திங்கள், ஆகஸ்ட் 22

உள்ளத்தில் நல்ல உள்ளம்...! யார் இவர்...?!



நம் வாழ்க்கையில் பல வேறுபட்ட குணமுள்ள மனிதர்கள் நம்மை கடந்து சென்று இருப்பார்கள். அதில் ஒரு சிலர் நம் மனதை அதிகமாக கவர்ந்துவிடுவார்கள். பதிவுலகம் வந்தபின் எனக்கு தெரிந்தவர்கள் வட்டம் விரிந்துகொண்டே செல்கிறது...அதிலும் முக்கியமாக நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு பிறகு, என் அலைவரிசையோடு ஒன்றி போனவர்களை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன் என்பது மிக ஆச்சரியம்.

எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக சில முயற்சிகள் மேற்கொண்டபோது, சேவை உள்ளம் நிறைந்த மிகச்  சிறந்த ஒருவருடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. உடலளவில் ஒரு குறை இல்லை என்றாலும்  மனதில் பல குறைகளை வைத்துகொண்டு வலம் வருகிறோம். ஆனால் நம் போன்றோருக்கு மத்தியில் தான் அற்புதமான, சில நல்ல உள்ளங்களும் வாழ்ந்துவருகின்றன.

உடலில் குறை இருந்தும் தன்னை போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிற மனிதர்களை காண்பது அபூர்வம். அப்படி கால் ஊனமுற்ற ஒருவர் நவீன காலிபர் ஷூ ஒன்றை பிற மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் என்பதை கேள்விப்படும்போது என்னால் பாராட்டாமல் இருக்க இயலவில்லை. அச்செய்தியை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.  

அது என்ன காலிபர் ஷூ ?

கால் ஊனமுற்றவர்கள் அதிலும் போலியோவால் பாதிக்க பட்டவர்கள் 'காலிபர் ஷூ' என்று அழைக்கப்படும் செயற்கை காலை அணிந்து இருப்பார்கள். ஆனால் அது சுகம் அல்ல வலி என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். 

சொல்லமுடியாத நரக வேதனை அது. சுமார் ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தொடையிலும், முட்டியிலும் முட்டி மோதி உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவிற்கு வலி கொடுக்குமாம். தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார இயலாது, இரு சக்கர வாகனம் ஓட்ட இயலாது. அடிக்கடி காலில் ஏற்படும் காயத்தினால், வலி, மருத்துவம் என்று தொடரும் சிரமங்கள் சொல்லி முடியாது...ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு இந்த வலியையும் சுமந்துகொண்டுதான் பல ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். 

நவீன செயற்கை கால்

டாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் கண்டுபிடிப்பு இது என்பது நாம் பெருமைபடகூடிய ஒரு விஷயம்.

இந்த நவீன செயற்கைகால் ஒன்றின் மொத்த எடையே  முக்கால் கிலோ தான். ஷாக்ஸ் மாட்டுவதை போன்று மாட்டிக்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம், வலி ஏதுமின்றி வழக்கமான எந்த வேலையிலும் ஈடுபடலாம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்காயிரம் என்றால் இதன் விலை 15  ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இந்த விலை காரணமாக புதிய செயற்கைகால் இன்னும் பிரபலமாகவில்லை. இதை பற்றி தெரிந்தவர்கள் இதன் அதிக விலையின்  காரணமாக வலியுடன் வாழ்க்கையை தொடருகின்றனர். 



ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு துறையோ பட்ஜெட் காரணமாக பழைய ஷூவையே கொடுக்கின்றனர். வலி இன்மைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றை அதிக விலை காரணமாக வாங்க வழி இல்லாமல் தவிப்பது கொடுமை. 


இந்த வலியை அன்றாடம் அனுபவித்தவர் சென்னையை சேர்ந்த திரு.மின்னல் பிரியன். அதன் பிறகு இவர் நவீன காலிபர் வாங்கி அணிந்து அதன் அருமையை முழுமையாக உணர்ந்திருக்கிறார். இத்துடன் இவர் இருந்திருந்தால் நம்மை போன்ற ஒரு சராசரி மனிதராக மட்டுமாகவே  இருந்திருப்பார். ஆனால் தான் பெற்ற இன்பத்தை, வலி அனுபவிக்கும் பிறரும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இவர் மேற்கொண்ட செயல் தான் மிக ஆச்சர்யம்.


இவர் பெரிய வசதியானவர் இல்லை, ஆனால் தனக்கு தெரிந்தவர்களிடத்தில் பணம் கேட்டு பெற்று இந்த நவீன ஷூவை மாற்றுதிறனாளிகளுக்காக வாங்கி, அதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை இருபது பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய காலிபர் ஷூவுடன் ரோட்டில் நடக்க முடியாமல் யாராவது சென்றால், அவர்களிடம் வலிய சென்று அவரது காலை அளவெடுத்து புது ஷூவை வாங்கி அணிவித்து மாட்டி அந்த புதிய நடையை பார்த்து சந்தோஷபடுகிறார் இந்த மின்னல் பிரியன்...!
இவரது இந்த சீரிய சேவைக்கு மிக பக்க பலமாக இருப்பது இவரது துணைவியார் திருமதி பவானி அவர்கள்.


திரு.மின்னல் பிரியன் மேற்கொண்டுள்ள இதர பணிகள் 

* 'அன்பு கரம்' மாற்று திறனாளிகளுக்கான மாத இதழில் துணை ஆசிரியர். 

* தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் (அரசு பதிவு ) 
மாநில துணை பொதுசெயலாளர்.

* திரைத்துறையில் உதவி இயக்குனர்,பாடலாசிரியர்.   


நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு 


போன வாரத்தில் ஒரு நாள் மதுரையில் இருந்து ஒருவர் மின்னல் பிரியனை தொடர்பு கொண்டு.' எனக்கு இந்த காலிபர் வேண்டும், எவ்வளவு பணம் வேணும்' என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பிரியன் 'ஒரு பைசா கூட வேண்டாம், நான் இலவசமா தருகிறேன்' என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர் திடுக்கிட்டு, 'இல்லைங்க நான் ஒரு பிரபல வக்கீல், பணம் கொடுத்தே வாங்கிக்கிறேன், என் காலை அளவெடுக்க வேண்டியது இருப்பதால் நேரில் வந்து சந்திக்கிறேன்' என்று கூறி சென்னை வந்து சந்தித்து இருக்கிறார். நேரில் பிரியனின் எளிமையை பார்த்து மிக வியந்து, உங்களின் சேவைக்கு முன் நான்,  என் பணம் இரண்டும் எம்மாத்திரம், எனது காலிபருக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன், மேலும் மூன்று பேருக்கு தேவையான காலிபரையும் ரெடி பண்ணுங்கள்,  அந்த செலவு  முழுதும் நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்லி இருக்கிறார் !!

இது தாங்க மனிதம் ! இது போல் உதவி செய்ய மனம் கொண்டவர்கள் நம்மை சுற்றி நிறைந்து இருக்கலாம்...இப்படி அவர்களை ஒருவருக்கு ஒருவர் இணைத்து வைப்பது இறைவனின் செயல் மட்டுமல்ல நம் போன்றோரின் முயற்சியும் தான். 

அதனால் நண்பர்களே ! உங்களிடம் இரண்டு வேண்டுகோள்கள் வைக்கிறேன்


முதல் வேண்டுகோள் 

உங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களிடம் பிரியன் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் கொடுங்கள். தொடர்பு கொண்டு முன் அனுமதி வாங்கிக்கொள்ள சொல்லுங்கள். நீங்கள் செய்ய போகும் இந்த சிறு உதவி, மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்வீர்களா பதிவுலக நட்புகளே ?! 

முகவரி

கவிஞர் மின்னல் பிரியன்
310 A குளக்கரை 3வது தெரு,
துரைப்பாக்கம் 
சென்னை - 97.

தொலைபேசி எண் 
+91 8925373001  
+91 9842293774

இரண்டாவது வேண்டுகோள்

"மாற்றுத்திறனாளிகள் துறை இப்போது முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால் அவர் மனது வைத்தால் அரசின் மூலமாக பழைய ஷூவிற்கு பதில் புதியதை கொடுத்து உதவலாம்.  அதுவரை நாங்கள் எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்" என்று பிரியன் அவர்கள் சொன்னது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. 


அரசாங்கம் இதில் உதவி செய்யும் என்று நம்புவோம் 

மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , சேவை எண்ணம் கொண்ட நல் இதயங்கள் முன் வந்தால் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின்  வாழ்வில் ஒளி ஏற்றலாம். அந்த நாள் ஒன்று நிச்சயம் வரும்...! 


பலரையும் இந்த தகவல்கள் சென்றடையச் செய்யுங்கள்...! என்றாவது, யார் மூலமாவது  முதல்வரின் பார்வைக்கு செல்லலாம். மேலும் நல்ல உள்ளங்கள் இதற்கு உதவி செய்ய முன் வரலாம்...!


பின் குறிப்பு :


1. கவிபேரரசு வைரமுத்து அவர்கள் இந்த சேவையை கேள்விப்பட்டு தம்பதிகள் இருவரையும் அழைத்து பாராட்டி ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளார். மேலும் நிறைய பேருக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்...!

2. நெல்லையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளில் காலிபர் ஷூ தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் டிரஸ்ட் இமெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள்.  எனது டிரஸ்ட் மெயில் ஐடி -  easttrust2011@gmail.com




நன்றி - திரு.மின்னல்பிரியன் 

புதன், ஆகஸ்ட் 3

தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

கணவன் மனைவிக்கான தலையணை மந்திரம்


மந்திரம் என்பது ஆன்மீக வாழ்வுக்கானது என்றாலும் நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு மந்திரம் தலையணை மந்திரம் !! இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளப்படுகிறது.

எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது. 'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா ', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாலோ,இப்படி மயங்கி கிடக்கிறான் '  இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!! ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனப் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?! அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது !?

மருமகளை திட்டுவதற்காகக்  கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ளப்  போட்டுகிட்டா' , 'முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசப்பட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!

ஆண்களே ?!

என்னவோ ஆண்கள்  என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......

ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே.....அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!! அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறிப்  போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள் ! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிதுப்படுத்த மாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள். 

அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி  இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்துக்  கொண்டு நடந்துக் கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.  

மனைவிகளே !


பிறர் கூறும், கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதீர்கள்...அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள் குறிப்பாக  தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.

இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய்  கொண்டிருக்கும் போது...இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிடக்  கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!


ஒரு சர்வே : 


" நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்துக்  கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"  


சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!

சரி இருக்கட்டும்...தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பார்ப்போம்.....


"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம்.  வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துக்  கொள்கிறோம் " 


இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை...சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம் !!



'தலையணை மந்திரம்' இனி இப்படி போடுங்க...!!


* மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!

* அவரது குறைகளை மட்டுமே பெரிதுப் படுத்தி வாதாடாமல் நிறைகளைச்  சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!

*  கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!

* குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!

* எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துக் கொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!

கணவன் தன்னை புரிந்துக்  கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்துக்  கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக்  கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டுப்  பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்துச்  செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்கக் கூடாது...!! 

பிறரின் தேவையற்ற ஆலோசனைகளைக்  கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை  ஏற்படுத்திக்  கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின்பற்றுங்கள்...கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதைக்கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல் !!

                                           ***************************


பின் குறிப்பு 


தாம்பத்தியம் பற்றிய தொடரின் 25 வது பாகம் இது ! இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்துவிடும் என எண்ணி எழுத தொடங்கினேன் . வாசகர்களாகிய உங்களின் அன்பான ஆதரவினால் இது இன்னும் பல பாகங்களைத்  தொடரும் என்று நினைக்கிறேன்...! என்னை தொடர்ந்து எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 


பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

 


செவ்வாய், ஜூலை 19

பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

முன்னுரை :

மரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்பினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
            
மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.

நல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் !

இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.

கருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica).  இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது. 

இம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்... 


   மரம் 

இலை, பூ 

                                                                                                  காய் 

* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும். 

                                                                              மரம் 
                                                                       

                                                    இலை, பூ 
                                  
                                                                            காய்

இம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.

பெரிய பாதிப்புகள் 

நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.

புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி  விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...!!?  

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.  

விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!

அடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.

* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.

* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய ?!!

இன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா ??

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.

கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின்   தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...!

உடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம் 

அறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.

இம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை ! 

நமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது !!?

உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)


கெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் !! 

தலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் !

இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.

மரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்... 

 'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் !! 

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  முழு அளவில் உதவி செய்யவேண்டும்.

கடைசியாக ஒரு கேள்வி

இம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன ??!!

சில ஆதாரங்கள் 

http://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Prosopis_juliflora.html

எனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...


"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து  உதவுவீர்களாக !"




*********************************************









வெள்ளி, ஜூலை 8

ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....!


பல இடங்களிலும்  நெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய செய்திகள் புகைப்படங்கள் ! சந்தோஷ நிகழ்வுகள் நடந்ததை நினைவு படுத்தி பகிர்ந்துகொண்டே இருந்தாலும், போதும் என்ற திருப்தி வரவில்லை. முந்தைய பதிவில் விட்டு போன சில உறவுகளுக்கு இங்கே நன்றி சொல்லிகொள்கிறேன்.

நாய்க்குட்டி மனசு ரூபினா இவங்களை அன்றுதான் சந்தித்தேன்...இப்ப நாங்க இரண்டு பேரும் நெருங்கிய பாசமலர்கள். 

கல்பனா - எனக்கு இந்த சந்திப்பின் மூலம் கிடைத்த அருமையான ஒரு தங்கை.

ஜெயவேல் - இவங்க அண்ணாவின் உடன்பிறந்த அண்ணன்...இவங்க பிளாக் ரொம்பவே வித்தியாசமானது. ஒரு பெண் பிறந்தது முதல் வளர்ந்து திருமணம் முடிந்து , தாயான பின்னும் அதற்க்கு பின்னும் தொடரும் காலம் வரையிலான சடங்குகள் பற்றிய முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறார்.

செல்வா - நிகழ்ச்சியை அதிக கலகலப்பாக்க இவரின் கதை நன்றாகவே உதவியது. அவர் எழுந்ததுமே எல்லோரும் சிரிக்க தொடங்கிடாங்க.எங்கள் கலாட்டாக்களையும் தாண்டி கதையை சொல்லி முடித்தது அவரது திறமைதான். பத்திரிகை துறையில் இவர் பிரகாசிக்கவேண்டும் என்று செந்தில் சார் சொல்லியது மிக பொருத்தம். செல்வாவிற்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.

ஸ்டார்ஜான் - மிகவும் மென்மையாக பேசினார்...உரிமையோடு வீட்டிற்கு அழைத்திருக்கிறார்...போய் பிரியாணி சாப்பிட்டு வரணும் என்று ஒரு பிளான் இருக்கு. 

மற்றும் உறவுகள்  ஜெயந்த், பிரகாஷ், மணிவண்ணன், ஜோசபின் பாபா, கோல்ட்சிவம், அ.மு.ஞானேந்திரன்,சிநேகிதன் அக்பரின் தம்பி, காதர் அவர்கள் 
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
                                                         ***

பதிவுலகத்தில் சில நேரங்களில் நடக்கும் ஈகோ தொடர்பான சண்டைகள் பெரிதும் வருத்தத்திற்குரியது.ஆனால் இது போன்ற சந்திப்புகள் உறவுகளை வளர்க்கும்... பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான கொஞ்ச காலத்தில் போட்டி, பொறாமை,கோபம், பகைமை என்று வளர்த்து மனித மனங்களை கொன்று போட்டு கொண்டிருக்கிறோம். அன்பு இந்த ஒன்றை மட்டுமே ஏன் நாம் எல்லோர் மனங்களில் விதைக்க கூடாது...??! அதற்கு இந்த மாதிரியான சந்திப்புகள் மிக அவசியம் என கருதுகிறேன். 

நானும் சங்கரலிங்கம் அண்ணன், பாபு மூவரும் சந்திப்பு  ஏற்பாடுகள் பற்றி பேசும் போது, யாருக்கும் சின்ன மனவருத்தம் கூட வந்துவிட கூடாது, சந்தோசமாக தொடங்கி கடைசி வரை அப்படியே முடிக்கணும் என்பது தான் முக்கிய நோக்கமாக இருந்தது. சூழ்நிலையை கலகலப்பாக்க எதாவது பேசணும் என்று நானும் பாபுவும் சில பிளான் வேற போட்டோம்.....! (நடுநடுவே கமெண்ட்ஸ் பாஸ் பண்ணனும்...!என்பது போல)  ஆனால் நாங்கள் நினைத்ததை விட பல மடங்கு சிரிப்புகளை அள்ளிகொட்டி எங்களை பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்கள் வந்திருந்த உறவுகள்...! 

பதிவுலக சந்திப்பின் அர்த்தம் வெறும் கேலியும், கொண்டாட்டமும் மட்டும் இல்லை, நாங்கள் இணைந்தால் சேவையிலும் பங்கு கொள்வோம் என்ற ஒன்றை நிகழ்த்தி எங்கள் மனங்களை நிறைத்து விட்டார்கள். 

சந்திப்பு பற்றி பேச்சு வந்ததும் என் கணவர்,  'ஒரு சின்ன சேவை எதுவும் செய்யுங்கள், ஒரு முன்னுதாரணமா' என்றார். என் மனதிற்கு சரி என்று பட்டாலும்  , மத்தவங்க  என்ன  சொல்வாங்க  என்ற தயக்கம் இருந்ததால் சகோதரர் பாபுவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். 'தாராளமாக செய்யலாம் சகோ எல்லோரும் சம்மதிப்பார்கள்' என்றார். அதன் பின் அண்ணனிடம் சொன்னோம், எங்கள் அலைவரிசை தான் ஒன்றாச்சே...! சந்தோசமாக உத்தரவு கொடுத்தார். சந்திப்பின் போது உறவுகளிடம் சொன்னார், சம்மதம் என்று அனைவரும் கைகளை தூக்கி ஆதரவு தெரிவித்தனர். வாரி வழங்கினர்.

நெல்லையப்பர் சுவாமி அன்பு ஆஸ்ரமம் மற்றும் கருணை இல்லத்தில்

இதோ இன்று 35 குழந்தைகளின் மனங்கள் உற்சாகத்தில்...! அக்குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் பெரிய சொத்து புத்தகங்கள் வைக்கும் பேக், அந்த விருப்பம் நிறைவேறிய சந்தோசத்தில், இரு கை நீட்டி பேக்கை பெற்றதும் 'நன்றி அம்மா' என்று தழுதழுத்த குரலில் சொன்ன அக்கணத்தில் மீண்டும் ஒருமுறை  தாயாய் பிறந்தேன் ! பளபளக்கும் விழிகள் ! அங்கும் இங்கும் அலைபாயும்  கருவிழிகள் ! என்னிடம் தனிமையில் எதையோ சொல்ல துடித்தது போல் தோன்றியது...அண்ணனும் சித்ராவும் அங்கிருந்து சென்ற பின்னரும் என்னால் விடைபெற இயலவில்லை. 'அண்ணா நீங்கள் கிளம்புங்கள் நான் கொஞ்சம் நேரம் கழித்து வீட்டுக்கு போய் கொள்கிறேன்' என்றேன். என் உள்ளத் தேடல் நன்கு தெரிந்தவர் என்பதால் ஒரு மௌன புன்னகையில் விடைபெற்று கிளம்பிவிட்டார்.

அங்கிருந்த ஆசிரியையிடம் இயல்பாய் பேசிக்கொண்டே குழந்தைகளின் அறைகள் முழுவதையும் சுற்றினேன். தன் நிலைகளை என்னிடம் சொல்லி அமைதி கொண்டன அறைகள் !  என்ன செய்யமுடியும் என்னால் ? நலம் விசாரிக்கவும், ஆதங்கபடவும், வருத்தப்பட்டு கடந்து செல்ல மட்டுமே பழகி போன சராசரி மனித மனம் !

நான் அங்கிருந்த சமயம் ஒரு தந்தை தன் மனைவி இறந்து விட்டாள், பெண் குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லை, படிக்கவும் வைக்கணும் என்பதால் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்" என்றார்.   விவரங்களை எல்லாம் குறித்து வைத்துகொண்டார்கள்...வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் இரு குழந்தைகளையும் ஒப்படைத்தார் தலைமை ஆசிரியை...! அவர்களின் தந்தை வெளியே சென்றதும் நான் குழந்தைகளின் கைகளை பிடித்து 'உன் பேர் என்னமா' என்றேன், மழலைக்குரலில் 'வெங்கடலட்சுமி' என்றாள். 'சரி வீட்ல யார் எல்லாம் இருக்காங்க' கேட்டேன். அவளும் உற்சாகமாக 'செவப்பு கோழி, கருப்பு குட்டி நாய் ம்...அப்புறம் எங்க அம்மா...!?' திடுக்கென்றாலும் மறுகணம் சுதாரித்துக்கொண்டேன் !

வறுமை ! இதன் காரணமாக உயிருடன் இருக்கும் தாய் சாகடிக்கபட்டாள். படிக்க வைக்க பொருள் இல்லை, உணவு கொடுக்க உணவு இல்லை என்ன செய்யும் இந்த பிஞ்சு குழந்தைகள். சோறு போட்டு படிப்பு சொல்லிகொடுத்து அங்கேயே பாதுகாப்பாய் இருப்பார்கள் நம் பிள்ளைகள் என்று கொண்டுவந்துவிட்டு போகிறார்கள். அரசு பள்ளியில் சேர்த்தால் கௌரவம் இல்லை என்று எவ்வளவு பணம் கேட்டாலும் தனியார் பள்ளியில் சேர்த்து பெருமை பட்டுகொள்கிறோம். என் போன்ற பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் இது போன்ற இல்லங்களுக்கு சென்று வரவேண்டும்.

பேசிகொண்டிருந்தபோது ஒரு வயதான அம்மா வந்தாங்க, தன் மகனின் நினைவுநாள்  வருகிறது அன்று இங்கே அன்னதானம் செய்யவேண்டும் என்று. இவர்களும் சரி என்று தேதி குறித்துவைத்து கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்கள். இது போன்று மாதத்திற்கு பத்து விருந்துகள்(அன்னதானம்) உண்டாம். அன்று குழந்தைகள் அருஞ்சுவையுடன் உண்டு மகிழ்வார்களாம். நல்ல விஷயம் தான். ஆனால் என் மனம் வேறு விதமாக சிந்திக்க தொடங்கியது.

ஒரு நாள் அருஞ்சுவை மறுநாள் சாதாரண உணவு என்னும் போது மீண்டும் அத்தகைய உணவு எப்போது கிடைக்கும் என்று ஏங்குவார்களே ? அந்த ஏக்கம் பெரியவர்களான போதும் மனதில் தங்கி இருக்குமே...?! இத்தகைய மனநிலை நல்லதா ? கிடைத்த போது ஆர்ப்பரிப்பதும், இல்லை என்ற போது துவண்டு ஏக்கத்தில் கழிவதும் சரியா ?

தங்களின் ஒரு மனத்திருப்திக்காக செய்யகூடிய இந்த ஒருநாள் நிகழ்விற்கு பதிலாக அந்த பணத்தில் தேவையான அரிசி, மளிகைபொருட்கள் அல்லது வேறு அத்தியாவசியமான ஒன்று இவற்றை வாங்கிகொடுக்கலாம். பத்துநாள் விருந்தளிப்பவர்கள் அனைவரும் இதுபோல் கொடுக்கும் போது அந்த மாதந்தோறும் ஓரளவிற்கு நல்ல சரிவிகிதமான உணவை அவர்கள் உண்ண வழி கிடைக்கும். என் மனதிற்கு தோன்றியதை அவர்களிடம் சொன்னபோது,  'நீங்கள் சொன்ன யோசனை நல்லா இருக்கு, ஆனா டோனர்கள் சம்மதிக்க மாட்டார்கள், அன்னத்தை(உணவை) தானமாக கொடுத்தால் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும் என்பார்கள்' என்றார். (கவனிக்க : அன்னதானம்  செய்வது  தவறு  என்று  இங்கே  நான்  குறிப்பிடவில்லை...!)

சிறு குழந்தைகளிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் பகிர்ந்த சில வார்த்தைகள் எனக்கு இப்படி எண்ண வைத்தது !

இதுபோல் பிறந்த நாள், நினைவு நாள் அன்று ஒருநாள் மட்டும் அன்னதானம் செய்யும் எனக்கு தெரிந்தவர்களிடம் இனி இது பற்றி சொல்லணும் என்று நினைத்து கொண்டு அங்கிருந்து விடைபெற்று வந்துவிட்டேன்.        

தலைமை ஆசிரியரிடம் பேசிகொண்டிருந்த போது நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்...! இன்னும் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கான வேலைகளை செய்வதற்கான முயற்சிகளை சங்கரலிங்கம் அண்ணன் எடுத்து வருகிறார்.   

பதிவர் சந்திப்பினை  தொடர்ந்து கருணை இல்லத்துடன் ஏற்பட்ட பிணைப்பு  வாழ்வின் மீதான பிடிப்பை இன்னும் அதிகபடுத்தி இனி கழியும் நாட்களை அர்த்தமுள்ளதாக்க புதிய  உத்வேகத்தை கொடுத்தது. 

தினம்...
எழுகிறோம்
உண்கிறோம்
சம்பாதிக்கிறோம்
வளர்கிறோம்
வளர்க்கிறோம்
வாழ்கிறோம்
முடிக்கிறோம் 
முடிகிறோம் !
  
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கை...ஆனால் ஒரு சிலர் வாழ்ந்து முடித்த(முடிந்த) பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எம் ஜி யார் அவர்கள் இறந்து 23 வருடங்கள் கடந்தும் இன்றும் பல மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் சமாதிக்கு தினம் வந்துபோகும் மக்களை பார்த்தால் தெரியும். அவர் கையில் கட்டி இருந்த கடிகாரத்தின் முள் இன்னும் ஓடிகொண்டிருக்கிறது என்று சமாதியின் மேல் காதை வைத்து கேட்கிறார்கள், ஒலி கேட்டதாக சொல்லி பரவசம் அடைகிறார்கள். அவர் பத்து வருடம் தொடர்ந்து அரசியலில் கோலோச்சினார் என்பதற்காக அல்ல அந்த கூட்டம்..... மக்கள் மேல் அவர் வைத்திருந்த அன்பு, பாசம், கொடுத்து சிவந்த அவர்தம் கைகள் !!    

சேவை என்று செய்யமுடியவில்லை என்றாலும், சக மனிதரிடம் அன்பை பரிமாறுவோம். சுயநலம் மிகுந்து போன இன்றைய சூழலில் அடுத்த வீட்டினரிடம் ஒரு 'ஹாய்' சொல்ல கூட அதிகம் யோசிப்பவர்களாக இருக்கிறோம். நாம் கொஞ்சம் மாறினால் என்ன...?! முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துகொள்ளாமல், வழியில் எதிர்படும் மனிதர்களை குறைந்தபட்சம் ஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....! 

"இறந்த பின்னும், ஒரு சில மனங்களிலாவது நாம் வாழ்வோம்  நினைவுகளாய்...!!"

                                ***********************************************

"மரத்தை வெட்டி, மண்ணை காப்பாற்றுவோம் "  என்ன இப்படி சொல்றாங்க என்று யோசிக்கிறீங்களா...? அடுத்த பதிவில் இதற்கான பதில் கிடைக்கும்.  மிக முக்கியமான ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.


                                                                   *********






இன்று கழுகில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் !!

திங்கள், ஜூன் 27

கழுகு பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?!



கழுகு என்ற ஒரு விழிப்புணர்வு தளம் இருப்பது பலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அந்த சிலருக்காக எனது இந்த பதிவு. பொதுவா விழிப்புணர்வு அப்படின்னு அடிக்கடி சொல்றோமே அந்த பொருள் தான் என்ன ? சிலருக்கு இந்த சொல்லே ஒரு சலிப்பை கொடுக்கிறது, இதன் பொருள் புரியாமலேயே !!  சிம்பிளா சொல்லணும் என்றால் விழிப்புணர்வு என்பது எச்சரிக்கையாக இருப்பது, எதை பற்றியும் அதிக விவரங்களை தெரிந்து வைத்துகொள்வது, தெரியாதவர்களுக்கு எடுத்துசொல்லி புரியவைப்பது.

உதாரணமாக ரத்ததானம் செய்ய சொல்லும் போது மக்களிடம் ரத்தம் கொடுக்கணும் என்று பொதுவாக சொல்கிறோம் என்றால் 'ஐயையோ ரத்தம் எடுத்தா நான் என்ன ஆவேன்' என்ற அச்சம் வருவது மக்களின் பொது இயல்பு. ஆனால் அவர்களிடம் ரத்தம் எடுத்தா ஒன்றும் ஆகாது, மிக குறைந்த அளவு  தான் எடுப்பாங்க, அதுவும் குறிப்பிட்ட நாளில் மீண்டும் ஊறி விடும், என்று கூடுதல் தகவல்களையும் சேர்த்து எடுத்து சொன்னா அதற்கு பெயர் தான் விழிப்புணர்வு. 

ஒரே வரியில் சொல்லணும் என்றால் 'உணர்வுகளை விழித்தெழ வைப்பது' 

இத்தகைய ஒரு அளப்பரிய செயலை தான் கழுகு செய்து கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல், அறிவியல்,தனி மனித ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு,  இப்படி பலவற்றிலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதுகிறார்கள் கழுகு தோழமைகள்.
    
யார் நடத்துகிறார்கள் ?

துபாயில் இருக்கும் தேவா அவர்கள், சென்னையில் இருக்கும் விஜய் மற்றும் சௌந்தர் இவர்கள் மூவரும் சேர்ந்து தொடங்கினார்கள். இப்போது  முப்பதுக்கும் மேற்பட்ட  தோழமைகள் கழுகுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் ...கட்டுரைகள்  வடிவமைப்பது , செய்திகளை சேகரித்து  தருவது , விவாதங்களை முன்னிறுத்தி  நடத்தி  செல்வது, பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது, போன்ற பலவேறு வேலைகளை பலரும் பிரித்து வைத்துகொண்டு செயல் படுத்தி கொண்டு வருகிறார்கள்.இத்தனை வேலைகளையும் அவர்கள் தங்களின் சொந்த அலுவலக பணிகளுக்கு மத்தியில் இந்த சமூகத்திற்காக மேற்கொள்கிறார்கள் என்பது பாராட்ட படவேண்டிய ஒன்று.இவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது என்ற பெரிய பொறுப்பான வேலையை தேவா அவர்கள் திறம்பட செய்துகொண்டு வருகிறார்.   

ஏன் தேவை ?

விழிப்புணர்வு நமக்கு தேவையானதா என்று பார்த்தால் அது நிச்சயம் நமக்கு தேவை, ஆனால் சிலர் சொல்லலாம் நான் விழிப்புணர்வுடன்  தான் இருக்கிறேன் என்று..... ஆனால் அது நிச்சயம் போதுமானதாக இருக்காது.

நம் சமூகம் பழமை பற்று மிகுந்த ஒன்று, சாதீய எண்ணமும், ஆழமாக பதிந்த தேவையற்ற மூட நம்பிக்கைகளும் வாழ்வை பற்றிய பயம், கவலையும் சேர்ந்து சாகாமலேயே செத்தவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்பது தான் இன்றைய நிதர்சனம்.

சிந்தனையை தெளிவடைய செய்யும் திருக்குறளும், மற்றும் பல இலக்கிய நூல்களும் இருந்தாலும் அது எல்லோரையும் சென்றடைவது இல்லை...ஏன் படித்தவர்களே அதன் வழித்தடம் ஒற்றி நடக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அவரவருக்கு தனிப்பட்ட கொள்கைகள் , கருத்துக்கள் ! படித்தவர்கள் நிலையே இது என்றால் படிக்காதவர்களை பற்றி என்ன சொல்வது. மக்கள் முன்னேற்றத்துக்கு ஏற்ற கொள்கைகளையும் கருத்துக்களையும் வகுப்பது யார் ? அதை  மக்களிடம் கொண்டு செல்வது யார் ? 

விழிப்புணர்வு அவசியம் 


* நமது அடிப்படை உரிமைகள் எவை என்பதை பற்றி இங்கே எத்தனை பேருக்கு சரியாக தெரியும்.

* சட்டங்கள் பற்றிய முழு தெளிவு இருக்கிறதா ?

* அரசியல் பற்றிய அடிப்படை அறிவு ?

* பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்ன, அதற்கு தீர்வு என்ன, அதை பற்றி பெண்ணுரிமை இயக்கங்கள் என்ன சொல்கிறது ? என்ன செய்கிறது ?
இப்படி நிறைய ????

சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பல ஆகியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் 'ஒட்டு போடுங்கள்' என்று தெரு தெருவாக அறிவிப்பது வருந்தகூடிய ஒன்று. காரணம் ஒட்டு போடுவதின் அவசியத்தை, விழிப்புணர்வை  மக்களிடம் சரியான முறையில் இன்னும் கொண்டு செல்லாதது தான்.

ஊத வேண்டிய சங்கை ஊதினால் போதும் , விடிகிற போது விடியட்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு விழிப்பாவது ஏற்படட்டுமே என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க பட்டது தான் கழுகு என்கிற தளம். 

மேடை போட்டு பிறர் பாராட்ட வேண்டும், பரிசு வழங்க வேண்டும் தம் பெயர் பிரபலம் அடைய வேண்டும் என்பது போன்ற சுயநலம் சிறிதும் இன்றி விழிப்புணர்வு என்ற ஒன்றே லட்சியம் . யார் என்ன சொல்வார்கள், மாற்று கருத்து வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி ஒடுங்கி முடங்குவதை விட உண்மை எதுவென்று காட்டிட துணிந்து செய்பவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலர் சேர்ந்து சீரிய நிலையில் தெளிவான சிந்தனையோடு சிறப்பாக கால் ஊன்றி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் கழுகின் சிறகை வலுபடுத்துவது நல் மனம் படைத்த ஒவ்வொருவரின் கடமை. மீளா தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் அறியாமையில் ஊறிய மக்களை / சமுதாயத்தை எழுப்புவது என்பது எளிய காரியம் அன்று . 

தமிழன் நாம் என்பதே மறந்து பிறர் சொல்லும் போதுதான் 'ஓஹோ நாம் தமிழர்' என்று விழித்து எழுகிறான்.  ஏதோ ஒரு போராட்டம் புரட்சி திடிரென்று வரும் போது தான் 'தன் இனம் இது' என்பது போல உணர்வு கொள்கிறான். தன் இனத்தை நினைவு படுத்தவே இது போன்ற நிகழ்வுகள் தேவை படுகிறது என்னும் போது விழிப்புணர்வு எவ்வளவு அவசியமாகிறது என்பது புரியும். 

விழிப்புணர்வு வேற சமூக சேவை வேற !

விழிப்புணர்வு வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா களத்தில் இறங்கி போராட வேண்டும் என்ற ஒரு வாதம் கழுகின் முன் வைக்கப்பட்டது. உண்மைதான் களத்தில் இறங்கி போராடுவதின் மூலம் மக்களை உடனே சென்று அடைய முடியும். ஆனால் தொடர்ந்து விழிப்புடன் வைத்துகொள்வது மிக அவசியம். உதவி செய்ய ஆள் இருக்கிறது என்று சோம்பி திரிய கூடிய மந்த புத்தி படைத்த மனித இனம் தானே நாம், மனிதனின் ஆழ்மனதை தட்டி எழுப்பவேண்டும்.....அதில் நல்லவைகளை ஆழமாக பதிய வைக்கவேண்டும்.....இதை செய்வது தான் விழிப்புணர்வு.  

இரண்டும் ஒன்று போல் பாவித்து குழம்பி கொள்பவர்கள் பலர். விழிப்புணர்வை  யார் வேண்டும் என்றாலும் எங்கே இருந்தும் ஏற்படுத்த முடியும்...அதற்கு தேவை ஆர்வமும், பல துறைகளை பற்றிய தெளிவும்,புரிதலும் தான். ஆனால் சமூக சேவை என்பது களத்தில் சென்று செயல்படுவது. கண்முன் ஒருத்தர் கஷ்டபடுகிறார் என்றால் என்ன பிரச்சனை பண உதவியா, வேற என்ன தேவை என்று பார்த்து செய்து கொடுப்பது. இது அப்போதைய உடனடி தீர்வாகும். அத்துடன் நின்றுவிடும். ஆனால் விழிப்புணர்வு என்பது சம்பந்த பட்ட மனிதனுடன் நின்றுவிடாமல் காலத்திற்கும் அவனது சந்ததிக்கும் ஆலோசனை சென்று சேரும். புத்தியை தெளிவடைய வைத்துவிட்டால் போதுமே, அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான், பிறர் தயவு தேவையில்லை. இதை தான் கழுகு அமைதியாக செய்து கொண்டிருக்கிறது. 

"குளிரில் நடுங்கும் பிச்சைகாரனுக்கு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்வெட்டர் வாங்கி கொடுப்பது சமூக சேவை என்ற கருத்தினை கொண்டால்.....

பிச்சைக்காரனே உருவாகாமல் இருக்க எல்லா சாத்தியக்கூறுகளையும் மனித மூளைக்குள் விதைப்பதற்கு பெயர் தான் விழிப்புணர்வு.....!" 
                                                                                                                                (நன்றி-தேவா)


மனித மனம் என்றும் நிறைவு அடைவதில்லை பொருளாதார தேவை மற்றும் வேறு சில காரணங்களால்.  ஆனால் ஓரளவு தன்னிறைவு அடைந்த மனிதன் முடிந்தவரை சில விழிப்புணர்வு விதைகளையாவது தூவி விட்டு செல்லலாம், பின் நீர் ஊற்ற வேறு யாரேனும் வருவார்கள்.....சூழல் சரியாக இருக்கும்பட்சத்தில் தன்னால் முளைத்துவிடகூடும்...!!

விழிப்புணர்வு விதைகளை மனங்களில் தூவும் வேலையை இப்போது செய்துகொண்டிருக்கும்   அதே நேரம், தேவைபட்டால் களத்தில் இறங்கி போராடவும் கழுகு தயங்காது.....! அதற்கு வேண்டிய போராட்டகுணம், தைரியம், தோழமைகளின் பலம் அனைத்தும் ஒருங்கே தன்னகத்தே கொண்டிருக்கிறது.....திறக்கப்பட வேண்டிய கதவுகள்  தட்டிபார்த்தும் திறக்கவில்லை என்றால் உடைத்து திறக்ககூடிய ஆற்றல் கொண்டவர்கள் தோழமைகள்...

உயரிய திட்ட வரைமுறைகள் 

நோக்கம் இருக்கிறது என்பதற்காக ஒழுங்கற்ற விதத்தில் ஏனோ தானோ வென்று தளம் செயல் படவில்லை. நேர்த்தியாக, சீராக, கட்டுபாடுடன், ஒழுங்குடன், தங்களுக்கு என்ற விதிமுறைகளுடன் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இந்த தளத்திற்கு குழு என்ற ஒரு அமைப்பும், மீட்டிங் ஹால் என்ற மற்றொரு முக்கிய அமைப்பும் இயங்கி வருகிறது. 

கழுகின் முக்கிய உறுப்பினர்கள் 

தேவா - தீராத சமூக முன்னேற்ற வேட்கை கொண்டவர். இருப்பது கடல் தாண்டி என்றாலும் நினைவுகளால் தாய்நாட்டை ஒரு கணமும் பிரியாதவர். நாட்டின் மீது கொண்ட அதிக பற்றின் காரணமாகவே இந்த தளத்தை உருவாக்கி நடத்திக்கொண்டு வருகிறார். 

சௌந்தர் - மிக முக்கிய பங்கு இவரது...வெளிநாட்டில் இருந்து தேவா  இயக்க இவர் இங்கிருந்து கழுகின் பல பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

கொக்கரக்கோ - சௌமியன் பல துறை சம்பந்தப்பட்ட விசயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். கழுகில் இவரது பணி மிக அதிகம்.

சமீர் அஹமத் - கழுகின் செயல்கள் அனைத்திலும் பக்க பலமாக இருக்கிறார்.

மகேஸ்வரி - பல கட்டுரைகள் எழுதி தருவதும், விவாதங்களில் கலந்துகொள்வதும் என்று உற்சாகமாக செயலாற்றி வரும் இவர் கழுகின் இன்றியமையாத தோழமை.  

ஆனந்தி - விவாதங்களை உற்சாகபடுத்துவதில் இவங்க ஸ்டைல் தனி. தினம் திருக்குறள் சொல்லி அன்றைய பொழுதை தொடக்கி வைப்பவர்.

எஸ்.கே - எஸ்.கே குழுவின் திட்டமிடுதலில் பங்கெடுத்துக் கொள்வதோடு, வலுவான விவாதங்களை முன்னெடுத்து வைப்பார். மேலும் பிற வலைத்தளங்களில் வெளி வந்த நல்ல பதிவுகள் மிகைப்பட்ட பேரால் வாசிக்கபடாமல் இருப்பதை குழுவினருக்கு அடையாளம் காட்டும் பணியும் செய்து வருகிறார்.

கல்பனா - இவர் கழுகின் விவாதங்களில் ஆர்வமுடன் கலந்து தனது கருத்துக்களை எடுத்துவைக்க தவறமாட்டார்.

இன்னும் பல இளம்புயல்கள் ஆர்வமாக பங்கேற்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள்.முப்பது பேரை பத்தியும்  சொன்னா பதிவு தொடர்தான் போட வேண்டி வரும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...!!

இவர்கள் ஒருவருக்கும் ஒருவர், எந்த உறவும் இல்லை என்றாலும்  ஒரு குடும்பம் போல் செயல் பட்டுவருவது வரவேற்க்கதக்க ஒன்று.

குழு 

குழுவில் இணைய விரும்புவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது...
அதை ஏற்றுகொண்டவர்கள் இணைந்து கொள்ளலாம். விவாதத்திலும் கலந்து கொள்ளலாம், கருத்து வெளியிட இயலாதவர்கள் நடக்கும் விவாதங்களை மெயிலின் மூலம் அறிந்துகொள்ளலாம். முதலில் நமக்கே பல விசயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கும், அதை சரி படுத்திக்கொள்ளவும், ஒரே நேரத்தில் பல துறைகளை பற்றிய செய்திகளை தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும். 

இதனை பற்றி இன்னும் விவரங்கள் தேவை என்றால் கீழே  உள்ள சுட்டியை கிளிக்கவும். 


எல்லோருக்கும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளுக்குள் இருக்கும், ஆனால் வாய்ப்பு இல்லை என்ற ஒரு நிலை இருந்தால் தங்களது வேலை நேரத்தில் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இத்தள கட்டுரையை படித்து இவர்களை உற்சாக படுத்துங்கள். கழுகு இன்னும் அதிக முனைப்போடு செயல்பட உதவியாக இருக்கும்.  இது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே, உடனே கழுகை தொடருங்கள்...கட்டுரைகளை வாசித்து உங்கள் குறைகளையும் நிறைகளையும் வெளிப்படையாக சொல்லுங்கள்.  கழுகு உங்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...!

பல நல்ல பதிவுகளை படித்து நம்மை இன்னும் அதிகமாக தெளிவு படுத்திகொள்வோம்...கழுகு தளத்தில்  இணையுங்கள். கழுகின் சிறகை வலுபடுத்துங்கள்......!! 



ஞாயிறு, ஜூன் 26

இன்று ஒன்று கூடுவோம் தமிழர்களே ! வாருங்கள்...



சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். 

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம். நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!







மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.



மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .

கோவையில்,

இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.


டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!

நன்றி!

சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!




எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு !
பாரதிதாசன்


நன்றி - 'ஸ்டார்ட் மியூசிக்!' ராம்சாமி 


சனி, ஜூன் 25

மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு கடிதம்...!






ஜாக் !

எப்படி இருக்கிறாய்...? நிச்சயம் ஆனந்தமாக இருப்பாய் இந்த உலகில் இருந்ததைவிட ! இன்று உனது நினைவு நாளாம்...உலகமே நினைத்து கொண்டாடுகிறது..... நான் மறந்தால்தானே இன்று உன்னை நினைக்க !! உன் குரல் ஒலிக்காத நாள் என்று ஒன்று இல்லை என் வீட்டில் !




என்று என் மனதில் நுழைந்தாய் இசையின் வடிவில் ?! தேதி நினைவு இல்லை, வயது நினைவு இருக்கிறது.....எனது 11 வது வயதில் என் அண்ணன் முதலில் உன் குரலை எனக்கு அறிமுகம் செய்தான். முதலில் சாதாரணமாகக் கேட்கத் தொடங்கிய நான், எப்படி இன்றுவரை உன் இசையை விட்டு மீள இயலாமல் அதையே சுற்றி வருகிறேனே அறியேன். அச்சிறு வயதில் மொழி புரியாமல் டிக்ஷ்னரியின் கையுமாக அலைந்த நாட்கள் இன்றும் இனிக்கிறதே... வார்த்தை புரியவேண்டும் என இரவின் தனிமையில் கண்மூடி, கூர்ந்து கேட்டு நோட்டில் குறிப்பெடுத்து வைத்ததை இன்று நினைக்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கிறது.....!! புரியவில்லை என்றாலும் நானாக ஒரு அர்த்தப்படுத்தி பாடிபார்ப்பேன் ! 

தோழிகள் 'ஏன் உனக்கு இங்கே உள்ள யார் பாட்டும் பிடிக்காதா? பெரிசா இங்கிலீஷ் பாட்டு கேட்குற' என்று கேலி செய்த போதெல்லாம் எனது ஒரே பதில் 'எனக்கு பிடிச்சிருக்கு'. மொழி புரியாததால் அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற தேடலில் அதிகம் பிடித்துவிட்டதோ என்னவோ ! தெரியவில்லை. வார்த்தையின் பொருள் புரியத்தொடங்கியதும், வேகமான ஆக்ரோசமான இசையை ரசிக்க தொடங்கி,  மனதை நெகிழவைக்கும் உன் குரல்... கேட்க கேட்க... மீண்டும் மீண்டும்... மிக சரியாக உனக்குள் விழுந்து கொண்டே இருந்தேன்...!

அவ்வபோது உன்னை பற்றி வரும் செய்திகள், துணுக்குகள், படங்கள்  சேகரித்து என் அறையின் அலமாரி அலங்கரித்தேன்... அறையின் சுவரை உன் முழு உருவபடத்தால் நிறைத்தேன்...!

எனக்காக என் அண்ணன் தோட்டத்தில், மாமரத்தில் ஒன்றும் , கொய்யா மரத்தில் ஒன்றுமாக இரண்டு பெரிய பானைகளை கட்டி அதில் ஸ்பீக்கர் வைத்து உன் பாடலை ஒலிக்கச் செய்வான். மரங்களுக்கு நடுவே ஊஞ்சலில் அமர்ந்து இந்த உலகையே மறந்து கண்மூடி இருப்பேனே...அந்த இனிய நாள் இன்று நினைவுக்கு வந்து வதைக்கிறதே !  

இசையின் மூலம் ஒருத்தரை வழி நடத்த முடியுமா ? 
சாத்தியமாக்கியது 
உன் இசை ! 
உன் குரல் ! 
உன் புன்னகை ! 
உன் பாடல் வரிகள் !

உனக்கு தெரியாது எதிலெல்லாம் என்னை நேர் படுத்தினாய் என்று !! எதை சொல்வேன்... ஒவ்வொன்றாய் சொல்ல என் ஆயுள் போதாது...இன்று வரை சோர்வு,மனஅழுத்தம்  என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் கை கொடுத்து தூக்கி நிறுத்துகிறதே உன் குரல் ! 

என்ன மனிதன் நீ !!?

பதினோரு வயதில் மேடை ஏறிய நீ சிறுவயதில் அனுபவிக்கவேண்டிய சந்தோசங்கள், குறும்புகள், விளையாட்டுகள்,நண்பர்கள், படிப்பு எல்லாம் இழந்தாய். அந்த இழப்பின் வலி உணர்ந்ததாலேயே  பல கோடி மதிப்பில் பூங்கா அமைத்து சிறுகுழந்தைகளுக்கு அனுமதி இலவசம் என்றாய். உன்னை சுற்றி குழந்தைகள் வலம் வந்தார்கள், ஒன்றாக விளையாடி, ஒன்றாக உணவருந்தி ஆனால் இதை இந்த கேவலமான உலகம் படுகேவலமாக பேசியது..... நீ ஒரு வளர்ந்த குழந்தை என அறியாமல்...! ஒரு உற்சாகத்தில் ரசிகர்கள் பார்க்கட்டுமே என உன் குழந்தையை மாடி ஜன்னலில் தூக்கி காட்டினாய் ...உடனே அய்யோ என்ன இது கொடுமை என அலறியது, கண் முன் அடுத்தவன் குருதி கொட்டுவதை கண்டும்காணாமல் போகும் மனித நேயமற்ற உலகம்...!! பிரபலங்கள் ஆக இருப்பது சாபகேடோ ?!! அனுபவித்தாய் மிக கொடுமையாக !!

தோல் நோயால் உன் மேனி வெள்ளையாக நிறம் மாறியதையும் கதை கட்டியது வேறுவிதமாக. ஒரு முறை டிவி பேட்டியின் போது நீயாக இதை சொன்னபோதும் நம்பவில்லை. நீ விண்ணுலகம் சென்ற சில மாதங்களுக்கு பின் ஒருநாள் உன் மகன் கடலில் நீந்தி விளையாடும் போது அவனது முதுகில் அதே தோல் நோய் சிறு வட்டமாக வந்திருப்பதை பார்த்த அவனது பாட்டி...உன் தாய் ஒரு புன்னகையுடன் பெருமூச்சுவிட்டாளாம் !! 'இரண்டு உண்மை உணர்த்தபட்டுவிட்டதே, என் மகனுக்கு இருந்தது தோல் நோய், இவன் அவனது வாரிசு (மகன்) என்பதையும்..... இனியாவது நம்புமா இந்த உலகம்?' என்று கண்கலங்கினாள். நான் இங்கே கதறினேனே...'குழந்தைகள் அவனுடையது அல்ல' என்று கூச்சல் போட்ட அநாகரீக கூட்டத்திற்கு உன் தாயின் கண்ணீர் சென்று சேர்ந்து இருக்குமா !


எப்படி இத்தனை அசிங்கங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டாய், பொறுத்தாய் ?!! என்ன மனுஷன் டா நீ ! இல்ல   இல்ல நீ மனிதன் இல்லை 'மனிதனில் புனிதன்' இந்த கோமாளி கூட்டத்தில் தப்பி பிறந்தவன் நீ..... இறந்த பின்னும் விட்டார்களா, மென்று தின்று பணம் பார்த்தன பிணம் தின்னும் கழுகுகள் !  எந்த பிரச்னையையும் ஒரு மர்ம புன்னகையால் கடந்து செல்லும் உன் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையே.....!

Heal The World !

உலகம் ஆயிரம் சொன்னாலும் அதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இசையில் உன்னை மூழ்கடித்து கொண்டாய்.....எங்களையும் மூழ்க வைத்தாய் ! ஒரு பாட்டில் தாலாட்டினாய், ஒரு பாடல் காதோரம் சிலிர்க்க வைக்கும்...ஒரு பாடலில் மரத்தை வெட்டாதே என்பாய்...சண்டை போடாதீர்கள் என வேண்டுகோள் விடுவாய்...இன்னும் ஏராளம் ஏராளம்......அனைத்திலும் உன் மாசற்ற  உள்ளம் தெரியும், 'சக மனிதரை நேசி' சொல்லி கொடுத்தாய்.....! இந்த ஒரு பாடல் போதும் உன் மனதை சொல்ல.....! 

இரு வருடங்களுக்கு முன் வரை இந்த பாடலை கேட்டால்  உற்சாகமாக கண்மூடி ரசித்து மகிழ்வேன் ! நீ இல்லாத உலகில் இந்த நாட்களில் இப்பாடலை கேட்கும் போது கண்களில் அருவியாய் பெருக்கெடுக்கும் கண்ணீர் ! காரணம்  அறிவாய் நீயே.....என் ஆறுதலின் தேவனே !! தொலைத்துவிட்டோம் உன்னை !!

'Make a little space to make a better place'




Michael Jackson sang, the world hoped.
Michael Jackson danced, the world smiled.
Michael Jackson laughed, the world laughed.
Michael Jackson died, the world cried, but sang, danced, laughed because we know that's what he would've wanted.
Michael Jackson was Michael Jackson, and always will be.


They Don't Care About Us !

என்னை சிரிக்கவைத்து  கொண்டிருக்கும் உனக்காக இந்த பாடல்.... என்ன அசத்தல்  நடனம் ! என்ன உற்சாக துள்ளல் ! ஸ்டைல் !ஸ்மைல் ! விழுந்ததே தெரியாமல் எழும் நளினம் ! நீ தான் நீயே தான் நீ ஒருவன் தான் ! ஒருவரும் உனக்கில்லை ஈடு !


எத்தனை நடன கலைஞர்கள், எத்தனை இசை கலைஞர்கள் உன்னால் உருவானார்கள்...இன்னும் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.....உன் சாயல் இல்லாத இசையும், நடனமும் இல்லை என்றாகிவிட்டது ஜாக் !
எத்தனை பேரின் வாழ்வை உயர்த்தி இருக்கிறாய்.....! இன்னும் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் உன்னை வைத்து, உன் இசையை வைத்து !! அவர்களின் மனம் நிச்சயம் உன்னை வாழ்த்தும் !

இந்த ஜூன் மாதம் எனக்கு மறக்ககூடாத ஒன்றாகிவிட்டது...வருடம் தோறும் இந்நாளில் உனக்கு நான் எழுதும் கடிதம் தொடரும் என் உயிர் உள்ளவரை !

என் வாழ்வின் இறுதிவரை உன் இசை என்னைவிட்டு அகலாது.....! உன் ரசிகர்களை பொறுத்தவரை நீ இன்னும் எங்கள் மத்தியில் உலவி கொண்டிருக்கிறாய் இசையாய் !


உன் ரசிகை. 


http://kousalya2010.blogspot.com/2010/06/blog-post_25.html


நன்றி - கூகுள், யு டியுப்