புதன், ஜூன் 1

தாம்பத்தியம் பாகம் 23 - கணவன்/மனைவி பாதை மாற காரணம்




மனப்பொருத்தம் இல்லாமை



ஜாதக பொருத்தம் சரியாக  இருக்கிறதா என்று பார்த்து சேர்த்து வைப்பதுடன் பெற்றோரின்  கடமை முடிந்துவிடுகிறது. வேறுபட்ட இரு குடும்ப பாரம்பரியங்களில் , சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள் இனி புதியதொரு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். புது சூழல் , புது உறவுகள், புது பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து பழகி கொள்வார்கள். அதன் பின் பல வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புரிதலுடன் தான் வாழ்கிறார்கள் என்று முடிவிற்கு வந்துவிட முடியாது. பல உட்பூசல்கள் நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பது வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை. 

கணவன்/மனைவி ஒருத்தருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் , மற்றொருவருக்கு  வெள்ளை நிறம்...இப்படி நிறத்தில் தொடங்கி பலவற்றிலும் விருப்பங்கள் எதிரும் புதிருமாக ! விருப்பங்கள் வேறுபட்டாலும் இருவரையும் இணைப்பது  அன்பு என்னும் மகா சக்தி. ஆனால் இந்த அன்பை அடிக்கடி புதுப்பித்துக்  கொள்ளவேண்டும்...நம்ம மனைவி தானே என்று திருப்தி பட்டு கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்தியாக வேண்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...!! ஆனால் எத்தனை தம்பதிகள் இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் விடை மிக சொற்பமே !!? 

கணவன் மனைவி இருவரையும் சேர்த்து சொல்வதை விட இருவரின் மனநிலைகளை பற்றியும் தனித் தனியா பார்க்கலாம் என்று நினைக்கிறேன் (அவ்ளோ மேட்டர் இருக்கு இதில.....!! )

இன்றைய கணவர்கள் !?

இதை படிக்கிற ஆண்கள் தினசரி வாழ்கையில் எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து பாருங்கள்...(எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் சரியா வருதானு பாருங்க)

காலையில், சுடு தண்ணீர் காலில் கொட்டிய மாதிரி அரக்கபரக்க எழுவதில் இருந்து, குளித்து அவசர அவசரமாக மனைவி கொடுக்கிற டிபனை (சிலர் சாப்பிடுவதும் இல்லை!) நின்றுகொண்டே உள்ளே தள்ளிட்டு , வேலைக்கு கிளம்பி ஓடுவீங்க, அங்கே  போயும் அந்த வேலை, இந்த வேலைன்னு பார்த்துவிட்டு அதீத சோர்வா வீட்டுக்கு வருவீங்க. அந்த நேரம் பார்த்து  உங்கள் குழந்தை உங்களிடம் ஏதும் சொல்ல வந்தா 'அம்மாவிடம் போ,  நான் டயர்டா இருக்கிறேன்'னு சொல்லிட்டு...கொஞ்ச டிவி பார்த்திட்டு இரவு உணவை முடிச்சிட்டு படுத்துவிடவேண்டியது...நடு இரவில் விழிப்பு வந்தால் , கண்டிப்பா விழிப்பு வரும்... அப்போதுதான் அருகில் மனைவி ஒருத்தி இருப்பது நினைவுக்கு வரும்... அப்புறம் என்ன... அந்த கடமையையும் ஒரு ஐந்து நிமிசத்தில முடிச்சிட்டு தூங்கிட வேண்டியது.....இது தான் இன்றைய பெரும்பாலான கணவர்களின் வாழ்க்கை முறை ! எப்படிப்பட்ட விபரீத வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பது தெரியுமா ??

சிலரிடம் உங்க வாழ்க்கை எப்படி போகிறது என்று கேட்டால் போதும் வாய் வலிக்கும் அளவிற்கு அளந்து விடுவார்கள்.எனக்கு பெரிய லட்சியம் இருக்கு, இதை இப்படி செட்டில் பண்ணனும், அதை அப்படி செட்டில் பண்ணனும்', 'இரண்டு கிரௌன்ட்ல வீடு கட்டிட்டு இருக்கிறேன்', அப்புறம் 'அதுல இன்வெஸ்ட் பண்ணி இருக்கிறேன்', 'இதில லோன் வாங்கி இருக்கிறேன்', 'இன்சுரன்ஸ் இத்தனை லட்சத்துக்கு எடுத்து இருக்கிறேன்', என்று போயிட்டே இருக்கும்......இதுவா வாழ்க்கை ? இதில் மட்டும் நிறைவு கிடைத்து விடுமா ?

இந்த மாதிரியான நபர்களை பொறுத்தவரை வாழ்க்கையின் அர்த்தம் இதுதான். பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் அனைத்தும் முழுமை அடைந்துவிடும் என்பது மாதிரியான எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து இருக்கிறது.....! பொருள் பின்னே ஓடியே மனஅழுத்தம் அதிகரித்து, தாம்பத்திய வாழ்வில் தோல்வியை தழுவி தங்களின் வாழ்நாட்களை கசப்பாக கழித்து ஏனோ தானோவென்று முடித்துவிடுகிறார்கள்.....! ஆனால் இவர்களின் மனகோளாருகளால் பாதிக்கப்படும் அவர்கள் குழந்தைகளின் நிலை !!?

நான் என் மனைவியை அன்பாக தான் வைத்திருக்கிறேன் என்று ஒரு மிதப்பில் இருக்கும் ஆண்கள் பலர் உண்டு...உண்மையில் எப்படி அன்பாக வைத்திருக்கிறீர்கள் ? எந்த விதத்தில் ? என்று கேட்டால் வரும் பதில் மிக அபத்தமாக இருக்கும்.....! அதனால் அவ்வளவையும் இங்கே விரிவாக சொல்வதைவிட மிக முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.....

'என் மனைவியை ரொம்ப காதலிக்கிறேன்', 'அவர்களை சந்தோசமாக வைத்திருக்கிறேன்' என்று வரும் பதிலின் உண்மை தன்மை என்ன தெரியுமா? ஆண்கள் ஒரு அரைமணி நேரம் தங்களை ரிலாக்ஸ் பண்ணி கொள்கிறார்கள் அவ்வளவே ! இதில் மனைவியின் சந்தோசம் எங்கே இருக்கிறது ? அல்லது ஒரு நாளாவது 'என்னுடன் இருக்கும் இந்த தனிமையான நேரம் உனக்கு சந்தோசத்தை கொடுக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்களா ?' கேட்டுபாருங்கள் , வரும் பதிலில் உடைந்து போய்விடும் உங்களின் ஆண்மை !!

அந்த ஒரு அரைமணி நேரம் !!

உங்களின் தேவையை தீர்க்கும் அந்த ஒரு அரைமணி நேரம் நிச்சயம் பெண்ணிற்கு மகிழ்வை கொடுக்கவே கொடுக்காது. பின் என்ன செய்வது ? உங்களின் அந்த அரைமணி நேரத்திற்கு முன் ஒரு அரைமணி நேரம் மனைவிக்காக ஒதுக்குங்கள், நீங்கள் பெரிய அதிகாரியாக இருக்கலாம்,தொழில் அதிபராக இருக்கலாம்..... ஆனால் தனிமையான அந்த நேரத்தில் உங்கள் மனைவியின் கணவன் மட்டுமே என்பது நினைவில் இருக்கட்டும்.'அன்று வீட்டில்/அலுவலகத்தில் என்ன நடந்தது, அதை பற்றி சொல்லு' என்று கேளுங்கள்.உங்களின் அன்றைய அலுவல் வேலை பற்றியும் சொல்லுங்கள், ஆமாம் அது எல்லாம் அவளுக்கு தெரியாது, சொன்னாலும்  புரியவும் புரியாது என்று எண்ணாதீர்கள்.

பதிவர்களுக்கு புரிகிற மாதிரி ஒரு உதாரணம் சொல்றேன்.

நீங்கள் கவிதைகள் எழுத தெரிந்தவராக இருந்தால் அதை பற்றி சொல்லுங்கள் உனக்கு எழுத தெரியுமா என்று வினவுங்கள். அவளுக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்...இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை உள்ளுக்குள் வைத்திருப்பார்கள் , வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததால் வெற்று காகிதம் என்று அலட்சிய படுத்திவிடாதீர்கள்..... பல கவிதைகள் அந்த காகிதத்தில் எழுத பட்டு இருக்கலாம் , ஆண் என்ற கண்ணிற்கு அது தெரியாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும் அவை உங்களின் (கிறுக்கல்) கவிதைகளை விட அற்புதமாக இருக்கலாம் !!

விளையாட்டாய் கேட்டுப்பாருங்கள் 'என்னை பற்றி இரு வரி கவிதை சொல்' என்று அசந்து போய் விடுவீர்கள் இத்தனை நாள் இதை இழந்துவிட்டோமே என்று வருந்தும் நிலைக்கு தள்ளப்படலாம். ஒரு உதாரணத்துக்கு கவிதை என்று சொன்னேன், பேச்சு கொடுத்து பாருங்கள் பல புதையல்கள் வெளிவரலாம். கருத்துக்களை பரிமாறுங்கள், அவர்களையும் பேசவையுங்கள்...பேச்சின் ஊடே அவள் விரல் பிடித்து மெல்ல நீவி, 'இன்னைக்கு வேலை ஜாஸ்தியாடா' என்று கேட்டுபாருங்கள், அந்த நொடி மிதக்க தொடங்குபவள் விடியும் வரை உங்களில் கரைந்து மயங்கி கிடப்பாள். இது தாங்க பெண்மை. இத விட்டு விட்டு  எத்தனை கோடி பணம் தலையில் கொட்டினாலும் அந்த சந்தோசம் எல்லாம் சில நொடிகளில் (நாட்களில்...!) முடிந்துவிடும். ஆனால் நான் குறிப்பிட்ட அந்த அரைமணி நேரம் வாழ்வின் இறுதிவரை காதலால் நிறைத்து விடும்.


இந்த மாதிரி சில நிமிடங்கள் மனைவிக்காக ஒதுக்க முடியாதா என்று கேள்வி கேட்கிறேன், ஒதுக்க முடியாதவர்கள் அதன் விளைவை கண்டிப்பாக சந்தித்து தான் தீருவார்கள்...வழக்கம் போல அது என்ன விளைவு என்று யோசியுங்கள்...

                                                                                                         *****************

அடுத்த பாகத்தில் 'மனைவிகளே ஏன் இப்படி ?' அடுத்த பதிவு படிச்சா நிச்சயம் பெண்களுக்கு கோபம் வரலாம்...ஆனால் என்ன செய்வது, குறைகள் எங்கே அதிகம் இருக்கிறதோ அதை சொல்லிதானே ஆகணும்...?!!     காத்திருங்கள்.....!!

                                                                                                          *****************

படங்கள் - நன்றி கூகுள் 



கழுகு - கே.ஆர். பி செந்திலுடன் ஒரு சந்திப்பு!



வெள்ளி, ஏப்ரல் 8

அன்னா ஹசாரே...!!


சென்ற பதிவில் 'ஊழலற்ற இந்தியா சாத்தியமா' என்று கேள்வி எழுப்பி இருந்தேன்..அதில் மூணு பின்னூட்டத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்... 

* ராஜ நடராஜன் அவர்கள் 

//இந்தியா 50/50 மட்டுமே தற்போதைக்கு.இரும்பை கொஞ்சம் ஓங்கி அடித்தால் விகிதாச்சாரம் மாற சந்தர்ப்பம் இருக்குது// 

* அடுத்ததாக என்னுடைய பல பதிவுகளுக்கும் பின்னூட்டத்தில் விளக்கமாக கருத்துகளை தெரிவிப்பத்தின் மூலம் என்னை உற்சாகபடுத்தி கொண்டிருக்கும் சகோதரர் அப்பாதுரை அவர்கள் ஒரு கருத்தை கூறி இருந்தார்...  

//ஊழல் அலையாக வரும் பொழுது நனையாமல் நகர்வதற்கு முயற்சி, வேகம், தொலைநோக்கு, தன்னம்பிக்கை எல்லாமும் வேண்டும். பொதுமக்களில் 90%க்கு மேல் இந்த நான்கில் மூன்று குறை என்பது என் கணிப்பு.//  

* கோபி 
//மிகப்பெரிய அளவில் ஒரு புரட்சி நடந்தால் ஒழிய இந்த ஊழலற்ற அரசு இந்தியாவில் அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது// 


பலரும் எதிர்பார்த்த ஒரு புரட்சி, ஒரு எழுச்சி தற்போது நம்ம இந்திய நாட்டில் உதயமாகி இருக்கிறது. இதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்றால், ஊழலற்ற இந்தியா சாத்தியமே !!

இளைஞனே விழித்திடு இக்கணமே.....!

ஊழலற்ற இந்தியா சாத்தியம் என்ற நம்பிக்கை அதிகமாகிறது அதற்கு ஒரே காரணம் அன்னா ஹசாரே !! 

யார் இவர் என்று இப்போதுதான் உலகம் பார்க்க தொடங்கி  இருக்கிறது...அதிலும் இந்தியாவே இப்போதுதான் இவரை கண்டு சிறிது புருவம் உயர்த்தி  இருக்கிறது...இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு காலம் பணி  புரிந்தவர் என்று சொல்வதை விட எல்லையில் நின்று போராடியவர் எனலாம். பின் அதில் இருந்து விலகியவர் தனது சொந்த கிராமமான ராலேகாவன் சித்திக்கு வந்து தனது மக்களுக்காக வாழ தொடங்கினார். அப்போது அவரது வயது 39 மட்டுமே ! மக்கள்  அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதியுறுவதை எண்ணி வருந்திய அவர் அப்போதே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயலாற்றினார்...! கிராம மக்களின் நிலை மேன்பட முயன்ற அவர் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யங்களை கண்டு மனம் வருந்தி அதற்காக போராட தொடங்கினார். முப்பது வருடங்களாக போராடி வருகிறார். 

கடந்த மூன்று தினங்களாக 'ஊழல் ஒழிப்பு சட்டம்' லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டி இவர் 'சாகும் வரை உண்ணாவிரதம்' இருக்கிறார்.  இந்த 72 வயதிலும் 15 நாட்கள் வரையிலும் கூட எந்த பிரச்சனையும் இன்றி உண்ணாவிரதம் இருக்க இயலும் என்ற உறுதியில் இருக்கும் இந்த இளைஞருக்கு ஆதரவு பெருகி வருகிறது. 400 க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்....இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த அரசியல்வாதியையும் அருகில் சேர்க்க வில்லை இவர்...! இந்த தைரியம் நம் இளைஞர்களுக்கு வர வேண்டும். இனிமேல் வரலாம், வரும்.....

முதல் முறையாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது ஊழலுக்கு எதிராக குரல்கள் ! பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் சொந்தமாகிவிட்டதால் அவை நிச்சயம் இவரை கண்டுகொள்ளாது...இன்றைய தினசரியில் கூட பிரச்சார செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த செய்தி கடைசி பக்கத்தில் அதுவும் ஒரு ஓரத்தில் சிறியதாக வெளி இடபட்டிருந்தது.....சினிமா செய்திகளுக்கு முழு பக்கம்...! கேவலம் மாற்ற முடியாது இவர்களை.....போகட்டும் விட்டு தள்ளுவோம்.

ஆனால் இணையம் அப்படி அல்ல...தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக பெரும் முயற்சி எடுத்து குரல் கொடுத்த பதிவுலகம் இதற்கும் தங்களின் முழு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.....!! இயன்றவரை என்று சொல்வதை விட அவசியம் பதிவுகளை வெளியிட்டும், பஸ்சிலும், முகநூலிலும், ட்விட்டரிலும் நம் ஆதரவை தெரிவிப்போம்.....

விளையாட்டுகளில் மட்டும் நம் தேசபற்று வெளிவரும் என்ற சிலரின் எண்ணங்களை உடைத்து போடுவோம்.....ஒன்றாக கை கோர்ப்போம் !



காந்தீயவழியில் இவர் மேற்கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு நாம் வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு அவருக்கு ஆதரவு தோள் கொடுப்போம். 

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் ! வெல்லட்டும் இந்த அறப்போராட்டம் !

வாழ்க பாரதம் ! 

இந்த போராட்டத்தை பற்றி இன்னும் விவரங்கள் தெரியவேண்டும் என்றால் இந்த சுட்டிகளை பார்க்கவும்

இவருக்கு ஆதரவாக  Click here to sign the petition !     


இங்கே சென்று சைன் பண்ணலாம்.




கழுகின் அக்னி பார்வை !
சா'தீயே' நீ ஒழிந்து போ.......ஒரு தொலை நோக்கு பார்வை!

புதன், ஏப்ரல் 6

ஊழலற்ற இந்தியா சாத்தியமா ?



இன்னும் சில தினங்களில் தேர்தல்
வீதிக்கு வீதி பிரச்சாரங்கள் 
வறட்டு பேச்சுக்கள் 
செல்லரித்துப்போன அறிக்கைகள்
திரைக்கு பின் நடித்தவர்கள் 
இன்று மக்கள் முன்.....!!
வாக்காளன் ஏமாளி அதிலும் தமிழன் 
ஏமாளிகளின் தலைவன் !
அரங்கேறும் நாடகங்கள் ஒரு பக்கம் 
விமர்சிக்கும் பண்பாளர்கள் மற்றொரு பக்கம் !
காரசார விவாதங்கள் நடந்தென்ன லாபம்
முடிவு ஊழலுக்கு சாதகம் தான் !!

அரசியல் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது...நம்மில் பலருக்கும், நடப்பவை அனைத்தையும்  பார்க்கும்போது வெறுப்பும், எரிச்சலும் வருவது நியாயம் தான். ஆனால் இவனுக்கு வாக்களிக்காதே , அவனுக்கு வாக்களிக்காதே என்றும் எனக்கு வாக்களிக்க மனம் இல்லை என்றும் சொல்வதால் எதையும், யாரையும்  தடுத்து நிறுத்த இயலுமா நம்மால் ? முடியாது..... நடப்பது நடந்தே தீரும், நான் வாக்கு போடவில்லை என்றால் மற்றொருவன்.....! எப்படியும் கிழக்கில் சூரியன் உதித்தே தீரும் , மாற்ற இயலுமா ?? 

இந்த பதிவுலகம் முதல் தெருவோர டீக் கடை பெஞ்சு வரை திரும்பும் திசை எல்லாம் வீண் வாதங்கள், புலம்பல்கள், சாடல்கள், தனிமனித தாக்குதல்கள் !! இந்த ஜன சமுத்திரத்தில் இருந்துகொண்டுத் துப்பினால் அது நம் மீதும் விழும் என்பதை மறந்தே போனோம்.....?! 

இருக்கும் கட்சிகள் அனைத்தையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன மாற்றம் வந்து விடும்...? பேசி பேசி வீணாய் போவதுதான் தமிழனின் தலை எழுத்தா ? அதை தவிர தமிழன் மூளை வேறு ஒன்றையும் சிந்திக்காதா ?? வெட்டிப் பேச்சினால் எதை சாதிக்கமுடியும் ? ஆனால் நாம் நினைத்தால் முயன்றால் நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும்.....

எவ்வாறு ??

இங்கே தவறுகள் தட்டிக் கொடுக்கப்படுகின்றன, யாரால் மக்களால்...?!
'நமக்கென்ன' என்கிற அலட்சிய மனப்பான்மை கொண்ட நமக்கு  விமர்சிக்க மட்டும் என்ன தகுதி இருக்கிறது ?! 

அரசியல்வாதிகளை வளர்த்துவிட்டது மக்கள்..... 
அவர்களின் ஊழலை கண்டுகொள்ளாதது மக்கள்.....
ஊழல் கண்டதும் வேர் அறுக்காதது யார் தவறு ?

தேர்தலின்  போது மட்டும் குரல் கொடுப்பவனாகவும், தேர்தல் முடிந்ததும் சொந்த வேலை பார்க்க சென்றுவிடும் சராசரியாக இனியும் இருக்கணுமா?? யோசியுங்கள் !!

ஆட்சிக்கு வருவது எந்த கட்சியாகவும் இருந்துவிட்டு போகட்டும்.....! ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின், யார் தவறு செய்தாலும் தவறுகளை தட்டி கேட்கவேண்டும்.உதாரணத்துக்கு சொல்லணும் என்றால்  எழுச்சியாக பேசுபவர்கள்,பத்திரிக்கைகளில், இணையத்தில் எழுதுபவர்கள் எங்கே தவறு என்றாலும் துணிந்து குரல் கொடுங்கள். அரசியல்வாதி, அரசு அதிகாரி யார் நேர்மைக்கு மாறாக செயல்பட்டாலும் எதிர்த்து கேளுங்கள். அரசாங்க அலுவலகத்தில் லஞ்சம் கேட்கபடுகிறதா, கொடுக்காதீர்கள், அதற்கும் மேலிடம் சென்று புகார் அளியுங்கள், ஒருவேளை அங்கேயும் நீங்கள் கண்டுகொள்ளபடவில்லையா ?

சோர்ந்து போகாதீர்கள், அதே அலுவலக வாசலில் கோஷம் போடுங்கள்.....உங்களை போன்ற நிலையில் பலரும் அங்கே நின்று கொண்டு இருக்கலாம்.....அவர்கள் வருவார்கள் உங்கள் துணைக்கு, ஒரு குரல் இரண்டாகும் , இரண்டு மூன்றாகும் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் நிச்சயம் மேலிடத்தால் கவனிக்க படுவீர்கள், நீங்கள் சென்ற காரியம் தாமதமானாலும், எல்லோராலும் இந்த சம்பவம் கவனிக்கப்படும், முக்கியமாக மீடியாக்களால்.....! ஒரு இடத்தில் மட்டும் நடைபெற்றால் சாதாரண செய்தி, அதே செயல் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றால் யோசித்து பாருங்கள்...இந்த விழிப்புணர்ச்சி எத்தகைய மாற்றத்தை கொண்டுவரும் என்று...?!!

ஒரே நாளில் எதுவும் மாறிவிடாது.....ஆனால் நல்ல மாற்றங்கள் இப்போதைக்கு அவசியத்தேவை. அத்தகைய மாற்றங்கள் அரசியல்வாதிகளால் அல்ல மக்களால் என்னும் போது விரைவில் நடக்கும். நம் முன்னோர்கள் நாட்டை குறை சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் அமர்ந்திருந்தால் நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்திருக்குமா ? 

'வெள்ளையனே வெளியேறு' என்றார்கள் வெளியேறினார்கள் வெள்ளையர்கள் ! இன்று கொள்ளையனே வெளியேறு என்று சொல்ல கூடிய தைரியம் நமக்கு வேண்டும் !!    

இது சரியில்லை, அது சரியில்லை, நாடா இது என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் முதலில் அப்படி பேசுவதை நிறுத்துங்கள், உங்கள் வீரத்தை செயலில் காட்டுங்கள்...இது உன் தேசம் , உன் மக்கள், அரசியல் தலைவிதியை மாற்றி எழுத வை, உன்னால் முடியும்.....இனி மக்களை கண்டு அரசியல்வாதியும், அதிகாரிகளும் அஞ்ச வேண்டும்...நம் வரி பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் அவர்கள்...நாமே எஜமானர்கள் நினைவில் வைப்போம் இன்றே.....

நாட்டை மாற்று அதற்கு முன் நீ மாறு.................

நாட்டை குறை சொல்வதை விடுத்து
நம்மை சீர்தூக்கி பார்ப்போம் முதலில் !

அயலான் கண்ணில் துரும்பை பார்க்கும் முன்
உன் கண்ணில் இருக்கும் உத்ரம்
நினைவுக்கு வரட்டும் !

எங்கும் ஊழல், விமர்சிக்கும் முன் 
மேசைக்கடியில் நேற்று நீ கை நீட்டியது
நினைவுக்கு வரட்டும் !

யாரோ துப்பிய எச்சிலை அருவருக்கும்முன்
சற்றுமுன் நீ துப்பியது
நினைவுக்கு வரட்டும் !

தனிநபர் ஒவ்வொருவரும் நம்மை முதலில் திருத்திகொள்வோம், மாற்றம் நம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.....

சொல்லாதீர்கள்...!!

வேற்றுகிரகவாசி போல சந்திரனில் இருந்து அப்போதுதான் இறங்கின மாதிரி படு மட்டமா பிறந்த நாட்டை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் ? குறைகளை விமர்சியுங்கள் ஆனால் அத்துடன் நின்று விடாதீர்கள் தீர்வு ஒன்றையும் சொல்லுங்கள். தீர்வு சொல்ல இயலவில்லையெனில், குறைகளை சொல்வதையும் விட்டுவிடுங்க.....குறைகளை மட்டுமே தொடர்ந்து ஒருத்தர் சொல்லும்போது அது பலரின் மனதிலும் வலு கட்டாயமாக போய் உட்கார்ந்து கொள்கிறது....முடிவில் பலரின் மனதிலும் நாட்டை பற்றிய தவறான எண்ணமே மிஞ்சுகிறது...இந்நிலை நாளைய தலைமுறையினருக்கு நல்லதில்லையே...ஊழல் அற்ற ஒரு நல்ல நாட்டை நம் வாரிசுகளுக்கு விட்டு செல்வோம்...பிற நாடுகளை உதாரணம் காட்டுவது இனியும் இருக்காது அவர்கள் நம்மை பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.....!

ஊழல் நிறைந்த தேசத்தில் வாழ்வது தவறில்லை, அதை சகித்துக்கொண்டு போவது மாபெரும் தவறு !!

நாடு வல்லரசு ஆவது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் நல்லரசாக்க 'மக்கள்' நாம் முயற்சி மேற்கொள்ளுவோம். 

வாழ்க்கை ஒருமுறை, அதை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிப்போம் !!

வாழ்க பாரதம் ! வாழிய எம்மக்கள் !! 


பின்குறிப்பு :

ஊழலற்ற இந்தியா சாத்தியமா ? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததால் எழுதப்பட்ட பதிவு இது. முழுதும் களையப்பட இயலாது என்றாலும் முயற்சி செய்யலாமே என்ற ஒரு ஆசை என்போல் எல்லோர் மனதிலும் இருக்கும். இந்த தலைப்பில் விவரம் நன்கு தெரிந்த மற்ற நண்பர்கள் பதிவுகள் எழுதினால் தெரியாத பல விசயங்கள் தெரிய வரும். நாட்டின் மேல் அக்கறையுள்ள/இல்லாத பலருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும் . இது என் வேண்டுகோள். இயன்றவர்கள் எழுதுங்களேன்......


இந்த கேள்விக்கு பதில் இதுதான் என்பதுபோல் அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரத போராட்டம் பற்றி எண்ண தோன்றுகிறது...அவரை பற்றி நண்பர் அருண்பிரசாத் அவர்கள் ஒரு பதிவு போட்டு உள்ளார். அவசியம் அதை படிக்க வேண்டுகிறேன்....




கழுகு - என்ன படிக்கலாம்...? +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டும் தொடர்     


திங்கள், மார்ச் 28

தாம்பத்தியம் பாகம் 22 - உடலின் மீதான திருப்தியின்மை



பதிவை படிக்கும் முன் :

தாம்பத்தியம் தொடர்பான 21 பாகங்களில் திருமணம் முதல் கணவன் மனைவி உறவு நிலைகள், பிரச்சனைகள் போன்ற பல விசயங்களை பகிர்ந்திருந்தேன். கடைசி சில பதிவுகள் தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமான  அந்தரங்கம் எப்படி இருக்கவேண்டும், அங்கே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதை சரி படுத்தி கொள்ள என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பற்றியவை.....

கடைசி பதிவில் கணவன், மனைவி பாதை மாறுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்றும் அதில் அதீத அன்பும் ஒரு காரணம் என்று  எழுதி இருந்தேன், இந்த பதிவு உடலின் மீதான திருப்தியின்மை பற்றியது, சொல்லபோனால் இந்த வார்த்தையே தவறுதான், யாரும் துணையின் உடல் பிடிக்கவில்லை என்று பாதை மாறமாட்டார்கள், அதன் பின்னால் மன ரீதியிலான சலிப்புகள் இருக்கும் என்பது தான் உண்மை. இது என் கருத்து. சலிப்புகள், வெறுப்புகள் ஏற்படாமல் தடுப்பதில் ஒரு வழியினை இங்கே பார்ப்போமே.....      

இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணதிற்கு வரன் பார்க்கணும் என்று முடிவு செய்ததும் முதலில் கையில் எடுப்பது ஜாதகம். ஜாதகம் பொருந்தி இருந்தால் போதும் கண்ணை மூடி கொண்டு மணம் முடித்து விடுகிறார்கள் (ஒரு சிலர் விதிவிலக்கு)  எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று வெளியில் பேசுபவர்கள் கூட கடைசியில் மனதிருப்திக்காக பார்க்காமல் இருப்பது இல்லை.ஆனால் அது மட்டுமே போதாது. திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாட்டு கூட உண்டு "ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது.....!"  வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)

முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம். பணம், படிப்பு,அழகு,சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது,  தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது  என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.

உடல் அளவில் பொருத்தமாக  இருக்கிறவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்விலும் பொருத்தமாக இருப்பாங்க என்று சொல்ல இயலாது. தவிரவும் படுக்கையறையில் உடல் பொருத்தம் அவசியமும் இல்லை. நிறம்,அழகு, உயரம், குள்ளம் மற்றும் அந்தரங்க உடல் அமைப்புகள் இப்படிதான் இருக்கணும் என்று எந்த அளவுகோலும் இல்லை. தன் துணையை   படுக்கையில் உற்சாகமாக வைத்து கொள்ளாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கே திருப்தி கிடைக்காது . இதை முதலில் பிரச்சனைக்குரிய தம்பதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தரங்கம் இனிமையாக நீடித்த காலத்திற்கு இருப்பதற்கு துணையின் உடலை திருப்தி செய்யணும், ஆனால் இங்கே திருப்தி என்று சொல்வதின் அர்த்தம் உடலுறவு இல்லை. பின்ன வேறு என்ன ??  தொடர்ந்து படிங்க......

உடலின் மீதான திருப்தியின்மை எப்போது ஏன் எதனால் ??

சில சரி செய்துகொள்ளகூடிய காரணங்கள் உடல் சுத்தமாக வைத்துகொள்ளாமை, அதிகபடியான வியர்வை, உடல் பருமன்/ஒல்லி, மனதிற்கு பிடிக்காத மணம் போன்றவை இருக்கலாம் ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தன் துணையின் அந்தரங்க நடவடிக்கைகள் பிடித்துவிட்டால் இந்த குறைகள் மிக பிடித்தவையாக மாறிவிடக்கூடும் !!

*  ஒரு சில நாட்களில் கணவன்/மனைவி யின் மனநிலை உறவிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு சோர்வு,  ஆர்வம் இல்லாமை போன்றவை இருக்கும் போது துணை உறவிற்கு வற்புறுத்தினால் சலிப்பு வரும் நாளடைவில் இதே போன்ற வற்புறுத்தல்கள் தொடர்ந்தால் நிச்சயம் வெறுப்பு அதிகமாகி விரிசலில் கொண்டு போய் விட்டுவிடும். 

*  வேறு சிலருக்கு வேலை, வீடு, குடும்பம் போன்றவற்றினால் மன அழுத்தம் இருக்கலாம். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சட்டை பண்ணாமல் உறவிற்கு அழைத்து அதன் பின் ஏற்படக்கூடிய உறவில் நிச்சயம் திருப்தி இருக்காது. 

*  பெண்களை பொறுத்தவரை வீட்டிற்கு உறவினர்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள் வந்திருக்கும் போது உறவை விரும்பமாட்டார்கள். குழந்தைகள் சரியாக தூங்கி விட்டார்களா என்று தெரியாதபோது உறவை மனதாலும் நினைக்கமாட்டார்கள். 

*  முக்கியமாக மருத்துவ ரீதியாக மட்டுமே, அது மருந்துகளின்மூலம் அல்லது கவுன்செல்லிங் மூலமாகவோ குணபடுத்தகூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்/பெண்ணுக்கு இருந்தால் அங்கே கண்டிப்பாக உடலின் மீதான திருப்தியின்மை ஏற்படக்கூடும். 

கணவன்/மனைவி அழகாக இருந்து மனதிற்கு பிடித்திருந்தும் 'உடலுறவில் ஈடுபட இயலாதவர்கள்' இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வெளி உலகில் வலம் வரவும், திருமணம் ஆன புதிதில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ள உதவிய இந்த அழகு அடுத்து தொடர்ந்து வரும் வருடங்களில் உடலுறவுக்கு உதவுவது இல்லை. அப்போது அங்கே தேவை படுவது வேறு ஒன்று...! 

பாதை மாறி சென்று விடாமல் தன் துணையை பிடித்துவைத்துக் கொள்ளும் சூட்சமம் ஒன்று இருக்கிறது, அதுதான் தொடுதல் !! 

பரவசம் இதுவே !

ஆண்/பெண் இருவரின் உடலிலும் உணர்ச்சி மிகுந்த சில பகுதிகள் இருக்கின்றன அது நபருக்கு நபர் வேறு படும். ஒருவருக்கு இதழை தொட்டால் பரவசம் ஏற்படும், சிலருக்கு இடுப்பு, கை, கால் பாதம், கழுத்து, காது மடல், நெற்றி இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் தன் துணையின் உணர்ச்சி பகுதிகள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது முழுமையான இல்லறத்திற்கு மிக அவசியம். உறவிற்கு உடல், மனம் ஒத்துழைக்காத போது இந்த மாதிரியான இடங்களை தொடுவதின்/வருடுவதின் மூலம் பரவச நிலையை அடையமுடியும். உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பும் இது மாதிரியான முன்விளையாட்டுகளில் ஈடுபடும் போது உடலுடன், மனமும் உற்சாகமடைந்து பரவசநிலையை எட்டிவிடும், அதன் பின் நடக்கும் உறவே ஒரு முழுமையான உறவாக இருக்கும்.

சில தம்பதிகள் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இன்றியும் உறவில் ஈடுபட இயலாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டில் மட்டும்  சில நாட்கள் (உறவு கொள்ளாமல் )ஈடுபட வேண்டும். இதிலும் ஒரு முழு இன்பத்தை அடைய முடியும். வெறும் தொடுதலின் மூலம் சில நாட்களை கழித்து விட்டு பின் முழுமையாக  உறவில் ஈடுபடும் போது, நிச்சயம் கணவன் மனைவி இருவருக்கும் ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருக்கும். இதை நான் சொல்லலைங்க நம்ம வாத்சயனார் முதல் மேல் நாட்டு மருத்துவர்கள் வரை இது ஒரு சிகிச்சை முறை என்று ஒத்துகொண்ட ஒரு விஷயம். 

சூட்சுமம் எது என்று தெரிந்து, தெளிந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்லுங்கள்.....!  




தாம்பத்தியத்தில் தொடரும் அடுத்த பதிவு கணவன்/மனைவி பாதை மாற ஒரு காரணம் மன பொருத்தம் இல்லாமை.......காத்திருங்கள் !!


படங்கள் - நன்றி கூகுள் 




திங்கள், மார்ச் 21

பழிக்காதே...!


பூக்களில் இத்தனை நிறங்களா ? ரசிக்காதவர்கள் யாரும் இல்லை ! அதிலும் ரோஜாவில் கருப்பு நிற பூக்கள் வெகு அபூர்வம் , அதை பார்த்துவிட்டால் போதும் வியந்து அதிசயத்துப்  போய்விடுவோம். !! ஆனால் மனிதரில் கருப்பு என்றால் வெறுப்பு...! அதுவும் ஒரு நிறம் என்பது ஏன் இந்த மனித மனங்களுக்கு புரிவதில்லை. அழகு என்றாலே அது சிவப்பு/வெள்ளை நிறம் கொண்டவர்கள் என்ற முட்டாள்த்தனமான இலக்கணத்தை வகுத்தவன்/வகுத்தவள் யார் ?இன்றும் அதை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்கள் அடிமுட்டாள்கள்.

யார் தவறு ?

ஒரு குழந்தை பிறந்ததும் சுற்றியிருக்கும்  உறவுகள் அந்த குழந்தையின் காது மடலையும், இதழையும் பார்ப்பார்கள்...அது கரு நிறத்தில் இருந்துவிட்டால் உடனே பேசத் தொடங்குவார்கள்...குழந்தை கருப்பாகப்  பிறந்துவிட்டதே...ஏன் குங்குமப்பூ எதுவும் சாப்பிடலையா என்ற அங்கலாய்ப்புகள் ! (குங்குமப்  பூவுக்கும் தோல் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை என்று தான் புரிந்துக்கொள்வார்கள் நம் மக்கள் ?!) உறவுகளின் பேச்சுக்கள்  அக்குழந்தையை பெற்றவளின் மனதில் ரணத்தை ஏற்படுத்தாதா? அதிலும் சிலர், அந்த தாயைப்  பார்த்து  இப்படி கேலியாகச்  சொல்வார்கள் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்று. ஏன் இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறோம்...!? கருப்பாக பிறந்தது யார் செய்த தவறு ?  

கருப்பு நிறத்தைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை, இருவரும் பிரச்சனைகளைச்  சந்திக்கிறார்கள். என்னவொரு வித்தியாசம் என்றால்,  சில சமயம், 'ஆண் நிறம் கம்மியா இருந்தால் நன்றாக இருக்கும்' என்றும், கருப்புநிற ஆண் தங்கம், கட்டி வைரம் அப்படி எதையாவது சொல்லி கொஞ்சம் சமாளிச்சுக்கலாம். அதே நேரம் ஒரு பெண் கருப்பாக இருந்து விட்டால் பிறந்தது முதல் அவள் படும் வேதனைகள் எத்தனை எத்தனை ? கருப்பு நிற பெண் இருக்கும் அதே வீட்டில் மற்றொரு பெண் வெள்ளையாக பிறந்துவிட்டால் அவ்வளவுதான் இந்த பெண்ணை மட்டும் கொண்டாடுவார்கள், அந்த கருநிறப்  பெண் ஒதுக்கப்  படுவாள். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் அவர்கள் முன்னும் வேண்டுமென்றே கருநிற பெண் தவிர்க்கப்படுவாள்...?! 

திருமணம்

உதாரணமாக மணமகள் தேவை விளம்பரத்தைப்  பாருங்கள், 'நல்ல சிவப்பான பெண் தேவை' என்றே இருக்கும். சிவப்பு அழகான உயர்ந்த தகுதி என்றும் கருப்பு அவமானச்சின்னம் போல ஏன் பார்க்கப்படவேண்டும். கருப்பாக இருக்கும் தாய் தன் மகனுக்கு 'பெண் சிவப்பா இருக்கணும்' என்று தான் கோரிக்கை வைக்கிறார். பலரும் இதையே எதிர்பார்த்தால் கருப்புநிற பெண்களின் நிலை,முடிவு...முதிர்கன்னிகளா ??!! 

வேலைக்கு பெண்களை எடுத்துக்கொள்ளும் சில நிறுவனங்கள் கூட படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம் இவற்றுக்கு முன் நிறத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

திரையில்

இன்றைய தலைமுறையினரின் மனதை பெரும்பாலும் ஆக்கிரமித்து கவர்ந்திருப்பது சினிமாத்துறை மற்றும் விளம்பரத்துறை ! அதில் வலம்  வருபவர்களையே தங்களின் ரோல் மாடல்களாக எண்ணி நடந்துக்கொள்பவர்கள் பலர். வேண்டும்மென்றே கருப்பான/கருப்பு சாயம் பூசப்பட்ட பெண்களை திரையில் காட்டி நகைச்சுவை என்ற பெயரில் 'ரொம்ப பொங்க வச்சிட்டாங்க போல' என்பது போன்ற வசனங்கள் அந்நிறங் கொண்ட பெண்களின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை என்று உணருவார்கள்...? (முன்பு அதிகமாக திரையில் ரௌடி/திருடன் என்றால் கருப்பாக  காட்டுவார்கள்...!??)

விளம்பரங்களின் பங்கு

கருப்பை இழிவுப்  படுத்துவதில் முதல் இடம் விளம்பரங்களுக்கு உண்டு. ஒரு விளம்பரத்தில் 7 நாட்களில் சிவப்பான பெண்ணுக்கு வேலையை கூப்பிட்டு கொடுப்பதைப்  போல காட்டுகிறார்கள். அந்த பெண்ணை காட்டும்போது கை,உடல் எல்லாம் கருப்பாக இருக்கும், சிவப்பழகு கிரீம் முகத்திற்குப்  போட்டபின்  முகம் முதல்கொண்டு உடல் முழுவதும் சிவப்பாக மாறிவிடும்...இது என்ன  விந்தை ??? மக்கள் இதை பார்த்து அவ்வளவாக  யோசிக்க மாட்டோம் என்பது அவர்களின் புரிதலா,  இல்லை பார்க்கிறவங்க முட்டாள்கள் என்று முடிவே பண்ணிட்டாங்களா ?? 

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்கான விளம்பரங்களைப்  போல் மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையாம் சிவப்பு அழகு கிரீம் விளம்பரங்கள்.   

1998 இல் 384 கோடி ரூபாயாக இருந்த சிவப்பழகு சாதனங்கள் விற்பனை தற்போது 2 ஆயிரம் கோடியாக  இருக்கிறது என்கிறது ஒரு நாளேடு ?!!! 

முதலாளிகளின் கணக்கு

இந்தியாவில் மட்டும் அதிக அளவிற்கு சிவப்பழகு சாதனங்கள் விற்பனையாவதின் பின்னணியில் ஒரு வியாபார நுட்பம் இருக்கிறது. இந்த சாதனங்கள் வெளிநாடுகளில் அதாவது வெள்ளைக்காரர்களிடம் விலைப்போகாது, மேலும் கறுப்பின மக்களான ஆப்ரிக்காவினரிடமும்  வேலைக்காகாது...இரண்டுக்கும் நடுவில் இரு நிறங்களும் கலந்திருக்கும் இந்தியாவில் தான் அதுவும் 100 கோடிக்கும் மேல்  மக்கள்தொகை, இவர்களிடம் சிவப்பு நிறம் பற்றிய முக்கியத்துவத்தை/பெருமையை ஏற்படுத்திவிட்டால் சுலபமாக தொழில்/விற்பனை பண்ணிவிடலாம் என்பதுதான் அந்த கணக்கு.....!!
   
உலக அழகிகளாக இந்திய அழகிகளைத்  தொடர்ந்து தேர்ந்தெடுப்பதின் பின் இந்த தயாரிப்பாளர்களின் பங்கு இருக்கிறது என்று கூட ஒரு பேச்சு இருக்கிறது. 

அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்றாங்க ?

முகத்தின் மேற்பரப்பில் போடப்படும் எந்த ஒரு அழகு சாதனமும், நிரந்தரமாக முகத்தின் நிறத்தை மாற்ற முடியாது, அதுவும் தவிர சில வாரங்களில் சிவப்பழகு என்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்று உறுதியாகச்  சொல்கின்றன ஆய்வுகள். மேலும் இந்த கிரீம்களால் தோலின் நிறமியைக்  குறைத்து தோல் அலர்ஜி, புற்றுநோயில் வேறு கொண்டுப்போய் விட்டு விடுகிறது ! 

அழகின் நிறம் சிவப்பு என்று எந்த வேதமும், அறிவியலும் வலியுறுத்தவில்லை. ஆனால் ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று ஆய்வுகள் கூறி வருகின்றன.


கருப்பை பழிக்காதே !

கருப்பு நிறம் அழகு என்று எந்த  விளம்பரமும் சொல்வதில்லை மாறாக கருப்பை மாற்றுவது எப்படி என்று ஒரு தவறான வழிக்காட்டுதலை பதிய வைக்கிறது. 

கருப்பு நிறத்தைத் தாழ்த்திக் கேவலப்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் சிவப்பழகு கிரீம் தயாரிப்பாளர்கள் !?       

பெண்களுக்கு என்று இருந்த இந்த சிவப்பழகு கிரீம்கள் இப்போது ஆண்களுக்கும்.....?!! இப்படி மொத்த சமூகத்தையும் சிவப்புதான் சிறப்பு என்று ஒத்துக்கொள்ள வைக்கும் இந்த விளம்பரங்களை எடுப்பவர்களை, வெளியிடுபவர்களை, எவ்வாறு கட்டுப்படுத்த போகிறோம்....?! விளம்பரம் எடுக்க காரணமான கிரீம் தயாரிப்பவர்களை என்ன செய்ய போகிறோம்.....?!  
  
நம் சமூகமும், மீடியாக்களும் போட்டிப்  போட்டுக்  கொண்டு கருப்பு நிறத்தை பழிக்கின்றன...இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று யாரும்  எண்ணுவதில்லை, அதைப்பற்றி கவலைப்படுவதும் இல்லை. மனதளவில் நொறுங்கிப் போகும் அத்தகையவர்களின் தன்னம்பிக்கை சிதறுவதை பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா ?!  

                                    கருப்பு ஒரு நிறம் ! 
                          கேவலம் அல்ல பழிப்பதற்கு ! 
                                கருப்பை பழிக்காதே !!



பின்குறிப்பு

நிற வெறி பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற எனது எண்ணத்தின் சிறு முன்னோட்டமே இந்த பதிவு, இது கருப்பு நிறத்தை குறைச்சொல்லும் சமூகத்தையும், மீடியாக்களையும்  பற்றிய சிறு பகிர்வு. இந்த நிறம் சிறுகுழந்தைகளின் மனதிலும் தவறாக விதைக்கபடுகிறது என்பதை அறிவீர்களா ? மற்றொரு சமயத்தில் விரிவாக பகிர்கிறேன். 


படம் - நன்றி கூகுள்   






இங்கேயும் வாங்க...!


கழுகின் இன்றைய இலக்கு 

வெள்ளி, மார்ச் 18

ஜப்பான் அணு உலை வெடிப்பு - ஒரு விஞ்ஞானியின் பார்வையில் !



ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்து அதன் மூலம் உலகின் பல  நாடுகளிலும் கதிரியக்கம் பரவுவதாக பல வதந்திகள் வலம் வருகின்றன. மீடியாக்கள் தங்கள் பங்குக்கு எதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கணும் என்பதை விடுத்து திரித்து சில செய்திகளை மட்டும் பெரிதாக்கி வெளியிட்டு வருகின்றன. வழக்கம் போல மக்கள் இப்போ அரசியல்வாதிகள் பண்ணும் கூட்டணி கூத்துக்கு சிரிக்கவா ? இந்த கதிரியக்கம் பற்றி கவலைபடுவதா என்ற யோசனையில் இருக்கிறார்கள். அரசியல் குழப்பத்தை தெளிவு படுத்த என்னால் இயலாது ஆனால் இந்த கதிரியக்கம் பற்றி எனக்கு வந்த ஒரு முக்கிய தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. அதாங்க விழிப்புணர்வு. தொடர்ந்து பதிவை படியுங்கள்...உங்களுக்கு வேறு தகவல் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் போதும், அதைப்பற்றிய பல புரளிகளை கிளப்பிவிட்டுவிட்டு மக்களை குழப்பத்திலும், தேவையற்ற சஞ்சலங்களிலும் ஆழ்த்துவதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு இன்பம்?! இப்படித்தான் 2000 ஆண்டு உலக அழிவுன்னு சொன்னாங்க, அப்புறம் மிகச்சமீபத்துல 2012, 21 டிசம்பர் அன்றைக்கு உலகம் அழியப்போகுதுன்னு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அது இன்னும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில இப்போ அணு உலை பாதிப்புகளால் நிலைகுலைந்துபோயுள்ள ஜப்பான். அணு உலை இருக்கும் கட்டிடங்களின் கூரைகள் வெடித்ததை அணு உலையே வெடித்துச் சிதறிவிட்டது, அதனால் சுற்றுச்சூழலில் கதிரியக்கம் பரவி, உலகெங்கும் அமில மழை பெய்யப்போகிறது ஜாக்கிரதை என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஜப்பான் நாட்டு சுக்குபா நகரில் பணிபுரியும்  இந்திய அணு விஞ்ஞானி திரு.அனிர்பன் பந்தோப்தியாய ஒரு விளக்கமளித்திருக்கிறார். அது பின்வருமாறு......

சுனாமி தாக்கியதும் ஜப்பானில் உள்ள அணு உலைகளின் உற்பத்தி உடனே நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்க தொடர் வினைகள் எதுவும் அதில் இருக்காது. தொடர் வினைகள் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு. எனவே ஜப்பானின் அணு உலை வெடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. செர்னோபில்  விபத்து போன்றதொரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை. தற்போது ஜப்பானில் உள்ள  அணுமின் நிலையத்தில் வாயுக்கள் வெளியாவதாலும், சுற்றுப்புற தட்ப வெட்ப மாற்றங்களாலும் கட்டிடங்களின் கூரைகள் மட்டுமே தற்போது வெடித்துள்ளன. அணு உலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்கம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அணு உலை சூடாவதும், கதிரியக்கம் வெளியாவதும் இரு வேறு தனி தனி  நிகழ்வுகள்.

மேலும் நாம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், காற்றில் கதிரியக்கம் பரவுவதை பற்றி வெளிவரும் செய்திகள். நாம் சில அடிப்படையான விசயங்களை அறிந்து கொண்டால் இதை பற்றி வரும் வதந்திகளை பற்றி கவலைபடவேண்டாம். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நம் உடல் உறுப்புகளை தாக்கும் கதிர்வீச்சுகளில் அயோடின் கதிர்வீச்சு மட்டுமே ஆபத்தானது.

யுரேனியம் போன்றவை, உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது.தொடர்ந்து மிக மிக அதிக அளவிலான கதிர்வீச்சு உடலில் பட்டு வந்தால் மட்டுமே உடல்நல பாதிப்புகளை உருவாக்கும்.ஜப்பானிலுள்ள ஆறு அணு உலைகளில் உள்ள மொத்த யுரேனியத்தின் அளவு அதை விட குறைவாகவே இருக்கும்.

அயோடின் கதிர்வீச்சு பற்றிய  சில உண்மைகள்.

எதிர்காலத்தில்  இதனால்  நமக்கு பாதிப்பு   வரலாம்  என்றும் அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின் சத்து குறைபாடு நமக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் உடம்பில் அயோடின் சத்து குறைவாக இருந்தால், அப்போது காற்றில் உள்ள அயோடினை நம் உடம்பு உறிஞ்சும். அப்படி உறிஞ்சப்படும் அயோடினில் கதிர்வீச்சு இருந்தால் நம் உடல் பாதிக்கப்படும்.

எனவே அயோடின் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் நலம், கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். 

(இந்த தகவல்கள் எனக்கு ஆங்கிலத்தில் வந்தது)

தமிழாக்கம் உதவி - திரு. சங்கரலிங்கம், உணவு உலகம் 
படம் உதவி - கூகுள்

Sharing with you the information related to Explosions at Fukushima Nuclear Reactors received from one of Indian Scientists by name Dr. Anirban Bandyopadhyay working in Tsukuba, Japan.



அணு உலை வெடிப்பா அல்லது அணு உலை கட்டிடங்களின் கூரை வெடிப்பா என்பதை  பற்றி ஜப்பானில் வாழும் தமிழகத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் தனது தளத்தில் மிக தெளிவாக எழுதி இருக்கிறார். தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புவர்கள் அதனை படித்து பாருங்கள். அத்தளத்தின் லிங்க் இங்கே 




திங்கள், மார்ச் 14

உடனடி தேவை...ஒரு எழுச்சி !


இப்ப நம்ம நாட்டில மக்களுக்கு ஒரு விசயத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். அது தான் யாருக்கு வோட் போடுவது...? குழப்பம் என்று ஏன் சொல்றேனா ஒவ்வொரு நாளும் அரசியல்வாதிகளின் கூட்டணி பற்றிய முடிவுகளும், கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கிறதே. நாளைக்கு யார் எந்த பக்கம் போவாங்க ? இல்ல மறுபக்கம் போனவங்க மறுநாள் திரும்பி வருவாங்களா ? இல்லை அன்னைக்கே திரும்பி வந்துருவாங்களா ? எத்தனை சீட் கொடுத்தா இந்த கட்சி இங்கேயே இருக்கும் ? இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறும் நேரம் இது...!

மக்களும் பாவம் என்ன செய்வாங்க...சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா... நாங்களும் எங்க ஜனநாயக கடமையை ஆற்ற ரெடி ஆக வேண்டாமா? இல்லைனா மக்களே ஒண்ணு  பண்ணுங்க தேர்தலுக்கு ஒருநாள் முன் வரை எந்த செய்தித்தாளையும் படிக்காதிங்க, தொலைக்காட்சி செய்தி சானல் பக்கம் திரும்பி கூட பார்ககாதிங்க...!? தேர்தல் அன்னைக்கு காலையில் பேப்பர் பார்த்து முடிவு பண்ணிகோங்க.....எந்த கட்சில யார் இருக்காங்க ? யாரும் யாரும் கூட்டணி என்று ?

தேர்தலில் ஆளும் கட்சி ஜெயித்தால் ஊழல்கள் இன்னும் பூதாகரமாக நடைபெறும், எதிர் கட்சி ஜெயித்தால் இப்போதைய ஆளுங்கட்சியின் பழைய வழக்குகள் தூசி தட்டப்படும் அல்லது புதிதாக வழக்குகள் போடப்படும் !!? பழிவாங்கும் படலம் ஆரம்பமாகும், வேற உருப்படியாக உடனே எந்த நல்ல மாற்றமும் ஏற்படாது என்பது திண்ணம். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நல்ல(?) விசயங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.....

இப்ப இருக்கிற நாட்டின் நிலைமையை பற்றி புதுசா நான் சொல்ல தேவை இல்லை எல்லோருக்கும் நல்லாவே தெரியும்...மிக முக்கியமாக சொல்லணும் என்றால், உணவு, நீர், மின்சாரம் இவற்றின் நிலை, விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாற,  விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல், பயிர் செய்வது குறைந்து போனதுக்கு, நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டமும் ஒரு காரணம், இத்திட்டத்தால் சிறு தொழில்கள் பலவற்றிற்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் குறைந்து விட்டது. தென் தமிழகத்தில் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன...இன்னும் பல தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலையில்...!

குறைவான கட்டுபாடற்ற மின்விநியோகத்தால் பெரும் அவதிக்குள்ளாகும்  பொதுமக்கள், மின்சாரத்தை வைத்து நடைபெறும் தொழில்கள் !?

நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்படாமை...காவிரி, முல்லை பெரியாறு பற்றிய அக்கறை இன்மை, தமிழக மீனவர்களின் நலனில் நிரந்தர தீர்வு எட்டப்படாமை, கச்சதீவை கண்டுகொள்ளாமை, விலைவாசி உயர்வு,  மிக முக்கியமாக எங்கும் மலிந்து போய்விட்ட ஊழல்கள்...சொல்லிக்கொண்டே போகலாம்.....   


தமிழகத்தின் கடன் சுமை 1 லட்சம் கோடியாம் !! இது என்ன கணக்குங்க ?!!


'மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்கள் விரோத செயல்களுக்காக பயன்படுத்தி கொண்டது  அரசு' என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் !!


உண்மையில் என்னங்க  நடக்குது  நம்ம நாட்டில ?

ஒவ்வொரு அரசியல்வாதி பற்றியும் ஒரு தனி அபிப்பிராயம் வைத்து  இருப்போம், அதை நொறுக்கிற மாதிரி ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்கள் நடந்து கொள்ளும் போது ஏற்படும் மனஅழுத்தம் சொல்லிமுடியல...அரசியல் பத்தி சுத்தமா அக்கறையே  இல்லாத எனக்கே இப்படினா தலைவா, தலைவினு அவங்களையே நம்பி தன் சொந்த குடும்பத்தை  கண்டுக்காம அலைந்து கொண்டிருக்கிற  தொண்டனுக்கு  எப்படி இருக்கும்.....? அப்படிபட்டவர்கள் யாரும் இப்ப இல்லைன்னு மட்டும் சொல்லிடாதிங்க...தெருவில் போய் நின்னு யாராவது ஒரு தலைவனை ஒழிக என்று சொல்லி பாருங்க...!? இப்பவும் பிரியாணி, பணத்துக்கு மட்டும் தொண்டனாக இல்லாமல் உண்மையான உணர்வுள்ள தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் இன்னும் தலைவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள். 

தொண்டர்களின் விசுவாசத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் !!?

மத்திய அரசில் இருந்து தி.மு.க விலகிய செய்தி பரவியதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அப்புறம் மறுபடி இணைந்தது அதற்கும் பட்டாசு வெடித்து ஆர்பரிக்கின்றனர். இது என்ன கண்மூடித்தனமான பக்தி என்று புரியவில்லை...ஒருவேளை இப்படி பண்ண சொல்லி மேலிடத்தின் உத்தரவாக இருக்குமா ?ஆமாம் தமிழகத்தில் மொத்தம் எத்தனை காங்கிரஸ் இருக்கிறது ?? (நிஜமா எனக்கு சரியா தெரியலைங்க ,தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்...)

தொண்டர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன ? தலைவர்கள் என்ன சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டும் ஆட்டு மந்தைகளா இவர்கள் ?? சுய சிந்தனை, சுய மரியாதை என்ன என்பதே தெரியாத இவர்கள் யார் ?

 நம் நாட்டின் அரசியல் இப்படி எள்ளி நகையாடும் கேலிக்கூத்தாகி போன காரணம் என்ன ?? எதைத்தான் சகித்து கொள்வது என்ற வரைமுறை கிடையாதா ? வெறும் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்கும் சுயநலம் எதில் போய் முடியும் ? யோசித்தே தீரவேண்டிய  நிலையில் தற்போது இருக்கிறோம்.

என்ன காரணம் ?

அரசியலில் அரங்கேறும் அத்தனை அசிங்கங்களுக்கும் ஒரே காரணம் மக்களின் சகிப்புத்தன்மை ! இன்னும் தெளிவா சொல்லணும் என்றால் எதையும் கண்டுக்காம வாய் மூடி  கொண்டிருக்கிற நாம் தான். நம்முடைய இந்த சகிப்புத்தன்மையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டார்கள்...விளைவு மலிந்துவிட்ட ஊழல்கள்...தட்டிகேட்க ஆள் இல்லாத இடத்தில் தவறுகள் தாண்டவமாடும் என்பது தெரிந்தது தானே...?  இதை ஒத்துக்கொள்ள முடியாத நாம் அவர்களை நேரம் கிடைக்கும் போது   குறைசொல்லி அல்லது விமர்சனம் செய்து நம் மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

அரசியல்வாதிகள் இப்படியே இருக்கிறார்களே இவர்கள் மாறவே மாட்டார்களா...? மக்கள் ஏன் ஒட்டுமொத்தமாக இவர்களை புறகணிக்கக்கூடாது ?? சமீபகாலமாக இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுகிறது.

இனி ஒரு விதி செய்வோம் ! 

நமது சுதந்திரம், நாட்டின் மீது தீவிர பற்றுக் கொண்ட முன்னோர்களின் உயிர் இழப்பாலும், தியாகத்தாலும் கிடைத்தது என்பதை நாம் மறக்ககூடாது. முன்னோர்கள் சுதந்திரத்துக்காக போராடியது, தங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையினராவது சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்க்காகத்தான். நாம் ஏன் இனி அடுத்துவரும் நம் வாரிசுகள் ஊழலற்ற சிறந்த நாட்டில் வாழட்டும் என்று அதற்காக பாடுபடக்கூடாது ?


தட்டிகேட்க வக்கில்லாத நமக்கு குறை சொல்ல மட்டும் என்ன தகுதி இருக்கிறது...? யோசியுங்கள் !! 

உடனடி தேவை ஒரு எழுச்சி !

மக்களின் மித மிஞ்சிய சகிப்புத்தன்மைதான் தற்போது கியூபாவிலும், துனிசியாவிலும் புரட்சியாக உருவெடுத்தது. நமக்கான நேரம் எப்போது...? யார் முன்னெடுப்பது ? சாதி, மத வேறுபாட்டால் சிதறி கிடக்கிற மக்கள் சக்தியை இணைக்க தெளிந்த நோக்கமும், திட சிந்தனை கொண்ட இளைஞர்கள் வேண்டும்.....உள்ளத்தில் புரட்சி வேட்கை கொண்ட வேங்கைகள் இருக்கின்றன.....ஆனால் அடையாளம் காணப்படாமல் எங்கோ ஒரு மூலையில்.....! அவர்கள் வெளியே வரவேண்டும்.....இயலாமையால் வெம்பி கிடக்கிற இளைஞர்களை ஒன்று சேர்க்கவேண்டும்.....!

நம்மிடையே பல பாரதிகளும், வாஞ்சிநாதன்களும், கட்டபொம்மன்களும், குமரன்களும் இன்னும் பல வேங்கைகளும் கொந்தளிக்கும் நெருப்பை நெஞ்சில் வைத்துக்கொண்டு பரவிக்கிடக்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் சக்தி எது ?


இணைக்கும் ஒற்றை மந்திரச்சொல் தமிழன் !

நமது மண்ணின் மீதும் தமிழனின் மீதும் அக்கறை இருக்கிறது என்று வெறும் வாயை மென்று கொண்டும், வெட்டிப் பேச்சு பேசி பொழுதை போக்கி கொண்டும் இருக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்று காரியத்தில் இறங்குவது நம் உடலிலும் சூடாகத்தான் ரத்தம் ஓடுகிறது என்பதை உறுதிபடுத்தும்.


"தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?"





ஊழலற்ற இந்தியாவை, தமிழகத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை !!