புதன், ஜூன் 30

தாம்பத்தியம் பாகம் 10 வரதட்சணைக் கொடுமை

வரதட்சணை என்னும் கொடுமை 

பல திருமண உறவுகளும் பாதியில் முறிவதற்கு  முக்கியப்  பங்கு வகிப்பது வரதட்சணை என்ற கொடுமைதான் என்பதை மறுப்பதற்கு இல்லை.  சாதாரணமாக இருந்த இந்த பழக்கம் இப்போது கொடுமைப்  படுத்தி வாங்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது.  எதிர்பார்த்ததில் கொஞ்சம் குறைந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகளை கொடுமைப்  படுத்தும் கோரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்த முறை யாரால் ஏற்படுத்தப்பட்டது, ஏன் ஏற்படுத்தப்பட்டது என்று விவாதிப்பதை விட இந்த பழக்கம் எந்த அளவு கணவன், மனைவி உறவைக்  கெடுக்கிறது என்று தான் இங்கு பார்க்கவேண்டும்.  

பெற்றோர்களே ஒரு விதத்தில் காரணம்

எந்த மகனும் எனக்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது, அதனால் இந்த தொகை கேளுங்கள் என்று விரும்புவது இல்லை.  தன்மானம் உள்ள எந்த ஆணும் தனக்கு ஒரு விலையை நிர்ணயிப்பதை விரும்பமாட்டான்.  ஆனால் பெற்றோர் செய்யும் தவறு பிள்ளையின் தலையில்...!! 

பெண்ணிற்கு சீதனமாக சில பொருள்களை வாங்கி கொடுப்பது அவர்களின் விருப்பம் ஆனால் இதிலும் தகுதிக்கு மீறி பலவற்றையும் வலிந்து கேட்பது இப்போது சாதாரணமாகி விட்டது.  ஒருவேளை அவர்களின் மகனே ஏன் என்று கேள்வி கேட்டால், " நீ  சும்மா இரு, உனக்கு ஒன்றும் தெரியாது, இது எல்லாம் உன் நல்லதுக்கு தான் " என்று கூறி அவனது வாயை அடைத்து  விடுவார்கள்.  ஆனால் அப்போது அவர்களுக்கே தெரியாது, இப்படி வலுகட்டாயமாக பெண் வீட்டாரிடம் வாங்கிய பொருட்கள் இருக்கும்  தைரியத்தில்  தான் அந்த  பெண் அவர்களின் மகனுடன்  தனிக்குடித்தனம் செல்ல வசதியாக இருக்கும் என்று....??!!

தனிக்குடித்தனம் திட்டமே இந்த பொருட்களை வைத்துதான் உருவாகிறது என்பது பாவம் அவர்கள் அறியமாட்டார்கள்.  ஆக ஒரு குடும்பம் பிளவு பட எவையெல்லாம் துணை புரிகிறது பாருங்கள்.  பல வீட்டிலும் இந்த பொருட்கள் படும் பாடு சொல்லி முடியாது.  பெண் வாழ கொடுக்கப்படும் சீதனம் குடும்பத்தை பிரிக்க துணை புரிவது கொடுமைதான்!!

கௌரவ பிரச்சனை 

சில பெண்களையும் சும்மா சொல்லகூடாது, ஒரு கல்யாணம் முடிவு ஆனவுடன் முதலில் மாப்பிள்ளை வீட்டினரை  கேட்பது, " பெண்ணுக்கு  எத்தனை சவரன்  போட போகிறார்களாம் ? " ஒருவேளை கொஞ்சம் கம்மியா  இருந்துவிட்டது என்றால் "இவ்வளவுதானா? உங்க பையன் கை நிறைய சம்பாதிக்கிறான், இந்த வீட்டுக்கு வர அவளுக்கு கொடுத்து வச்சிருக்கணும்" அப்படி இப்படின்னு எதையாவது சொல்லி அவர்களை இன்னும் அதிகமாக கேட்க சொல்லி மறைமுகமாக தூண்டுவார்கள். இந்த பையனின் அம்மாவோ அடடா எல்லாம் பேசி முடித்து விட்டோமே கல்யாண நாளும் நெருங்கி விட்டதே என்ன பண்ண என்று பலவாறு யோசித்து குழம்பி விடுவார்கள். 


கடைசியில் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும் சமயம் பெண்ணை பெற்றவர்களை demand செய்வது. மேல கேட்டதை கொடுத்தால் தான் பெண் கழுத்தில் பையன் தாலி கட்டுவான் என்று சொல்லி அன்பாக மிரட்டுவது....?!  இது இன்றும்  சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 


ஆனால் இது  எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான கட்டத்தில் பையன் வீட்டார் செயல் படும் விதம் இருக்கிறதே... ரொம்ப கேவலம்!! (யதார்த்ததிற்கும் ஒரு  அளவு இல்லையா என்று நீங்கள் நினைத்தாலும் சொல்லி ஆகவேண்டிய கட்டாயம்  உள்ளது) முதன் முதலாக புதுப்பெண் தன் கணவனை தனிமையில்  சந்திக்கும் அந்த நேரத்தில் அந்த பையனின் வீட்டாரால் தடுக்க படுகிறாள்.  வரவேண்டியவை வரும் வரை சந்திக்க வாய்ப்பில்லை என்று மறைமுகமாக அவளுக்கு அறிவுறுத்த படும்போது அந்த பெண்ணின்  மனநிலையும் அறையின் உள்ளே இருக்கும் ஆணின் மனநிலையும் என்னாகும்...? அப்படி கொடுத்து விட்டுத்தான் கணவனை சந்திக்க வேண்டும் என்றால் இந்த உறவின் புனிதத்திற்கு என்ன அர்த்தம்? சிந்திப்பார்களா இந்த மாதிரியுள்ள  பெற்றவர்கள்?! 


பெற்றவர்களின் இந்த செயலால் தான் அந்த பெண் தனி குடித்தனம் கிளம்பும்போது அந்த கணவனும் மனம் வெறுத்து கிளம்புகிறான். சில ஆண்களுக்கே தனது பெற்றோர்களின் செயல்கள் பிடிக்காமல்தான் வேறு வழி இன்றி பிரிந்து செல்கிறார்கள். பழி என்னவோ வழக்கம்போல் பெண்ணின் மேல் !!


சாபக்கேடான வசைமொழிகள் 


வரதட்சணை ஒரு கலாசாரமாக மாறிவிட்டது என்பது போல் தோன்றினாலும் ஆண்கள் நினைத்தால் மாற்றிவிட முடியும் என்பது என் கருத்து. தான் ஒரு விலை பொருளாக மாற்ற படுவதை முடிந்தவரை மாற்றலாம்.  ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது,  சீர்திருத்தம் என்ற பெயரில் சிலர் வரதட்சனை  வாங்க மாட்டேன் என்று சொன்னாலும், இந்த பெண் வீட்டார் படுத்தும் பாடு இருக்கே பாவம்தான் அந்த ஆண்கள். "இவனிடம் ஏதாவது குறை இருக்கும் அதை மறைக்கத்தான் வேண்டாம்னு சொல்றான்" அப்படின்னு தங்களது கற்பனை குதிரையை தட்டிவிட்டு கதை பரப்பி விடுவார்கள்.  


என்னதான் செய்வது 


என்னவொரு மனிதாபிமானம் அற்ற பேச்சுகள் ? இப்படி பேசினால் எந்த ஆண் தான் முன் வருவான்...? அப்ப திருந்த வேண்டியது இந்த சமுதாயமா ? சமுதாயம் என்பது என்ன? ஆண் பெண் சேர்ந்த நாம்தானே சமுதாயம், அப்படி இருக்க ஆண்கள் குறை சொன்னாலும் பரவாயில்லை, தைரியமாக முன் வரவேண்டும், இளம்பெண்களும் அந்த ஆண்களை முழு மனதாய் வரவேற்க வேண்டும்.  சிறிது சிறிதாக சமுதாய மாற்றம் நிகழும். (கேட்பதற்கு நன்றாகதான் இருக்கிறது , நடக்கணுமே).  எந்த நல்ல மாற்றமும் உடனே நடந்து விடாது.... ஆனால் சிறு உளிதான் மலையை பெயர்க்கிறது என்பதை மனதில் வைத்தால் போதும், நாளைய சமுதாயம் சீராகும்.         


வாங்குபவர்கள் திருந்தும் முன், கொடுப்பவர்கள் முதலில் திருந்த வேண்டும்.


வன்கொடுமை சட்டம் படும் பாடு


கணவன் மனைவி உறவில் பிரிவு ஏற்பட  வரதட்சணை கொடுமை ஒரு காரணமாக இருந்தாலும்,  அதில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்காக போடப்பட்ட ஒரு சட்டம் இதைவிட மோசமாக வேற ரூபத்தில் குடும்பங்களை பந்தாடுகிறது. எதை பெண்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறோமோ அதை சில பெண்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு கணவனையும், அவனது குடும்பதினர்களையும் படுத்தும் பாடு இப்போது அதிகமாகி கொண்டு போகிறது.


சில சின்ன சின்ன, நாலு  சுவற்றுக்குள் முடிய வேண்டிய விசயத்துக்கும் உடனே மகளீர் காவல் நிலையம் போக தொடங்கி விட்டார்கள்.  அப்படி போகும்போது அந்த கணவன் மேல் தவறு இல்லை என்றாலுமே தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. அவனுடன் சேர்ந்து ஒன்று தெரியாத அப்பாவிகளும் தண்டனைக்கு பலி ஆகிறார்கள். சில பெண்களின் செயல்களை ஜீரணிக்கவே முடியாது, ஒன்றும் இல்லாத விசயத்துக்கும் கணவன் மேல் தாறு மாறாக, எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு கற்பனையாக கதை கட்டி புகார் கொடுக்கிறார்கள். சில  பெண்கள் பொய் அதிகம் பேச தொடங்கியதால் ஆண்கள் படும்பாடு மிகவும் வருத்தத்திற்கு உரியது. 


பெண்ணின் பேச்சிற்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது, ஆணின் உண்மைகூட அங்கே எடுபடாமல் போய்விடுகிறது.  ஒரு பெண் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற அளவில் இருந்தால் அப்பாவி ஆண்களின் நிலைமை....??  தாலி கட்டிய கணவன் என்ற உறவிற்க்கே கேவலத்தை ஏற்படுத்தும் சில பெண்களால் மற்ற நல்ல பெண்களுக்கும் அவப்பெயர் தான்.  


கணவன் கிழித்த கோட்டை தாண்டாத பெண்கள் இருக்கும் நம் நாட்டில்தான் இந்த மாதிரி கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மனைவிகளும் இருக்கிறார்கள். ஆண்களை அடக்கி வைக்க வேண்டும் என்று எண்ணியே பல  பெண்கள் உறுதி பூண்டு இருக்கிறார்கள்,  ஆண்கள்  ஒன்றும் இவர்களின் அடிமை இல்லையே, இருந்தும் இந்த மாதிரி சட்டங்களை சொல்லி பயமுறுத்தியே கணவர்களை பலரும் அடக்கி வைத்து இருக்கிறார்கள்.  


இந்த மாதிரி இருக்கும் வீடுகளில் எப்படி நல்ல தாம்பத்தியத்தை எதிர் பார்க்க முடியும்.....??! 


இன்னும் வரும்.....!


                        தாம்பத்தியம் அடுத்த பாகம்  தொடரும்.....        


      

வெள்ளி, ஜூன் 25

நினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்

One  year without MJ 






பாப்  இசை உலகின் மன்னன்'  இந்த உலகம் இருக்கும் வரை இந்த பட்டம் இவர் ஒருவருக்குத்தான் பொருந்தும்.  இவர் இன்று நம்மிடையே இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற இசை, பாடல்கள், நடன முறைகள், நினைவுகள் கோடிக்கணக்கான இதயங்களில் என்றும்  வாழும்.....!!



அவரது இசை நாடு, மொழி, மக்களை கடந்த உலக காவியம். 





சிறு வயது முதல் தீவிர ரசிகையான  எனக்கு அவரது முதல் நினைவுநாளில் இந்த பதிவை எழுத கிடைத்த வாய்ப்பை பெரும்பேறாக எண்ணுகிறேன்.  இசையால் ஒருவருக்கு ஆறுதலை, அமைதியை கொடுக்கமுடியும் என்பதை உணர்ந்து அனுபவித்தவள்.




அவரது முதல் ஆல்பம் முதல் கடைசி ஆல்பம் வரை உள்ள அனைத்து பாடல்களும் அசத்தலானவை. தனது 11  வயதிலேயே மேடையேறி பாட தொடங்கிய மைக்கேல் தனது 50 வது வயதுவரை ஓய்வின்றி இசைக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தார்.  


அவரின் வாழ்க்கை ஒரு மலர் படுக்கை அல்ல, முள் படுக்கை. முள்ளை  அவர் வைத்து கொண்டு ரோஜா மலரை நமக்கு பரிசளித்தவர்.  தந்தையுடன் மனகசப்பு, பல முறையற்ற   குற்றசாட்டுகள் , முதல் மனைவியுடன் விவாகரத்து,  உடம்பை சோதனைசாலையாக மாற்றிய பல ஆப்பரேஷன்கள்,  இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அளவு மோசமான குற்றசாட்டுகள், பல தேவை அற்ற பிரசாரங்கள்......??!!  இதில் எவையெல்லாம்    உண்மை என்பது அவருக்கும், கடவுளுக்கும் தான் தெரியும்.  


ஒரு தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியில், தனது நிலையை நன்றாக தெளிவு படுத்தினார். ஒரே  வார்த்தையில் தன் மேல் உள்ள குற்றசாட்டுகளுக்கு பதில் உரைத்தார் , ' நான் ஒரு பாவமும் அறியேன் ' என்று கண்ணில் நீர் வழிய ஒரு மகா கலைஞன் சொன்னதை பார்த்தபோது என் கண்ணீரை கட்டுபடுத்த நானும் வழி அறியேன்.  புத்தரையும், ஏசுவையுமே  குறை சொன்ன இந்த உலகம் இந்த சாதாரண மனிதனையா விட்டு வைக்க போகிறது?  " உங்களில் ஒரு குற்றமும் செய்யாதவர்கள் யாரும் இருந்தால்  அவர்களே முதல் கல்லை இவள் மேல் எறியுங்கள் " என்று ஒரு இடத்தில் ஏசுநாதர் கூறி இருப்பார்.  அது போல் ஒரு குறையும் இல்லாத  மனிதராக  நாம் இருந்தால்  அவரை குறை சொல்லலாம்  ஆனால் நாம்....???


சிறு வயதில் வெள்ளையர்களின் நிற பேத கொடுமைகளில் தொடங்கி  அவர் இந்த உலகை விட்டு மறைந்த பின்னும் இன்னும் அவரை வைத்து தொடரும் அவலங்கள்....?  மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட  யாருக்கும் உரிமை இல்லை, ஆனால் பிரபலம் என்றால் எதுவுமே செய்திதான்.  இவரை பொறுத்தவரை அவரது ஒவ்வொரு அசைவும் உலகத்தாரால் விமர்சிக்கப்பட்டது.  இந்த விமர்சனம் அவர் மறைந்த பின்னும் குறையவில்லை . ஒருவர் இறந்தபின் அவரது நிறைகளை மட்டுமே பேசபடுவதுதான் நாகரீகம்.  ஆனால் அவர் இறந்த பின் வந்த செய்திகள் அதனை விளம்பரத்திற்காக வெளி இட்டவர்களை அவரது ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.  



அவரை வைத்தும், அவரது பாடல்களை கொண்டும் சாதாரண பிளாட்பார கடையில் இருந்து ஆல்பம் வெளியிட்ட பெரிய நிறுவனங்கள் வரை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபம் சம்பாதித்தன,  இன்றும் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றன.  


அவரது நினைவாக ஒரு மியுசியம் கட்ட போகிறார்களாம். ஆனால் அதற்கு அடிக்கல் நாட்டும் முன்னரே, அதனால் ஒரு வருடத்திற்கு வர கூடிய வருவாய் இத்தனை  கோடி டாலர்கள் என்று கணக்கு போட்டு விட்டார்கள்.  என்ன உலகம்...??!! 


முக்கியமான ஒன்று என்னவென்றால் யாரை நம்பி தனது உடம்பை ஒப்படைத்து மருத்துவம்  பார்த்து கொண்டு இருந்தாரோ அவரே அவரது உயிரை பறிக்கும் காலனாக மாறியது.... ??


'make a little space, make a better place' என்று பாடிய அவருக்கு இந்த பூமியில் அப்படி ஒரு சிறந்த இடம் வாழ கிடைக்கவில்லை. அந்த உலகத்திலாவது அவர் விரும்பிய அந்த அமைதியான இடம் கிடைக்கட்டும்!!


                    ரசிகர்கள் 
                    உணருவார்கள், அந்த                                                                       
                    உயிரின் ஓசையை...! 
                    இப்போதும்  கேட்கிறது... 
                    'இந்த அமைதியும்,                               
                    ஆனந்தமும் 
                    கிடைக்கும் என்று முன்பே 
                    தெரிந்து இருந்தால் 
                    என்றோ மரித்திருப்பேன் !
                    வாழ்க என்பேன்...
                    இந்த இடம்,  நான் வர 
                    துணை புரிந்தவர்களை !!'   
                                
ஒவ்வொரு பாடலுமே ஒரு காவியம்தான்.  அனைத்தையும் விரிவாக சொல்வதை விட ஒரு நாலு பாடல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.


Thiriller   


1980 ம் ஆண்டில் இந்த பாடலை எடுக்க 50,000 டாலர்கள் செலவு ஆகியதாம்.  வசூலில் சாதனை படைத்த பாடல். பேய் படம் பார்த்து பயந்து வெளியில் வரும் தன் பெண் தோழியுடன் ரோட்டில் பாடி கதை சொல்லி கொண்டே வருவார்,  அப்படி ஒரு கல்லறையை  கடந்து வரும்போது, அங்குள்ள கல்லறையை திறந்து கொண்டு சடலங்கள் எழுந்து வருவது போலவும், பின் மைக்கேலுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்க பட்டிருக்கும்.  இந்த காட்சி அமைப்பும், மிரட்டும் இசையும், இன்று பார்க்கும் போதும் திகிலாக இருக்கும்.


Beat it .   


முதல் ராக் பாடல் இதுதான் என்று அறியப்பட்டது.  இதில் இடம் பெற்ற அனைத்து கலைஞர்களும் கருப்பு இன அமெரிக்க மக்களும், தென் ஆப்பிரிக்க இனத்தவர்களும் தான்.  'சண்டை வேண்டாம்'  என்ற பொருளில் பாடல் அமைக்க பட்டிருக்கும்.  இந்த பாடல் மைக்கேலின் சிறந்த பாடல் மட்டும் இல்லை அகில உலகத்தின் சிறந்த பாடல் என்ற பெயரை பெற்றது.


Smooth criminal 


ஒரு சூதாட்ட விடுதியில் நடப்பவற்றை வைத்து பாடல் எடுக்கப்பட்டு இருக்கும்.  அந்த விடுதியை சுற்றி நடனத்துடன் பாடல் மிக அற்புதமாக படமாக்க பட்டு இருக்கும்.   நடனம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.     

Heal the World 


இந்த  பாடலில்  அதிர  வைக்கும்  இசையோ , அசத்தும்  நடன அசைவுகளோ இல்லை. ஆனால் மனதை நெகிழ செய்யும் காட்சிகள்,  ஆழ்மனதை ஊடுருவும் வரிகள்.  உலகில் போர் வேண்டாம் , அமைதி நிலவ வேண்டும் என்பதை சிறு குழந்தைகளை வைத்து மிக அருமையாக படமாக்கப்பட்டு  இருக்கும்.  ராணுவ வீரர்களின் கையில் குழந்தைகள் பூவை கொடுக்கும் காட்சியும், அதன்பின் அவர்கள் தங்கள்  கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியை கீழே  எறிவது போலவும் இடம்பெற்ற  காட்சிகள் புல்லரிக்க வைக்கும். 
அந்த பாடலில் உள்ள சில வரிகள் 




"Think about the generations and to say we want to make it a better world for our children and our children's children. So that they know 
it's a better world for them; and think if they can make it a better
place." 




"Make it a better place
For you and for me and the entire human race.
There are people dying
If you care enough for the living
Make a better place for 
You and for me"




அவரது நினைவுநாளில்  நான் எழுதும் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.


   
           

புதன், ஜூன் 23

நிலவுமுகம்

கவிதை   
                                           
                                          இரண்டு பேரும் பிரிந்து 
                   
                                          இருக்கிறோம், வேலையின் நிமித்தம்!

                                          ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட 
                                     
                                          நேரத்தில் இருவரும் 

                                         ஒன்றாக நிலவை நோக்க!

                                         அவர் பார்க்கும் 
                            
                                         நிலவில் என் முகம்!

                                         நான் பார்க்கும் நிலவில்
                                         
                                         என்னவர் முகம்!

                                         இருவரையும் பார்த்த 

                                         நிலவு ஓடி மறைந்தது

                                         மேகத்தில், வெட்கமாம்!!

                                                     *******************




பி.கு

எப்படி தெரியும் என்று யோசிக்ககூடாது ...! கண்டிப்பாக தெரியும், மனதில் காதல் இருந்தால் !!


நிலவு வராத அமாவாசையில் என்ன செய்வீர்கள் என்றும்  கேட்ககூடாது ?!  ஒரு வேளை நீங்க கேட்டால்,  நட்சத்திரத்தை பார்த்து கொள்வோம் என்பேன்!  நிலவு என்றால் ஒரு முகம் தான் ஆனால் நட்சத்திரம் என்றால்...............புரியும் என்று நினைக்கிறேன் !!

செவ்வாய், ஜூன் 22

தாம்பத்தியம் பாகம் 9



திருமண பந்தம் 

இப்பந்தம் இருவரை மட்டும் இணைக்கும் மண விழா இல்லை, இரு குடும்பங்களை இணைக்கும் திருவிழா.  இனிமையான இந்த விழாவில்தான் எத்தனை சாஸ்திரங்கள், சம்பிராதயங்கள் !! ஆச்சரியமான பல சடங்குகள்....!! அணியும் உடைகள் முதல் மண்டபம் வரை பெற்றவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள்.  ஆண், பெண் இருவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான கால கட்டமே இந்த திருமணம்தான்.  

திருமணதிற்கு முன் வாழும் வாழ்க்கை நம் பெற்றோர்களின்  விருப்பத்திற்கு ஏற்றார் போல்தான்  இருக்கும் .  அவர்கள் சேர்த்துவிடும் பள்ளி, கல்லூரிகளில் தான் நமது படிப்பு தொடரும், அவர்கள் எடுத்து கொடுக்கும் உடையைத்தான் உடுத்துவோம், நேரம் கழித்து வீட்டிற்கு போனால் டோஸ் கண்டிப்பாக இருக்கும்.  நமக்கு எது விருப்பம் என்று பார்த்து முடிவு செய்வார்கள் .  

திருமண வயது வந்ததையும் கவனித்து தகுந்த நேரம் பார்த்து  வரன் பார்க்க தொடங்கி விடுவார்கள்.  இப்ப உள்ள சூழ்நிலையில்  நம் விருப்பத்தையும்  கேட்க கூடிய  கூடிய   பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.   வரன் பார்க்கும் அந்த நேரத்தில் இருந்தே பெற்றோர்களின் படபடப்பு அதிகரித்து விடும்.  அதுவும் பெண்ணை பெற்றவர்களின் நிலையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.  நல்ல  குணமுள்ள வரன் கிடைக்க வேண்டுமே என்று தவமே  இருப்பார்கள்....!!

பெண் பார்க்கும் வைபோகம் 

பல வரன்களின் புகைபடங்களையும்  சரி பாத்து கடைசியில் தங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல்  ஒன்றை முடிவு செய்து  பெண் பார்க்க ஏற்பாடு செய்கிறார்கள்.    பெண் பார்க்க வருகிறார்கள் என்றவுடன் தனியாக பெண்ணிற்கு அலங்காரம்  செய்து, வசதி குறைந்தவர்கள் தங்கள் வீட்டில் நகை குறைவாக இருந்தாலும்  அக்கம்பக்கம் வாங்கியாவது  பெண்ணின் கழுத்தில் அணிவித்து தயார் செய்து வைப்பார்கள்.  டிபன், காபி என்று அனைத்தும் தயார் நிலையில் இருக்கும். இந்த தடபுடல் ஏற்பாடு சில பெண்களுக்கு பலமுறை கூட நடந்தேறும்.

வரதட்சணை என்னும் அரக்கன் 

உறவினர் புடை சூழ மாப்பிள்ளை வந்து இறங்குவார்.  சம்பிரதாயமான பேச்சுகள் முடிந்ததும் பெண்ணை பார்ப்பார்கள்.   பெண்ணை பிடித்து விட்டாலும்,  மற்ற கொடுக்கல் வாங்கலில்  திருப்தி  ஏற்பட்டால் தான் சம்மதம் சொல்வார்கள்.  பையனை வளர்த்து படிக்க வைத்ததுக்கும் சேர்த்து ஒரு கணக்கு போட்டு மொத்த தொகையை சொல்வார்கள் .   (ஆனால் இந்த மாதிரி நேரத்தில் எந்த பெண் வீட்டாரும், "  உங்க பையனை வளர்த்தது உங்க கடமைதானே,  அதுக்கு நாங்க ஏன் பணம் கொடுக்கணும் " , என்று கேட்பதே இல்லை.)  

(பதிலுக்கு இவர்களும் " எங்க பெண்ணையும் வளர்த்து படிக்க வைத்து பத்தாதுக்கு ஒரு வேலையை வேற வாங்கி கொடுத்துள்ளோம், திருமணம்  முடிந்ததும், அவளுடன் சேர்த்து  அவள் சம்பளத்தையும் நீங்கதான வாங்க போறீங்க ? அதனால் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு தொகையை நீங்க தான் எங்களுக்கு கொடுக்கணும் " என்று ஏன் கேட்பது இல்லை....?!!?)

காலங்காலமா தொடர்ந்து வரும் சந்தையில் மாட்டை விலை பேசுவது  மாதிரியான இந்த பழக்கத்தை யாரும் மாற்ற  கூடாது என்ற பிடிவாதத்தில் இருக்கும் போது யார்தான் என்ன சொல்லமுடியும்?  (வாங்குபவர்கள் மீது தவறா இல்லை கொடுப்பவர்கள் மீது தவறா )   இந்த பேச்சு வார்த்தைகள் பெண் வீட்டாரையும், பையன் வீட்டாரையும் ஒருவேளை திருப்தி படுத்தினாலும், அந்த நேரம் யாரும் ஒன்றை யோசிப்பதே இல்லை.   

அது  "சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் மனநிலை!!".  தான் ஒரு பலிகாடாக மாற்றபடுவதை எந்த பெண்ணும் விரும்பவே மாட்டாள்.   இந்த விசயத்தில் அவள் சூழ்நிலை கைதியாகவே இருக்கிறாள்.  அதிக அளவில் பாதிக்கபடும் அவள்,  அதை அப்படியே திருமணத்துக்கு பின்னால் எதிரொலிக்கிறாள்.  இதுதான் பல மாமியார் மருமகள் சண்டைக்கான பிள்ளையார் சுழி என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்பதுதான் கொடுமை.     

அதைவிட கணவனை வரதட்சணை என்னும் ஒரு விலையை கொடுத்துதான் வாங்குகிறாள்.....! அப்படி இருக்கும்போது வாங்கியவள் அவள் விருப்பம் போல்தான் அந்த கணவனை நடத்தக்கூடும் ....!!  இதை ஜீரணிக்க முடியாவிட்டாலும் இன்றைய யதார்த்தம் இதுதான்!!  (எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை)  பெற்றோர்கள் கேட்கும்  வரதட்சணை என்ற  அரக்கனால் ஒருவகையில் மறைமுகமாக பாதிப்படைவது அவர்களது மகன்தான்...!   தனது தாயாராலும் மனைவியாலும் பந்தாடபடுவது அவன்தானே....!!? 

எந்த பெண்ணும் வெளிபடையாக தனது  வெறுப்பிற்கு காரணம் இதுதான் என்று கூறுவது இல்லை.  அதனால் சம்மந்த பட்டவர்கள் பெண்ணின் குணத்தையும், அவளின் பிறந்த வீட்டு வளர்ப்பையும் குறை சொல்லி சமாதானம் அடைந்து கொள்கிறார்கள் அல்லது எதிர்த்து பிரச்சனை பண்ணுகிறார்கள்.  முடிவு கணவன் மனைவி உறவில் விரிசலில் கொண்டு போய் விடுகிறது....!!

இன்று தாம்பத்தியம் சீர்குலைய இந்த வரதட்சணை பிரச்னை ஒரு பெரிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  கணவன், மனைவிக்கு இயல்பாக இருக்க கூடிய பரஸ்பர அன்பையே இது கெடுக்கிறது.  சில பெற்றோர்களும் மகளுக்கு திருமணம் முடித்ததும்  தங்களது கடமை முடிந்து விட்டதாக முடிவு செய்து அதற்கு பின் தன் மகள் அங்கு வாழும் வாழ்க்கை எத்தகையது என்று கவனிப்பதே இல்லை.  


இதைவிட முக்கியமாக வரதட்சணை கொடுமை என்று அவலம் வேறு உள்ளது     
வசதி குறைந்தவர்கள் வீட்டில் தான் என்று இல்லை, சில மிக வசதி படைத்தவர்களின் வீட்டிலும் இந்த கொடுமை நடந்து கொண்டுதான்  இருக்கிறது !!? தொடர்ந்து பார்ப்போம்!! 




தாம்பத்தியம் தொடரும்........


   

திங்கள், ஜூன் 21

விடை பெறுவோம்

கவிதை....

                                       இருவரும் விடை பெறுவோம்
                                           
                                       பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!
                                           
                                       காதுகளுக்குள் கேட்ட
                                           
                                       உன் குரலின் இனிய ரகசியங்களை, 
                                           
                                       சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...!
                                            
                                       உனது பாடல்களை, 
                                            
                                       கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....!
                                            
                                          
                                       முதன்முதல் நீ தந்த  முத்தத்தை,  
                                            
                                       ஒரு  உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
                                            
                                       எதுவுமில்லை  உன் அடையாளங்கள்!!? 

                                       ஆனால் என்னைக் கொஞ்சி அழைத்த கணங்கள் 
                                             
                                        நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
                                             
                                        பறந்து திரிவதை
                                            
                                        எப்படி கொல்வது...?
                                             
                                           
                                   ************************************


                           உன்னோடு களித்த இனிய கிழமைகள்!
                                          
                                          உன் நினைவில் நான் பைத்தியமானது!
                           
                           நாம் பகிர்ந்து கொண்ட சந்தோசங்கள் !
                                          
                                        அதிசயமாக எழுதிய கவிதைகள்!
                           
                          ஆழமாக எழுதிய, எழுதாத கடிதங்கள்!
                                          
                                        தொலைபேசியில் பேசி களித்த பொழுதுகள்!
                           
                           முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள்!
                                          
                                        தூங்காமல், தூங்கிய இரவுகள்!
                           
                           சேர்ந்து வாழ  நினைத்த நேரங்கள்!
                                          
                                       பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்!
                           
                           அடுத்து என்று உன் வருகை,
                                           
                                       என்று ஏங்கிய நாட்கள்!
                            
                           எல்லாமே எல்லாமே,    இன்று என்னுள்


                                        எங்கோ தொலைந்த வினோதங்கள்...!!

                                                               ******************************
                                                                                            
                                                                                                   படித்ததில் பிடித்தது....!!
          

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...