயலையும் நாம் கட்டாயம் ஊக்குவிக்கவேண்டும் அப்படிப்பட்ட ஒன்றை தான் நான் அவருக்கு செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் பசுமைவிடியல், நலம் என்ற இரண்டு பேஸ்புக் தளத்திலும் அவரை இணைத்துக் கொண்டேன். இதை மட்டும்தான் நான் செய்தேன், அதற்கு பின்னர் அவர் செய்து வருவது மிக பெரிய காரியங்கள். 

என்டோசல்பான் குறித்து ஒவ்வொரு நிமிடமும் பதறும் ஒரே ஜீவன் இவர் ஒருவராகத்தான் இருக்கும். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் நம் நாட்டில் தாராளமாக நடமாடுவதை பற்றி ஏன் ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பார், என்ன பதில் சொல்வேன் நான். கேள்வி கேட்பதுடன் நிற்காமல் ஆங்கில தளங்களில் வெளிவரும் விழிப்புணர்வு கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து இரு  பேஸ்புக் பக்கங்களில் வெளியிடுவார்.  அதில் பல நமது தமிழ் பத்திரிகைகளில், பிற சமூக தளங்களில்  வெளிவராதவைகளாக  இருக்கும். (பிறகு வேறு யாரோ ஒருவரின் பெயரில் வெளிவந்துவிடும்)

அழகாக மொழிபெயர்த்து எனக்கு மெயில் செய்துவிட்டு பிழைத் திருத்தம் செய்து வெளியிடுங்க என்று குழந்தை மாதிரி சிரிப்பார். சீரியஸான கட்டுரையிலும் smily போட்டு வைப்பார், கசப்பு மருந்தை சிரித்துக் கொண்டே கொடுப்பதை போல...குழந்தை உள்ளம் கொண்டவரா இவ்வளவு சிக்கலான விசயங்களை புட்டு புட்டு வைக்கிறார் என அடிக்கடி என்னை ஆச்சர்யபடவைப்பார்.  

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மூச்சிலும் பேச்சிலும்  நம் நாட்டின் மீதான அன்பும் அக்கறையும்  வெளிப்படும். இவருடன் பழகி நான் தெரிந்துக் கொண்டதும் கற்றுக் கொண்டதும் நிறைய நிறைய. விழிப்புணர்வு கட்டுரையை வெளியிட்டு பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என சோர்ந்துப் போகும் போதெல்லாம் இவரது பேச்சு எனக்கு ஒரு டானிக். மரம் நடுவது என்பது நட்டவர்களுடன் நின்றுவிடும் ஆனால் மரம் ஏன் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களின் மனதில் விதைத்துவிட்டால் அது அவர்களின் சந்ததி வரை தெளிவை கொண்டுச் செல்லும் என்பதில் இருக்கும் நம்பிக்கைதான் அவரை எழுத வைக்கிறது. 

வீட்டுத்தோட்டம்  போடுவதில் வெளிநாடுகளில் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். அதை எளிய தமிழில் மொழி பெயர்த்து என்போன்ற தோட்ட விரும்பிகளை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.. வீட்டுத்தோட்டம் குறித்து மெயில் மூலம் கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கங்களுக்கு உடனே பதில் அனுப்பி விடுவார். இத்தனை ஷேர் போயாச்சு என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசபட்டுக் கொள்வோம்.

கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறமையானவர், அதிலும் வீணாக தூக்கி எறியும் பல பொருட்கள் இவரது கைவண்ணத்தில் அழகாகும்...சுற்றுப் புற சூழலின் மீதான அக்கறையை மீள் பயன்பாடு மூலமாக தெரிவிப்பார். தான் செய்த பொருட்களை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து மகிழ்வார்.  fish pand இல் மிதக்கும் மீன்கள் , ஜெஸ்சி பூனை எல்லாம் இவரது அன்பு செல்வங்கள் ! அவரது நட்புகள் செல்லப் பெயர் வைத்துத்தான் இவரை அழைப்பார்கள். அதிலும் நம்ம கவிதாயினி குழந்தைநிலா ஹேமா ‘மீனம்மா’ என்று அழைப்பது அழகோ அழகு !!      

போனில் அடிக்கடி என்னை அழைத்து பேசுவார்...அவரது எழுத்தைப் போலவே அவரது பேச்சும் அவ்ளோ இனிமை. சொற்களுக்கு வலிக்குமோ என்று தயங்கித்தயங்கி உதிரும் வார்த்தைகளில், மழலைக் கொஞ்சும் பேச்சில் பலமுறை சொக்கிப் போய் கிடந்திருக்கிறேன் நான். பெயரில் மட்டுமல்ல அழகிலும் குணத்திலும் பண்பிலும் உண்மையில் இவள் ஒரு தேவதை. தேவதைக்கு தெரிந்தவள் என்பதில் எனக்கும் நிறைய பெருமை!! ஆம், எல்லோருக்கும் அருகிலும் ஒரு தேவதை இருக்கத்தான் செய்கிறது...அதை கண்டுணர்ந்தவர்களே வரங்களைப் பெறுகிறார்கள் !!!   

இவரை பற்றி இன்னைக்கு எழுத ஸ்பெஷல் காரணம் என்னனா இன்னைக்குத்தான் அந்த அழகு தேவதையின் பிறந்தநாள் !

என் பிரிய தோழி Angelin க்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் !!!!