வெள்ளி, மார்ச் 8

மகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் ?!!

முகநூல்  சுவற்றில்  
நேற்றுவரை  
பெண்ணின் புகைப்படம் பகிர்ந்தும்  
அங்கங்கள் குறித்த அர்த்தமற்ற கவிதைகள் எழுதியும்  
ரசித்து விளையாடியவர்கள்  
இன்று 
தெய்வம் என்கிறார்கள் 
தேவதை என்கிறார்கள் 
சகோதரியாம் 
தோழியாம்  
சிலரோ அதிக உணர்ச்சிவசப்பட்டு 
அம்மா தாயே பெற்றவளே என்கிறார்கள்...
நாளையே இது அத்தனையும் மாறி 
பெண் என்பவள் போகப்பொருள் மட்டும் 
என்ற தங்கள் ஆழ்மன அசிங்கத்தை அரங்கேற்றுவார்கள்
அதையும் கண்டு காறித்துப்பிவிட்டு 
வழக்கம் போல எங்கள் வேலைகளை 
நாங்கள் பார்க்கவேண்டும்  !?
  
பெண்னை 
தூற்றலும்
வதைப்பதும்  
சிதைப்பதும்
எல்லாம் செய்து 
துதிக்கவும் முடிகிறது 
ஆண்களால் ??!!

இங்கே பல ஆண்களின் சுயவிளம்பர போற்றுதலுக்கு ஆளாகும் பெண்ணின் நிலை அடுத்த சில மணிநேரங்களில் தலைகீழாக மாறிவிடும்.

வெளியிடங்களிலும் எங்குப்பார்த்தாலும் மகளிர் கொண்டாட்ட வாழ்த்தொலிகள், பாராட்டு விழாக்கள் ! 

சிங்கள அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த பலமாக யோசிக்கும் நிலையில் மகளிர் தினத்தை கொண்டாடுவது ரொம்ப முக்கியம்தான்  !! வரிசையாக  பெண்ணை சிதைத்துக் கொன்று உடலுடன் உறவு கொண்டான்  சிங்களவன் என்ற செய்தியை கேட்டும் பார்த்தும் கொதிக்காத நெஞ்சில் இருந்து எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் வருகிறது...கொத்துகொத்தாக பெண்கள் சின்னாபின்னாமாகி சீரழிந்து போனதுக்கு காரணமானவர்களை சாமரம் வீசி நாட்டுக்குள் வரவேற்பார்கள், அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூட சொல்ல தைரியம் அற்ற கோழைகள் தானே நாம்!?

சிறுகுழந்தையையும் விட்டுவைக்காமல் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை  ஒரு செய்தியாய் சகஜமாய் கடந்து போகும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். நமது பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் சரியானமுறையில் ஒரு கழிவறை வசதி இல்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் ஆசிட் வீச்சுக்கள், கௌரவ கொலைகள், சாதி மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனங்கள்.......இன்னும் பல கேவலங்கள், அசிங்கங்கள் !!   

பெண்ணுக்கு எங்கே எந்த கொடுமையும் நடக்கட்டும் என் வீட்டு பெண் பத்தரமா  இருக்கிறாள் என்ற தெம்பில், திமிரில் ஒரு நாடுனா நாலும் நடக்கத்தான் செய்யும் அதற்காக பண்டிகை, தினம் எல்லாம் கொண்டாடாம, வாழ்த்தாம இருக்க முடியுமான்னு சில அறிவாளிகள் கேள்வி கேட்பதை தான் சகித்து கொள்ள முடியவில்லை. 

ஏன் சொல்றோம் எதற்கு சொல்கிறோம் என்பதைவிட அவன் சொல்றான் அதனால் நானும் சொல்றேன் என்ற ஆட்டுமந்தை குணம் மனிதர்களை விட்டு என்று ஒழியுமோ தெரியல. எந்த தினமாக இருந்தாலும் அத்தினத்தின் உண்மையான பொருள் விளங்கப்படாமலேயே அந்த தினம் முடிந்துவிடுகிறது.  

முகநூலில்  முன்பின் தெரியாத பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி பெண்கள் மீதான  அக்கறைய காட்டுற மாதிரி, அப்படியே மறக்காம உங்க வீட்டிலும் அம்மா, மனைவி, சகோதரி  என்று பெண்கள் இருப்பாங்க அவங்களுக்கும் சொல்லிடுங்க, சந்தோபடட்டும். ஆண்களே ! தயவுசெய்து தினங்களை விட்டுவிடுங்கள் உங்கள் வீட்டு பெண்களை கொண்டாடுங்கள் !

முகநூலில் பெண்ணை வர்ணித்து எழுதும் சில கவிதைகள் ஆபாசத்தின் உச்சம் ! நடிகைகள், பெண்கள் படங்களை போட்டு கருத்து சொல்றோம்னு ஒட்டுமொத்த பெண்களை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார்கள். இளம்பெண்கள்  குடிக்கிற மாதிரியான படங்களை பகிர்ந்து ஆண்கள் நாங்கள் குடிக்கிறது நாட்டுக்கு நல்லது,ஆனா பெண்கள் இப்படி குடிச்சா உலகத்துக்கே கெட்டது என்பதை போல பறைசாற்றுகிறார்கள். இந்த படங்களை போடுவதன் மூலம் தாங்கள் குடிப்பதை நியாயபடுத்திக்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருக்கும், அவலநிலைக்கும் பெரும் காரணமான டாஸ்மார்க் வியாபாரத்தை தீவிரமாக்கி வருமானம் பார்த்துக் கொண்டிருப்பதும்  ஒரு பெண் என்ற அளவில் இந்த மகளிர் தினத்தை நாம் கண்டிப்பாக சிறப்பாக கொண்டாடியே தீரவேண்டும் !? வேதனை !!

பெண்கள்

ஆண்களுக்கு சிறிதும் குறைந்தவர்கள் அல்ல ஒரு சில பெண்கள்... பிறரை கவர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ ஜாலங்கள் செய்து அதை உரிமை ,சுதந்திரம் என்று நியாயப்படுத்துவது, ஆண்களை ஆணாதிக்கம் என்று மட்டுபடுத்துவதன் மூலமே பெண்மை ஒளிரும் என்று எண்ணிக்கொண்டு செயல்படுவது,  ஆணை சாடுவது எதிர்த்து பேசுவது மட்டுமே பெண்ணியம் என்பதை போல நடப்பது.....இப்படி இன்னும்... இதுபோன்ற சில பெண்களின் செயலால் ஒத்துமொத்த பெண்களின் சுயகௌரவம் பாழாவதை  பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.  

குடும்பத்தை பொருத்தவரை ஆணுக்காக,பிறருக்காக மட்டுமே வாழ்கிறோம் என்றில்லாமல் தனக்காக வாழ்கிறோம் அதன் மூலம் தன்னை சேர்ந்தவர்களை சந்தோசப்படுத்துகிறோம் என்ற மனநிலை பெண்ணுக்கு வேண்டும். 

அரசியலில்  பெண்கள் ஈடுபடுவது பாராட்டுதற்குரியது...இதில் இரண்டு விதம்,  ஒன்று பெயருக்கு பதவியில் இருந்து கொண்டு ஆணின் சொல்கேட்டு செயல்படுவது மற்றொன்று ஒட்டுமொத்த அதிகாரத்தையும்  கையில் எடுத்துக்கொண்டு  சுயநலத்துக்காக எல்லோரையும் ஆட்டிப்படைப்பது ! இது இரண்டுமே சமூகத்தின் சாபக்கேடுகள்  ! மாறாக பெண் தனக்குரிய சிறப்பு தன்மைகளை மட்டுமே வெளிப்படுத்தி சுயமரியாதையுடன் ஒரு சமூகத்தை, நாட்டை வழிநடத்தி செல்வது என்று நடக்குமோ அன்றே நிறைவான பெண்களின் தினம் !

எல்லா நிலைகளிலும் எல்லா இடத்திலும் சமவாய்ப்பு பெறுவது தான் பெண்ணுரிமையே தவிர  ஆண்களுக்கு சமம் என்ற பெயரில் அவர்களை போல நடப்பது அல்ல என்பதை முதலில் பெண் உணரவேண்டும். ஆண்களும் தனது தாய், சகோதரி, மனைவி, மகள் தவிர மற்ற பெண்கள் வெறும் சதை பிண்டங்கள் என்ற எண்ணத்தை மாற்றியாக வேண்டும். 

ஆண், பெண் இருவரின் மனதில் இந்த மாற்றம் ஏற்படாமல் வெறும் பேச்சிற்கு மகளிர்தின வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அர்த்தமும் இல்லை...அந்த வார்த்தையில் ஜீவனும் இல்லை !!!!


                                                                        * * *



படம் :கூகுள்


புதன், பிப்ரவரி 6

விவசாயத்தால் விருது...! சாதித்த பட்டதாரி பெண் !!

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த திருமதி அமலராணி அவர்கள் சிறந்த சாதனை ஒன்றை அமைதியாக செய்து முடித்திருக்கிறார். வேளாண் அதிகாரிகளின் மூலம் இவரது சாதனை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதோ இன்று ஜனாதிபதியிடம் இருந்து கிருஷிகர்மான் விருதையும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுவிட்டார். அரசாங்கத்தின் பார்வையில் பட்ட இவரை பற்றி நாம் தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம் தான்,  ஆம் உயிர் வாழ உணவு அவசியம் என்பதால்...!! 

உணவு வேண்டும் ஆனால் அதை உண்டு பண்ணுபவனை பற்றி நமக்கு அக்கறை இல்லை.உலக மக்கள் பசியாற வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு உழைக்கும் உழவனின் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இது போன்ற விருதுகள் !


விவசாயத்தின் மீதுள்ள காதலால் கணவர் மருத்துவத்  தொழிலை கவனிக்க, இவர் வயலுக்கு வந்து விட்டார். ஒரு மகனும் ஒரு மகளும் மருத்துவ துறையிலும், இன்னொரு மகள் பிளஸ் 1ம் பயிலுகிறார். விவசாயத்தொழிலை தனது ஜீவனாக பாவிக்கும் இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.

சாதனை

விவசாயத்தில் அதிக மகசூலை பெற்று சாதிப்பவர்களுக்கு மத்திய வேளாண்மைத்துறை சார்பில் கிருஷிகர்மான் விருது வழங்கபடுகிறது. அது இந்த வருடம் இவருக்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் தான் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்து இருக்கிறார் அவரது சீரிய முயற்சியின் பலனாக அதிக அளவாக ஏக்கருக்கு 18 ஆயிரத்து 143 கிலோ மகசூல் கிடைத்தது. விருதை குறிவைத்து இவர் விவசாயம் பார்க்கவில்லை, அவ்வபோது வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு அதன் படி வேலை பார்த்திருக்கிறார்.

விருது பற்றி எதுவும் தெரியாத நிலையில் இவரது வயலில் விளைந்திருந்த கதிர்களை பார்த்த அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் அதன் அளவை குறித்து சென்றிருக்கிறார்கள் . அதற்கடுத்த வாரத்தில், தான் ஒரு சாதனை செய்திருக்கிறோம் என்று தகவல் கிடைக்க பெற்றிருக்கிறார் .ஜனாதிபதியின் கையால் விருதையும் வாங்கிவிட்டார்

இதில் இன்னொரு மகிழ்ச்சி என்னவென்றால் தேசிய அளவில் தமிழகத்தில் தான் ஒரு எக்டேரில் அதிக நெல் சாகுபடி செய்து உள்ளனர். எனவே இதை பாராட்டி தமிழகத்துக்கு 2 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

இவரை மத்திய வேளாண் மந்திரி சரத்பவார், மத்திய வேளாண்துறை செயலாளர், தமிழக விவசாயத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, நெல்லை கலெக்டர் சி.சத்தியமூர்த்தி போன்ற பலரும் கௌரவித்து பாராட்டி உள்ளனர். வேளாண்மையில் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை, வாய்ப்பு நிறைய இருக்கிறது என்கிறார் இவர்.

நெல் தவிர தென்னந்தோப்பு, காய்கறிகள் சாகுபடி, கரும்பு சாகுபடி போன்றவற்றையும் ஆர்வமுடன் செய்து வருகிறார். பெரிய அளவில் பூசணியை விளையவைத்து உள்ளூர் மக்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.

விவசாய தொழிலை கௌரவ குறைச்சலாக நினைக்கும் பலர் இருக்கும் நாட்டில் தான் இவரை போன்றவர்களும் இருக்கிறார்கள். விவசாய நிலபரப்பு குறைவதை பற்றியா ஆதங்கம் இவருக்கு நிறைய இருக்கிறது.

அதை குறித்து இவ்வாறு கூறுகிறார்...

" விளை நிலங்கள் வீடுகளாவது தடுக்கப்பட வேண்டும். மூணு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நிலம் தரிசாக கிடந்தால் அதை வீட்டு மனையாக்கி விற்க நினைக்கிறார்கள். விவசாய நிலத்தை தரிசாக போட அரசு அனுமதிக்கக்கூடாது. இதில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஒரு புறம் மக்கள் தொகை பெருகுகிறது, மறுபுறம் விவசாயம் சுருங்குகிறது. இப்படியே போனால் பஞ்சத்தின் கொடுமையை மக்கள் நேரில் பார்க்க கூடிய காலம் விரைவில் வந்து விடும்.

"இன்னும் சில ஆண்டுகள் கழித்து நகரங்களுக்கு சென்றவர்கள் எல்லாம் கிராமங்களை தேடி ஓடி வரும் நிலை ஏற்படும்...அப்போது விவசாயத்துக்கு அப்படி ஒரு மவுசு கிடைக்கும்...வேலை இல்லாத படித்த ஆண்களும் பெண்களும் ஏர் பிடிக்கும் காலம் வந்தே தீரும் !! 

அதற்கு உதாரணமாக இந்த ஆண்டில் மழை பொய்த்து போனதை கூறலாம். வரும் ஆண்டிலும் இதே போன்று நிகழ்ந்தால் உணவு பஞ்சம் வந்து விடும். அப்போது ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய்க்கு கூட விற்கலாம். இதே போல் மற்ற விவசாய பொருட்களின் விலையும் உயரும். நல்ல விலை கிடைப்பதால் ஏராளமானவர்கள் மீண்டும் கழனிக்கு வருவார்கள்... தரிசு நிலங்கள் பசுமையாக மாறும். மீண்டும் பசுமை புரட்சி ஏற்படும்"                                                   

'பெண்களுக்கு ஏற்ற தொழில் விவசாயம் தான், குடும்பத்தை கவனிக்கவும் நேரம் கிடைக்கும், தேவைக்கு அதிகமாகவே வருமானமும் கிடைக்கும்' என்று பெண்களுக்கு ஒரு யோசனையும் சொல்கிறார். 

வேறு எந்த தொழிலை போலில்லாமல் இதில் உடல் உழைப்பு இருப்பதால் உடல் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக,  உற்சாகமான மனதுடன் நீடித்த இளமையுடன் இருக்கலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் .

காலத்தின் கட்டாயம் 

விவசாயத்தில் இறங்குவது அவசியம் என்பதை உணர்ந்து இருக்கும் விளை நிலங்களை விற்காமல் இயன்றவரை விவசாயத்தில் ஈடுபட முயற்சி எடுப்போம். தெரியாத தொழில் என்று தயங்காமல் தெரிந்தவர்களின் ஆலோசனைகளை பெற்று தைரியமாக இறங்கலாம். விவசாயத்தை பொருத்தவரை வேளாண் அதிகாரிகள் நமக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள், அவர்களை அணுகி தேவையான ஆலோசனைகளை பெற்றுகொள்ளலாம்.

நிலங்கள் இல்லாதவர்கள் பிறரிடம் குத்தகை பெற்று விவசாயம் செய்கிறார்கள்...தண்ணீர் தேவைக்கு நீர் மேலாண்மை திட்டம் உதவுகிறது. அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு செயல்படுத்தபடுகிறது. சொட்டுநீர் பாசனம், நுண நீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளின் மூலம் குறைந்த நீரிலும் நிறைவான உற்பத்தி பெறமுடியும். விவசாயம் செய்யபோகும் நம் நிலத்தின் மண்ணையும், நீரையும் பரிசோதனை செய்வது நல்லது. வேளாண் அதிகாரிகளை அணுகினால் இவற்றை குறித்த விளக்கங்களை கூறி உதவுவார்கள்.

மேலும்

இயற்கை விவசாயம் செய்தால் பூச்சி மருந்து ,உரம் போன்றவற்றின் தேவை கணிசமாக குறையும். நெல் தவிர கம்பு, சோளம், உளுந்து,பயறு போன்ற  தானியங்களை விளைவிக்கலாம். காய்கறி தோட்டம் போட்டால் கூட நல்லது. ஏதோ ஒரு வகையில் இயற்கையுடன் நம்மை பிணைந்து கொள்வதின் மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அதே நேரம்  சுற்றுப்புறமும் சுகாதாரமாக மேன்மையுறும்.

ஆர்வம் உழைப்பு இருந்தால் விவசாயத்தில் வெற்றி பெறலாம். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு  பொருளாதார ரீதியாக பயன் பெற்று நம் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாவோம். நாமும் ஈடுபட்டு நம்மை சேர்ந்தவர்களையும் ஈடுபட செய்வோம்.

உறுதியுடன் முயன்றால் பசுமை உலகம் சாத்தியம் !!

வாழ்க விவசாயம்!

* * * * *

தகவல், படம் : இணையம்

புதன், ஜனவரி 23

தந்தையை தேடி...! உங்கள் உதவி தேவை நட்புகளே...!

முன்  குறிப்பு :

நண்பர் புவனேஷ் அவரது  தோழியின் தகப்பனார் காணாமல் போனதை  வருத்தத்துடன் என்னிடம் பகிர்ந்தார். பல பத்திரிக்கைகளிலும் செய்தி வெளி வந்திருக்கிறது...இருந்தும் அவர் இன்னும் கிடைக்கவில்லை. மன வேதனையுடன் விரிவாக ஒரு மெயில் அனுப்பி எனது தளத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டுமென கேட்டிருந்தார். அதன் படி இங்கே அப்படியே பகிர்கிறேன். நண்பர்கள் இயன்றால் பிளாக்,முகநூல் உட்பட சமூக தளங்களில் பகிர்ந்து தோழியின் தகப்பனார் கிடைக்க முயற்சி செய்யலாமே. 

தந்தை காணாமல் போனதும் இவர்கள் அடைந்த மன வேதனையும் தகப்பனாரை தேட இவர்கள் மேற்கொண்ட முயற்சியும் கண்கலங்க வைக்கிறது. விரைவில் இவர் கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

* * * * * * * * * *

அன்புள்ள வாசகர்களே, வணக்கங்கள்.

திருவனந்தபுரத்தில் RLNRA-41, Planning Board Lane, Rajalakshmi Nagar, Pattom என்னும் முகவரியில் எங்களுடன் வசித்து வந்த எண்பது வயதான எமது தந்தையார் திரு. நாராயணன் அவர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் காணவில்லை. அவர் தனது ஞாபக சக்தியை இழந்துள்ளார். அதன் காரணமாக மருந்துகளும் தினசரி உட்கொள்ளுகிறார். நவம்பர் எட்டாம் தேதி மதியம் ஒரு மணி வாக்கில் வெளியே நடந்து வருவதாகக்கூறி சென்றவர், இன்றளவும் திரும்பவில்லை. 
நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்யப்பெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் பத்தாம் தேதி இவரைப்பற்றிய விவரங்கள் மலையாள மனோரமாவில் வெளியிடப்பெற்றது. தூர்தர்ஷன் மற்றும் உள்ளூர்த்தொலைக்காட்சி அலை வரிசையிலும் அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வெளிவந்தன. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் மூலம், வயது முதிர்ந்த எங்கள் தந்தையாரை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. திருவனந்தபுரம் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பெற்றுள்ளன. 
தந்தை காணாமல் போன நவம்பர் எட்டாம் தேதி முதல் நிகழ்ந்த சம்பவங்கள் கீழ்வருமாறு:
8 Nov 12 : 3-30 pm:
பட்டம் மற்றும் கேசவதாசபுரம் பகுதிகளில் தேடினோம். எமது தந்தை ஒரு இதய நோயாளி என்பதால் ஒரு வேளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பெற்று உள்ளாரா என தேடினோம். அவர் அங்கு இல்லை என எங்களுக்கு தெரிய வந்தது. மருத்துவக்கல்லூரி காவல் நிலையம், காவல் துறைக் கட்டுப்பாட்டறைக்கு இந்த செய்தியை அனுப்பியது. நாங்கள் அதே சமயத்தில் எங்கள் குடியிருப்புப்பகுதியில் தேடினோம். பேரூர்க்கடா காவல் நிலையத்தில் எங்கள் தந்தையாரை தேடுமாறு வேண்டுகோள் விடுத்தோம்,

9 Nov 12:
பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்தோம். அன்றே, தூரதர்ஷனிலும் உள்ளூர் தொலைகாட்சி அலைவரிசையிலும் அறிவிப்புகள் வெளிவந்தன.
10 Nov 12:
காணாமல் போன எமது தந்தையாரை பற்றி மலையாள மனோரமாவில் அறிவிப்பு செய்தி வெளியானது.
 
11 Nov 12:
திருவனந்தபுரம் முழுவதும் காணாமல் போன எமது தந்தையாரைப்பற்றி போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்பெற்றன.
12 Nov 12 to 25 Nov 12:
எமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படையினர் உதவியுடன் திருவனந்தபுரம் நகரின் எல்லா மூலைகளிலும் தேடல் நடைபெற்றது. ரயில்வே காவல் துறையும் உஷார்படுத்தப்பெற்றது. தந்தையாருடைய சொந்த ஊர் பாலக்காடு என்பதால் அங்கும் சென்று ஊர் முழுவதும் தேடினோம். அவர் பணிபுரிந்த பெங்களூர் HAL பகுதியிலும் அந்த பகுதி தபால் துறையினர் உதவியுடன் தேடினோம். விமானப்படையினர் உதவியுடன் கேரள – தமிழக எல்லைப்பகுதிகளான கன்னியாகுமரி, சுசீந்தரம், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியில் தேடினோம். பலனில்லை. 
26 Nov 12:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. உம்மன் சாண்டி அவர்களை சந்தித்து, இந்த விஷயத்தில் அவருடைய உதவியை கோரி மனு கொடுத்தோம். அவர், ADGP அதிகாரியான திரு ஹேமச்சந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரை சந்திக்குமாறு சொன்னார். அவரையும் பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் அவர்களையும் தொடர்பு கொண்டோம். அவர்கள் எல்லா உதவியும் செய்வதாக வாக்களித்தனர்.

29 Nov 12:
பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் திரு. பிரதாபன் அவர்கள் எங்கள் தந்தையை பற்றிய குறிப்புகளை சேகரிக்க வேண்டி எங்களைத்தொடர்பு கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர், எங்கள் காரில் ஒட்டி இருந்த போஸ்டரை பார்த்து இந்த பெரியவருக்கும் எங்களுக்கும் என்ன உறவு என்று கேட்டார். நாங்கள் இவர் எமது தந்தையார் சொன்னதும், அந்த ஆட்டோ ஓட்டுனர், எங்கள் தந்தையார் அன்று மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு சாலையை கடக்க முயன்று கொண்டிருந்ததாக கூறினார். இதை வட்ட ஆய்வாளர் திரு பிரதாபன் அவர்களிடம் வாக்குமூலமாக தந்தார்.. அன்றே, ஏசியாநெட் நிருபர் வந்து தகவல்களை சேகரித்தார். ADGP, CCTV ஆவணப்படத்தை கட்டுப்பாட்டறையில் இருந்து நாங்கள் காண ஏற்பாடு பண்ணினார். அப்போது, அந்த ஆவணப்படத்தை கண்ட பொழுது, சாலையை கடந்தது எங்கள் தந்தை தான் என்று உறுதி ஆனது. இதனை அவர் சாலையை கடக்க உதவிய போக்குவரத்துக்காவல் துறை அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.

30 Nov 2012:
ஏசியாநெட் தொலைகாட்சி எனது பேட்டியுடன் கூடிய அறிவிப்பை செய்திகளுக்குப்பின் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் ஒளிபரப்பியது. போக்குவரத்து துறையினரும் உஷார் நிலையில் வைக்கப்பெறுவர் என ADGP உறுதி கொடுத்தார். 
1 Dec 2012 – 4 Dec 2012:
எங்கள் தந்தை இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர் என்பதால், கோயில்களிலும் வழிபாட்டு தளங்களிலும் தேடுதல் தொடர்ந்தது. டிசம்பர் இரண்டாம் தேதி, காவல் துறையிடம் ஐம்பது போஸ்டர்களை தருமாறு அவர்களால் அறிவுறுத்தப்பட்டோம். CCTV ஆவணமும் எங்களுக்கு வழங்கப்பட்டது.

5 Dec 2012:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. உம்மன் சாண்டி அவர்களை மீண்டும் இவ்விஷயத்தில் உதவி கோரி அணுகினோம். அவரது உதவியாளரை அணுகுமாறு அவர் கூறினார். அவரது உதவியாளர் ADGPயிடம் பேசி, அவர்களால் முடிந்த அளவு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதி கூறினார். பாதுகாப்புத்துறை அதிகாரியான திரு. அனில் காந்த் IPS அவர்களை சந்தித்து பேசினோம்.  
7 Dec 2012:
நெடுமாங்காடு பகுதிகளில் பல்வேறு அநாதை இல்லங்களில் தேடினோம்.
12 Dec 2012:
திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதி தினமலர் செய்திதாளில் தந்தை காணவில்லை என அவருடைய படத்துடன் அறிவிப்பு வெளியிட்டோம்.
20 Dec 2012:
கேரளாவில் உள்ள அனைத்து பொது சேவை NGO அமைப்புகள் கூட்டம் டிசம்பர் இருபதாம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளத்தின் பலவேறு பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களின் சார்பில்  வந்தவர்களுக்கு, காணாமல் போன தந்தையாரின் விபரங்கள் அடங்கிய படத்துடன் கூடிய போஸ்டர்கள் அளிக்கப்பெற்றன.  
4 & 5th Jan 2013:
தந்தையார் இறை வழிபாடுகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் குமரியில் இருந்து மதுரை வரை கோயில் குளங்களில் தேடினோம். 
15 Jan 2013:
பேரூர்க்கடா காவல் துறையினருடன் வள்ளியூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தேடினோம். இருப்பினும் இன்றளவும் எங்கள் தந்தையார் கிடைக்கவில்லை.
* * * * * * * * * * *

அன்புள்ளங்களே உதவி செய்யுங்கள்!
தோழியின் அன்பு தந்தையை தேடும் முயற்சி தொடர்ந்துக்கொண்டிருக்கிறது...இவரை எங்கேயும் கண்டாலும் உடனே தெரிவியுங்கள்...நாமும் நம்மால் இயன்ற அளவு இந்த செய்தியை பகிர்ந்துகொள்வோம். விரைவில் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவோம். நன்றி.

தகவல் கிடைத்தவர்கள் தொடர்பு கொள்ள - உமா - 09567739646

திங்கள், ஜனவரி 7

அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் - குற்றவாளி யார்...??!



இன்றைய பெண்கள் குறிப்பாக சிறுமிகள் மனதில் ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்பதை மிக அழுத்தமாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் பதியவைத்துவிடுமோ என்றே வருந்துகிறேன். அருவருக்க தக்க இச்செயல்களை ஒரு சில ஆண்கள் செய்வதால் ஒட்டுமொத்த ஆண்சமூகமும் தலைகுனிந்து நிற்கிறது. நடக்கும் சம்பவங்களுக்கு  ஆண்கள் மட்டுமா காரணம் !!?? என ஒரு கேள்வியும் உடன் எழுகிறது...

ஓடும் பேருந்தில் பலரால் சிதைக்கப்பட்டு இறந்த இளம் பெண், ஆசிட் வீசப்பட்டதால் வாழ்வை தொலைத்தவள், எதிர்வீட்டுக்காரனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டுவிட்டாள் என தந்தை கையால் கௌரவ(?)கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி, பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட சிறுமி புனிதா, வீட்டில் இருந்த 4 ஆம் வகுப்பு மாணவியை இருவர் சிதைத்த கொடுமை......... இவை எல்லாம் விட கொடுமை பிளே ஸ்கூல் படிக்கும் மூன்றை வயது குழந்தையை வன்கொடுமை புரிந்த பள்ளி உரிமையாளரின் கணவன் !!??

ஊடகத்திற்கு வந்தவை கொஞ்சம், ஆனால் இப்படிபட்ட அல்லது இதை விடவும் மோசமான கொடுமையான நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிக அளவில், விதவிதமாக பெண்களின் மீது காலங்காலமாக நடந்துக்கொண்டிருக்கின்றன, மீடியாக்களின் உபயத்தில் இன்று அதிகரித்து வருவதை போல தெரிகிறது...

இணையத்தின் விவாதப்பொருளா ?!

டெல்லியில் நடந்தது மட்டும் இப்போது பெரிதுபடுத்தி பார்க்கப்படுகிறது,  பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏன் இல்லை என இணையத்தில் காரசாரமான கருத்துக்கள் கண்டேன்.   ஊடகங்கள் செய்யாவிட்டால் என்ன தனி மனிதர் ஒவ்வொருவரும் போராட வேண்டியது தானே ?! நமக்கு அருகில், தெருவில் ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் போது நம்மில் எத்தனை பேர் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து சென்றிருப்போம்.

பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டுவிட்டாள் என தெரிந்ததும் ஆவேசத்துடன்  சரமாரியாக கருத்துக்கள் இடுபவர்களில் சிலர் முகநூலில் நடிகையின் படத்தை வெளியிட்டு மட்டமாக வர்ணிப்பவர்கள் !! மனதில் இவ்வளவு வக்ரத்தை வைத்துகொண்டு பெண்ணுக்கு ஆதரவாக கருத்திடும் வேடதாரிகள் ஒருவகையில் குற்றவாளிகள் தான் ! உடலை தீண்டி சிதைத்தால்தான் வன்முறையா ? பார்வையால், பேச்சால்  பெண்களை கேலிப்பொருளாக்குபவர்கள் செய்வதற்கு பெயரும் வன்முறைதான்   !!

பெண்களை போகப்பொருளாக எண்ணி பேசுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம், இப்போது பெண்களைப்பற்றி புதிதாக கவலைப்படுவது தான் வினோதம் !!
  
மேலும்

என்னவோ எல்லோரும் தமிழ்நாட்டுக்கு வெளில வாழ்வதை போல 'டெல்லியில் போராடுறாங்க, தமிழ்நாட்டுல ஏன் யாரும் போராடல' என்று முகநூல்,ட்விட்டர்ல  பொங்கறத பார்த்தபோது வேடிக்கையான வேதனை !!??  ஏதோ சொல்லனும்னு கண்டபடி உளறி இந்த மாதிரி நிகழ்வுகளை தயவுசெய்து  வெட்டி விவாதப்  பொருளாக்கி வேடிக்கை பார்க்காதீர்கள் !!  நடந்த கொடுமையை விட இது மிக அதிகமாக வலிக்கிறது !!

இது போன்ற செய்தியை சில நாள் பேசுவதும் பின் மொத்தமாக மறந்து விடுவதுமாக இருக்கும் நாம் தான் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகள் !! .

போராட்டம் ??

பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப்பிடிக்கிறோம் என்ற பெயரில் போடப்படும் கோஷங்கள் அறிக்கைகள் எல்லாம் தங்கள் உடை சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது , என் உடல் என் விருப்பம் என்பது மாதிரியாக த்தான் இருக்கிறது !! எங்கோ ஒரு மூலையில் நிமிடத்திற்கு ஒரு முறை பெண் கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள், அவற்றை எதையும் கண்டுகொள்ளாத ஆணுலகம் ஒரு புறம் என்றால், பெண்கள் இயக்கமும், அமைப்புகளும் அமைதியாகவே  இருக்கிறது !

இரோம் ஷர்மிளா என்ற பெண்ணின் பல வருட தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்று வரை பெரிதுபடுத்தப்படாமல், முடிவும் எட்டப்படவில்லை. எந்த பெண்ணுரிமை இயக்கங்களும் இதனை அவ்வளவாக தீவிரப் படுத்தவும் இல்லை ?! அவருக்கே நீதி கிடைக்காத நாட்டில் வேறு எந்த பெண்ணிற்கு கிடைத்துவிட போகிறது...??!!

தூக்கில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்?!!

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு அரசும் அதிகாரிகளும் என்ன செய்வார்கள், அவர்கள் மட்டுமா பொறுப்பு ?! தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாத வரை எந்த அரசும் என்னவும் செய்ய முடியாது ! அந்த 6 பேரை தூக்கில் போடுவதுடன் முடிந்துவிடுமா அத்தனை கேவலங்களும், அசிங்கங்களும் ?! நிச்சயமாக இதுவல்ல தீர்வு...?!!

குற்றச்செயலின் போது, உணர்ச்சி வசத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்களுக்கு உயிர் பயம் சுத்தமாக இருக்காது, ஈடுபடும் செயலை முடித்தே தீரவேண்டும் என்ற வெறி மட்டுமே  மனதை ஆக்கிரமித்து இருக்கும் என்ற நிலையில் தண்டனையை பற்றிய எண்ணம் எப்படி வரும் ?

நடக்கும் அத்தனை பாலியல் கொடுமைகளும் வெளிவருவதில்லை...  ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டுமே வெளி உலகம் அறிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மறைத்துவிடும் அளவில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. கேவலம் அவமானம் போன்றவைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை பெண்மை மௌனம் சாதித்துத்தான் ஆகவேண்டும் போல...!!

குற்றவாளியை தூக்கில் போடணும், அடிச்சே கொல்லனும் என்கிற ஆவேசமான ஆர்பாட்டங்களை மதிக்கிறேன். ஆனால் இதனால் மட்டும்  இது போன்ற பிரச்சனைகள்  முடிவுக்கு எப்படி வரும்...??!  வன்முறைக்கு மற்றொரு வன்முறை என்பது போல் ஆகுமே தவிர குற்றங்கள் குறைந்துவிடுமா?.  பலிக்கு பலி என்று மனதை சமாதானம் பண்ணிக்கொள்ளலாம், அதே நேரம் இப்படிப்பட்ட பலியை எதிர்பார்க்கும் நமக்கு  என்ன பெயர் ???! 

இன்று இவர்கள் 6 பேரை தூக்கில் போட்டுவிடுவோம், அதே நேரம் இன்னும் பலர் தினசரி செய்திகளில் தொடர்ந்து வருகிறார்களே...அவர்களை என்ன செய்வது...அதன்பிறகு நாளை சிலர் வருவார்களே...அவர்களை...???!!!  தண்டனைகள்  தொடர்கதையாகுமே தவிர வேறு என்ன நடந்துவிடும்.  மாற்றம் வந்தாகவேண்டும்...சமூகத்தில்...அரசியலில்...கல்வியில்...மனிதமனங்களில்...!!

சட்டங்கள் என்ன செய்யும் ??

ஒவ்வொரு கொலை, மரணங்கள்  ஏற்பட்ட பின்னரே விழித்துக்கொண்டு சட்டங்களை இயற்றும் நம் அரசு. பள்ளி கூரை தீப்பிடித்து நூறு குழந்தைகள் இறந்தால், பள்ளிகளை கண்காணிக்க உத்தரவு!  பள்ளி வேனின் ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்ததும் வாகனங்கள் லைசென்ஸ், பராமரிப்பை தீவிரமாக செக் பண்ணுவார்கள்... இப்போது இந்த பரிதாப டெல்லிப் பெண் கிடைத்துவிட்டார் புதிதாக சட்டங்களை இயற்ற 

கடுமையான தண்டனைகள் கொடுக்ககூடிய சட்டங்களை இயற்றுங்கள் என்பது பலரது கூக்குரல் !! சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த நாவரசு கொலை பலருக்கு நினைவிருக்கலாம். நாவரசின் கை கால்களை தனித்தனியாக வெட்டி சூட்கேசில் மறைத்த குற்றவாளி ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் ! உலகமே அதிர்ச்சி அடைந்த அந்த கொடூர கொலைக்கு தண்டனை கிடைக்க 15 வருடம் ஆனது. ராகிங் தடுப்பு சட்டம் (Tamil Nadu Prohibition of Ragging Act)ஒன்றும் அதன் பிறகு இயற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை வேறு ராகிங் குற்றங்களே நடக்கவில்லை என்பது உண்மை என்றால் , பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை இயற்ற சொல்லி போராடலாம் தவறே இல்லை !! 

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை வைத்து  பிடிக்காத கணவன்/ கணவன் வீட்டாரை பழிவாங்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அதை  போல இதற்காபோடப்படும் சட்டங்களும் தவறாக பிரயோகிக்கப்படலாம் ...  

அரசாங்கம் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம் என்று மத்திய அரசும், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என மாநில அரசும் சிறிதும் மனசாட்சி இன்றி சொல்கிறது. வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் ?? மக்கள் அரியணையில் அமரவைத்ததற்கு இதையாவது சொல்ல வேண்டாமா?? இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்வதுடன் அரசு தனது பொறுப்பை முடித்துக்கொள்கிறது. சுயநல அரசுகள், கையாலாகாத அதிகாரிகள், ஊழலுக்கு துணை நிற்கும் நீதி மற்றும் காவல்துறை, இவை  எல்லாவற்றையும் விட முதுகெலும்பில்லாத நம் மக்கள் !!!

இணைய தளங்களில் ஆவேசபடுகிற அளவில் தான் மக்களின் தைரியம் இருக்கிறது. அப்படியே ஒரு சிலர் உண்மையாக கருத்திட்டு கோபத்தை காட்டினாலும் சைபர் கிரைம் என்ற பயத்தை காட்டிவிட்டது அரசு.

சமூகம் !!

மக்களால்  கட்டி அமைக்கப்பட்ட இந்த சமூகம் இப்போது மது என்னும் கொடிய அரக்கனாலும், மின் தடையாலும் முடக்கிப்போடப்பட்டுள்ளது. தொழில், வேலை, விவசாயம் பாதிப்பது  ஒரு பக்கம் என்றால் இரவில்  தடை செய்யப்படும் மின்சாரத்தால் சரியான தூக்கமின்றி பகலிலும் தொடரும் உடல், மன சோர்வு, மன உளைச்சலில் கொண்டுபோய் விட்டு விடுகிறது. சிந்தனைகள் முழுவதும் எதன் வசமோ சென்றதை போல் மந்திரித்துவிட்ட கோழியாக வலம்  வருகிறார்கள் மக்கள். இங்கே மக்கள் என்று குறிப்பிடுவது  சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

மனம் தடுமாற குடியை காரணம் சொல்கிறான் ஒருவன், ஓ அப்படியா என்று கேட்பதுடன் இங்கே நம் அனைவரின் கடமையும் ஏறக்குறைய முடிந்தே விடுகிறது. குடிக்கிற எல்லோருமா தவறு பண்றாங்க என்ற மேதாவிகளின் விமர்சனங்களை சகித்துகொள்ளவும் பழகிகொள்ளவேண்டும் .

திரைத்துறை, தொலைக்காட்சி, மீடியாக்கள் 

திரைப்படம் விளம்பர படம் எடுக்கும் ஆண்களால் தான் கலாச்சாரச்சீரழிவு  என்ற கருத்துகள் விமர்சனங்கள் சுத்த அபத்தம் ! அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு துணை போகும் பெண்களை என்னவென்று சொல்வீர்கள்...??! உடை குறைக்கவேண்டும், ஆபாச காட்சி இருக்கிறது என்றால் முடியாது என மறுக்காமல் அதற்கு  உடன்படும்  பெண்கள் இருக்கும் வரை இந்த சீரழிவு தொடரத்தான் செய்யும் !! தனது விருப்பத்திற்காக , பணம் புகழுக்காக தனது உடலை, பெண்மையை  கடைவிரித்துவிட்ட பெண்களால் நிரம்பி இருக்கிறது திரைத்துறை, விளம்பர மீடியாக்கள் !! 

பெண்களின் அங்கங்களை கேமரா ஜூம் செய்ய அனுமதித்துவிட்டு கேமராவை  குறை சொல்வதை போல் இருக்கிறது படம் எடுப்பவர்களை குறை சொல்வது ... 

இளைஞர் கூட்டத்திற்கு  தன் அங்கங்களை காட்டிவிட்டு, 'நான் காட்டுவேன் அதை நீ பார்த்து சலனபடகூடாது' என கூறுவது என்ன லாஜிக் தெரியல...உணர்ச்சிகள் அற்றவர்களா மனிதர்கள் ?!! இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கும் மொபைல் போன் ஒன்று போதும் எத்தகைய மோசமான நிகழ்வுகளையும் நிமிடத்தில் கண்டுகளிக்க......இதற்கு மத்தியில் வாழும் இன்றைய இளைஞர்கள்  ஒரு விதத்தில் பரிதாபத்துக்குரியவர்கள், இவர்களுக்கு எது சரி எது தவறு என்று வழிகாட்ட பெற்றோர்களோ, கல்வியோ, சமூகமோ இல்லை. 

பெண்களின் உடைதான் காரணம் என்ற கருத்துகளை படிக்கும் போது  இப்படி கேட்கத் தோன்றுகிறது...திரைப்படங்களில் நடிகைகளின் அரைகுறை உடைகள்  பாலியல் உணர்வுகளை தூண்டுகிறது இனிமேல் அது போன்று உடை அணியக்கூடாது, நாகரீகமாக இருக்கவேண்டும் என அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்தால் என்ன...?!! (முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்........!!)

குற்றவாளிகள்  எங்கும் இருக்கிறார்கள்?!

பல ஹாஸ்டல் அறை சுவர்கள் கூட சொல்லும்... பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல் மாதிரியிலான(?) கதைகளை !! ஒரு சிலர்  உடன்பட்டும் மற்றவர்கள் சகித்துக்கொண்டும் கடத்தவேண்டும் நாட்களை!

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் மனபிறழ்வு, மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, போட்டி பொறாமை, பழி வாங்கும் எண்ணம் , வன்மம்  நிரம்பிய மனது சந்தர்ப்பம் கிடைப்பதற்காக காத்திருந்து சந்தர்ப்பம் அமைந்தால்,  அப்போது தெரியும் நேற்றுவரை சாதுவாக தெரிந்த இவனா இப்படி என்று...!!???

டெல்லி பெண் விசயத்தில் பிடிபட்ட ஒருவரின் வயது 17,  மற்றொருவனுக்கு 18 இருக்குமாம் ??!! என்ன கொடுமை இது !! பாலியல் வெறியை தணித்துகொண்டதுடன் நில்லாமல் உறுப்பை சிதைத்து.......????!! இவர்களின் ரத்தத்தில், மூளையில், உடல் செல்களில் எதில் கலந்திருக்கும் இத்தகைய  வன்மம் !?  அந்த பெண்ணை பார்த்த அந்த கணத்தில் ஏற்பட்ட வன்மம் மட்டும் அல்ல இது, மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு பாதிப்பு, கோபம், காயம், வலி, வடு இருந்திருக்கிறது... அது இப்போது வெளிவந்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அமைதி அடைந்திருக்கிறது .

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு மிருகம்... அன்பிற்கு அர்த்தமோ...ஆண் பெண் பேதமோ...மனித நேயமோ...இடம் பொருளோ...எதுவும் தெரியாது அவ்வளவு ஏன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வந்ததும்  மறந்து போகும்...
மிருகம் வெளிப்படும் அந்த வேளையில்...

பாலியல் இன்பத்திற்காக, பாலியல் வறட்சி காரணமாக இவை நடக்கின்றன என்றால் நாம் இன்னும் மனித மனதை சரியாக புரிந்துகொள்வில்லை என்றே அர்த்தம்!

ஏதோ ஒன்றை அடைய முயன்று அது முடியாமல் இப்படி தீர்த்துகொள்கிறார்கள்  என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதில் உண்மை இருக்கிறது. எதிலும் நிறைவு அடையாமை, மேலும் மேலும் வேண்டும் என்பதை போன்ற மனதிற்கு, ஏதோ ஒரு வடிகால் தேவை படுகிறது, சமூக சீரழிவு அரங்கேறுகிறது! 


மனிதநேயம், சக மனிதரின் மீதான அன்பு குறைந்து காழ்ப்புணர்ச்சி அதிகரித்துவிட்டது. நம் மதங்கள் கடவுளை முன்னிறுத்துகின்றனவே தவிர  ஆன்மீக விழிப்புணர்ச்சியை கொடுக்கவில்லை. மனிதனுக்குள் இருக்கும் ஆத்மாவை தூய்மை படுத்த முயற்சி செய்யாமல் தனி மனித துதிகள் பெருகிவிட்டது. 

ஒரு குற்றம் நடந்ததற்கு பின்னால் மறைமுக கா'ரணங்கள்' இப்படி பல இருக்கின்றன, ஆனால் செய்தவன் மட்டும் குற்றவாளி என கூண்டில் ஏற்றப்படுகிறான்...! வன்மத்தால் கொடுமை செய்தவனுக்கு தண்டனை வாங்கி தருவது பெரிய காரியமல்ல, வன்மம் ஏற்படாமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே மிக நல்லது !!

* * * * * * * * * * * * *
பாலியல் வன்முறை பெண்கள்  மீது மட்டுமல்ல பெண்களாலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது கொஞ்சமும்  ஜீரணிக்கமுடியாத உண்மை !! நேரம்  இருப்பின்  படித்து பாருங்கள் - பெண்களா இப்படி ??!!
மற்றும் எனது இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு
ஒரு அலசல் - குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு 
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன்...?
* * * * * * * * * * * * * * 
பெண்களே காரணம்? பெற்றோர் காரணமா? இந்த பிரச்னைக்கு தீர்வு ஏதும் இருக்கிறதா ?? 
தொடர்ந்து பேசுவோம்...சிந்திப்போம் !!

திங்கள், நவம்பர் 26

'வயாகரா' வில் அப்படி என்ன இருக்கிறது ?!! தாம்பத்தியம் பாகம் - 29


தாம்பத்தியம்  தொடரில் பலவித பிரச்சனைகளைப்  பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிகத்  தேவையானதும் கூட ! வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். அதன் மொத்தம் உள்ளடக்கம் இது...

"எனது கணவரின் வயது 46, மது,புகை  பழக்கம் உள்ளவர். 6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க 
முடிவதில்லை" என தொடர்ந்தவர் "இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா? " அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?"  என கேட்டிருந்தார்.

அவருக்கு சொன்ன பதில் பிறருக்கும் தேவைப்படலாம் என்பதால் கொஞ்சம் விரிவாக இங்கே பகிர்கிறேன். படித்துக் கருத்துக்களை கூறுங்கள்.

இன்பம்  எங்கே...?


இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதைப்  போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக்கொண்டால் போதும் என்பதே சிலரது
முடிவு...!!

ஆனால் உடல்  தயார் நிலையில் இருந்தால்  மட்டும், அங்கே உறவு நடந்துவிடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும். 


இப்போதெல்லாம்  ஆண்கள் 30-40 வயதிலேயே ஆர்வம் குன்றிவிடுகிறார்கள். ஆர்வம் என்று கூறுவதை விட இயலாமை என்பதே சரி. இதற்கு மன சார்ந்த உடல் ரீதியிலான காரணங்கள் இருக்கலாம். அவை என்ன என்று கவனித்து சரி செய்ய வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றை நாடுவது சரியல்ல. செயற்கை தூண்டுதல்கள் அந்த நேரம் சுவைக்கலாம் தொடர்ந்து அவை எடுத்துக்கொள்ளப்பட்டால் சாதாரண அணைப்பு கூட, அந்த மருந்து இல்லாமல் நடக்காது  என்றாகிவிட்டால்...?!! யோசியுங்கள்!

உறுப்பு  செயல்படும் விதம்

ஆணுக்கு உடலுறவு பற்றிய எண்ணமோ, செயலோத்  தேவைப்படும் போது மட்டும் விரிந்து நீளக் கூடிய தன்மை கொண்டதாக உறுப்பின் அமைப்பு  இருக்கிறது. விரியவோ சுருங்கவோ கூடிய இத்தன்மையை மூளையில்  உள்ள  'சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம்' என்ற பகுதி பார்த்துக் கொள்ளும் . இரண்டு விதமான நரம்பு அமைப்புகளில் ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டாலும் பிரச்சனைதான்.

பெண்ணை நினைத்ததும்  இந்த நரம்பு மண்டலம் உஷாராகி நியுரோடிரான்ஸ் மீட்டர்களை வெளியிடும், அடுத்து நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல் கோலைன், டோப்பாமைன் போன்றவை சுரக்க ஆரம்பிக்கின்றன. இவை ஆணுருப்புக்குள் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களைப்  பெரிதாக்குகின்றன. அதிகமான ரத்தம் அங்கேச்  சென்று அங்கிருக்கும் பஞ்சு போன்ற அறைகளை ரத்தத்தால் நிரப்புகின்றன. அறைகள் பெரிதானதும் ரத்தக்குழாய்கள் மூடிவிடுவதால் ரத்தம் தேங்கி உறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது.

உடலுறவு  நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குக்  கொண்டு வர மூளையின் இரண்டாவது நரம்பு மண்டலம் உடனே செயல்படத்  தொடங்குகிறது. இறுக்கத்தை குறைத்து விரிந்திருக்கும் தன்மையை தடுத்துவிடும்.

வயாகராவின் வேலை 

வயாகரா என்பது சில்டினாபில் என்கிற ஒரு கெமிக்கல். நைட்ரிக் ஆக்சைடு செய்யக்கூடிய வேலையை இதுவும் செய்யும்.  ரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிக ரத்தத்தை செலுத்துவதும் அப்படியே இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையைச்  செயலற்றதாக ஆக்குவதும் இதன் வேலை, அதாவது விறைப்பு தன்மையை! இதனால் உறுப்பு நீண்ட நேரம் விரிந்தே இருக்கும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை கொஞ்ச நேரம் தடுத்து வைக்கிறது வயாகரா.

ஆனால்  இந்த நிலைக்கு வருவதற்கு முன் மனதால் செக்சை நினைக்க வேண்டும். மனம் ஒத்துழைக்காமல் வயாகராவை மட்டும் போட்டு கொண்டால் எந்தவித பிரயோசனமும் இல்லை.

ஆரோக்கியமான மனதும் உடம்பும் அமைய பெற்றவர்களுக்கு எந்த வித செயற்கையான தூண்டுதலும் தேவையில்லை. அதே சமயம் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறை மனதிலா உடலிலா என்பது தெரியாமல் வயாகரா போட்டுக்  கொண்டால் சரியாகி விடும் என்பது முற்றிலும் தவறு.

இந்த  பெண்ணின் கணவரைப்  பொருத்தவரை அவரது புகை மது பழக்கவழக்கங்கள் அவருக்கு தாம்பத்திய ஆர்வத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் உறுப்பு எழுச்சியையும் முடக்கிப்  போட்டு விட்டது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். மற்றொன்று சர்க்கரை நோய், இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும். எனவே குடி, புகை சர்க்கரை நோய் இவற்றின் பாதிப்பை குறைப்பதில் அக்கறை எடுக்க வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றையும்,  இத்தனை நாளில் குணப்படுத்துகிறோம் என்ற விளம்பரங்கள் பின்னேயும் செல்வதும்  சரியல்ல!

பெண்களுக்கும் வயாகரா?!

இந்த வயாகரா பெண்களுக்காகவும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது...!! ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனி பிளிபான்செரின் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. உறவில் முழு திருப்தியை அளிக்க வல்லது என்றும் இதனை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. நேரடியாக மூளையை சென்றடைந்து  தேவையான கெமிக்கல்களை மூளையில் அதிக அளவில் சுரக்க வைத்து ஆர்வத்தை தூண்டுகிறது.

ஆனால் பெண்கள் இது போன்றவற்றை உபயோகிக்கும் போது வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆண்,பெண் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை, அனுமதி இன்றி எதையும் உட்கொள்வதை தவிர்தல் நலம்.

வயாகரா தீர்வு இல்லை?

தாம்பத்திய உறவு பற்றிய விருப்பம், ஆர்வம்  இல்லாதவர்களுக்கு, 'சர்க்கரை நோய் இருக்கிறதா' என சோதனை செய்வது முக்கியம். இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சைப்  பெற வேண்டும். சர்க்கரை நோயை மருந்து மாத்திரையினால் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டத்தை இந்நோய் இயங்கவிடாமல் தடுத்துவிடும் அல்லது பாதிக்கும். இந்நிலையில் எவ்வளவு தான் செக்ஸ் தூண்டுதலை வெளியே இருந்து ஏற்படுத்தினாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. இத்தகையவர்களுக்கு வயாகரா தீர்வு இல்லை. (ஒருவேளை ஈடுபட்டாலும் முழுமைப்  பெறாது.) ஆணிடம் இருந்து விந்தணுக்கள் வெளியேறுவதை போல் தோன்றினாலும் பெண்ணை அடைவதற்கு பதிலாக அவர்களின் சிறுநீர்பையினுள் சென்று விடும் !

பொதுவாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை, குடி பழக்கம் இருப்பவர்களின் ரத்த குழாய்கள்  அதிக அளவு சுருங்கும். அதோடு ஆண் உறுப்புக்கு செல்லும் ரத்த குழாய்களும் சுருங்கும் என்பதால் அங்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கும். இதனால் எழுச்சியின்மை ஏற்படும். ஆர்வம் குறையும்.

மேலும் 

இம்மாத்திரையை உடலுறவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். அந்த நேரத்திற்குள்ளாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை எட்டிவிடும். கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுடன் உட்கொள்ளப்பட்டால் ரத்தத்தில் உறிஞ்சப்படுவது தாமதமாகும். முக்கியமாக இதய நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளோடு(ISMN /ISDN) வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தாகலாம். 

சுலபமான வழி  - சூரிய குளியல் 

பாலியல் ஆர்வத்தைத்  தூண்ட ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன்  உதவுகிறது. இந்த ஹார்மோன்  சுரக்க   வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் எடுத்தாலே போதும் என்று ஆஸ்திரியா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்போது டெஸ்டோ டெரோன் 69 சதவீதம் அதிகரிக்கிறது. (நம்ம ஊர் சூரிய நமஸ்காரம் !!)
   
இறுதியாக ஒரு முக்கிய தகவல்

உடல் ரீதியினாலான குறைபாடுகள்   எதற்கும் சரியாக சிகிச்சை பெறாமலோ மது, புகை பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ நாளடைவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயப்பாதிப்பு ஏற்படும்.  100  சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் ஆண்மைகுறைவுக்கு  ஆளாகிறார்கள். இதில் 40 % பேர் மாரடைப்புக்குள்ளாகிறார்கள். இத்தகைய ஆபத்தை முதலில்  சரிப்படுத்த முயலவேண்டும். அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். இதெல்லாம் முறையான பழக்கத்திற்கு வந்த பிறகே உடல் தயாராகும். அதனுடன் மனமும்...!!

மனது நினைக்க நினைக்க அந்நினைவுகள் மூளையின் நரம்பு மண்டலத்தை மெல்ல  மீட்ட, அங்கே பிறக்கும் இசை அதிர்வுகள், உடலெங்கும் பரவி வியாபித்து ஆனந்திக்க வைக்கும்...!! அப்புறம் என்ன உற்சாக அலைகள் கரைகளை வந்து முத்தமிட, நிலவின் மடியில், இரவின்  அமைதியில், சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுங்கள்...!

இனியும் வயாகரா போன்றவை பற்றிய சிந்தனை வேண்டுமா!? தவிர்த்திடுங்களேன் !!


பின் குறிப்பு :

தாம்பத்தியம் தொடரைப்  படிக்கும் வாசகர்கள் என்னிடம் கேட்கக்கூடிய சந்தேகங்களை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.  பல சந்தேகங்களை டாக்டரிடம் தான் கேட்கவேண்டும், என்னிடம் அல்ல.  தவிர அந்தரங்கம் பற்றிய ஆழமான(?) பல கேள்விகள்  என்னை பதில் சொல்ல இயலாத படி செய்கின்றன. உண்மையில், பதில் தெரியாமல் கேட்கிறார்களா அல்லது எனக்கு தெரியுமா என சோதிக்கிறார்களா தெரியவில்லை. :-)

ஒருவர் கேட்டிருந்தார், 'பெண்ணிற்கு உச்சம் ஏற்பட்டதை ஒரு ஆணால்  எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்?' என்று ...அதற்கு நான் சொன்னேன், ஒரு கணவனால் மனைவியின் அத்தகைய நிலையை புரிந்துக்கொள்ளமுடியும் என்று... மறுபடி அவர் பதில் சொல்கிறார், மேடம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று !! கல்யாணம் ஆகாதவருக்கு இந்த கேள்வி எதற்கு??!!

கணவன்  மனைவியின்  கருத்துவேறுபாடு பிரச்சனைகளால்  பாதிக்கப்படும் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த தொடரை எழுதி வருகிறேன். அனாவசியமான  கேள்விகள்  கேட்பதைத் தயவுசெய்து தவிருங்கள். மேலும் அத்தகைய விவரங்கள்தான் தேவையென்றால் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன, தேடிக்கொள்ளலாமே...! ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்ல முடியாததால் பொதுவில் இங்கே கூறுகிறேன். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'...!!

* * * * * 


படங்கள்- கூகுள் 

வெள்ளி, நவம்பர் 9

அரசின் உதவி இன்றி ஒரு சாதனை - யார் இவர் ?!!

சாதிக்க பிறந்தவர்கள் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும்...! அவர்களின் சாதனை பலருக்கும் தெரிய வேண்டும், தெரியவைக்கப்பட வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்து திறமை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் நேர்மையாக வாழ்ந்து, பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.   தங்களின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதை விரும்பாதவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.

எதற்க்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டும் அரசை விமர்சித்து எதிர்த்தும் பேசிக்கொண்டிருப்பதை விட துணிச்சலுடன் செயலில் இறங்கி சாதித்துக் காட்ட வேண்டும். அப்படியான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார் ஆம்ஸ்ட்ராங் பமே !! கிட்டத்தட்ட 100 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க ஏற்பாடு செய்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் !

யார் இவர் ?


மணிப்பூர் மாநிலம்  டமீலாங் மாவட்டத்தில்  ஜெமி என்னும் பழங்குடி  இனத்தை சேர்ந்த முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் திரு. ஆம்ஸ்ட்ராங் பமே, 2005 ஆம் ஆண்டு டெல்லி செயின்ட்  ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். தற்போது தன் சொந்த மாவட்டமான டமீலாங்கின் துணை கலெக்டராக உள்ளார். 

1993ஆம் ஆண்டு 9 வயதில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது படிப்பில் சிறந்து விளங்கிய இவர், எல்லா பாடங்களிலும் 90 சதவீத மதிப்பெண்களை எடுத்து  இரு முறை டபுள் பிரமோசன் பெற்றார்.

இவரது அறிவியல் ஆசிரியர் இவருக்கு 120 மார்க் வழங்குவார் என்றும் 100 மார்க் பாடத்திற்கும், 20 மார்க் தனது கையெழுத்துக்கும் வழங்கினார் என குறிப்பிடுகிறார்.


டமீங்லாங் மாவட்டம், மணிப்பூர்

இம்மாவட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. மக்களால் அவசரத்துக்கு மருத்துவரை சென்று பார்க்க இயலாது. மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் வெளியூர்களில் இருந்து மருத்துவர்கள் இங்கே வர மறுத்த நிலையில் கிராம மக்கள் சொல்லொண்ணா துன்பம் அனுபவித்து வந்தனர்.  

கடந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால் இங்குள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களின் அவல நிலையை நேரில் பார்த்த இவர், தனது டாக்டர் நண்பர்களின் உதவியை நாடினார், அதில் ஒரு தோழி இந்த ஊருக்கு வந்திருந்து தேவையான மருத்துவ உதவிகளை செய்ய  சம்மதித்தார். அவரது உதவியால் 500 க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர், உயிர் பிழைத்தனர் என்றே சொல்லலாம். 

மக்களின் துன்பத்திற்கு சாலை வசதி இல்லாததே ஒரு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டார்  ஆம்ஸ்ட்ராங்.

அரசின் கவனமின்மை 

1982ம் ஆண்டு, மத்திய அரசு 101 கோடி ரூபாய் பணத்தை இங்கு சாலை போடுவதற்காக  ஒதுக்கி, திட்டத்திற்கும் அனுமதியளித்தது.ஆனால், சாலைகள் போடப்படவில்லை...!!?  போன வருடம் டிசம்பர் மாதத்தில் மணிப்பூர் வந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாலைகள் போடப்படாததை பற்றி விசாரித்தற்கு அங்குள்ள மாநில அதிகாரிகள் உடனே சாலை போட்டு விடுவதாக உறுதி கூறினார்களாம். உறுதி அளித்ததுடன் இந்த முறையும் நின்றுவிட்டது சாலை போடுவதை பற்றிய அரசின் பேச்சுக்கள் !!??


இப்படி பட்ட நிலையில் இனி அரசின் உதவியை எதிர்ப்பார்ப்பதை விட நாமாக முயற்சி செய்வோம் என்று மக்களின் துணையுடன் வேலையில் இறங்கினார்.
குறைந்தது 150 கிராம மக்கள் தங்களுக்குள் முறை வைத்து தினமும் சாலை போடும் வேலையை பார்த்து வருகிறார்கள். புதர் அடர்ந்த பகுதிகளை சுத்தம் செய்வது, சிறு மண் மேடுகளை சமப்படுத்துவது  போன்ற பணிகளை மக்கள் மேற்கொள்ள, கரடுமுரடான பகுதிகளையும் , விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் வேர் பகுதிகளையும் வெட்டி அகற்ற வாடகைக்கு அமர்த்திய  புல்டவுசர், JCB யை பயன்படுத்துகிறார்கள். 

நிதி வசதி 
டெல்லி பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரியும் இவரது  சகோதர் இவருக்கு உறுதுணையாக இருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்தும் , அரசு துறையில் பணியாற்றும் சில நல்ல அதிகாரிகள் ஆகியோரிடமும் நிதி பெற்றிருக்கிறார்கள். மேலும் இவரது குடும்பத்தினர்  அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, இளைய சகோதரன் மற்றும் இவரது சம்பளம் எல்லாமுமாக சேர்த்து மொத்தம் 4 லட்சம்  ரூபாய் பணம் செலவிட்டு இருக்கிறார்கள்.
முகநூலில் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் உதவி கேட்டதின் மூலமாக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,20,000.00 ரூபாய் டொனேசன் கிடைத்திருக்கிறது.

டெல்லி, பூனா, பெங்களூரு, சென்னை, கௌகாத்தி, ஷில்லாங், திமாப்பூர் போன்ற ஊர்களில் டொனேசன் சென்டர்களை அமைத்து நிதி உதவி பெற்றிருக்கிறார்கள்.

இதை தவிர அந்த கிராம மக்களின் ஒத்துழைப்பும உதவியும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கு தகுந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பது, தங்க வசதி செய்து தருவது , இயந்திரங்களுக்கு டீஸல், பெட்ரோல் வழங்குவது என்று சுயநலம் சிறிதும் இன்றி உதவி இருக்கிறார்கள்.

மாதம் ஆயிரம் ரூபாய் பென்சன் வாங்கும் ஒரு முதியவர் தனது ஒரு மாத பென்சன் தொகையை இப்பணிக்காக கொடுத்துவிட்டு, "என் ஆயுளுக்குள் எப்படியாவது ஊருக்குள் மோட்டார் வாகனங்கள் வருவதை பார்த்துவிட வேண்டும் " என்று சாலைவசதி  வரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறாராம்...!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இப்பணி இடையில் கடுமையான மழை பொழிவினால் சிறிது தடைபட்டிருக்கிறது. பின் முழு வீச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 70 கி மி தூரப்  பணிகள் முடிவடைந்து விட்டது. இது மணிப்பூர் , அசாம், நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ளது !! 

இத்தகைய சிறந்த செயல் இன்னும் மாவட்டத்தின் வெளியில் இருக்கும் பலரால் கவனிக்கப்படவில்லை. அதை இவர்கள் பெரிது படுத்தவும் இல்லை, அரசாங்கத்தின் நிதி உதவி இன்றி தனி ஒரு மனிதனாக மேற்கொண்ட இம்முயற்சி  பொது மக்கள், நண்பர்கள் உறவினர்கள், போன்றோரின் துணையுடன் வெற்றிகரமாக செயல்பட்டு முடியும் தருவாயை நெருங்கிவிட்டது. வரும் டிசம்பருக்குள்  வேலை நிறைவடைந்து மக்களுக்கு கிறிஸ்மஸ் பரிசா இந்த சாலை வசதி இருக்கும் என்று  சந்தோசமாக நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆம்ஸ்ட்ராங் பமே அவர்கள் !

ஐ ஏ எஸ் ஆனால் தான் இதை எல்லாம் செய்ய முடியும் என்று இல்லை. நமது தகுதி, திறமை, வேலை, வசதிகளுக்கு ஏற்ற மாதிரி குறைந்த பட்சம் நாம் வசிக்கும் தெருவிலாவது ஏதோ ஒரு நல்லதை செய்யலாம்.  ஒவ்வொன்றுக்கும் அரசு செய்யும், அரசின் கடமை என்று சொல்லாமலும், நாமதான் வரி கட்டுறோமே என்று வரி கொடுப்பதே பெரிய உபகாரம்  என்பதை போல் நடந்துகொள்ளும் சராசரிகளாக இல்லாமல் இருப்போம் !!

நாம் வாழும் சமூகம், நாளை நம் குழந்தைகள் வாழபோகும் சமூகம் நன்றாக இருக்க வேண்டாமா ?! வாழ்நாளில் ஒரு மரம்  நடாதவர்கள் கூட நம்மிடையே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று ஒரு மரத்தையாவது நடுங்கள் !

தன் வீட்டை சுத்தப்படுத்தி அடுத்த வீட்டு வாசலில் குப்பையை கொட்டும் தேசிய பழக்கத்தை மட்டுமாவது இன்றே நிறுத்துவோம், நிறுத்த முயற்சியாவது செய்வோம்.

தமிழ்நாட்டிலும் பல கிராமங்கள் சாலை வசதி இன்றி இருக்கின்றன...மாணவர்கள் கல்வி கற்க பல கிலோ மீட்டர் தூரம் கல்லிலும் முள்ளிலும், ஆற்றை கடந்தும் பயணிக்கிறார்கள். இங்கும்  ஆம்ஸ்ட்ராங் போல ஒருவர் தேவைப் படுகிறார்...!!

திரு.ஆம்ஸ்ட்ராங் பமே அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். 

                                    வாழிய எம்  நாடு !! வாழிய எம் மக்கள் !!

                                                            * * * * *
Sources:

http://e-pao.net/epSubPageExtractor.asp?src=education.Jobs_Career.Armstrong_Pame_as_I_see
http://www.northeasttoday.in/our-states/nagaland/northeast-villagers-pool-money-to-build-road-set-christmas-deadline
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-03/india/34892690_1_tamenglong-village-motorable-road

photos: Google

செவ்வாய், நவம்பர் 6

இணையம் - ஒரு 'சின்'ன விவகாரமும், ஆணாதிக்கமும்...!!?

இணையத்தில் விவாதிப்பதற்கு காரச்சாரமாக ஒரு விஷயம் கிடைத்து ஒரு மாதம் ஓடிவிட்டது, இந்த ஒன்று பலவாகி, பலரையும் பலவிதத்தில் யோசிக்க,வசைபாட,விவாதிக்க,எழுதவும் வைத்துக்கொண்டிருக்கிறது... அவர்கள் எல்லோரின் புண்ணியத்தில் எனக்கு பூர்வ ஜென்ம ஞாபகமே வந்துவிடும் போல...!? :) அந்த அளவிற்கு பல தலைமுறை வரலாறுகளை தோண்டி கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எதைப்  பற்றிய பிரச்சனை என்பதே இந்த நிமிஷம் மறந்து பின்நவீனத்துவம்னா என்னனு யோசிச்சிட்டு இருக்கேன்.:) 

நண்பர் ஒருத்தர் கேட்டார், பெண் சம்பந்தப்பட்ட இதை பற்றி பெண் பதிவர்கள் அவ்வளவா ஏன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்று...ஆதரவாக, எதிராக, நடுநிலை என்று மூன்றில் எதையோ ஒன்றை சார்ந்து பேசணும் இல்லைனா மௌனமா இருக்கணும். இந்த விசயத்தின் ஆரம்பம், முடிவு பற்றி எதுவும் தெரியாமல் என்னனு எழுத??!  (சம்பந்தப்பட்ட அத்தனையும் படிச்சிட்டு பதிவு எழுதணும்னா எனக்கு இரண்டு மாசம் ஆகும்) :) நான் பதிவுலகம் வந்த புதிதில் ஒரு பெண் பதிவரை சுற்றி பாலியல் சார்ந்த கருத்து மோதல்கள், சாதியை சாடுதல் என பிரச்சனைகள் பல கட்டங்களில் நடந்தேறின. இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இது பெண் பதிவரின் குடும்பத்திலும் எதிரொலித்து பிரச்னை பெரிதானது. இணைய உலகில் இது போன்றவையும் நிகழும் என்ற யதார்த்தம் அப்போது புரிந்தது. அதே போல் சமீபத்திய விஷயம் இன்று பலருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. எனது சொந்த(?) தளம் எதுவும் எழுதுவேன் என்று இனி சொல்ல கூட ரொம்ப யோசிக்கணும் போல !?  

இந்த பிரச்னையை பேசவோ, விவாதிக்கும் அளவிற்க்கோ எனக்கு விவரம் போறாது. அதற்குள் போகவும் விரும்பவில்லை. ஆனா இந்த பிரச்சனையை வைத்து ஒரு சிலர் சொல்லும் கருத்துக்கள் ஆண் பெண் என பிரித்து பார்பதாகவே இருக்கிறது. யாராக இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்தை விவாதிப்பது என்று இல்லாமல் எழுதியவரை தாக்குவது குறித்த என் வருத்தத்துடன் கூடிய  ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பேதம் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஆண் பெண் பேதம் பிரித்தும் பெண் என்றால் பாலியல் ரீதியாக விமர்சிப்பது என்பதும் மிக கேவலம், கண்டிக்கப்படவேண்டும். இச்செயல் படித்தவர்களிடத்தில் மிகுந்திருப்பது கொடுமை !! பணம் சம்பாதிக்க, அறிவை வளர்க்க பயன்படும் கல்வி, ஒழுக்கத்தை போதிக்கிறதா அல்லது அந்த போதனை அலட்சியபடுத்தபடுகிறதா ?!

முகநூலில் ஒரு பிரபல பெண்மணி ஒருவர் நடுநிலையாக பேசுகிறேன் என்று எழுதிய அந்த நோட்ஸில்  முழுக்க முழுக்க ஆண்களின் மீதான தாக்குதல் மட்டுமே அதிகம். அங்க சுத்தி இங்க சுத்தி தவறுகள் அத்தனையையும் தூக்கி ஒருசாராரின் மீது போடுவது எப்படி நடுநிலைமை ஆகும்...??!

ஆண்  பெண்ணை வசைபாட முதலில் தேர்ந்தெடுக்கும் வழி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் என்கிறதாம் பெண்ணிய உலகம்...??!!

அதனால் இனிமேல்,

சாதி, மதம், மொழி போன்ற பிரச்சனைக்குரிய தலைப்புகளின் வரிசையில் ஆண்களையும் சேர்த்து விடலாம் போல ...!

ஒருவர் இப்படியா பேசினார் ?! எப்படி பேசலாம் ?! என்று பாலினம் ரீதியாக மட்டும் பார்த்து பேசுவது சரியா ?!

இணையம் மூலமாக ஒரு சில வரிகளில் எவ்வளவு பெரிய பிரபலங்களையும் நெருங்கிவிடமுடியும், அதிகம் நெருங்கினால் வம்பில் முடிந்து வாழ்வே கேள்வி குறியாகிவிடும் என்பதை தற்போது காலம்  எச்சரிக்கிறதா ?!

அவ்வளவு பெரிய குற்றமா ?

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் தவறுகள் இருக்கிறது, அதற்கு சிறைத் தண்டனை என்பது மிக அதிகம் என்பதே எனது புரிதல். தெருவில் ஒரு பெண் மானபங்கபடுத்தபடும் போது  வேடிக்கை பார்க்கும் கூட்டமும்,  காவல் நிலையம் வரை பந்தாடப்படும் பெண்மை பற்றி கூட பெரிதாக கவலைபடாதவர்கள் தானே நாம்...

பெண்ணுக்கெதிராக அரங்கேறும் கேவலங்கள் தான் எத்தனை எத்தனை ?! அருவருக்கச்செய்யும் அவலங்கள்,கொடுமைகள் பார்த்து  கலங்காத மக்கள், அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை கூட கள்ளகாதல் என்று நாமகரணம் சூட்டி அதிலும் பெண்ணை மட்டுமே சாடும் விவஸ்தைகெட்ட சமூகம் !! பெண் கெடுக்கப்படுகிறாள் என்றால் அவளது சம்மதமும் அதில் இருக்கிறது என்று வாய்கூசாமல் சொல்பவர்கள் வாழும் சமூகத்தில், எழுத்துக்கள் மன உளைச்சலை கொடுத்ததால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் என்பதும் அதுக்கு சிறைத்தண்டனை என்பதும் வினோதம் !

தண்டனை சரியென்றால் இதுவரை இங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நீதி கிடைத்திருக்கிறதா? இப்போது ஊடகம் எங்கும் ஒரே பேச்சாக பேசப்படும் அளவிற்கு பிற விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா?  காரணங்கள் என்னவேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், பெண் என்றால் பெண்தான். இன்று அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து பொங்குகிறவர்கள் பிற பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடன் நின்றிருக்க வேண்டுமே...??!

பெண்களுக்கெதிராக  நடக்கும் பல பெரிய மோசமான கொடுமைகளுக்கு மத்தியில் இந்த விவகாரம் எனக்கு சிறியதாகவே தெரிகிறது.

சாதி,  மதம், இனம் என்பதன் முழுமையான புரிதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுதல் மட்டுமே இன்று மேலோங்கி நிற்கின்றது. இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற விதிவிலக்கு இல்லை. சாதியை குறித்து ஏதும் கருத்து வந்தால் என்ன ஏது என்று தீர யோசிக்காமல் ஆவேசகருத்துக்களை அள்ளி விடுபவர்கள் அதிகம். கல்வி, அரசியல் , சமூகம் என்று அனைத்து இடத்திலும் சாதி பெருமைகள் கொண்டாடபடுகிறது. அதன் அடிப்படையில் வளரும் மாணவர்களின் நிலை சுயநலத்துடன் கூடிய ஒன்றாக மட்டும் இருக்கிறது. தனது கல்வி, தனது வாழ்க்கை , தன் சந்தோசம் என்ற குறுகிய வட்டத்தில் சுற்றிவர சாதி உதவலாம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல...?!

சக  மனிதனை மதித்து அன்பும் அக்கறையும் செலுத்தும் மனப்பான்மை தற்போது குறைந்து சுயநலம் மிகுந்திருப்பதால் யார் என்ன சொன்னாலும் அதை குறையாக மட்டுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நல்லவை குறைந்து தீயவை நிறைந்துவிட்டது. 

எது கருத்து சுதந்திரம் ?

சக மனிதனை பாதிக்காத எந்த கருத்தையும் தெரிவிக்கலாம், அதுதான் கருத்து சுதந்திரம் அப்படின்னு நினைக்காதிங்க. தனக்கு என்ன சொல்ல வருதோ அதை சொல்லலாம் அதுதான் கருத்து சுதந்திரம்...!!!!? ஒரு விஷயத்தை பலவிதமாக திரித்து கூறுவது, ஆபாசமாக கருத்திடுவதை நியாயபடுத்துவது, எழுதிய கருத்தை அழிப்பது, வக்கிரமாக வன்மமாக பேசுவது, வேறு பல பெயரில் ஒளிந்து கொண்டு கருத்திடுவது, சாதி, மதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு பேசுவது இது எல்லாமே கருத்து சுதந்திரத்தில் சேரும் என்கிறார்கள். மொத்தத்தில் எதன் அர்த்தமும் புரியாத ஒரு குழப்பத்தில் நான் !!

ஒருவருக்கு சாதாரண வார்த்தையாக இருப்பது பிறருக்கு மிக ஆபாசமான வார்த்தையாக தெரியும். அது போன்றவைகளை கேட்டு பழகாத சூழலில் வளர்ந்திருக்கலாம். ஊருக்கு ஒரு தமிழ்,  சென்னையில் வா போ என்றால் சாதாரணம், ஆனால் இங்கே,  என்ன'ப்பா' என்றால் 'நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?' என்கிறார்கள். வார்த்தைகளை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அழுத்தமாக சொல்கிறது தற்போதைய பிரச்சனை !

எதிரான கருத்து ஒன்று எங்கோ வெளியிடப்படும் போதும், அது ஒருவேளை தன்னை குறித்துத்தானோ என்ற சந்தேகமே பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம் என்பது  பதிவுலகில் சகஜம்.  நம்மை குறித்த தவறான கருத்துக்களுக்கு பதில் சொல்லிகொண்டிருப்பது பிரச்சனையை அதிகரிக்குமே தவிர குறைக்காது .

முகநூல், பிளாக், டுவிட்டர் எதாக இருந்தாலும் நாம் முன் வைக்கும் கருத்துக்களை வைத்துதான் நாம் அறியபடுகிறோம். நம்ம சொந்த தளம் நான் எதுவும் சொல்வேன் என்ற ரீதியில் கருத்துக்கள் இருந்தால் பிறரும் அதே ரீதியில் தான் நடந்துகொள்வார்கள். பிறரது கருத்துக்கள் பிடித்தால் ஏற்றுக்கொள்வதும், பிடிக்கவில்லை என்றால் நிராகரிப்பதும் நமது உரிமை என்பதை நினைவில் வைத்துகொள்வது நம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது !

பெண்களே

ஆண்களை குறை சொல்றப்போ தவறாம பெண்கள் நாம சொல்றது 'உங்க அக்கா, தங்கை, அம்மா பத்தி கூட இப்படித்தான் பேசுவீங்களா?' என்று... ஆண்களை ஒட்டுமொத்தமாக மோசமானவங்க,ஆணாதிக்கவாதிகள், பாலியல் துன்புறுத்தல் பண்றவங்க என்று சொல்லும் போது நம்ம வீட்லயும் அப்பா,சகோதரன்,கணவர், மகன் என்று இருப்பார்களே அப்போ அவர்களையும் சேர்த்து தான் சொல்றோமா ?!

இதுவரை ஆண்கள் யாரும் பெண்களை பார்த்து இப்படி கேட்டார்களா என தெரியவில்லை !!?

இதுவும் ஆணாதிக்கம் ??!

தற்போது நடந்த பிரச்சனையிலும் இது முழுக்க ஆணாதிக்கம் அடிப்படையிலானது என்று கூறப்படுவது தவறு. பெண்ணை பற்றி ஆண் பேசினாலே அது ஆணாதிக்கம் என்று முத்திரை குத்தபடுவதை எண்ணி வருந்துகிறேன். இந்த பெண்ணியம் பேசுபவர்கள் எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும் என்பதையே பார்க்க மாட்டார்களா ?! ஆணாதிக்கம் என்ற கண் கொண்டு மட்டுமே பார்ப்பதால் உண்மையில் அந்த ஆண் எதை குறித்து சொல்ல வருகிறான் என்பதன் உட்கருத்து, பொருள் புரிந்து கொள்ளபடாமலேயே போய் விடுகிறது...!!? சமயங்களில் சிறந்த பொருள் பொதிந்த வாதங்களும் திசை மாறி போய்விடுகின்றன...!! 

ஒரு பெண்ணை அதிகபட்சமாக இழிவு படுத்த எவரும் கையில் எடுக்கும் ஆயுதம் பாலியல் ரீதியிலான கருத்திடல் . இதை ஆண்கள் மட்டும் செய்வது இல்லை, பெண்ணே மற்றொரு பெண்ணை அப்படி பார்க்கலாம், பேசலாம். இதை யாரும் ஆணாதிக்கம் மாதிரியான கருத்து என்று வசைபாடுவதில்லை, அதே சமயம் ஒரு ஆண் கூறும் போது மட்டும் ஏன் ஆணாதிக்கம் என்று பெரிதாக கூச்சலிட வேண்டும்...?

ஒரு ஆணை எதை சொல்லி, எந்த இடத்தில் தட்டினால் அவனுக்கு வலிக்கும் என்று ஒரு பெண்ணுக்கு நன்றாகவே தெரியும். இரக்கத்தை சம்பாதிக்க தன் விருப்பத்தை பூர்த்தி செய்ய எந்தவிதமாக பேசவும் சிலரால் முடியும். பெண் என்பதால் சலுகை கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பில் அதிகம் அடிபடுவது ஆண்கள் தான்.  ஆண் ஒரு பெண்ணை பழிவாங்க வார்த்தைகளை பிரயோகிப்பது முதலில் அவளது உடலை நோக்கி என்றால் ஒரு சில பெண்கள் கையில் எடுப்பதும் அதே உடலை(வைத்துத்தான்) நோக்கிதான்  என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை !!?   

சுயபரிசோதனை

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள்  ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் கருத்துகளை அள்ளித் தெளிக்கிறார்கள். எப்போதோ தாங்கள் பட்ட காயத்திற்கு இப்போது மருந்திடுகிறார்கள் போலும். ஆனால் இணையத்தில் இயங்கும் அனைவரையும் நன்றாக சுய பரிசோதனை செய்ய வைத்திருக்கிறது டுவிட்டர் விவகாரம் ! பேசத் தெரியும் என்பதற்காக எதையும் பேசலாம் என்று கண்டபடி உளறிக்கொட்டிக் கொண்டிருந்தவை இனிகுறையலாம்.
ஆண் பெண் இருவரும் தங்களின் எல்லை, நிலை, தகுதி அறிந்து நடந்து கொள்வது அவசியம். அது வீடாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் சரி! பகுத்தறியும் சுயசிந்தனை அற்று வார்த்தைகளை வீசுவது பூமாராங் போல திரும்பி வந்து தாக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்வது நலம்.

பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட தங்கள் நிலை உணர்ந்து மனிதநேயம் என்ற ஒன்றை மட்டுமே எண்ணி விட்டுகொடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஒன்றே இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமே, பிறரை தூற்றவோ, பழிவாங்கவோ  இல்லை. பிறரையும் நோகடித்து தானும்  மன அழுத்தத்தில் விழும் இது போன்றவை இனியும் நிகழாமல் இருக்கவேண்டும். 

சிலரின் சுயநலம், பலரின் தூண்டுதல் என மாறி மாறி சொல்லப்படும் கருத்துக்களால் பிரச்சனை இன்னும் பெரிதாகாமல் விரைவில் நல்லதொரு முடிவுக்கு வரவேண்டுமென  இறைவனை வேண்டுகிறேன்.


பிரியங்களுடன்
கௌசல்யா




படம்  -நன்றி கூகுள்