புதன், ஜனவரி 4

அன்பின் இணைய உறவுகளே...!



அனைவருக்கும் வணக்கம்.

நல்லதொரு செயல், சாதனை எங்கே யாரால் நிகழ்த்தப்பட்டாலும் உங்களால் பாராட்டப்படும், போற்றப்படும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் நேற்றைய பதிவு. என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

நல்ல எண்ணம் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறைய செய்யலாம், சாதிக்கலாம் என்கிற உத்வேகத்தை உங்களின் ஒத்துழைப்பு நிரூபித்தது. அடுத்து ஒரு நிகழ்வு இதை தொடர்ந்து நடத்தணும் என்று எண்ணி இருந்தோம் ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற போகிறது என்று இன்று காலையில் கூட எண்ணவில்லை...

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒரு இணையதளம் தொடங்க போவதாக ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்...! அதன் தொடக்க விழாவை பதிவர்களின் துணையோடு செய்வதாகவும் மற்றும் இந்தியாவின் விடிவெள்ளி சிறுமி.விசாலினி அவர்களை பதிவர்கள் இணைந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்காக பதிவர்கள் கையால் 'மரம் நடுதல்' என்கிற விழிப்புணர்வு ஒன்று என அனைத்தையும் சேர்த்து ஒரே நிகழ்வாக நிகழ்த்த முடிவு செய்திருந்தோம்.....

ஒரு பத்து நாளுக்கு முன்பே இணையத்தில் இதனை செய்தியாக பகிர்ந்து, பின் அழைப்பிதழ் ஒன்றின் மூலமாக அனைவரையும் அழைக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தோம்.....

ஆனால்

உடனே இந்த நிகழ்வை நாளையே நடத்தக்கூடிய அவசியம் ஏற்பட்டு விட்டது... அதற்கு உங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் எதிர்ப்பார்கிறேன்...

மூன்று முக்கிய நிகழ்வுகள் 

1. பதிவுலக உறவுகள் ஒரு நான்கு பேர் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்கு என்று ஒரு இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்...இதன் மூலம் பல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள பட இருக்கின்றன...தளத்தின் பெயர் 'பசுமை விடியல்' 


பசுமை போராளிகள் 

செல்வகுமார்
பிரபு கிருஷ்ணா 
சூர்யபிரகாஷ் 


(தளத்தை பற்றிய விரிவான விவரங்கள் இனி தொடரும் பதிவுகளில் )

2.இந்தியாவின் விடிவெள்ளி விசாலினியை கௌரவிக்கும் விதமாக பதிவர்களின் சார்பில் நடக்க போகும் இந்த விழாவிற்கு திரு இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் (அம்பாசமுத்திரம்)  அவர்கள் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார். நம் அரசின் பார்வை இனி பட தொடங்கி விடும் என்றே எண்ணுகிறேன்...நம்மால் இயன்ற மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம். அது நமது கடமை அல்லவா...?

3 . பசுமை விடியலின் முதல் விழிப்புணர்வு பணியாக விழாவிற்கு வர இருக்கின்ற பதிவுலக நண்பர்களின் கையால் மரங்கள் நடப்பட்ட இருக்கிறது. 

இவை எல்லாம் நல்ல முறையில் நடைபெற உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.


மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதால் எல்லோரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க இயலவில்லை...இவ்விழாவினை குறித்த செய்தியை முகநூலிலும், ட்விட்டரிலும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் அவசியம் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

விழாவிற்கு வருகை தருபவர்கள் வசதிக்காக,
எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்

சங்கரலிங்கம் - 9597666800




பிரியங்களுடன் 
கௌசல்யா 


செவ்வாய், ஜனவரி 3

யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!




   பதிவர் திரு.சங்கரலிங்கம்  அவர்கள் தனது உணவுஉலகம் தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !! 



ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

                                         

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 




15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.










                                                     
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச் செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
   

                                              

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
                                         


CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை. 



                  

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.




நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில்  பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

நன்றிகள் - இப்பதிவை பகிர எனக்கு ஊக்கம் அளித்த திரு.சங்கரலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



திங்கள், ஜனவரி 2

ஒரு பாட்டால் தமிழ் மொழி அழிந்து போய்விடுமா...?!!


நம்மவர்கள் ஏன் அடிக்கடி தமிழ் தமிழ்னு அடிச்சிகிறாங்கனு கொஞ்சம் குழப்பமா இருந்தது இப்பதான் ஓரளவு புரிகிறது...! எப்போதும் ஏதாவது ஒன்று மக்களின் தமிழ் உணர்வை தூண்டி விட்டுவிடுகிறது, அது போன்ற சமயத்தில் மட்டும் தான் தமிழர்கள் என்கிற ஞாபகமே வருகிறது...

இப்படித்தான் என் தமிழ் உணர்வை தட்டி(?) எழுப்பி விட்டது ஒரு பாடல்...எங்க வீட்டு சின்ன வாண்டு பொதுவா சினிமா பாட்டை தப்பு தப்பா அரைகுறையா பாடுவான், ஆனா ஒரு பாட்டை ரொம்ப சரியா அழுத்தமா பாடினான்...அது எப்படின்னு ஆச்சர்யபட்டு முழுசா அந்த பாட்ட கேட்டேன், சும்மா சொல்லகூடாது...முதல் முறையா கேட்ட உடனேயே  பிடித்துவிட்டது...ஆனா இதை ஒரு பாட்டா, இசையா மட்டும் எடுத்துக்காம 'தமிழ் மொழியே நாஸ்தியாகி விட்டது' என்ற ஒரு சிலரின் பேச்சுகள் எனக்கு மிகுந்த ஆச்சர்யம்...!

ஏதோ ஒரு விதத்தில இந்த பாட்டு தமிழ்நாட்டை தாண்டி எங்கையோ போய்டுச்சு...! பல மொழியினரும், கடல் தாண்டி உள்ளோரும் கூட ஒரே பாட்டை பல விதத்தில மாற்றி மாற்றி பாடி சந்தோசப்பட்டு கொள்கிறார்கள், தமிழ் நாட்டை கடந்து செல்லும் போது தமிழ் பாட்டு(?) என்றுதான் சொல்கிறார்கள்...!! தமிழின் பெருமை(?) இந்த விதத்தில் பரவுகிறது என்று சகித்துக்கொண்டு, சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

சொல்லபோனா இந்த பாட்டுல ஆங்கிலத்தைதான் கொலை பண்ணி இருக்காங்க ...!! அதை பார்த்து இங்கிலீஸ்காரனுக்கு தானே கோபம் வந்திருக்கணும் !! :)

இந்த மாதிரி சாதாரணமா எடுத்துக்கிறத விட்டுட்டு, இந்த பாட்டில் தமிழ் இல்லை, இது போன்ற பாட்டால் தமிழ் மொழி அழிந்துவிடும்...அப்படி இப்படின்னு ஒரு சிலர் ஓவரா பில்டப் கொடுக்கிறதா பார்த்தா சிரிக்காமல் இருக்க முடியவில்லை...!ஒருத்தர் சொல்றார் "தமிழ் அழிய போகுது', அப்புறம் ஒருத்தர் கேட்கிறார், "தமிழ் மெல்ல சாகுமோ", இது கூட பரவாயில்லை, இன்னொருத்தர் ஒரே போடா போட்டாரு,"தமிழ் செத்தே போச்சு"ன்னு !!என்ன கொடுமைங்க இது...?! தமிழ் என்னவோ நேத்து பிறந்து, இன்னைக்கு வளர்ந்து, நாளைக்கு சாக போற ஒரு ஜந்துவா...?!

தவறு யாரிடம் ...!?

ஏதோ ஒரு பாட்டு தமிழின் பெருமையை கெடுத்துவிட்டது, அழித்துவிட்டது என்று எப்படி சொல்வது...அந்த அளவிற்கு தமிழ் மொழி என்ன சாதாரணமா? ஒரு பாட்டால், ஒரு திரை படத்தால் தமிழ் அழிகிறது என்று சொல்பவர்கள் ஒரு நிமிடம் நிதானித்து யோசித்து சொல்லுங்கள்...

* தமிழனிடம் பேசும் போது, தமிழில் மட்டும்தான் பேசுகிறேன்.
* பேச்சில், எழுத்தில் தேவையின்றி ஆங்கிலம் இருக்கவே இருக்காது.
* என் குழந்தைகள் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள்.
* ஆங்கில மீடியத்தில் படித்தாலும் கட்டாயம் தமிழ் ஒரு பாடமாக இருக்கும்.
* குழந்தைகள் வீட்டில்/வெளியே தேவையின்றி ஆங்கிலம் பேசுவதை ஊக்குவிக்க மாட்டேன்.
* கையெழுத்தை தமிழில் போடுகிறேன்.

குறிப்பா குழந்தைகள் பெயராவது தமிழில் இருக்கிறதா ?

இல்லையா ? அப்புறம் எதுக்கு இப்படி தமிழ் தமிழ்னு குரல் கொடுத்துட்டு...?!!

நம்ம ஊரில் கம்பன் விழா, திருக்குறள் விழா போன்றவை அடிக்கடி நடத்தபடுகிறது என்பதாவது சிலர் தவிர்த்து பலருக்கு தெரியுமா ?!என்றாவது ஒருநாளாவது சென்று கலந்துகொண்டது உண்டா?

எல்லோரும் நம் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கிலவழியில் தான் படிக்கவைக்கிறோம், இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் தமிழ் வழியில் படிப்பது என்பதே மறைந்து போகும். தமிழ் பேச தெரிந்த பிள்ளைகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரியாமல் போய்விடும்.

முதலில் தமிழுக்கு உண்மையான கௌரவத்தை நாம் கொடுப்போம்...நம் வீட்டை தமிழ் படுத்துவோம்...அப்புறம் தேவை என்றால் நாட்டை பற்றியும் பிறரை பற்றியும் வரிந்து கட்டிக்கொண்டு குறை பேசலாம்.


நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் எத்தனை தமிழ் சான்றோர்கள், பெரியவர்கள் கவனிக்கபட்டார்கள்...?!! எத்தனை தமிழ் அறிஞர்கள் பாராட்டி கெளரவபடுத்தப் பட்டார்கள்...?! கல்லூரியில் தமிழ் இலக்கியம் எத்தனை பேர் விரும்பி எடுக்கிறார்கள்...? வேறு பாடம் கிடைக்காத போது, ஒரு வருடம் வீணாக போய்விடும்,சும்மா படிச்சி வைப்போம் என்றே இறுதியில் எடுக்கப்படுகிறது 'பி ஏ  தமிழ் இலக்கியம் ' !!(வெகு சிலரே விரும்பி எடுக்கிறார்கள்) அப்படியே தமிழ் இலக்கியம் படித்தாலும், படிக்கும் காலத்திலும், அதற்கு பிறகும் அப் படிப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது...?! ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன் என்கிற போது வியப்பில் உயர்த்தபடும் புருவம், தமிழ் என்றதும் 'தமிழா ?!!' என்கிற இகழ்ச்சியான பார்வைதான் !!

தமிழ் என்பது மொழி அதுவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பழம்பெருமை வாய்ந்தது. தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் உலகின் பல பகுதிகளில் இருக்கும் தமிழர்களால் பேசப்பட்டு வருகிறது...கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 7 ,000 மொழிகள் அழிந்துவிட்டன, இதை வைத்து தமிழும் அழிந்துவிடும் என்று எண்ணுவது தேவையில்லை. தமிழ் நிச்சயம் அழிய வாய்ப்பே இல்லை, உலகெங்கும் பரவலாக தன்  வேர்களை ஊடுருவ செய்து கிளைகளை பரப்பி கொண்டிருக்கிற உயிருள்ள, துடிப்பான, உணர்வுள்ள மொழி நம் தாய்மொழி தமிழ்.

நம் மொழி எப்போதும் போலத்தான் இருக்கிறது...ஒரு சிலரின் அதீத ஆர்வகோளாறு பேச்சால், நடவடிக்கையால் தான் தமிழ் என்னவோ கீழே விழுந்துட்டு இருக்கிற மாதிரியும் இவங்க எலோரும் சேர்த்து தூக்கி பிடிப்பதும் போலவும்  இருக்கிறது.

வெளிநாடு வாழ் தமிழர்கள் !

தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தான் உண்மையில் தமிழை விடாமல் இருக்கிறார்கள். அந்நாட்டின் கலாச்சாரம் எதுவும் தங்களை ஆட்கொண்டுவிடாமல் கவனமாக இருக்கிறார்கள், தமிழை உண்மையாக நேசிக்கிறார்கள், தமிழன் என்று சொல்வதில் பெருமை படுகிறார்கள்.

அதிலும் ஈழ தமிழர்களின் தமிழ் பேசும் அழகே அழகு...! வெளிநாடுகளில் தமிழ் சென்று கிளை பரப்ப நம் உடன்பிறவா ஈழத்து புலம் பெயர்ந்த சகோதர சகோதரிகள் மிக பெரிய காரணம். பிற மொழியின் தாக்கம் அவ்வளவாக இல்லாமல் அவர்கள் பேசுவதை பார்த்தாவது நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

ஆனால் இங்கே தமிழ் பேசினால் தமிழன் என தெரிந்துவிடுமோ என்று ஆங்கிலத்தில் பேசுவது அல்லது பல்லை இறுக்கி கடித்துக்கொண்டு அரைகுறையாக வாக் பண்ணி, ரீட் பண்ணி, குக் பண்ணி, டிரைவ் பண்ணி என்று அருமையான(?) 'பண்ணி' தமிழில் பேசுவது என்று தமிழன் தன்னை வேறு மாதிரி காட்டி கொண்டிருக்கிறான். செந்தமிழில் பேசுவது சிரமம்  என்றால் சாதாரணமான (பேச்சுத்) தமிழிலாவது பிற மொழி கலப்பின்றி பேசலாமே...!

ஆங்கிலத்தை ஒரு மொழியாக பார்ப்பதை விட்டு விட்டு அறிவாக பார்க்கும் நம் மனநிலை என்று மாறுவது...?!


மாற்றம் என்பது இயல்பு !

அப்பா  அம்மா என்று அழைக்கவேண்டிய குழந்தை டாடி மம்மி என்றதும் அந்த மாற்றத்தை மகிழ்வுடன் வரவேற்றோம். அப்போது தொடங்கிய மாற்றம் இன்று வரை அசூர வளர்ச்சியில் போய்க்கொண்டிருக்கிறது. அன்றே இது வேண்டாம் என நம்மால் ஏன் தடுக்க/தவிர்க்க இயலவில்லை...மாற்றம் பிடித்திருந்தது...ரசித்தோம்...தூக்கி வைத்து கொண்டாடினோம்...மாற்றம் இயல்பு தானே என சமாளித்தோம்...!!

இப்போது நடக்கும் இந்த மொழியின் மாற்றத்தையும் வேறு வழியின்றி சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்நிய மொழி மாற்றத்திற்கு வித்திட்டவர்கள் நாம், அது இன்று விருட்சமாகி இருக்கிறது. இப்போது போய் ஐயகோ தமிழ் செத்து போய்டுமே, என்று கதறுவது வேடிக்கைதான். தமிழ் மரிக்கவில்லை, இனி மரிக்கவும் வாய்ப்பில்லை ! தமிழ் மொழி மாற்றதுக்குட்பட்டு இருக்கிறது...அவ்வளவே !!

மொழி மேல் அளவு கடந்த அக்கறையும் பாசமும் இருந்தால் வெறும் வாயளவில்  தமிழ்,தமிழ் என்று மட்டும் சொல்லி கொண்டிராமல் முதலில் பிற மொழி கலவாமல்  நாம் பேசுகிறோமா என்று சீர் தூக்கி பார்ப்போம்..

அனைத்திலும் தமிழனாக இருங்கள், பிறமொழி கலவாமல் பேசுங்கள்... எழுதுங்கள்...குழந்தைகளை பேசச்சொல்லி பழகுங்கள்...தமிழரோடு பேசும்போது தமிழில் மட்டும் பேசுங்கள்...அவசியம் ஏற்படும் இடங்களில் மட்டும் ஆங்கிலத்தை துணைக்கு அழையுங்கள். மாற்றத்தை உங்களில் இருந்து தொடங்குங்கள்...!


மனம் நொந்து(!) போன ஒரு அனுபவம் 

இந்த பாட்டையும் அதனை தொடர்ந்த சர்ச்சைகளையும் கேட்டபின், மூன்றாம் வகுப்பு படிக்கும் என் பையனின் தமிழ் முதலில் எந்த விதத்தில இருக்குனு, அவனை கூப்பிட்டு 'அ,ஆ,இ எழுது, அம்மா தெரிஞ்சிக்கணும்' என்றேன்...அவனும் பேப்பரை வாங்கி வேக வேகமா எழுதி திருப்பி கொடுத்தான். 'அட சரியாத்தான் வளர்த்திருக்கிறோம்'னு பெருமையா பேப்பரை பார்த்தேன், அ ஆ... எழுதி 'ஒ' மேல சுழிச்சி(ओ இதில் இருப்பதை மாதிரி) , அடுத்து 'ஓ' பக்கத்துல : இப்படி போட்டு இருந்தான். 'என்னடா இது'ன்னு கேட்டா 'தமிழ்' என்கிறான்...?! அவன் மேல எனக்கு கோபம் வரல, தவறு என் மீதுதான்...முதல் மூன்று வருடங்கள்(from LKG) தமிழ் படித்தது போதும்(?) என்று 2ஆம் வகுப்பில்(CBSE) இருந்து இந்தியை மொழி பாடமாக படிக்க வைத்ததின் பலன் இது !!

அப்புறம் மறுபடி பதிவின் ஆரம்பத்திற்கு வருகிறேன், தமிழ் திரைப்படங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள் பல இருக்கின்றன, அதை கேட்கும் நம் குழந்தைகள் அர்த்தம் புரிகிறதோ இல்லையோ பாடுகின்றன அதை கேட்க்கும் பெரியவர்களுக்கு தான் சங்கடமாக இருக்கிறது. கொலைவெறி பாடலில் தமிழ் இல்லை என்று கொடி பிடிப்பவர்கள், முடிந்தால் மோசமான இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்களை பற்றிய உங்களின் கோபத்தையும் பதிவு செய்யுங்களேன். 

வெல்க தமிழ் !! உயர்க அதன் புகழ் !!


பின் குறிப்பு 

முதலில் என் வீட்டை சரி செய்து கொள்வேன் என முடிவு செய்து கொண்ட பின்பே இப்பதிவை எழுத தொடங்கினேன். உண்மையில் என் இரண்டாவது பையனுக்கு தாய்மொழியை சரியாக அறிய வைக்காமல் விட்டது எனது குற்றம் ! அடுத்த வருடம் இந்திக்கு பதில் தமிழுக்கு மாற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.இந்தியை தனியாக படிக்க வைத்துக்கொள்ளலாமே !  புது வருடத்தில் பல உறுதி மொழி எடுத்திருப்போம், நான் எடுத்த உறுதிமொழி இது...!

என் மன மாற்றத்துக்கு வித்திட்ட அப்பாடலுக்கு என் நன்றிகள் !



படங்கள் - நன்றி கூகுள் 

செவ்வாய், டிசம்பர் 27

இது நம்ம பூமி...!



முந்தைய  பதிவின் தொடர்ச்சி......விழிப்புணர்வு பேரணி முடிந்ததும் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஸ்நாக்ஸ்,  ஐஸ்க்ரீம், தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. எனது கணவர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று , பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் திரு. சங்கர்ராம் மற்றும் திரு.நாராயணன் இருவரும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை பற்றி மிக அருமையாக எடுத்துரைத்தனர். அவர்கள் சொன்ன பல விசயங்கள் மிக முக்கியமானவையாக இருந்தன...அனைவருக்கும் மனதில் பதியும் விதத்தில் இருந்தது. மாணவ மாணவர்களுக்கு எந்த விதத்தில் சொன்னால் புரியுமோ அந்த விதத்தில் குட்டி கதை, ஒரு பாடல் இவற்றுடன் சொன்னது அசத்தல்.  இறுதியில் இரு ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்திய போது பசங்க பக்கமிருந்து இருந்து பயங்கர அப்ளாஸ்...!!



பரிசு பொருட்கள் மற்றும் மரக் கன்றுகள் 

ஒவ்வொரு பள்ளியிலும் படிப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவ மாணவிகள் 102 பேருக்கு ஸ்கூல் பேக் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் சிறப்பு அழைப்பாளர் Mr. Mori (Japan) அவர்களால் கொடுக்கப்பட்டது.


                                         
மற்றும் மாணவர்களிடம் மரகன்றுகளை கொடுத்து அவரவர்  பள்ளிகளில் நடவேண்டும் என்றும், அவற்றை தண்ணீர் ஊற்றி பேணி வளர்ப்பது அவர்களின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாணவ  மாணவிகள் போட்டி போட்டு கொண்டு பெற்றுச்  சென்றார்கள்.

இறுதியாக என் கணவர் நன்றியுரை வழங்கினார். அனைவரும் எழுந்து நிற்க தேசிய கீதம் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

எவ்வாறு நடத்தி முடிக்க போகிறோம் என்று ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது...ஆனால் நிகழ்ச்சிகள் அனைத்தும் நாங்க நினைத்ததை விட நன்றாக நடந்து, இன்னும் பல சமூக பணிகளை செய்வதற்கு எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

மனதை கவர்ந்தவை !

பேரணியின் போது பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை குறித்து எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

=> அதை படித்து பார்த்த மாணவர்களில் சிலர் 'மேடம் எனக்கும் கொடுங்க,  வீட்டுக்கு கொண்டு போய் படிச்சி காட்டுறேன், அவங்களும் தெரிஞ்சிக்கட்டும்' சொல்லி என்னிடம் பெற்று கொண்டார்கள். அந்த வாக்கியங்களை எழுத நான் கொண்ட மெனக்கிடலின் பலன் எனக்கு கிடைத்த நிறைவு ஏற்பட்டது.

=> ஆசிரியர் பேசியபோது இறுதியாக மாணவர்களிடம் 'எல்லோருக்கும் புரிந்ததா ?' என்று கேட்கவும், மாணவர்கள் கோரசாக ஒரே குரலில் " பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் சார்" என்ற பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யம் ! 'புரிந்ததா' என்று கேள்வி கேட்டால் 'புரிந்தது' என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தேன், ஆனா ஆசிரியர் சொன்னவற்றை உள்வாங்கி கொண்டு அவர்கள் பதில் அளித்த விதம் மனதை தொட்டது.  

=> மரக்கன்றுகளை கொடுத்ததும், 'இது என்ன வகை மரம்' என்று ஆர்வமாக விசாரித்து பெற்று கொண்டார்கள் !

எதையும் தெரிந்து கொள்ளவேண்டும், அதை நடைமுறையில் செயல் படுத்த வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வத்தை நேரில் கண்டு பிரமித்தேன். இன்றைய 'மாணவர்கள் விளையாட்டுத் தனமாக இருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தை மாற்றிகொண்டாகவேண்டும்' எனக்குள் சொல்லிகொண்டேன் !!

எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்காக மேற்கொண்ட முதல் நிகழ்வு இது...இதனை தொடர்ந்து வேறு பல திட்டங்கள், திட்ட வடிவில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக முறைப்படி செயல் படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன்...!!

                                              * * * * * * * * * * * * * * * * * * * *
சுற்றுச்சூழல் !!

நாளைய உலகின் அழிவிற்கு உலக வெப்பமயமாதல் முக்கிய காரணம், இதை ஏற்படுத்தியதும் மனிதன் தான்.


மனிதன் எப்போதும் தன்னை பற்றி மட்டுமே நினைப்பவனாக இருக்கிறான்...தன்னை உயர்ந்தவனாகவும் இயற்கை, பிற உயிர்கள் போன்றவற்றை தன்னை விட மிக கீழானதாகவும் எண்ணி கொண்டிருக்கிறான். அதன் காரணமாகத்தான் நாசமானது, இன்றைய சுற்றுச்சூழல்  !! 


தனக்கு எது சாதகம் என்று பார்த்தானே தவிர ஒருபோதும் இயற்கைக்கு சாதகமாக அவன் சிந்தனை, செயல்கள் இருந்ததில்லை !!?
நாம் பிறந்த போது இருந்த பூமி வேறு இப்போது இருப்பது வேறு. மூன்று புறமும் நீரால் சூழப்பட்டும் குடிநீர் பற்றாகுறை ! குடிநீருக்காக மாநிலங்களிடையே நடக்கும் பிரச்சனை நாளை இரு நாடுகளிடையே போராக மாறக்கூடும் !!

தண்ணீருக்காக பிறரை நம்பி இருக்கவேண்டிய நிலையை அரசும் மக்களும் நினைத்தால் மாற்றமுடியும். நம்மிடம் இருக்கும் நீர் நிலைகளை தூர் வாரியும், ஆழப்படுத்தியும், பல ஏரி, குளம், குட்டைகளை வெட்டியும் மழை நீரை சேமித்து வைக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்ச்சி செய்தோ அல்லது முற்றிலும் தவிர்த்தோ அதனால் ஏற்படக்கூடிய தீமையை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு பத்து கி.மீ சாலை விரிவாக்க பணிக்கும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை சுமார் 2 ,000 !!!!?  


சுலபமாக வெட்ட தெரிந்த மனிதனுக்கு அதை வெட்ட தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற சிந்தனை இல்லையே...?!


இது நம்ம பூமி, இனி நன்றாக பார்த்துகொள்வோம்


வாழ்க்கை ஒரு முறை...இயன்றவரை, நம்மால் இயன்ற நல்லதை செய்து நிறைவாய் வாழ்ந்து முடிப்போம்...!

                                                        * * * * * * * * * * * * * * * * * * * *
பிரியமானவர்களே !


சுற்றுச்சூழலுக்கென்று புதியதொரு தளம் !

இணையத்தின் துணை மிக அவசியம் என்பதை உணர்ந்ததின் காரணமாக சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தான செயல்கள், திட்டங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள தளம் ஒன்றை தொடங்கி உள்ளேன். தற்போது இதில், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் பிரபுகிருஷ்ணா(பலே பிரபு) , சூர்யபிரகாஷ் மற்றும் செல்வகுமார் அண்ணா (செல்வா ஸ்பீக்கிங்)  போன்றோரும் இணைந்து செயலாற்ற உள்ளார்கள்.

(தளத்தை பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பகிர்கிறேன்.)


மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் களமிறங்கி பணியாற்றுவது சுற்றுச்சூழலை பொறுத்தவரை மிக அவசியம் என நினைக்கிறேன். இப்பணியாற்ற எனக்கு கைகொடுக்க கூடிய சமூக ஆர்வம் உள்ளவர்களை தற்போது இனம் கண்டு வருகிறேன். விரைவில் வலிமையான 'பசுமைப் போராளிகள் படை' ஒன்றை திரட்டி விடலாம் என நம்புகிறேன்.

நாட்டை ஒரு வழி பண்ணாம விடகூடாது என்று முடிவே பண்ணியாச்சு :))

உங்களின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எனக்கு என்றும் வேண்டும், தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கௌசல்யா

செவ்வாய், டிசம்பர் 20

நாங்கள் நடத்திய பேரணி...!






அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதற்காகதான். ஆனால் சில கண்டுபிடிப்புகள் இன்று நம் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய அளவிலேயே இருக்கின்றன. அதில் ஒன்று தான் நம் மண்ணை, சுற்றுச்சூழலை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் என்னும் அரக்கன் ! முன்பு துணிப் பைகள் அதிலும் மஞ்சள் நிறப் பைகள் எங்கும் புழக்கத்தில் இருக்கும். இப்போதோ பல நிறத்தில் விதவிதமான பிளாஸ்டிக் பைகள் வந்துவிட்டன...

எது ஒன்றும் ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது அதன் பின்விளைவுகள் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை, போக போகவே அதன் தீமைகள் புரிந்து 'இப்படி ஆகிபோச்சே' என்று வருந்துகிறோம். பிளாஸ்டிக்கை பொறுத்தவரை இதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகம், ஆனால் முறைப்படி அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதில்தான் நமக்கு சரியான திட்டமிடல் இல்லை.

சுயநல கழிவுகள் !?

தன்னுடைய வீட்டின் நடுவில் சிறிய காகித குப்பை, ஏன் சிறு முடி விழுந்து கிடந்தாலும் உயிரே போற மாதிரி உடனே அப்புறபடுத்த தெரிந்த மனிதனுக்கு, பொது இடங்கள், காடுகள், நீர்நிலைகள், விளை நிலங்களிலும் யோசிக்காமல் வீசி எறியப்படும் பிளாஸ்டிக்கை பற்றிய அக்கறை ஏன் இல்லை...?!! 

சட்டத்தின் மூலமே ஒவ்வொன்றையும் சரி கட்டணும் என்றால் மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் எதற்கு ? எப்போதும் தீமைகளை பற்றி யாராவது எடுத்து சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா ? மனித குலத்திற்கு தீமை என்று தெரிந்ததும் அதை தவிர்க்க வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் திருந்துங்க,மாறுங்க என்று குரல் கொடுத்து கொண்டே இருப்பது ? 

பிளாஸ்டிக்கை ஒழிக்கணும் என்று ஒரு சாரார் குரல் கொடுத்து வந்தாலும் பலரின் செவியை இது எட்டுவதே இல்லை...ஆனால் அரசு, தொண்டு நிறுவனங்கள் மட்டும் பிளாஸ்டிக் வேண்டாம் என்று குரல் கொடுத்தால் போதுமா? தனி மனிதன் என்ன செய்கிறான்...?! தன் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்து கொண்டால் போதும் என்ற 'சுயநல கழிவுகள் கொண்டவன்' எப்போது மாறுவது...!?


தன் வீட்டு குப்பையை கூட அடுத்த வீட்டின் வாசலில் கொட்டுபவன் முதலில் மாற வேண்டும். பிளாஸ்டிக்கின் உபயோகம் முடிந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் தூக்கி வீசுபவனுக்கு இதன் தீமையை பற்றிய விழிப்புணர்வு வேண்டும். நச்சு என தெரிந்தும் 'தனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை' என்று எண்ணுவான் என்றால் அவனை போல தாய் மண்ணின் துரோகி வேறு ஒருவரும் இருக்க முடியாது.

 "நாளை இங்கே வாழப்போகும் சுயநல மனிதனின் குழந்தைகள், குடிநீர் கிடைக்காமல்,சுகாதாரம் இல்லாத,சுவாசிக்கத் திணறி, நோய்களின் கூடாரமாகி போன உடலுடன், வாழவே தகுதி இல்லாத பூமியில் உழன்று சிதைந்து சின்னாபின்னமாகி போவார்கள்" இது இதுதான் இந்த பூமித்தாயின் சாபமாக இருக்க கூடும்...!?

பொறுமையின் இலக்கணமான பூமித்தாயை இதுக்கு மேல நாம் கொடுமைபடுத்த முடியாது...!  

நம்மை பாதுகாத்து பேணி வளர்த்து கொண்டிருக்கும் இயற்கை அன்னையை போற்றுவோம்.

எல்லாம் சரிதான்,பிளாஸ்டிக் பொருளால் என்ன தீமைனு சொல்லாம இருந்தா எப்படின்னு நினைகிறீங்களா...?!அதுதான் எல்லோருக்கும் நன்றாகவே தெரியுமே ! அதான் இங்கே சொல்லல ! பொதுவா என்னதான் பேரணி, முகாம், கருத்தரங்கம்னு மாத்தி மாத்தி பண்ணினாலும் மக்களும், கடைகாரர்களும் புரிஞ்சிக்கலையேனு வருத்தம்  இருக்கு...!! (அந்த வருத்தத்தை உங்களை தவிர வேற யார்கிட்ட போய் நான் சொல்வேன் !)

* இங்க பக்கத்தில இருக்கிற கன்னியாகுமரி மக்கள் இந்த பிளாஸ்டிக் விசயத்தில் கவனமா,விழிப்புணர்வாக இருந்து கட்டுபடுத்திட்டு வர்றாங்க...கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்வமா செயல்பட்டாலும் மக்கள் ஒத்துழைக்கலைனா எந்த நல்லதையும் நடைமுறை படுத்தவே முடியாது. நெல்லையில் இருந்து அங்கே செல்பவர்கள் விட்டுட்டு போற பிளாஸ்டிக்தான் அவர்களை கொஞ்சம் இம்சை படுத்துகிறது !! 

நாங்கள் நடத்தின பேரணி !

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையை குறித்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தவேண்டும் என்ற எனது நெடு நாள் எண்ணத்தின்படி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 13 ஆம் தேதி அன்று எங்கள் ஈஸ்ட் தொண்டு நிறுவனத்தின்(EAST TRUST) சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினோம். ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.

                                        தினசரியில் வந்த படம் + செய்தி

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி திருமதி.ச.முத்துசெல்வி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்க, ஆணையாளர் திரு.ம. செந்தில்முருகன் முன்னிலை வகிக்க நகராட்சியின் சுகாதார அலுவலர் திரு வே.குருசாமி, மேலாளர் திரு ஆ.இராஜாமணி,கவுன்சிலர் திருமதி ஜெயலக்ஷ்மி,  ஆசிரியர்கள் வே.சங்கர்ராம் மற்றும் ச.நாராயணன், பல்வேறு  பள்ளிகளை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள்,நகராட்சி பணியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஜப்பானின் ஹேப்பி சைன்ஸ் இந்தியா அசோசியேஷன் மேலாளர் Mr. யோஷிகிரோ மோரி, மற்றும் நண்பர்கள்  வந்திருந்தனர்.

விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பேனர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்தோம், வந்திருந்த மாணவர்களிடம் கொடுத்ததுடன் வேலை முடிந்ததுன்னு இருந்தேன். மாணவர்களில் ஒருவன் 'மேடம் நாங்க என்ன சொல்லி கோஷம் போட' புத்திசாலித்தனமா கேட்டான்...அப்போ வேகமா என்கிட்ட வந்த என் கணவர் 'சேர்மன் உட்பட மத்த எல்லோரும் தயார் நிலையில இருக்கிறாங்க, பேரணி முன்னாடி போகாம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற ?'னு கேட்க(அவர்கிட்ட எப்படி சொல்ல, 'எல்லாம் சரியா பண்ணிடுவேன் யு டோன்ட் வொர்ரி'னு தைரியம் கொடுத்தவளாச்சே !) 'இதோ வந்துடுறேன், நீங்க போங்க'னு சமாளிச்சு அனுப்பினேன்.


வாசகம் எழுதி கொடுக்க பேப்பர், பேனா வேணுமே என்ன பண்ணனு சுத்தியும் ஒரு லுக் விட்டு ஒரு ஆசிரியர் ஷர்ட் பாக்கெட்ல இருந்த பேனாவை பிடுங்காத குறையா வாங்கி,  ஆசிரியை ஒருவரிடம் பேப்பரை வாங்கி துண்டு துண்டா கிழிச்சு(?) பின்னாடி 'பிளாஸ்டிக்கை தூக்கி எறி, காகிதத்தை கையில் எடு', 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்' , 'மரம் வளர்ப்போம்' அப்படி இப்படின்னு தோணுறதை எல்லாம் கடகடன்னு எழுதி வரிசைல கடைசில இருந்து 'யார் குரல் கம்பீரமா இருக்கும்'னு கேட்டு அவங்க கைல கொடுத்துட்டு அப்படியே முன்னாடி (ஓடி) போய் சேர்ந்தேன். இதில சில பசங்க, 'பரவாயில்லை மேடம் பேனர்ல இருக்கிறதை அப்ப அப்ப திருப்பி பார்த்து சொல்லிகிறோம்'னு ஆறுதல் வேற !! (ம்...புத்திசாலி புள்ளைங்க !)  


முதல் முறையாக நடத்துறோம்,நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் உள்ளுக்குள் இருந்தாலும் பல பேரணிகளை நடத்திய அனுபவம்(!?) இருக்கிற மாதிரியே எவ்ளோ நேரம் தான் சமாளிக்கிறது...முடியல சாமி !! :) பேரணியில நடந்து போகும் போது, சேர்மன் மேடம் வழியில, கடைல தென்படுற அத்தனை பேரையும் பார்த்து 'பிளாஸ்டிக் இனி பயன்படுத்தாதிங்க சரியா' என சொல்லி வணக்கம் போட்டுட்டே வந்தாங்க...! அவங்க இந்த அளவு ஆர்வமா ஒத்துழைப்பு கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்கவே இல்லை.




மாணவர்களையும் சும்மா சொல்ல கூடாது, என்னமா உற்சாகமா இருக்காங்க...?! 'பிளாஸ்டிக் ஒழிக', 'காகிதம் வாழ்க', 'மரம் வாழ்க'ன்னு எக்ஸ்ட்ரா பிட் எல்லாம் போட்டு கலக்கிட்டாங்க...! மெயின் ரோட்ல வாகனங்கள் ஓரமாக ஒதுங்கி வழிவிட கம்பீரமாக ஒவ்வொரு இடமாக பேரணி கடந்து சென்றது...இறுதியாக தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்தது.


பின்னர் திருமண மண்டபம் ஒன்றில் கருத்தரங்கம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்...அதன் விவரங்கள் அடுத்த பதிவில்... 



வெள்ளி, டிசம்பர் 9

நாங்க மாறிட்டோம்...அப்ப நீங்க ?!!







திருநெல்வேலி சாலைகளில் பறக்கும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது யார் என்றே இனி கண்டுபிடிக்க முடியாது...ஏன்னா இப்ப எங்க தலை ஹெல்மெட்டுக்கு மாறியாச்சு...!! :) எங்கு காணினும் ஹெல்மெட் தலைகள்...பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது...

அது எப்படி மக்களுக்கு தங்கள் உயிர் மேல் அக்கறை வந்துடுசானு கேட்கபடாது...மக்கள் உயிர் மேல எங்க புது கமிஷனருக்கு அக்கறை அதிகம்...நல்ல மனிதர்.புதிதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக திரு. கருணாசாகர் அவர்கள் பதவி ஏற்றதும் போட்ட முக்கியமான உத்தரவே ஹெல்மெட் அணிவது இனி கட்டாயம் என்பதுதான். 


ஒரு வாரம் அவகாசம் கொடுத்தார். எத்தனை நாள் அவகாசம் கொடுத்தாலும் நமக்கு கடைசி நாள்ல முட்டி மோதி கூட்டத்தோட கூட்டமா எதையும் வாங்குறதுதான் பழக்கம்...! நாம தான் அப்படினா ஊரே அப்படிதான் இருக்கு...ஹெல்மெட் வாங்குற இடத்தில செம கூட்டம்...! 

பழசு ஒன்னு உபயோகம்(?) இல்லாம ஸ்டோர் ரூமில இருக்கு, என்ன கொஞ்சம் தூசி அடைஞ்சி போய் பார்க்க ஒரு மாதிரியா இருந்தாலும் 'பரவாயில்லை அதையே தூசி தட்டி போட்டுகோங்க' சொன்னா இவர் கேட்டாதானே...(சிக்கனத்தில  பெண்களை அடிச்சிக்கவே முடியாது ஆமாம் !)

ம்...நான் சொல்றத கேட்ட மாதிரி தெரியல...!! ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க என்னவர் செம புத்திசாலி...நெல்லையில் இப்ப நம்பர் ஒன் பிசினஸ் எது என்றால் ஹெல்மெட் தான்...பிளாட்பாரம், திருமண மண்டபம் என்று குவிச்சு போட்டு விக்கிறாங்க...விலை இஷ்டம்போல சொல்றாங்க...ஆளுக்கு ஏத்தமாதிரி 600 ல இருந்து 1,500 , 1,800, 2000௦ என்று விக்கிறாங்க...மக்களும் வேற வழி இல்லாம (புலம்பிட்டே தான்)வாங்குறாங்க...! 

ஆனா பக்கத்து மாவட்டத்துக்கு ஒரு வேலையா போன கணவர் அங்கேயே  ஹெல்மெட் வாங்கிவிட்டார். விலை 500 மட்டுமே...நெல்லையில் தான் அதிக விலை, அடுத்த மாவட்டத்தில கம்மியா இருக்கும்னு பிளான் பண்ணி வாங்கின என் கணவர் புத்திசாலிதான்...ஆனா வாங்கிட்டு வந்து இதை சொன்னதும் எனக்கு செம கோபம்...நாம சரியாதானே பண்ணி இருக்கிறோம் எதுக்கு இப்படி முறைக்கிறானு அவருக்கு ஒரே யோசனை ! பின்ன என்னங்க வாங்கினது தான் வாங்கினார், கூட நாலு வாங்கிட்டு வந்திருந்தா அதை அக்கம் பக்கத்துல கொடுத்து இரண்டு மடங்கு அதிக பணம் பார்த்திருப்பேனே...! (என்னதான் சொல்லுங்க இந்த ஆண்களுக்கு சாமார்த்தியம் போதவே போதாது !)


* * * * * * * * * * * * * * * 


என்னங்க படிச்சாச்சா ? இனி நேரா விசயத்துக்கு வரேன்...(அப்ப இப்ப வரை சொன்னது !!?) மேலே சொன்னவை நகைசுவை மாதிரி சொன்னாலும் பலபேரின் பேச்சுக்கள் இப்படிதான் இருக்கிறது...எது எதுக்கோ அனாவசியமா பணம் செலவு செய்வது ஆனா உயிரின் பாதுகாப்பு பற்றிய இந்த விசயத்தில ரொம்ப யோசிச்சு மிச்சம் பிடிக்கிறது...?!! 


தலை கவசம் அவசியம் என்று அரசு சொல்வது நமது நம்மைக்காகத்தான் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். வீட்டில் கிடக்கும் பழையதை தூசி தட்டி போடுவது, பிளாட்பாரத்தில் நூறு, இருநூறுக்கு மலிவாக  கிடைக்கிறதே என்று வாங்கி சாமாளிப்பதும் புத்திசாலித்தனம் அல்லவே அல்ல...


ஹெல்மெட் பற்றிய சில தகவல்கள் 




பைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி.ஸ்டேபிலைசெர் இவற்றின் உதவியுடன் பல அடுக்குகளாக கொண்டு தயாரிக்கபடுகிறது.இதில் ஒவ்வொன்றும் பல தரத்தில் இருக்கிறது. நல்ல தரமான பொருட்கள்  பயன்படுத்தப்பட்டு தயாரிக்க பட்டதை வாங்கவேண்டும். இதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது என்கிற போது ஒரே வழி சிறந்த கம்பெனிகளின் நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவதுதான். சாலை ஓரங்களில் விற்கபடுபவை எந்த அளவிற்கு தரமானவை என்று சொல்ல முடியாது. 


* எடை 800 கிராமுக்கும் 2  கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமானவைகள்.


* உள்ளே இருக்கும் துணியை விலக்கி பார்த்தால் கரடு முரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். இது போலி.


*எடை அதிகமுள்ள ஹெல்மெட் தவிர்த்துவிடுங்கள்...இஞ்ஜக்சன் மோல்டிங் வகையில் கிடைக்கிறது...விலை அதிகம், ஆனால் அணிந்திருப்பது அவ்வளவாக சுமையாக தெரியாது. 


தரமில்லாத ஹெல்மெட் போட்டும் பிரயோசனம் இல்லை, விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால் தலைக்கும் சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே விலையை பார்க்காமல் தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை. 


ஏன் அணியவேண்டும்?! 

சாலை விபத்துகளில் அதிகமாக நடப்பது இருசக்கரவாகனத்தால் என்கின்றனர். எனவே அவசியம் ஹெல்மெட் அணிவது உயிரிழப்பை தடுக்கும். 


ஹெல்மெட் அணிவதினால் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம் சும்மா என்று ஆய்வுகள் சொல்கின்றன. எனவே நம்பாதிர்கள். உண்மையில் இதை அணிவதனால் தலைக்கு பாதுக்காப்பு என்பதுடன் மறைமுகமாக வேறு பல நன்மைகள் இருக்கின்றன என்பதை யோசித்து பார்த்தால் புரியும். 


* பிற வாகனங்களின் இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சப்தம், வாகனங்களின் இரைசல் ஒலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.  


* மார்கழி மாத குளிரில் இருந்து ஓரளவு தப்பிக்கும் காது.


* தூசிகள், மாலை இரவு நேரங்களில் சாலையில் எதிர்வரும் பூச்சிகளில் இருந்து கண்ணையும் காதையும் காத்துக்கொள்ளலாம். 


* மிக முக்கியமா செல்போன் அடிச்சா கேட்காது, வைபிரேசன் மூலம் தெரிந்தாலும் வண்டி ஓட்டிகொண்டு போகும் போது பேச முடியாது !! (அதுதான் நாங்க ஹெட் போன் போட்டுப்போமே என்கிறீர்களா ! ம்...விதி யாரை விட்டது!) 


தெருவுக்கு தெரு இங்கே போலிஸ் நிற்கிறார்கள் போடாதவர்களை பிடித்து ஸ்பாட் பைன் போடுகிறார்கள், வழக்கும் பதிவு செய்யபடுகிறது. கமிஷனர் உத்தரவு போட்டதற்காக அணியவேண்டும் என்பதை விட நம் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அணியவேண்டும்...நெல்லையில் தானே இந்த உத்தரவு கடுமையாக்கபட்டிருக்கிறது. நமக்கு இல்லையே என்று நினைக்காமல் ஹெல்மெட் வாங்கி அணியுங்கள்...அனைத்து ஊர்களுக்கும்  உத்தரவு போட பட்டு இருந்தாலும் இன்னும் சரி வர கடைபிடிக்க படவில்லை. 


சிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல போக முடியல, வியர்வையால் பெரும் சிரமமாக இருக்கிறது என்று. சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!

புரிந்து கொண்டு செயல் படுங்கள்...பெறுவதற்க்கறிய இந்த மானிட பிறப்பை சரியாக வாழ்ந்து முடிக்கும் முன்னே, அனாவசியமாக சாலையோரத்தில் உயிரை விட்டு விடகூடாது...


ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள்...வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் என்றும் எப்போதும்...!!


அரசு தொடர்ந்து முழு உத்வேகத்துடன் ஹெல்மெட் அணிவதை கட்டாயம் செயல்படுத்தபடவேண்டும்...உத்தரவிடும் போது இருக்கும் கண்டிப்பு,அதே வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும்...


நெல்லையில் இதை அருமையாக நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் எங்கள் கமிஷனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! 

                                  தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! 

                                                              * * * * * * * * * 





ஹெல்மெட் பற்றிய தகவல்கள், படங்கள் - நன்றி கூகுள் 

புதன், டிசம்பர் 7

ஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'



இதுவரை கட்டுரைப்  போல பதிவுகள் எழுதி இருந்தாலும் கதை எழுதியதில்லை. (எழுதத் தெரியவில்லை என்பதே உண்மை) ஆனால் என் மனதை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்  பற்றி எழுதவேண்டுமென நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது. தவிர இதை எழுதுவதற்கு  ஒரு முக்கிய காரணம் அவள் என் நெருங்கிய சினேகிதி...! தனது மனக்  குமுறல்களை டைரியிலும்  என்னிடமும் தவறாதுக்  கொட்டிவிடுபவள்...அனைத்தையும் சேர்த்து ஒரு கதையாக(?) என் தோழியின் சுய சரிதையை இங்கே பதிகிறேன் அவளின் அனுமதியுடன்...(அவரது வேண்டுகோளுக்கிணங்க பெயரும் ஊரும் மட்டும் தவிர்க்கப்படுகிறது)

முன் அறிமுகம் !

சந்தோசமான வாழ்க்கை எல்லோருக்கும்  அமைந்துவிடுவதில்லை, பிரச்சனைகளின் நடுவில் வாழ்பவர்களில் ஒரு சிலர் ஒரு கட்டத்தில் மீண்டு எழுந்துவிடுவார்கள் ஒரு சிலரால் முடிவதில்லை. அந்த ஒரு சிலரில் இவளும்  ஒருத்தி. சிறுவயதில் மனதைப்  பாதித்த சம்பவங்கள் திருமணம் முடிந்தபின்னரும் ஏன் வயதான பின்னர் கூட மனதை அழுந்த செய்யும்.அதிலும் இந்த பெண்ணைப்  பொறுத்தவரை சிறு வயதில் மனதை பாதித்தவைகள் திருமணத்திற்கு பின்னரும் தொடருவது வேதனை ! அன்பான கணவன் , குழந்தைகள், செல்வச்செழிப்பான வாழ்வு என எல்லாம் இருந்தும் எதுவுமே தனதில்லை என்பதைப்  போல எந்த வித பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.

யார் இவள் ?

சிறு வயதில் இருந்து எனக்கு அவளைத்  தெரியும்...ஒருவர் குடும்பத்தை பற்றி மற்றொருவருக்கு நன்கு பரிட்சயம் உண்டு.நடுவில் சில வருடங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவளது சொந்த ஊரில் இருக்கும் ஹாஸ்டலில் தங்கி தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தாள்...பின் கல்லூரி வாழ்வின் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது...இன்று வரை தொடருகிறது எங்களின் நட்பு. 

தாம்பத்தியம் தொடரை நான் எழுத மிக முக்கிய காரணம் என் தோழி தான். இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கலாம், அவள் வாழ்வில் எதனால் பிரச்னை என்று ?! ஆம். அவளது பெற்றோரின் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சண்டைகள் ! இது ஒரு பக்கம் என்றால் இவற்றின் நடுவே வேறு சில இம்சைகள்(?) இவையும் சேர்ந்துக்  கொண்டு இவள் மனதை அதிகம் பாதித்தன, கண்டபடி யோசிக்க வைத்தன...

சில அனுபவங்கள்  

தனது பத்தாவது வயதில் திருமணமான ஒரு ஆணின் பாலியல் ரீதியிலான தவறானத்  தொடுதல்...ஹாஸ்டலில் பிளஸ் 1 படித்த போது லெஸ்பியன் பற்றிய அர்த்தம் புரியாமல் அதைப்  பற்றி அறிய நேரிட்ட சூழல்...இப்படி வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் கிடைத்தன சில கசப்பான அனுபவங்கள் !

இதற்கிடையில் இவளது வாழ்வில் அழகான காதல் ஒன்றும் வந்து(!) போனது(?) ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமல் ஆறு வருடமாக வளர்த்த காதல், பிறகு ஒருநாள் முதல் முறையாக இருவரும் நேரில் சந்தித்து தங்கள் விருப்பங்களை வெளியிட்ட அக்கணத்திலேயே அந்த அழகான காதல் முடிவுக்கும் வந்து விட்டது ?!!

ஆமாம். காதலைச்  சொன்ன அத்தருணத்திலேயே இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட்டனர்...அதன் பின் இந்த நிமிடம் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதே இல்லை...ஆனால் அந்த காதல் இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது இருவரின் நெஞ்சிலும் என்பதை அறிவேன்...!

இப்படி அவளது பல வித்தியாசமான சம்பவங்களை எவ்வித ஜோடனையும் இன்றி அப்படியே பதிய வைக்க எண்ணுகிறேன்.

'இவள்' உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்...ஆனால் நிச்சயம் உங்கள் மனதைப்  பாதிப்பாள்...'இவள்' மட்டும் என்று இல்லை இவளைப்  போன்று பலர் நம்மிடையே இருக்கிறார்கள், நமக்கு  தெரிய வாய்ப்பில்லை...! 'இவள்' ஒருவேளை நம் முன்னே நடமாடி கொண்டிருக்கலாம்,நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம், பழகிக்  கொண்டிருக்கலாம்...ஒரு தோழியாக, சகோதரியாக...

ரகசியமாக தனக்குள்ளே இன்னொரு(?)வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவளைப்  போன்றோர் தங்களது சுயத்தை, மனதைத்  தாங்களாக எங்கும் வெளிப் படுத்த விரும்ப மாட்டார்கள்...ஒருவேளை இவளைப்  போன்ற சாயலில் யாராவது உங்களிடம் பேசும்போது ஒரு பலவீனமான கணத்தில் சில வேதனைகளைக்  கொட்டி இருக்கலாம், அதை அசட்டைச்  செய்யாமல் ஒரு ஆறுதல் வார்த்தைச்  சொல்லி ஒரு சின்னப்  புன்னகையைப்  பரிசளியுங்கள்...அவளது கனவுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களும் மணம் வீசிவிட்டுப்  போகட்டும்...!!

இந்த 'இவள்' பிடித்தால் தொடர்ந்துப்  படியுங்கள், பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படியுங்கள்...ஒரு பெண்ணின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ள...

முன் அறிமுகம் ஒரு வழியாக முடிந்து விட்டது. :) என் தோழியே தனது கதையைச்  சொல்வதாக எழுதி இருக்கிறேன்...உங்களுடன் இனி அவள் பேசுவாள்...நான் விடைப் பெறுகிறேன்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


இவள்...!

'Born with a Silver spoon in my mouth' என்று சொல்கிற மாதிரியான குடும்பத்தில் இரண்டாவது பெண்ணாகப்  பிறந்தேன். குழந்தையில் குண்டா(!) அழகா இருப்பேனாம், இப்பவும் போட்டோவுலப்   பார்த்தா எனக்கே பெருமை தாளாது...என்னைத்  தூக்கி வச்சுகிறதுக்குனே ரசிகர்கள் கூட்டம் அலையுமாம்...!


ஐந்து வயது வரை மிகச்  செல்லமாக வளர்ந்தேன்...வளர்க்கப்பட்டேன்...!அதற்கு பின் விதி ஒரு ஜோசியக்காரன் வடிவத்தில்  வந்தது...எதிர்காலத்தில எனக்கும் அம்மாவுக்கும் ஒத்தே போகாதாம், எப்பவும் எதிர்த்து பேசுவேனாம்...நடப்பேனாம்...வீட்டிற்கு அடங்க மாட்டேனாம்...!இப்படி வாய்க்கு வந்ததை உளறிக்  கொட்டி இருக்கிறான்...என் மேல அவனுக்கு என்ன கோபமோத்  தெரியல...?! நான்  வளரும் சூழலைப்  பார்க்கிற யாரும் ஈசியா சொல்லிடலாம், இப்படி அதிகச்  செல்லமா வளர்த்தாப்  பின்னாடிச்  சொன்ன பேச்சைக்  கேட்க மாட்டானு...! ஆனால் என் அம்மா புதுசா அவன் எதையோ சொல்லிட்ட மாதிரி அதுக்கு அப்புறமா என்னை கொஞ்சம் யோசனையோடயே   டீல் பண்ணத்  தொடங்கிட்டாங்க...! 

மத்தபடி என்னைக்  கவனிக்கிற விதத்தில எந்த குறையும் இருக்காது... கலர்கலரா கவுன் அதே நிறத்தில பிளாஸ்டிக் கம்மல், வளையல், பொட்டு, ரிப்பன் என்று பார்த்து பார்த்து வாங்கி அலங்கரிப்பாங்க...பள்ளி விழாக்களில் நான்தான் ஸ்பெஷல்...எல்லாம் அம்மாவின் ட்ரைனிங் !! 

பள்ளியில் படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவிற்கு அப்போதைய கவர்னர் பட்வாரி அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரை வரவேற்கும் விதமான  பாடல் ஒன்றுக்கு நானும் இன்னும் மூன்று பேரும் நடனம் ஆட ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம், விழாவிற்கு முதல் நாள் காலையில் என் காலில் கொலுசு போடும் இடத்தில் எதனாலோ ஒரு பெரியக்  கட்டி வந்துவிட்டது...வலி இல்லை ஆனா பார்க்க ஒரு மாதிரியாக  இருந்தது.

முட்டி வரை உள்ள கவுன் தைச்சுத்  தயாரா இருக்கு, ஆனா என் கால் இப்படி இருக்கிறதால கவுன் மாடல் டிரஸ் செட் ஆகாது, என்ன பண்ணலாம் என யோசனையில் இருக்கும் போது என் அம்மா உடனே எல்லோருக்கும் மேக்ஸி (நைட்டி மாதிரியான கால்வரை உள்ள மாடல் டிரஸ்)  போடச்  சொல்லிடலாம் என சொல்லவும், எங்க ஆசிரியை கொஞ்சம் யோசிச்சாங்க... உடனே என் அம்மா "நானே நாலு பேருக்கும் மொத்தமா வாங்கிக்  கொடுத்துவிடுகிறேன்" அப்படின்னு சொல்லிடாங்க...அப்பவே கடைக்கு போய், நல்லா அழகா பிரில் வச்ச வேற வேற கலர்ல ஒரே மாதிரியான மேக்ஸி வாங்கி கொடுத்தாங்க...அதை போட்டுகிட்டுச்  சிறப்பா ஆடி முடிச்சோம்.

இப்படி என்னை அருமையாக்  கவனித்துக்  கொண்டாலும் அம்மாவின் மனதோரத்தில் சிறு கசப்பு இருந்துகொண்டே வந்திருக்கிறது...அதை நானே உணர்ந்துக்  கொள்ள கூடிய சூழல் ஒன்றும் வந்தது...


பொதுவாக விடுமுறை நாள் அன்று சோம்பலாய் விடியும் மாணவ மாணவர்களின் பொழுதுகள் !

அப்படிதான் எனக்கும் ஒருநாள் காலைப்  பொழுது விடிந்தது...கலைந்துக்  கிடந்த முடிகளை ஒன்று சேர்த்து கிளிப் போட்டு, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டே மெல்ல எழுந்தேன்...இன்னும் சற்று நேரத்தில் என் தலையில் இருந்து ரத்தம் கொப்பளிக்கப்  போகிறது என தெரியாமல்...!? 

                                                                   * * * * ** * * * *

'இவள்' உங்களுடன் தொடர்ந்து பேசுவாள்...




படங்கள்- நன்றி கூகுள்