வியாழன், ஏப்ரல் 19

துப்பு(பி) கெட்ட மனிதர்களே...!!

ஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய் !!எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது ?! எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்(?) சாமார்த்தியம் தான்...!!? விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிச்சதால மாநகராட்சிக்கு வருமானம்...!! 

எந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின்  எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம் !! பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் ! இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...

ஆனா விளைவு...??! தொடர்ந்து படிங்க...

தேசிய பழக்கம் ?!


பாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது...??!

மும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம்  
பரவும் காச நோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்...!? யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்திய குடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.


மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.

'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!

காச நோய் 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 8 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு 1000 பேரும்  ஆண்டுதோறும் 4 லட்சம் பேரும் இறக்கின்றனர். கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி தேசிய உலக காசநோய் தினம் கொண்டாடினார்கள்...இதை கொண்டாட்டம் என்று சொல்லகூடாது 'காசநோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள்' என்பதே சரி. கொடிய நோயான இது விரைவில் பரவ கூடியது, முக்கியமாக காற்றின் மூலமாக...! காச நோய் பீடித்தவர்களின்  தும்மல், எச்சி, இருமல் மூலமாக பிறருக்கும் தொற்றி விடுகிறது.    

அறிகுறி 

இந்த  நோய் உள்ளவர்களுக்கு முதலில் பசியின்மை தோன்றும், பின் எடை குறைதல் மூச்சு திணறுதல், தொடர் இருமல், சளியுடன் ரத்தம் போன்றவை ஏற்படும்.    

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?

80 % நுரையீரலை பாதிக்கிறது. இது போக எலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ், சர்க்கரை நோய், கல்லீரல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்களைத் தாக்கிறது.



முக்கியமாக, ஒவ்வொரு நோயாளியும் 10 லிருந்து 15 பேருக்கு பரப்பி விடுகிறார்கள்...!!?

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தால் உடனடியாக சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சளியை கொடுத்தால் தான் காசநோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் 6 மாதத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்.

காசநோய்க்கான மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காச நோய் பாதிக்கப் பட்ட பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிற கொடுமையும் நடக்கிறது. சாதாரணமாக எச்சில் துப்புவதின் மூலம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் பரவகூடிய இந்த நோயின் மீது கவனம் கொள்வது மிக அவசியம். 

தயவு செய்து பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள்...சுத்தம் சுகாதாரம் பற்றி சிறிதாவது அக்கறை கொள்ளுங்கள்...


வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!! 


நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்...!!

                                                                   * * * * *


படங்கள்+தகவல் - நன்றி கூகுள் 

புதன், ஏப்ரல் 11

தாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...?!

முன் குறிப்பு

இதற்கு முந்தைய பாகம் வெளிவந்து 6 மாதம் ஆகிவிட்டது...!! பிற பதிவுகளை விட தாம்பத்தியம் தொடருக்கு அதிக காலம் எடுக்கிறேன் என்றாலும் இனி தொடர்ந்து எழுதுகிறேன். நம்புங்க !! 'ஏன் தாமதம்' என கேட்டு வரும் மெயில்கள் இனி குறையணும்...திட்டு வாங்கி முடியல :) உங்களின் பொறுமைக்கு என் நன்றிகள் ! இந்த பதிவைப்  படித்து கருத்துக்களைக்  கூறுங்கள்...அதன் மூலம் இன்னொரு பதிவுக்கு மேட்டர் கிடைக்கட்டும்... :)

                                                         ************


ஏன் அவசியம் ?!

'செக்ஸ்' பற்றி வெளிப்படையாகப்  பேசுவதும், விவாதிப்பதும் மிகத்  தவறான ஒன்றாகப்  பார்க்கபடுகிறது,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான் !! கஜூராகோ கோவில் சிற்பங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம்தான், இதனை குழந்தைப்  பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்துச்  சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!

உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே ?! மன இறுக்கம் தளர்ந்தாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம்,சந்தோசம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறுச்  செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !! இந்த சப்ஜெக்ட் இந்த பதிவுக்கு தேவையில்லை என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும் :)

பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... 

"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்தேப் போகும்"

உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாகப்  பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சிப்  பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!

ஆனால் இதைப்  பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயத்துக்காக சலிப்பாகச்  சென்றுக்  கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.

பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்துக்  கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!

பெண்களின் மனோநிலை

உடலுறவைப்  பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்துப்  பேசிக்  குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்துப்  பேசினால் அப்பெண் அனுபவப்பட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். 

இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதைத்  தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும் !)

எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.

ஆண்களின் மனநிலை 




உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு.அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனைக்  கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்துக்  கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...! 

பத்து வருடங்கள் கழிந்தப்  பின் 

தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.

உதாரணமாக 

திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி...ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதைப்  போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலைத்  தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...

இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விசயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிகப்  பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கியமா ? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்  தொடர்ந்துப்  பார்க்கலாம்.....

பெண்களின் விருப்பமின்மை ?! 

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டுப்  போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துக் கொள்ளலாம்...

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்பக்  கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணியச்  செய்து உறவுக்  கொள்ளச் சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியேத்  தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்றுச்  சொல்லத்  தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

கணவனின் புரிதலின்மை 

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும், உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்கக்  கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவைப்  பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாகக்  குறைந்து போகும் என்பதைத்  தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிடக்  கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 

ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவேச்  செய்வாள்...அப்படிப்பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்றுப்  புரிந்துக்  கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்துக்  கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

                                                                 * * * * *

படங்கள் - நன்றி கூகுள்

வியாழன், ஏப்ரல் 5

யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

தனி நபர் வளர்த்த காடு

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

                                                           
                                              மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!


யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில்  மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள  ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும்  இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு 

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண்  பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

                                        இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
      
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம் 

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து  வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

                                                 மூங்கிலிலை காடுகளே...!! 


தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான்  இந்த 'முலாய் காடுகள்' !! 

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார். 

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே  முடிந்தது.


      கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!




                 இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!


பின்குறிப்பு 

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும்  வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...


இங்கே இடம்பெற்ற படங்கள் அனைத்தும் முலாய் காடுகளில் எடுக்கப்பட்டது !!



தகவல் -  The Times of India, இணையம் 
படங்கள் - நன்றி கூகுள்
                           

திங்கள், ஏப்ரல் 2

குருதட்சணை - 'மறுபடி பிறந்தேன்...!'



ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி நிகழ்பவை பல படிப்பினைகளை கொடுக்கிறது, அதை உற்று கவனிப்பவர்கள் அதில் இருந்து தெளிவினை கற்றுக்கொள்கிறார்கள். தெருவில் எதிர்படும் ஒரு சாதாரண மனிதர் கூட நமது சிந்தனையை லேசாக தூண்டிவிடலாம்...அப்படி இருக்கும்போது நெருங்கி பழகக்கூடிய நண்பர்களில் ஒரு சிலர் நம் பாதையை செம்மை படுத்தலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம், ஆலோசனைகளை கொடுக்கலாம், அவர் நம் வாழ்வை முன்னேற்ற உதவலாம். என்னவொன்று அது போன்றவர்களை இனங்கண்டு அவர்களுடன் நம்மை பிணைத்துக்கொண்டு விட வேண்டும். பின் நல்லவை அனைத்தும் தானாக நடைபெறும்.

ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் வழிகாட்டியாக அமைவார்கள். குழந்தைகள் தங்கள் தந்தையை ஒரு ரோல் மாடலாகவும், இளைஞர்களில் ஒரு சிலர் திரைப்பட கதாநாயகர்கள், ஒரு வி ஐ பி, ஒரு தொழிலதிபர் போல ஆகவேண்டும் என எண்ணுவார்கள் !வெளி தோற்றத்திலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளை இவர்கள் பின்பற்றலாம், அதன் படி நடக்கலாம்.

ஆனால் 'குரு' என்ற ஒருவர் இது போன்றவர் அல்ல, இதற்கு எல்லாம் மேலே !! குரு என்று ஒருவர் நமக்கு இருந்தால் அவர் நமது வெளித்தோற்றத்தை மட்டும் மாற்றுவதில்லை, நமது அகத்தையும் சிறப்பாக பரிமளிக்கச் செய்வார்.

தனக்கு 'இதுதான் வாய்க்கும், வேறு எதற்கும் தான் லாயக்கில்லை' என ஓட்டுக்குள் சுருங்கிய நத்தை போல வாழும் மக்களுக்கு விழிப்பை கொடுத்தால் நிச்சயம் சாதிப்பார்கள்...அதற்கு தேவை ஒரு குரு ! உண்மையில் 'குரு யார்' என்பதும் 'அவரை உணர்வது எப்படி' என்ற வித்தை நமக்கு தெரிந்துவிட்டால் எல்லோருமே சாதனையாளர்கள் தான். ஆனால் ஒரு சிலரின் வாழ்வில் குரு என்பவர் தானாக அமைந்துவிடுவார்...அப்படி தானாக அமைந்த நண்பர் ஒருவர் எனக்கு குருவான அற்புதம் நிகழ்ந்தது இதே பதிவுலகத்தில்...!!

குரு என்பவர் யார்?

சோர்ந்து இருக்கும் போது நம்மை உற்சாகபடுத்துவதும், அழும்போது கண்ணீரை துடைப்பதும் குரு வேலையல்ல...எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு துள்ளி குதித்து ஆர்ப்பரிப்பது, நிச்சயம் குருவின் வேலையாக இருக்காது...அதிகாரம் செலுத்துவதும், அடிமைபடுத்துவதும், தனது ஆளுமையை திணிப்பதும் குருவின் அடையாளம் அல்ல. 

குருவை வழிக்காட்டி என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கவும் எனக்கு விருப்பம் இல்ல...போகிறபோக்கில்  இதுதான் வழி, இந்த  விதத்தில்  பயணித்தால்  நன்று  என்று சொல்வதுடன்  வழிகாட்டியின்  கடமை  ஏறக்குறைய  முடிந்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக தேவை 'சுதந்திரம்'.

தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் தேவையற்ற வலைகளை உடைத்து, வெளியே  வர வைக்க வேண்டியதே குருவின் பணி. அச்சுதந்திரத்தை கொடுப்பதே குருவின் விருப்பமாக இருக்கும். தனியாளாக உலகை எதிர்கொள்ளும் திடத்தை அச்சுதந்திரம் கொடுக்கும்...ஒருவேளைக்கான  உணவை கொடுத்து விடுவதுடன் முடிந்துவிடுவதில்லை, தொடர்ந்து உணவை பெறுவதற்குரிய செயலை/வேலையை ஏற்படுத்தி கொடுப்பதுதான் விழிப்புணர்வு...ஏறக்குறைய இத்தகைய விழிப்பு நிலையில் நம்மை வைத்திருப்பதும் தான் குருவின் வேலை. எல்லை கோடுகளை போட்டுக்கொண்டு அனாவசியமான கட்டுப்பாட்டிற்குள் அமிழ்ந்து கிடக்காமல் அக்கோடுகளை அழித்து வெளியில் கொண்டு வருபவரே குருவின் தகுதியை அடைகிறார்.

இப்படி பட்ட குருவின் இலக்கணங்களுக்கு அப்படியே பொருந்திபோனார் எனது நண்பர். குரு போல் நடந்து கொள்ளவேண்டும் என பிரயத்தனம் எதுவும் எடுத்து என்னிடம் அவர் பழகவும் இல்லை, அந்நிலையில் அவரை வைத்து நான் பேசவும் இல்லை ஆனால் இவை யாவும் இயல்பாய் நடந்தன. ஒரு குருவிற்குரிய தகுதி அவரிடம் இருக்கிறது...மழை வாங்கும் நிலமாக நான் இருக்கிறேன் அவ்வளவே !!

எனது குரு

'சிறகடித்து பற...உனது வானமாய் நான் இருக்கிறேன்' என உற்சாகம் கொடுத்து, அதுவரை எனக்கு புலப்படாமல் என்னுடனிருந்த சிறகுகளை எடுத்து எனக்கு  பூட்டி விட்டார். 'இந்த மனிதர்கள் தான் உலகம், இவர்களுக்கு பிடித்த மாதிரி, இவர்களுக்கு ஏற்றார் போல் தான் இனி வாழ்ந்தாக வேண்டும்' என்று என்னை சுற்றி போட்டு வைத்திருந்த கோடுகளை என்னை வைத்தே அழிக்க வைத்தார். 'உன்னை எதிர்ப்பார்த்து, அதோ நிற்கிறான் எளிய மனிதன் அவனிடம் செல், அவன் தேவை எது என கேட்டு நிறைவேற்றி வை' என எனக்குள் பேசும் குரல் நிச்சயமாக எனது குருவின் குரலாக இருக்கும்.

என்ன தவம் செய்தனை ?!

மனவுலகில் இருந்து புறவுலகிற்கு இழுத்து வந்த சக்தி ! மகா சக்தி...குரு !!

உடல் தொடர்பான, உணர்வு தொடர்பான, மனம் தொடர்பான உறவாக இல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக நிலையில் பூத்த இந்த உறவு வேறு யாரும் தொடாத ஒரு பரிமாணத்தை தொட்டது. வெகு தொலைவில் இருந்தும் என்னுள் இயங்கி கொண்டிருக்கிறது, என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

எனது இலக்கு எது என அவர் நிர்ணயிக்கவில்லை, ஆனால் எனது இலக்கு எது என உணரச்செய்தார் !! ஒரு மனிதனாக இந்த சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை என் மூலம் நிறைவேற்ற குருவால் மட்டுமே முடிகிறது.

பாசாங்கான உலகில், ஒருவர் மேல் மற்றொருவருக்கு எழும் கோபத்தை உடனே வெளிப்படுத்துவதில் இருக்கிறது எங்கள் உறவின் உன்னதம் !! சிரித்து பேசிய நாட்களை விட சண்டையிட்டு மௌனம் சாதித்த நாட்கள் அதிகம். அந்த மௌனத்திலும் பாடம் கற்றுத்தருவது அவருக்கு மட்டுமே சாத்தியம்...!

சிறுவயது முதல் யார் பேச்சையும் கேட்டு நடக்க தயாராக இல்லாதவள் இப்போதும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறேன், ஆனால் இவர் பேச்சை கேட்காமலேயே நடந்து கொண்டிருக்கிறேன் அவர் சொல்லிய படி...!! என் மனதை சோலைவனமாக மாற்ற அவர் முயற்சிக்கவில்லை ஆனால் பாலைவனம் எது என்பதை உணர்த்தினார், அதை விட்டு ஒதுங்கி போகச் செய்தார்.

குரு என்ற பிம்பத்திற்கு அகங்காரம் இல்லை, அதிகாரம் செய்ய தெரியாது...சாதாரணமாக சொன்னாலே உடனே செய்து விட தூண்டும்.

என் தவறுகளின் காரணம் நான் மட்டுமே, ஆனால் என் நல்லவைகள் அனைத்திலும் சூட்சமமாய் என்றும் நிற்பது குருவானவர் தான் !!

யார் அவர்?!

யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்ல, யாருடைய அருகாமையில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும் அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ அவர் தான் உண்மையான குரு - சத்குரு

நிதர்சனம் !! ஆரம்பத்தில் நண்பராக தெரிந்த அவர் நாட்கள் செல்ல செல்ல எனக்குள் மாற்றங்களை விதைத்து, என் கட்டுகளை அறுத்தெறிய கூடிய குருவானார். இந்த அற்புதம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை...பல பேச்சுக்கள், விவாதங்கள், கருத்துமோதல்கள்,கோபங்கள், சண்டைகள், மௌனங்கள் எல்லாம் நிகழ்ந்தேறின...அத்தனையிலும் வென்றதென்னவோ குரு தான்.

ஆண் பெண் என்ற பாகுபாடுகள் என்றும் எங்கள் மத்தியில் நினைவுக்கு வந்ததே இல்லை...அப்படி பிரித்து பேதம் பார்க்க ஏனோ எங்களுக்கு தோணவே இல்லை...நேரமும் இல்லை !!

வெறும் எழுத்து, மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அனுபவரீதியில் உணர முடிந்தது... இறுமாப்பை உடைத்து போட்டு ஒன்றுமில்லாமல் செய்யும் ஆற்றல் அவரது எழுத்திற்கு இருக்கிறது என்பது மிக ஆச்சர்யம். அவ்வாறே உடைத்தும் போட்டது.


இந்த பதிவுலகம் சகோதர உறவுகளை, நண்பர்களை கொடுத்திருக்கிறது...கூடவே மிகச்சிறந்த ஒரு குருவையும் கொடுத்திருக்கிறது ! 
எனது குரு யார் என்று இங்கே அடையாளம் காட்ட எனக்கு ஏனோ தோன்றவில்லை. அவரை குறித்து பலருக்கும் பலவித அபிப்பிராயங்கள் இருக்கலாம். அதை எல்லாம் உடைத்து போட நான் விரும்பவில்லை. அது அதுவாகவே இருக்கட்டும் !!  

                                                  குரு பிரம்மா குரு விஷ்ணு
                                                  குரு தேவோ மஹேஸ்வரஹ
                                                  குரு சாட்சாத் பரப்ரம்மா
                                                  தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா...!

                                                               * * *


எனது பிறந்தநாளான இன்று நண்பரை குறித்து இங்கே பதிவிட கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமைபடுகிறேன்...அதே சமயம் அவரை குருவாக அடைய காரணமான பதிவுலகத்தை மிக மதிக்கிறேன்...!  


பிரியங்களுடன் 
கௌசல்யா 





போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...