புதன், ஆகஸ்ட் 13

குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை...ஏன் ? சிறு அலசல்

அற்புதமான,உயர்ந்த கலாசாரம் பண்பாடு கொண்டவர்கள்  நாம்  என்று பெருமை பேசும் இங்கேதான் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் மற்ற நாடுகளை விட மிக அதிகமாக இருக்கிறது,  மொத்தம் 53% குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  அதாவது இரண்டில் ஒரு குழந்தை இக்கொடுமைக்கு ஆளாகிறது!? இது எத்தகைய மோசமான நிலை, குழந்தைகள் நன்றாக வாழமுடியாத பாதுகாப்பற்ற ஒரு நாடு வல்லரசு கனவு காண்கின்றது.   இக்கொடுமைகள் நிகழ என்ன காரணம் என விவாதித்துக் கொண்டிருப்பதை விட இனி அவ்வாறு நடக்காமல் நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் முக்கியம். ஆனால்   மனிதனின் மனபிறழ்வு, வளர்ப்பு  முறை, சிதைந்துவிட்ட இன்றைய குடும்ப அமைப்பு, பொருளாதாரத்துக்கு  பின் ஓடும்  பெற்றோர்கள், திரைப்படம், இணையம் போன்ற ஊடகங்கள், சந்தர்ப்பச் சூழல் என்று பல காரணங்கள் இருக்கும் போது  'பண்பாடு கலாசாரம் சீரழிந்து விட்டது' என்ற ஒற்றை வரியில் நாம் இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறோம். 

பாலியல் துன்புறுத்தல் குறித்த சில புள்ளிவிவரங்களை பார்க்க நேர்ந்தபோது குழந்தைகளின் மீதான  கழிவிரக்கம் மேலும் அதிகரித்து மனம் பதறுகிறது.   

* குழந்தைகள் மீதான 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* ஒருமுறை வன்முறைக்கு ஈடுபடுத்தப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* வன்முறைக்கு  உள்ளாகும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.



இந்த விவரங்கள் வெளிப்படையாக தெரிய வந்தவை மட்டுமே, வெளியில் வராத தெரியாத கொடுமைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும். இந்த கொடுமைகளை தடுக்க நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் ?! ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்தை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதைப் போல இதற்கும் சொல்லிக் கொண்டிருப்பதை விட பெற்றோர்கள் தான் இதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.  முக்கியமாக தங்களின்  உடலை பற்றிய புரிதல் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் உறவுகள்/அந்நியர்கள் அத்துமீறும் போது, (அசட்டையாக) அனுமதிக்காமல் தடுக்க தங்களால் ஆன முயற்சியை எடுப்பார்கள். 

பாலியல் கல்வி  அவசியம்

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டிய காலக்கட்டம் இது. பாலியல் கல்வி என்றதும் படித்தவர்களே முகம் சுளிக்கிறார்கள். ஆனால் பாலியல் கல்வி என்பது உடலுறவை பற்றி மட்டுமே சொல்லிக் கொடுப்பது அல்ல என்பதை புரிந்துக் கொள்ள தவறிவிடுகிறார்கள். படம் வரைந்து பாகங்களை குறி என்பதை போன்றதும்  அல்ல பாலியல் கல்வி. ஆண் பெண் உடல் அமைப்பு, உடல் உறுப்புகள் வளர்ச்சி , ஹார்மோன் சுரப்பால் ஏற்படும் மாற்றங்கள், பெண்ணின் மாதவிடாய், ஆணின் விந்து வெளியேற்றம், உறுப்புகளின் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, .....என்று பல இருக்கின்றன. இவைகளை அறிவியல் ரீதியில் படித்து தெளிவது அவசியம். பேசாப் பொருளா மறுக்கப்பட்டத்தன் விதியை மாற்றித்தான ஆகவேண்டும்.

பாலியல் கல்வியை வீட்டில் இருந்தும்  தொடங்கலாம். உதாரணமாக பெண்ணின் மாதவிடாய் என்பது அச்சமூட்டக்கூடியதோ, அருவருப்பானதோ அல்ல அது இயல்பான ஒரு இயற்கை  நிகழ்வு என்பதை டீன்ஏஜ் பெண்களுக்கு புரிய வைப்பது அவசியம், இதை  தனது மகளுக்கு சொல்லவேண்டியது ஒவ்வொரு தாயின் கடமை. அதேபோல் ஆணுக்கும் பெண்ணின் மாதவிடாய் பற்றி தெரிந்திருப்பது நல்லது. அந்த நாட்களில்  பெண்ணின் அப்போதைய  மனநிலை , உடல்   அவஸ்தைகளுக்கு ஏற்றபடி பெண்ணின் உடனிருக்கும் சகோதரன், காதலன், கணவன் போன்றோர் புரிந்து நடந்து கொள்ள இயலும்.    

அதுவும் தவிர , பாலியல் குறித்த புரிதல் இருந்தால் தான்  காதல்  ஒரு உணர்வு என்பதும் பருவ வயதில் வரும் காதல்  பக்குவமான ஒன்றா அல்லது வெறும் இன கவர்ச்சியா என்பதையும் அப்போதுதான் அவர்களால் பிரித்துணரமுடியும். அதன் பிறகே அதற்கு ஏற்றார்ப் போல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சில தவறான புரிதல்கள்

நம் சமூகத்தில் காலங்காலமாக இருக்கும்  சில பழக்கங்களை தற்போது மாற்றினால் நல்லது.  குறிப்பாக சிறு குழந்தைகளின் முன் பெற்றோர் இவ்வாறுதான் நடந்துக் கொள்ள வேண்டும் என வரையறுத்துக் கொண்டதை சொல்லலாம்.

* தாய் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக அங்கே வரும் குழந்தையிடம் ' அம்மா டிரஸ் பண்ணிட்டு இருக்கேன்ல நீ பாக்கக்  கூடாது வெளில போ' என குரலில் கடுமையுடன் சொல்வதுண்டு.  இது மிக தவறு. 'நான் என்ன பண்ணேன்,  அம்மா ஏன் இப்படி கோபமாகத்  துரத்துகிறாள்' என்று முதலில் குழம்பும், பிறகு 'அப்படியென்ன இருக்கு, நாம பார்த்தா என்னாகிவிடும்'  என்று யோசிக்கும். உடை மாற்றி  வெளியில் வரும் அம்மாவை இத்தகைய கேள்விக்களுடன் ஏறிட்டுப் பார்ப்பது சரியல்லவே. மாறாக அறைக்கு உள்ளே வந்த குழந்தைக்கு எதிர்ப்புறமாக திரும்பிக்  கொண்டு உடையை மாற்றலாம். ஆபாசமாக தெரியாமல் பிறர் அறியாவண்ணம் எவ்வாறு உடை மாற்றுவது என்பது எல்லா பெண்களுமே அறிந்த ஒன்றுதானே.  அப்படி இருக்கும் போது சிறுகுழந்தைகள் முன்பு மாற்றினால் தவறாகப் போய்விடும் என்று எண்ணுவது ஏற்புடையது அல்ல. சொல்லப்போனால் துணி விலகி உடல் தெரிவதை   அவர்களே கவனிக்காமல் இருக்கக்கூடும், ஆனால் பார்க்கக்  கூடாது என்று நீங்கள் வலியுறுத்தும் போதுதான் பார்த்தால் என்ன என்ற கேள்வியே எழும்.

* தற்போது வரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்காமல் முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்று தோன்றுகிறது.   குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆபாசமாக ஒரு காட்சி வந்துவிட்டால் உடனே வேகவேகமாக ரிமோட் எடுத்து சேனலை மாற்றும் வழக்கம் அநேகமாக எல்லா பெற்றோருக்கும் உண்டு. ஆனால் இது தேவையில்லை என்கிறேன் நான். அவசரப் படாமல்  இயல்பாக இருங்கள், அவர்கள் இதை சாதாரணமாகப்  பார்க்கலாம் அல்லது அவர்களாக முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொள்ளலாம்  அல்லது அவ்விடத்தை விட்டு எழுந்துச் செல்லலாம். அவ்வாறு அவர்களாக அந்த காட்சியை தவிர்க்குமாறு விட  வேண்டுமே தவிர நாமாக வலியுறுத்திப்  பார்க்க தடுக்கும் போது 'அது என்னவாக இருக்கும், அதை நாம் ஏன் பார்க்கக் கூடாது, பார்த்தால் என்ன தப்பு' என்று சிந்தனை முழுவதும் அந்த காட்சியை சுற்றியே சுழலும். இறுதியில் அதே காட்சியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளி இடத்திலோ, நண்பர்கள் மூலமோ பார்த்தப் பின்பே  அவர்களின் மனது திருப்தி அடையும்.

* பெற்றோர்கள் தங்களின் பரஸ்பர அன்பை  குழந்தைகள் முன் வெளிக்காட்டக்கூடாது என்பார்கள், அதுவும்  சரியல்ல. இருவரும் லேசாக அணைத்துக் கொள்வதில் பெரிய தவறொன்றும் இல்லை. கட்டிப்பிடிப்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல் அவ்வளவே . குழந்தைகளை நாம் கட்டிப் பிடித்தால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். அதே போன்று அம்மாவும் அப்பாவும் ஒற்றுமையாக அன்பாக இருக்கிறார்கள் என்று தான் புரிந்துக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய மன அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கை முறையில் இது போன்ற செயல்கள் அதிக பிணைப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும் தெரியட்டுமே பெற்றோர்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பானவர்கள் தான் என்பது. இதை பார்த்து வளரும் குழந்தைகள் நிச்சயம் அன்பானவர்களாகத் தான் இருப்பார்கள்.

மேலே  குறிப்பிட்ட மூன்று விசயங்களும் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக வற்புறுத்தி திணிக்க வேண்டியவை என்று குறிப்பிடவில்லை, மாறாக இயல்பாக நடப்பதை அப்படியே விட்டுவிடுங்கள், பெரிதுப் படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றேன்.

 வீட்டுக்கு வீடு இணையமும், எல்லோர் கையிலும் மொபைல் போனும் வந்துவிட்ட காலத்தில்  எத்தகைய ஆபாசக் காட்சியையும் ஒரு நொடியில் கண்டு விட  முடியும். பெற்றோர்கள் தடுக்கும் ஒவ்வொன்றையும் அவர்கள் வேறு இடத்தில் கண்டிப்பாகத்  தேடிக் கொள்வார்கள் என்பதே இன்றைய நிதர்சனம்.

மறுக்கப்படும் அனைத்துமே ஒரு சமயத்தில் தனது கட்டுக்களை உடைத்துக் கொண்டாவது  பெற்றேத்தீரும் . அதற்கு தேவை தகுந்த ஒரு சந்தர்ப்பம்... சந்தர்ப்பம் தானாக அமையவில்லை என்றால் அமைத்தும் கொள்வார்கள் இன்றைய குழந்தைகள்.

இவ்வாறு  பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள், சிறு விசயங்களை வலிந்து தடுப்பதை விட அவை என்னவென்றும் வயதுக்கு தகுந்தபடி கொஞ்சங்கொஞ்சமாக சொல்லித்தரலாம். கை கழுவிவிட்டுதான்  சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை போல ...

சிறு குழந்தைகளின் பாலியல் தொடர்பான கேள்விகள் 

பெண்களின் மார்பக வளர்ச்சி, உடலுறவு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், கற்பு, குழந்தைப் பிறப்பு பற்றியெல்லாம்  குழந்தைகளுக்கு பலவித சந்தேகங்கள் எழும், கேள்விகள் கேட்கிறார்கள். எதையோ ஒப்புக்கு சொல்லி மழுப்பாமல் உண்மையை சற்று எளிமையாக வயதிற்கு ஏற்றார் போல சொல்வது நல்லது . தொலைக்காட்சியில் ஜியாக்கிரபி சேனலே ஓரளவு சொல்லிவிடுகிறது, அதில் மிருகங்கள், பறவைகளின் வாழ்க்கை, சேர்க்கைகளை தெளிவாகவேப் பார்த்துவிடுகிறார்கள். அதை அப்படியே  மனிதர்களுக்கு பொருத்தி எப்படி சொல்வது என்பதுதான் நமது வேலை என்பதால் மிகவும் சுலபம்.  உங்களிடத்தில் திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அடுத்துச் செல்லும்  இடம் நண்பர்கள். அவர்களும் இவர்கள் வயதுதான் என்பதால் அங்கேயும் தெளிவு கிடைக்காது, ஆனால் பதில் கிடைக்கும் அதுவும் அரைகுறையாக! முற்றிலும் மாறாக சொல்லக் கூடிய பதிலில் பெரிய ஆபத்து  ஒளிந்திருக்கும். இது பெரிய சிக்கல்.

இன்றைய  குழந்தைகள் மிகவும் வேகமானவர்கள், எல்லாவற்றையும் கூகுளில் தேடுவதை போல இதையும் தேடலாம், மிக அபத்தமான ஆபாசமான பக்கத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்புகள்  அதிகம். எச்சரிக்கை.

அதனால் நீங்களே அவர்களுக்கு தெளிவுப்படுத்துங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, சீரியசாகவோ சொல்லவேண்டியது இல்லை,எளிய மொழியில் இயல்பாக ஜஸ்ட் லைக் தட் மாதிரி சொல்லுங்கள். பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து அவர்களை குழப்பாமல், தத்துப்பித்துனு உளறாமல் பதில் சொல்வது முக்கியம். ஒரு வரியில் பதில் இருந்தாலும் போதும்.

ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும்  ஒருவருக்கு மற்றவரின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அவனுக்கு ஏன் அப்படி, அவளுக்கு ஏன் அப்படி இருக்கிறது என்ற சந்தேகங்கள் தோன்றும். எதிர்பாலினத்தவரை அதிகமாக பிடித்தும், சுத்தமாக  பிடிக்காமலும் இருக்கும். இதை பற்றி எல்லாம் அவர்களிடம் சகஜமாக பேசாமல் நாம் தெரிந்துக் கொள்ள முடியாது. அவர்கள் கேள்வி கேட்டால் அதை அசட்டை செய்யாமல் குழந்தைகளிடம் பேச கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக  எண்ணிப் பேசத் தொடங்குங்கள். குழந்தைகளிடம் எதிர்பால் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும்,  உடலமைப்பு தான் வேறு வேறே தவிர  அவர்களும் உங்களை போன்றவர்கள் தான். யாரும் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல உயர்ந்தவர்களும் அல்ல என்றும்  சொல்லுங்கள்.

இறுதியாக,

திருமணம் முடிந்து 30 வருடம் கழிந்த பின்பும் உடலுறவில் உச்சம்(கிளைமாக்ஸ்) என்பது என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அது என்னவென்று தெரியாமலும் அதன் அவசியம்  புரியாமல் தவற விடுவதும், தவறான உறவுகள் ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்பது  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்??

முக்கியமாக ஆணின் சிறு வயதிலேயே இந்த விதத்தில் இன்ன வயதில் இன்ன வயது பெண்ணுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்  மற்றவை எல்லாம் மிக தவறானவை என்பதையும் புரிய வைத்துவிட்டோம் என்றால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பதன் சதவீதம்   குறையலாம். பாலியல் கல்வியின் மூலம் இது சாத்தியமாக வாய்ப்பு இருக்கிறது, சிறு வயதில் இருந்தே  இக்கல்வியை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். வீட்டில் இருந்தே  தொடங்கலாம், பாலியல் கல்வியை வாழ்க்கைக்கான கல்வி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

எனவே,

சிறு குழந்தைகள் பாலியல் தொடர்பான கேள்விகள் கேட்டால் உடனே பெரியவர்களின் பதில் நீ சின்ன பையன்/பொண்ணு இப்போ சொன்னா ஒன்னும் புரியாது வளர்ந்த பிறகு தானாக தெரியும், அதுவரை இதை பற்றி பேசவே கூடாது , ரொம்ப தப்பு ' என்று இனியும் சொல்லாதீர்கள்.

வளர்ந்ததும் எல்லாமே தானாக புரிந்துவிடாது, அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கப்பட  வேண்டும். இவை இரண்டுக்குமே நம் சமூகத்தில் வழியில்லை. பாலியல் விழிப்புணர்வு இல்லாத சமூகம் சீரழிந்து தான் போகும் என்பதை கண்கூடாக ஊடகங்களில் கண்டு வருந்தி கடந்து போவதுடன் நமது சமூக கடமை அனேகமாக முடிந்தே விடுகிறது என்பது பெற்றோர்களாகிய நமக்கு மிக பெரிய அவமானம் !!?


* * * * * * * * * * * * * * *

நண்பர்களே இந்த தலைப்பை  சார்ந்து தொடர்ந்து எழுத இருக்கிறேன்...குறைகள் இருப்பின் தெரிவியுங்கள், மேலும் இதை பற்றிய செய்திகள், தகவல்கள் கொடுத்தாலும் உதவியாக இருக்கும்.

எனது இந்த கட்டுரை Lawyersline  மாத இதழில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா

புதன், ஏப்ரல் 2

மனிதர் உணர்ந்துக் கொள்ள... இது மனிதக் காதல் அல்ல !!

Love story of malena

என் அன்புக் காதலா... 

கவிதைகளில் உன்னை பேசிப் பேசியும் தீரவில்லை என் காதல்... அதுதானோ என்னவோ கவிதை இன்று இப்படி கடிதமாகிவிட்டது. ம்ம்...தீராக் காதலை எப்படி சொன்னால் தான் என்ன  தீர்ந்தாப் போய்விடும் !   

'கா த ல்' என்ற வார்த்தையை இதுவரை மெல்ல உச்சரித்தவள் இன்று சற்றே சத்தமாக சொன்னேன்... அல்ல அல்ல கத்தியே விட்டேன். செவிப்பறை அடைந்த என் கத்தல் உள்ளுக்குள் ஏதோ ஒன்றை உடைத்து ஏற்படுத்திய உணர்வு பிரவாகத்தில் மூழ்குவதும் மிதப்பதுமான அதி அற்புதமான ஒரு உன்னத நிலை...மயங்கிச் சரிந்தேன் மெல்ல. ஒரு வார்த்தைக்கு இவ்வளவு வலிமையா ... என்னைத்  தொலைத்து உன்னில் என்னைத் தேடும் அபத்தத்திற்கு ஒரு அழகானப்  பெயரே காதல் ! 

நம் இருவரின் தேசங்கள் வேறு, திசைகள் வேறு, நான் கிழக்கு நீ மேற்கு... எந்த புள்ளியில் இணைந்தோம் இணைத்தது எது என்பதைப்  பற்றியெல்லாம் இதுவரை யோசித்ததில்லை யோசிக்க நேரமுமில்லை, காதலில் மூழ்கிப் போன நெஞ்சம் வேறு எதைத் தான் சிந்தித்தது. என்   சிந்தனை சொல் செயல் எல்லாம் உன்னை பற்றியே உன் ஒருவனை பற்றியே ...விடியலில் தூக்கம் கலையும் போதே உன்னுடனான கனவும் கலைந்துவிட மறுபடி இழுத்து அணைத்துக் கொள்கிறாய் நினைவுகளால்....இரவின் கனவுகளில் பகலின் கற்பனையில் என்று உன்னைப்  பார்த்துக் கொண்டே இருக்கும் என் விழிகள் வேறு யாரைத்தான் அறியும்!

நம் தேசங்களின் இடைவெளியோ பல ஆயிரம் மைல்கள், காதல் வந்தப்பின் தேசமென்ன திசையென்ன தூரமென்ன நடுவில் எதிர்படும் மலை என்ன தடுக்கும் கடல்தான்  என்ன?

நீயும் நானும் பேசிப் பேசியே
இருவருக்கும் இடையிலான
கடலளவு தூரத்தை
குறைத்து விடமாட்டோமா என்ன?
பிரிவும் தூரமும் காதலை
அதிகரிக்கவேச் செய்யும்
என்று சொன்னவனே நீ தானே !   

நன்றாக நினைவிருக்கிறது, பறவைகள் சூடான இடம் தேடி நாடு விட்டு நாடு இடம்பெயரும் ஒரு குளிர்காலம் அது.  அப்பொழுது தானே என்னைக் காக்கும் தேவனாய் வெகுத் தொலைவில் இருந்து நீ வந்துச்  சேர்ந்தாய். அன்பை வளர்த்தாய் ஆதரவு நானே என உன் தோள் சாய்த்தாய். உறவாடி உயிரானோம்... உயிர்(கள்) வளர்த்தோம்...  

கையிழந்து
கவலைச் சுமந்து வாழ்ந்த மனதில்
உன்னைச் சுமக்க வைத்தாய்... 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் நான்
கவலைச்  சுமக்கிறாய் நீ !! 

தற்செயலாய் சந்தித்ததாய் ஒருநாள் சொன்னாய், உன்னை என்னிடம் அழைத்து வந்த அந்த தற்செயல் சொல்லிவிட்டது என்னைத் தேடிய உனது ஜென்மாந்திரத் தேடலை...!

விழிகளால் பேசிக் நட்பை வளர்த்து, செல்லச் சண்டைகளில் மூழ்கித் திளைத்து,  ஏதோ ஒரு தருணத்தில் என்னையே காதலைச்  சொல்லவும் வைத்துவிட்டாய்  ...சிறிதும் லக்ஜையின்றி நேராய் உன் முகம் பார்த்து காதலை நான் சொல்ல அதை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டே தலைக்  குனிந்தாய். அது வெட்கமா சம்மதமா என்ற குழப்பத்தில் நான் நிற்க எனது ஒரு கை கோர்த்து உள்ளங்கை வெப்பத்தில் மௌனமாய் உணர்த்தினாய். இன்று வரை நொடிக்கொரு முறை நான் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க நீயோ காதலாகவே இருக்கிறாய், வாழ்கிறாய்... 

காதலால் கட்டுண்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்டன.  நம் காதல், நாட்களை எண்ணுவதில்லை... பிரிந்தப்  பொழுதில் சேரும் பொழுதையும் சேர்ந்தப்  பொழுதில் ஒருவரை ஒருவருமாக  எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிக்  காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்!

இதோ இந்த மார்ச் மாதத்துடன் நமது காதல் 12 வது ஆண்டை எட்டி விட்டது.  குளிர்காலம் முடிந்ததும் உன்னை பிரிய மனமின்றி பிரிந்து அடுத்த குளிர்காலத்திற்காக வழக்கம் போலவே காத்திருக்கப் போகிறேன்... காதல் என்றும் அழிவதில்லை அது நம்மை போன்ற பறவையின் காதலாக இருந்தாலும்...

இப்படிக்கு,

உன் அன்புக்காதலி 
மலேனா.   
மலேனா பறவையின் தீராக்காதல் கதை


இரண்டு பறவைகளின் காதல் கதை   
---------------------------------------------------------

1993 ஆம் ஆண்டு குரேஷியா நாட்டில் வேட்டைக்காரன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதால் ஒரு இறக்கையை இழந்துத்  தவித்தது ஒரு பெண் நாரை. அதை  Stjepan Vokic என்ற ஒரு நல்ல மனிதர் அன்புடன் எடுத்துக் காப்பாற்றி தனது வீட்டின் கூரையில் இடம் ஒதுக்கிக் கொடுத்து  உணவிட்டு 20 வருடமாக வளர்த்து வருகிறார். 

தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலமாக இருந்தப்போது அங்கிருந்து குரேஷியா வந்த ஒரு ஆண் நாரை இறக்கை இழந்த பெண் பறவை மலேனா மீது தீராக் காதல் கொண்டது.  வருடந்தோறும் தவறாமல் மார்ச் மாதம் வருவதும் காதலில் திளைப்பதும் வழக்கமாகிவிட்டது. பெண் நாரை முட்டை இட்டு குஞ்சுகள் பொரித்ததும் பொறுப்புள்ள தகப்பனாக அவற்றிற்கு பறக்கக்  கற்றுக் கொடுக்கிறது.  பிள்ளைகள் நன்கு பறக்கப்  பழகியதும் அவற்றை அழைத்துக் கொண்டு தனது சொந்த  நாடான தென் ஆப்பிரிக்கா கிளம்பி விடுகிறது. இப்படியே கடந்த  32 பிள்ளைகளை பெற்று(!) வளர்த்து அழைத்துச் சென்றிருக்கிறது.

அந்த அன்புக் காதலன் ரோடான் ஒவ்வொரு வருடமும் மத்தியத்தரை கடல், மலைகள், பாலைவனம் எல்லாவற்றையும் கடந்து சுமார் எட்டாயிரம் மைல்கள் பறந்து வருகிறது . தனது காதலி மலேனா காத்திருப்பாள் அதற்கு ஏமாற்றம் தரக் கூடாது என்பதை ரோடான் நன்கு அறிந்திருக்கிறது. சரியாக மார்ச் மாதம் வந்து  அன்பாக குடும்பம் நடத்தி, தனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காதலியிடம் விடைப் பெற்றுக் கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது நாட்டிற்கு கிளம்பி விடுகிறது. 

காதலின் வலிமை இனம் மொழி மதம் தேசம் கடந்து மனிதர்களிடம் மட்டுமல்ல ஐந்தறிவு உயிர்களிடமும் உண்டு என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இவர்களை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்க இயலவில்லை. 

மறுபடியும் 
உனது பயணத்தைத்  தொடங்கிவிடாதே
காதலை நான் வாசித்து
முடிக்கும் வரையிலாவது  
சற்றுப் பொறுத்துக் கொள்
முடிக்கவும் இயலாக் காதலை 
எனக்கு கொடுத்துவிட்டு
விட்டு விலகிச்செல்வது
அவ்வளவு சுலபமில்லை
புரியவைக்கிறேன் என்னை 
கொஞ்சம் அருகினில் 
நெருங்கி வா என் கண்ணே!  

என்று கொஞ்சிப்  பேசி மகிழ தனது காதல் கணவன் அடுத்து எப்போது வருவார் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மலேனா... கூடவே Stjepan என்ற நல்ல மனிதரும் !!  எங்கே ரோடான் வராமல் போய்விடுமோ என்ற கவலையுடன் காத்திருக்கும் இவர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். பணமில்லாமல் தனது தொலைபேசியையும் விற்று மலேனாவிற்கு உணவு வாங்கிய  இவரை போன்றவர்களால் தான் இப்பறவைகளின் காதல் வென்றிருக்கிறது ... உலகில் மனிதம் நிலைத்திருக்கிறது. 


மலேனாவின் காதல் !

இதோ இப்போது இந்த  மார்ச் மாதமும் கிளம்பி வந்துவிட்டது. தனது காதலியுடன் இணைந்து தங்களது 12 வது ஆண்டு விழாவை வெகுச்  சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த காதல் பறவைகளை நாமும் வாழ்த்துவோம் !!!  

                                 * * * * *

பின் குறிப்பு:

மலேனா ரோடான் பற்றி தனது தளத்தில் எழுதிய அன்புத்தோழி ஏஞ்சல் இவர்களைப்  பற்றி நீங்களும் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட நெருங்கிய தோழியாச்சே மீற முடியவில்லை, என்பதை  விட இந்த பறவைகளின் காதல் கண்டுப் பிரமித்துவிட்டேன். எனக்கு மிகப் பிடித்த 'காதல்' அவர்களிடம் கொட்டிக் கிடக்க இதோ எழுதியே விட்டேன். படிச்சிட்டுத்  திட்டுறதுனா தோழியை திட்டுங்க :-) 


பிரியங்களுடன்... 

கௌசல்யா     




புதன், மார்ச் 26

சும்மா ஒரு ஹாய் ஒரு ஹலோ ...!

just want to say hi ,hello

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

பதிவுகள் எழுதி ரொம்ப நாள்(மாசம்) ஆச்சு ...இனியாவது  தொடர்ந்து எழுத லாம் என இருக்கிறேன், அப்படி தீவிரமாக  பதிவுகள் எழுதுறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு ஹாய் சொல்ல இந்த பதிவு . எப்படி இருக்கிறீர்கள் ? நலம் தானே !  எங்கே ஆள காணும் என்று நலம் விசாரித்த நட்புகளுக்கு எம் அன்பான நன்றிகள்!

மே மாதம் வரை மாணவர்களுக்கு தேர்வு டென்ஷன்... நமக்கு தேர்தல் டென்ஷன் ! (யார் வந்தா நமக்கென்ன என்று இருப்பவர்களுக்கு எந்நாளும் நன்னாளே) சமூக தளங்கள் தான் தேர்தல் முடிவை உறுதிச்  செய்யப்  போவதைப்  போல பரபரப்பாக இருக்கிறது. அரசியல் நக்கல் , நையாண்டிகள் , நிறைய பிளாஷ்பேக் கதைகள் என்று சூடு பிடித்து விட்டது. என்னைபோல அரசியல் கிலோ என்ன விலை என்பவர்களுக்குத் தான் இவங்கலாம் எதை பத்தி யாரை பத்தி பேசுறாங்கனு ஒரே குழப்பமாக இருக்கிறது .  ஜனநாயக கடமையைச்  சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும்  சக வலைத்தள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

வாழ்க்கை ஏதாவது  ஒரு பாடத்தை நமக்கு தினமும்  சொல்லிக் கொடுத்து கொண்டே இருந்தாலும் அத்தனை பேருமா அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், வெகு  சிலரே  கற்றுக் கொள்கிறார்கள், பலர் கற்க தவறி விடுகிறார்கள். ஒருவேளை நாம தவறவிட்டாலும் நம்ம கூட இருக்கிறவங்க கற்றுக் கொடுத்துடுவாங்கப்  போல. சிரிக்கத் தெரிந்த  மனிதனாச்சே நாம ,      சங்கடங்கள்  சிரமங்களைச்  சிரித்தே கடந்து விடலாம் என்று எண்ணினால், எங்கே சிரிக்க விடுகிறார்கள்...நம்மைச்  சுற்றி இருக்கிறவர்கள். எப்பொழுதும் எதையாவது பேசி, விவாதம் என்ற பெயரில் நம்மள குழப்பி,  கழுத்து சுளுக்குற அளவு கருத்துச்  சொல்லி...னு என்னவோ போங்க ரொம்பவேப்  படுத்தி எடுக்குறாங்க. அவங்க கூட பழகிப்  பழகி நமக்கும் அதே  பழக்கம் தொத்திகிடுச்சு (இல்லைனாலும் ஒன்னும் தெரியாதாக்கும்) அதிலும் முக்கியமா இந்த பதிவுலகம்  வந்ததில் இருந்து  வெளில யார் கிட்ட பேசினாலும் பதிவுல எழுதுற  மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு என்னோட காலேஜ் பிரெண்ட் ஒருத்திய  சந்திச்சேன், 'என்ன நீ என்னவோ மாதிரி பேசுற, நிறுத்தி நிதானமா,  முன்ன எல்லாம் இப்படி பேச மாட்டியே' கேட்ட பிறகு தான் எனக்கே இது புரியுது. :-)

சமீபத்துல கோர்ட்க்கு ஒரு கேஸ்ல சாட்சியாகப்  போனேன்...    எதிர்தரப்பு  வக்கீல் என்கிட்ட வந்து , நான் யாருக்காக போனேனோ அவரை  குற்றவாளி அப்டி இப்டினு சொல்லி, இதுக்கு என்ன பதில் சொல்ரிங்கனு கேட்க, டக்னு  'இப்டி நீங்க சொல்வதை வன்மையாகக்  கண்டிக்கிறேன்' னு சொல்லிட்டேன்,  வக்கீல் முறைக்க... கோர்ட் மொத்தமும் சிரிக்க...நீதிபதியும் லேசா சிரிச்சிக்கிட்டே , 'இங்க நாந்தான்மா கண்டிக்கணும், நீங்க கண்டிக்கக்கூடாது' என்று சொல்ல...நாக்க நான் கடிக்க...சில நொடிகள் கழிச்சி , 'அப்ப எதிர் வக்கீல் சொல்வதை வன்மையாக மறுக்கிறேன்' என்றேன் மெதுவாக !  (அங்க வச்சா நான் எழுதிய கண்டனம் போஸ்ட் ஞாபகத்துக்கு  வரணும்)  ஒரு வழியாக  விசாரணை  முடிஞ்சு வெளில வர,  எங்க தரப்பு வக்கீல், உள்ள போறதுக்கு முன்னாடி அவ்ளோ யோசிச்சிங்க, இப்படி தைரியமாகப்  பேசுவிங்கனு  நான் எதிர்பார்க்கல...முக்கிய சாட்சி உங்களோட இந்த ஒரு பதில் போதும் கேஸ் ஜெயிச்சிடும்னு  சொல்றாரு. (தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக முடிந்தது) 

பார்த்திங்களா, இந்த பதிவுலகம் எப்படி என்னை வளர்த்து விட்டுருக்குதுனு ! 

இப்படி இங்கே நான் கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய  ! கடந்த நாலு மாதமாக எழுதுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. பிற வேலைகள்,பிரயாணங்கள்  அதிகரித்து விட்டதால் மனமும் சோர்ந்துப் போய்விட்டது. . மறுபடி இதோ இன்று எழுதும் போது அதே பழைய உற்சாகம் ! அதுதான் இந்த பதிவுலகின் விந்தை. பழைய நண்பர்களை பார்த்ததும் வருமே ஒரு குஷி, அந்த மாதிரி !!!

பதிவுலகம் வரலைனாலும் டேப்லெட் மூலம் பேஸ்புக்  செக் பண்ணிட்டு இருப்பேன், பசுமைவிடியல் தளத்தில் அப்டேட் பண்ணுவேன். ஆனா  ஒரு  இம்சை ! ஓபன் பண்ணிய  கொஞ்ச நேரத்துல  இன்பாக்ஸ்ல  வந்து ' நீங்க ஆன்லைன் இருக்குறது தெரியும் , ஏன் பதில் சொல்ல மாட்டேன்கிறிங்க' என்பார்கள் சில துப்பறிவாளர்கள்! 'ஹாய், நல்லா இருக்கிங்களா?' ன்ற கேள்விக்கு எத்தனை முறைதாங்க பதில் சொல்றது. நிஜமா முடியல !!  அதை விட ஒரு சகோதரர் கேட்டார், 'என்னங்க இத்தனை மணிக்கு பேஸ்புக்ல இருக்கிங்க...அதும் ஒரு பெண்ணா இருந்துகிட்டு ?!'  என்ன கொடுமைங்க இது ?? நான் என்ன ரோட்லையா ராத்திரி 1 மணிக்கு தனியா நின்னேன். அப்படியே நின்னாலும் அது அவங்கவங்க  சொந்த விஷயம்... இவங்கள மாதிரியானவங்க கற்காலத்த விட்டு வெளில வரமாட்டாங்க போல !

அடிக்கடி கணவருடன் இரவு நேரத்தில் வெளியூர் பயணம் செல்லும்  சூழல் , வண்டி ஓட்டுற அவர் தூங்கக்கூடாதேனு  பேஸ்புக் அப்டேட்ஸ் படிச்சு அதை பத்தி பேசிக்கிட்டுப்  போவோம். அப்படியே ஊரும் வந்துவிடும்.....இதைப்   பத்தி எல்லாம் தெரியாம அடுத்தவங்களின் தனிப்பட்ட விசயத்தில்  மூக்கை நுழைக்கும் அதிக பிரசங்கிகள் எப்போ திருந்தப்  போகுதோ தெரியல . உங்களுக்கு தோணலாம் ,இந்த மாதிரி ஆட்களை பிளாக் பண்ணி இருக்கலாமே என்று , அப்படியும் கொஞ்ச  பேரை பிளாக் பண்ணியாச்சு,  எதுக்கும் நாம  கொஞ்ச நாள் ஒதுங்கி இருப்போம்னு  டீஆக்டிவேட் பண்ணி வச்சேன்... அப்போதான் தெரியுது வெளியுலகம் ரொம்ப அழகு என்று !! இப்படி அடிக்கடி வெளியுலகம் போய்வருவது  எல்லோருக்கும் நல்லது !! :-)

வாட்ஸ்அப் என்றொரு இனிய இம்சை

ஒருநாள்  ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஆர்டர் கொடுத்துவிட்டு டேப்லெட்டில் கேம்ஸ் விளையாடிகிட்டு இருந்தேன். அந்த பக்கம் வந்த ஒருத்தர் , நீங்க வாட்ஸ்அப்ல இருக்கிங்களா என்றார். நான் ரொம்ப வேகமா இல்லைங்க பேஸ்புக் ல இருக்கேன் சொன்னேன் . ஓ ! மீ டூ பட் வாட்ஸ்அப் இஸ் த பெஸ்ட் அப்டி இப்டி னு எடுத்துவிட்டுக்கிட்டே  இருந்தார். அப்டி என்னடா அதுல இருக்கும் ரொம்ப ஆர்வமாகி   கற்போம்  பிரபு தம்பிக்கு கால் பண்ணேன் , ஆண்ட்ராயிடு போன்ல இது ஒரு ஆப்ஸ் , fb இன்பாக்ஸ் மாதிரி சாட் பண்ணிக்கலாம் .போட்டோஸ், விடியோஸ் ஷேர் பண்ணிக்கலாம் என்று அவர்   சொன்னதையே விரிவாகச்   சொன்னான். சரி அதையும் என்னனு பார்த்திடலாம்னு டவுன்லோட் பண்ணி  யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். டைப் பண்ணப்  பொறுமை இல்லைனாச்  சொல்ல வேண்டியதைப்  பேசி அனுப்பிடலாம் என்பது எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு.  முக்கியமா,  பிடித்தவர்கள் குரலை லைவா கேட்பதும்  நினைத்தப்போது எல்லாம் மறுபடி போட்டு கேட்பதும் ஒரு அலாதி குஷி!! :-)

வாட்ஸ்அப் நிஜமா பெஸ்ட். ஆனா பாருங்க இதுலயும்  அதே இம்சை ! ஓபன் பண்ணதும் 'ஆன்லைன்' னு காட்டிக் கொடுத்துவிடும். நான் இரண்டு நாளா இத ஓபன் பண்ணவே இல்லன்னு சத்தியம் எல்லாம் செய்ய  முடியாது. Last seen ல   மாட்டி அசடு வழிய வேண்டியதுதான். இதுக்கும் ஒரு வழி இருக்குனு இப்போதான் கண்டுப்பிடிச்சேன்  "WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி?  ன்ற போஸ்ட்ல சொன்னபடி செட்டிங்க்ஸ் செஞ்சுக்கலாம். 

சில பேர் இதை மொபைல் என்பதையே மறந்துடுவாங்க, இஷ்டத்துக்கு வீடியோ, சாங் , படங்கள்னு அனுப்புவாங்க, மெமரி வேகமா காலியாகி நான்  ஓபன் பண்றப்போ  'மரியாதையா  ரீசார்ஜ் பண்ணப்  போறியா இல்லையா'னு மிரட்டுது ஆன்ட்ராயிடு! பார்வேர்ட் மெசெஜ் ஒரு நாலு பக்கம் அளவுக்கு அனுப்புவாங்க, எல்லாம் படிச்சு நம்ம அறிவை வளர்த்துக்கவாம், இதையெல்லாம் முதல்ல அவங்க படிப்பாங்களானு தெரியல. அதைவிட  'இதை அப்டியே 108 முறை எழுதி அனுப்புங்க உடனே நல்லது நடக்கும்' என்ற அப்போதைய போஸ்ட் கார்ட் டைப்  மெசெஜ அப்படியே  வாட்ஸ்அப்ல அனுப்பி கொல்றாங்க. அறிவியல் வளர்ந்தாலும் இவங்க இன்னும் வளரலையே நினைக்குறப்போ அழவா சிரிக்கவா தெரியல.  இப்போ முடிவு பண்ணிட்டேன் இது போல அவஸ்தை படுத்துற அன்பு நபர்களை பிளாக் பண்ணியே ஆகணும்னு, ஏன் பண்ணினனு கேட்க மாட்டாங்க (நம்புங்க) அப்படியே கேட்டாலும் சொல்லிக்கலாம், என் போன்  என் உரிமை ! :-)  இந்த பாலிஸிய ஏன்  எல்லா இடத்திலும் பாலோ பண்ண முடியறதில்லை என்பது தான் நம்ம பலவீனம். ஆனா கண்டிப்பா  பாலோ பண்ணனும் ஏன்னா நம்ம ஹெல்த் முக்கியமில்லையா !

அவசியமான விசயங்களைக்  கேட்பதற்கும், சொல்வதற்கும் உபயோகப் படுத்துவதற்கு பதிலாக  ஹாய், ஹலோ, நலமா, என்ன பண்றிங்க , இப்போ பிரீயா, சாப்டிங்களா, என்று கேள்வியா கேட்டு வதைப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் ஒரே கேள்வியை தினமும்...பல பேர் கேட்டா நிலைமை அவ்ளோதான். இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓட்டம், நிற்க நேரம் இன்றி ஓடிக்  கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் எங்கே நிதானமாக பதில் சொல்ல முடிகிறது. அன்பு அதீத அன்பாக மாறி எதிர்பார்ப்புகள் அதிகரித்து இறுதியில் மன வருத்தத்தில் முடிந்து விடுகிறது. அன்பையும் அளவோடு செலுத்துவது  நல்லது அது நட்பாக இருந்தாலும் நெருங்கிய உறவாக இருந்தாலும்... அதிக உரிமை அதிக மன கசப்பு.  (அனுபவம்)

மேலும் இது போன்ற நவீன வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய பிரைவசி பறிப்  போனது போல் இருக்கிறது. நம்ம வீட்டு கிச்சனை மத்தவங்க  எட்டி பாக்குற ஒரு பீல் (பெட்ரூம்னு சொன்னா மட்டும் மக்கள் புரிஞ்சுத்  திருந்திட போறாங்களா என்ன) நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி  !! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக  பறிப்  போய்விட்டது.

எது எப்படி இருந்தாலும் நம் வாழ்க்கை நம் உரிமை என்று போய்க் கொண்டே இருக்கவேண்டும் ... அப்போது தான் நிம்மதி சாஸ்வதம். அவ்வாறு போகும் போது  எதிர்படும் எல்லா உயிர்களிடத்தும் சிறு  புன்னகை ஒன்றை உதிர்த்துச் செல்வோம் ... அது போதும் (ஒரு ஹாய் சொல்றேன்னு சொல்லிட்டு என்னை மாதிரி இப்படி கதைச்  சொல்லிக்கிட்டு இருக்கப்படாது) :-)



உலகம் அழகானது...அன்பு உயர்வானது  ...அன்பால் உலகை ஆளுவோம் !!


பிரியங்களுடன்
'மனதோடு மட்டும்'
கௌசல்யா

     


வியாழன், செப்டம்பர் 19

மகளிர் அமைப்புகளின் குறுகிய கண்ணோட்டம் - ஒரு அனுபவம்



பெண்களுக்கு எதிராக  எங்கே என்ன நடந்தாலும் மகளிர் அமைப்புகள் முதலில் குரல் கொடுத்துவிடும். ஆபாச சுவரொட்டி கிழிப்பது முதல் பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப் பிடித்து கோஷம் போட்டுப்  போராடுவது வரை  இவர்களைப்  பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன். உண்மையில் இவர்களின் வேகம் எதுவரை  எந்த விதத்தில் என்று மகளிர் அமைப்பில் என்னை இணைத்துக் கொள்ளும் வரை எனக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட பெண்கள்  இவர்களிடம் பிரச்னையைக்  கொண்டுச்  செல்லும்போது அதை இவர்கள் கையாளும் விதத்தை அனுபவத்தில் கண்டு அதிர்ச்சியும், கோபமும்,  சலிப்பும்  வந்து விட்டது. அனைத்து இடத்திலும் இப்படித்தானா? இல்லை எனது முதல் அனுபவம் இப்படியா என தெரியவில்லை. (நமக்குனே இப்படி எல்லாம் வந்து சேருமோ என்னவோ ?!)

பதவி(?) ஏற்றதும் முதல் பணி, பிரச்சனையுடன் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அவள் சொன்னதின் சுருக்கம் - ஒரு ராங் கால் மூலமாக(?!)  லீவ்ல இருக்குற ராணுவ வீரருக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம். திருமணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்தப்  பின் முதல் முறையாக நேரில் சந்திப்பு. கோவில் வாசலில்(?) வைத்து திருமணம். பெண்ணின் சொந்த ஊரில் சில வாரங்கள் குடித்தனம். பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பம். தற்போது  இவளை விட்டுவிட்டு முதல் மனைவியிடம்(?) போய்விட்டாராம். ஆமாம்ங்க ஆமா  அவர் ஏற்கனவே திருமணமானவர். இது முன்பே இந்த பெண்ணுக்கு தெரியுமாம், இருந்தும்   காதல் தெய்வீகம்(?) என்பதால் திருமணம் !?? இதில் எனது வேலை என்னனா இந்த இருவரையும் சேர்த்து வைக்கணும். அதுதான் எப்படினுனே எனக்கு புரியல. இவங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சுட்டா, அந்த பாவப்பட்ட முதல் மனைவி, இரு சிறு குழந்தைகளின் நிலை !

முதல் மனைவி பேச்சைக்  கேட்டுவிட்டு கர்ப்பிணி என்னை கைவிட்டுட்டார்னு ஒரே அழுகை. இந்த பிரச்சனையில் நான் என்ன செய்யணும் என்று எனக்கு ஆலோசனை என்ற பெயரில் கட்டளை வந்தது வட  மாவட்டத்  தலைவியிடம் இருந்து... சமூக நலத்துறையிடம் ஒரு புகார் மனு எழுதிக்கொடுக்கணும், அவங்க அனுப்புகிற  கடிதத்தைப்  பார்த்து அவன் வருவான், பேசி முடிக்கணும் என்று. நானும் அந்த தலைவி சொன்னபடி எல்லாம் செஞ்சேன். எனக்கு முதல் கேஸ் வேறயா ? நீதி நியாயம் எல்லாத்தையும்  கொஞ்சம் ஓரமா வச்சுட்டு ரொம்ப சின்சியராப்  பொறுமையைக்  கையாண்டேன்.

இதற்கிடையில் இந்த பெண்ணை இவளோட பெற்றோர் வீட்டை விட்டு வெளில அனுப்பிட்டாங்க, சில துணிகளை தோழி வீட்டில் வைத்துவிட்டு மொபைல் போன், ஹான்ட் பேக் உடன் தினம் பஸ்ஸில் திருநெல்வேலி வருவதும் சாயங்காலம் ஊருக்குப்  போவதுமாக இருந்தாள். செலவுக்கு பணம் இல்லன்னு பணம் கொடுத்துச்  செலவுக்கு வச்சுக்க சொன்னேன். இரண்டு நாள் கழிச்சு "என் வீட்டுக்காரரும் அவர் மனைவியும் என்னை அடிக்கிறாங்க  , நெல்லை பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன்" னு போன். பதறியடிச்சு ஓடி வந்தால் , அடியால் வீங்கிப் போன  முகத்துடன் இவ மட்டும் நிற்கிறாள்...! ஜூஸ் வாங்கிக்  கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன்.

"கால் பண்றேன், அவங்ககிட்ட நீங்க பேசுங்க" என்றாள்,  போனை எடுத்தது  முதல் மனைவி, 'ஏன் இப்படி அடிச்சிங்க' னு நான் கேட்ட அடுத்த செகண்ட் 'ஓ அந்த லெட்டர் அனுப்புனது  நீதானா, அவளுக்கு தான் புத்தி இல்லைனா  உனக்கு எங்க போச்சு புத்தி, அவளுக்கு போய் பரிஞ்சுட்டு வரியே , கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சும் வந்துருக்கானா அவளுக்கு பேர் என்ன' அப்டி இப்டின்னு கெட்ட வார்த்தைல திட்ட அப்படியே ஆடிப் போயிட்டேன், டக்னு போன்ன கட் பண்ணிட்டேன்.  ஆனா அவ கேட்டதுல இருந்த நியாயம் புரிந்தது.  'நீ ஊர் கிளம்பிப்  போ நாளைக்கு பேசிக்கலாம்னு இந்த பொண்ண அனுப்பி வச்சேன்.  

ஏதோ ஒரு வேகத்துல காதல், கல்யாணம் என்று போனாலும் இப்போது இந்த பெண்ணை விட்டு விலகுவது தான் அந்த ஆணின் நோக்கமாகத்  தெரிகிறது. ஏற்கனவே என்னிடம் பேசிய அந்த மாவட்டத்  தலைவி மறுபடி கால் பண்ணி, "அவன் மாசம் இருபதாயிரம் வாங்குறான் இல்லை அதுல பத்தாயிரம் மாசாமாசம் இவளுக்கு கொடுத்துத்தான் ஆகணும், இவளுக்கும் உரிமை(?!) இருக்கு, அதனால அவனோட ஊருக்கு நீங்க கிளம்பிப்  போங்க , போய் பேசுங்க, அதுக்கு பிறகு தான் இந்த பொண்ணு தன்கிட்ட இருக்குற அவனோட சர்டிபிகேட் , ரேசன் கார்ட் எல்லாம் தருவா, அப்டின்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டு வாங்க"னு !! எனக்கு அப்போதான் புரியுது , இந்த பெண் முன்னாடியே  உஷாரா அவனுடைய முக்கிய ஆவணங்கள் எல்லாம் கைப்பத்திக்கிட்ட விஷயம்...அவங்கக்கிட்ட மெதுவாகச்  சொன்னேன், 'மேடம் இந்த பொண்ணு சம்பந்தப்பட்ட எதுவும் என் மனசுக்கு சரினு படல, மேற்கொண்டு இதுல  நான் தலையிடுறதா இல்லை சாரி' னு சொல்லி போனை வைத்துவிட்டேன்  .

நல்லது பண்ணலாம்னு நினைச்சா 'எது நல்லது' என்பதில் எனக்கு குழப்பம்.

எனக்குள்  நிறைய கேள்விகள் !! இந்த விசயத்தில் நிறைய தவறுகள், குளறுபடிகள்... என் மனசாட்சிக்கு விரோதமாக என்னால் செயல்பட முடியவில்லை. அந்த பெண்ணைப்  பொருத்தவரை உதவி என்று கேட்டுச்  செய்ய முடியாமல் போனது வருத்தம் என்றாலும் ஒரு பெண்ணிற்கு உதவுவதாகச்  சென்று இன்னொரு பெண்ணுக்கு துரோகம் எவ்வாறு இழைப்பது...

* முதல் மனைவி உயிருடன் இருக்க இரண்டாவது திருமணம் எப்படி ?

* திருமணம் கோவிலில் வைத்து  நடைபெறவில்லை, கோவில் குருக்கள் மறுக்கவே கோவில் வாசலில் தாலியைக்  கட்டிக் கொண்டாயிற்று.

* செல்போன்

ஒரு ராங் காலோ, மிஸ்டு காலோ போதும் காதல் என்ற பெயரில் ஒரு கலாசாரச் சீரழிவு அரங்கேற...குரலை வைத்து ஒருவரது குணம், படிப்பு, அழகு, அந்தஸ்து கண்டுபிடித்து விட முடியும் என்று நம்பி தொலைந்துப் போகும் ஆண்களும், பெண்களும் இன்று அனேகம். தனக்கு திருமணமானது எங்கே பெண்ணுக்கு தெரியப் போகிறது என்று பெண்ணை ஏமாற்றும் ஆண்கள்...ஆணை எப்படி தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று பல சூழ்ச்சிகளைச்  செய்யும் பெண்கள் ! இப்படி நம் சமூகம் ஏதோ ஒன்றை நோக்கி வேகமாகச் செல்வதை போலத் தெரிகிறது. இது மிக மோசமான ஒரு நிலை!    

இத்தனை குளறுபடிகள், தவறுகள்  உள்ள ஒரு பிரச்னையை ஒரு பெரிய அமைப்பு எப்படி ஒரு தலைபட்சமாகப்   பார்க்கிறது என்று எனக்கு புரியவில்லை. அமைப்பு என்பது ஒரு சிலர் சுயமாக எடுக்கும் முடிவா ? பலர் கலந்துப் பேசி எடுக்கும் முடிவா ? பலர் கலந்துப்  பேசி எடுப்பதாக இருந்தால் அதில் இடம் பெற்ற ஒருவருக்குமா இது ஒரு தவறான வழிகாட்டுதல் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணிற்கு வாழ்வு பெற்றுக்  கொடுப்பதாக கூறிக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்க்கையை சிதைப்பதல்லவா இது.  

ஒரு பெண்ணின் வாழ்வைக்  கெடுத்தவன் என்று அந்த ஆணுக்கு வேண்டுமானால் தண்டனை கொடுக்கலாம், அப்படிக் கொடுத்தாலும் பாதிப்பு அந்த மனைவிக்கும் இரு  குழந்தைகளுக்கும் தான்...அனைவரையும் அழைத்து யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசி முடிப்பது ஒன்றுதான் இப்போதைக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் ஆனால் இது நடப்பதற்கு ஒரு சதவீதமும் வாய்ப்பு இல்லை என்பதுதான் என் வருத்தம். 
   
ஒருதலை பட்சமானதா மகளிர் அமைப்புகள், மனித உரிமைக்  கழகங்கள் போன்றவை !!??

மகளிர்க்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டியது தான் அதற்காக  ஒரு பெண் சொல்லிவிட்டாள்  என்று  சம்பந்தப்பட்ட ஆணை  மட்டுமே குற்றவாளியாக கூண்டில் நிற்க வைப்பது என்பது தவறான ஒன்று. இந்த பெண் விசயத்தில் அந்த தலைவி நடந்துக்  கொண்ட விதம் மனித உரிமை அமைப்புகள் ,மகளிர் அமைப்புகள் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. கடிவாளம் கட்டிய குதிரையை போல ஒரே திசையை மட்டும் பார்ப்பார்கள் போலும். அவர்களின் ஒரே எண்ணம் அந்த ஆணிடம் இருந்து மாதம் பத்தாயிரத்தை வாங்கி இந்த பெண்ணிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதாக இருந்தது. அதே நேரம் அந்த முதல் மனைவியின் நிலைமையைப்  பற்றிய அக்கறை துளியும் இல்லை. முறையாய் கல்யாணம் முடித்து இரு குழந்தைகளுடன் அந்த பெண் வாழ்க்கையை எப்படி சமாளிப்பாள் என்பதைப்  பற்றி சிறிதாவது யோசிக்க வேண்டாமா?

மகளிர் அமைப்பை நாடி வந்த பெண் சிறிதும் குற்றமற்றவள் என்றும் , அவள் கைக்  காட்டும் அத்தனை பேரும் தவறானவர்கள் என்பதைப்  போல பார்க்கும் பார்வையை முதலில் மாற்றுங்கள், இல்லையென்றால் அப்பாவிகள் பலரின் நிலை மிக பரிதாபம் தான். 

மகளிர் அமைப்புகள், சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து யார் மீது உண்மையில் தவறு என்பதை ஆராய்ந்தப் பின்னரே ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆலோசனை கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறங்கி அமைதியாய் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைச்  சிதைத்துவிடக் கூடாது.

'அவன விட்டேனா பார், ஒரு வழி பண்ணிடுவேன், கால்ல விழ வைக்கிறேன், ஆம்பளைனா அவ்ளோ திமிரா, இவன மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கிறேன், அவன்கிட பணத்தை வாங்காமல் விட கூடாது' என்பதை போன்ற கூப்பாடுகள் போடும் இடமா மகளிர் அமைப்புகள்...??!!! ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாள் என்றதும் சம்பந்தப்பட்ட ஆணை எப்படியாவது குற்றவாளிக்  கூண்டில் ஏற்றியே ஆகவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் செயல்பட்டால் அந்த ஆண் நிச்சயம் ஏதோ ஒரு விதத்தில் இறுதியில் குற்றவாளி ஆகிவிடுவான். 

இந்த பெண் விஷயத்தை பொருத்தவரை இந்த பெண்ணிடமே  அதிக தவறுகள் இருக்கின்றன. செல்போன் காதலை உண்மை என்று நம்புவதும், திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் திருமணம்(?) முடித்தது,  இறுதியாக அவனது ஆவணங்கள் வைத்துக் கொண்டு மாதம் பத்தாயிரம் பணம் கொடுத்தாக வேண்டும் என்ற ரீதியில் மிரட்டுவதும் அநியாயம்.

ஒருகட்டத்தில் சமாதானமாக போய்விடலாம் என்று சம்பந்தப்பட்ட பெண் முன்வந்தாலும் இவர்கள் விட மாட்டார்கள் போல...ஆண்கள் என்றாலே அயோக்கியர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே மகளிர் அமைப்புகள் செயல்பட்டால் அதன் உதவியை நாடும் பெண்களின் கணவன்/காதலன் குடும்பத்தினரின்  நிலை நிச்சயமாக கேள்விக்குறிதான் !!

பின்குறிப்பு

எனக்கு கிடைத்த ஒரு அனுபவத்தின் வைத்து  எழுதி இருக்கிறேன். யாரையும் குற்றம் சொல்லவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் அல்ல. நிறைகளை சொல்ல பலர் இருப்பதை போல சமூகத்தில் தெரியும் சில குறைகளை நான் சொல்கிறேன் அவ்வளவே!  அது எப்படி இப்படி சொல்லலாம் என பெண்ணிய கொடிப் பிடிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்!

                                                               * * * * *

இன்னும் பேசுவேன்...

கௌசல்யா  


புதன், ஆகஸ்ட் 14

நமக்கே நமக்கான திருவிழா - சென்னையில் 'பதிவர்கள் சந்திப்பு'


சென்ற வருடம் போலவே இந்த வருடமும் சென்னையில் பதிவர்களின் சங்கமம் நடைபெற இருக்கிறது. பதிவர்கள் கூடும் திருவிழா பற்றி பதிவுலகிலும் பேஸ்புக்கிலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. களைக்கட்டத் தொடங்கிவிட்ட இந்த அற்புத நிகழ்வைப் பற்றி பலரும் பதிவிட்டு சந்திப்புப் பற்றி தெரியாத பலருக்கும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பதிவர்களாகிய நமது கடமையும் கூட என்பது என் கருத்து.  

முன்பை போல் இல்லாமல் இப்போது தான் பதிவுலகம் என்ற ஒன்று இருப்பது வெளியே கொஞ்சம் தெரிய தொடங்கி இருக்கிறது. பதிவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் தேவை என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டும் அல்லது இதை பற்றிய செய்திகளைப்  பலருக்குக்   கொண்டுச்  செல்வதின் மூலம் பதிவுலகத்தின் இருப்பு மற்றவர்களுக்கும்  தெரிய வரும். 

பதிவுலகம் முன்பு போலில்லை, பதிவர்கள் பலர் பேஸ்புக் , ஜி பிளஸ் , டுவிட்டர் என்று போய்விட்டார்கள் என்ற பொதுவான ஒரு குறை உண்டு, எங்கே சென்றாலும் பதிவர்கள் எழுதிக் கொண்டுத்  தானே இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். ஆனால் இனியும் அப்படி இல்லாது தொடர்ந்து நிறைய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பயண அனுபவங்கள்,  வெளிவர வேண்டும். எழுதுவதைக்  குறைத்துக் கொண்டவர்கள் மீண்டும் எழுத இது போன்ற சந்திப்புகள் நிச்சயம் ஒரு உத்வேகம் கொடுக்கும்.

பத்திரிகை உலகமும், அரசியல் , திரைத்துறை போன்றவையும்  இங்கே நடப்பதை கவனிக்க தொடங்கி ரொம்ப நாளாகிறது. பதிவர்களின் பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் பத்திரிகை உலகில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேஸ்புக் டுவிட்டர் ஸ்டேட்ஸ்கள் வராத மாத வார இதழ்கள் குறைவு தான்.அப்படி பட்ட முக்கியத்துவம் பெற்ற இடத்தில் இருக்கும் நாம் நமக்கே நமக்காக நடைபெற இருக்கும் இந்த மாபெரும் சந்திப்பில் கலந்துக் கொள்வதன் மூலம் நமது ஒற்றுமை உலகறியட்டும். 

சந்திப்புக்கான ஏற்பாடுகள்

ஒவ்வொன்றையும் மிக அருமையாக திட்டமிட்டு , வாரமொருமுறை கலந்தாலோசித்து, கட்டுக்கோப்புடன் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  தனித்  தனி குழுவாக பிரித்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார்கள் , யாருக்கெல்லாம் என்ன பொறுப்பு என்பதை இங்கே http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று பார்க்கலாம் ! 

விழா நடைபெறும் இடம்

சென்னை வடபழனியில் கமலா தியேட்டர் அருகில் உள்ள CINE MUSICIAN'S UNION' க்கு சொந்தமான கட்டிடம் .

இதுவரை தங்கள் பெயரை உறுதி செய்தவர்கள் தவிர மேலும் கலந்துக் கொள்ள விரும்புவர்கள் தொடர்பு கொள்ள

ரமணி ஐயா: svramanni08@gmail.com
அலைபேசி: 9344109558
திரு.தமிழ்வாசி பிரகாஷ் : thaiprakash1@gmail.com
அலைபேசி 9080780981

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள் 
வலைத்  தளம் பெயர், முகவரி (blog  name & blog url address)
தொடர்பு மின்னஞ்சல்  முகவரி
தொலைபேசி எண் 
ஊர் பெயர் 
முதல் நாள் வருகையா என்ற விபரம்

இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம் , கவிதை நூல் வெளிஈட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என்பதுடன் பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டவும் ஒரு நிகழ்வு வைக்கலாம் என உள்ளார்கள்.
எழுத்தில்  தங்கள் திறமையை காட்டியவர்கள் பாட்டு, நடனம் , மிமிக்ரி, நடிப்பு , குழு நாடகம் இப்படி பல வற்றிலும் கலந்து, கலக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் ஆர்வம் உள்ளவர்கள், நூல் வெளியிட விருப்பம் உள்ளவர்கள் கவிஞர் மதுமதி அவர்களிடம்   மின்னஞ்சலில் தெரிவியுங்கள். (விரைவாக)
 kavimadhumathi@gmail.com 
அலைபேசி : 989124021

நிகழ்ச்சிநிரல்  பற்றிய குறிப்புகளுடன் கூடிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப் பட இருக்கிறது. 

விழா குழுவினரிடம் ஒரு வேண்டுகோள் - 

இந்நிகழ்வை பத்திரிகை, தொலைகாட்சியிடம் ஏன் கொண்டுச் செல்லக் கூடாது. அங்கே வரும் பலரும்  பத்திரிகை , ஊடகத்துறையுடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லவா, அவர்களின் மூலமாக கொண்டுப்  போகலாமே...இதை விளம்பரம் என்று தயவுசெய்து எண்ணக்கூடாது. மறைமுகமாக அவர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றபோது நம்மைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவர்களின் கடமை தானே ? இதற்கான முயற்சியை எடுக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்.    

அன்புள்ளம்  கொண்ட பதிவுலக நட்புகளே!

வருடம் ஒரு முறை நடப்பது என்பது சிறப்பு என்றாலும் மாதம் ஒரு முறையாவது பதிவர்களின் சிறு சிறு  சந்திப்பு நடைபெறவேண்டும். வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல், பதிவுலகை கட்டுக் கோப்புடன் கொண்டு செல்வதற்கும், நம்மில் யாருக்காவது எந்த உதவியாவது தேவை என்றால் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவதும் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் இந்த வருடம்,   

200 பேருக்குமேல் வருவதாக அறிகிறேன். இதற்கு  ஆகும் செலவு ஒரு லட்சத்தை தாண்டக் கூடும், செலவினை யாரெல்லாம் செய்ய இருக்கிறார்கள் என தெரியவில்லை, இருப்பினும் நமது பங்களிப்பு சிறிதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.  பணம் என்றாலே பிரச்சனை எழும், இருந்தும்  கடந்த வருட சந்திப்பு முடிந்ததும் வரவு செலவு கணக்கை தெளிவாக விரிவாக பதிவிட்டு இருந்தார்கள். நான் கூட நினைத்தேன், இவ்வளவு விரிவாக தெரிவிக்க வேண்டுமா என்று, ஆனால் இது அவசியமானது என்று விழா குழுவினர் இதற்காக சிரத்தை எடுத்து செய்ததை மனமார பாராட்டுகிறேன். 

மேலும் சென்ற  வருட விழா தொடர்பான வேறு வகை விமர்சனங்கள் அங்கே இங்கே என்று எழுந்தன. இருப்பினும் விழா அமைப்பினர் அத்தனைக்கும் பதில் தெரிவித்ததையும் நாம் அறிவோம். அது போன்றவை இந்த வருடமும் எழலாம் என்ற ஐயம் சிலருக்கு இருக்கலாம்.  ஒரு நாலு பேரை வைத்து சந்திப்பு நடத்துவதே  சிரமம் என்கிற போது நூறு பேருக்கு மேல் கூடும் ஒரு இடத்தில் சலசலப்புகள் வரும் , முடிந்த பின்னரும்  எதிர்வினைகள் எழத்தான் செய்யும்.  எதையும் நாம் பெரிதுப் படுத்தாமல் இருந்தாலே போதுமானது  யார் பிரபலம் யார் சீனியர் ஜூனியர் என்பதை விட பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் சிறந்தவர்கள் தான் என்ற ஒரு எண்ணம் நமக்குள் இருந்தால் மட்டும் போதும், எந்த ஈகோ பிரச்னையும் எழாது.  

தவிரவும் பங்குப்  பெரும் அனைவரும், விழா அமைப்பினர் தான் எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது நமக்கான விழா நாமும் இயன்றவரை சமமான/சரியான  ஒத்துழைப்பு, ஈடுபாடு  கொடுப்பது நல்லது. நிச்சயம் மிக சிறப்பான ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. எனது உறவுகளிடம் இதை பகிர்ந்துக்  கொள்வது எனக்கு ஒரு நிறைவை கொடுக்கும் என்பதால் இதைச் சொல்கிறேன். 

யாரெல்லாம் வருவார்கள் என்னவெல்லாம் சுவாரசியங்கள்  நடக்கப் போகின்றது என்ற ஆவல், நாள் நெருங்க நெருங்க அதிகமாகிக் கொண்டேச் செல்கிறது.

சாதி, மத, இன,கொள்கை வேறுபாடுகள் இன்றி பதிவர்கள் என்ற ஒரே ஒரு  அடையாளத்தோடு மட்டும் நடக்க போகும் இதில் கலந்துகொண்டு தமிழ் பதிவுலகை பெருமைப்படுத்தபோகும் அத்தனை உறவுகளுக்கும் என் வாழ்த்துகள். அனைத்தும் குறைவின்றி நடைபெற்று முடிய எல்லாம் வல்ல தேவனிடம் என் பிரார்த்தனைகள் ! சந்திப்பை திருவிழாப் போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நேச உறவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...! விழா மிகச் சிறப்பான வெற்றி பெறட்டும்  ...! 

                               ஓங்குக தமிழ் பதிவுலக மக்களின் ஒற்றுமை !!

                                                        * * *

                                               வெல்க தமிழ் !!!

                                                        * * *

செவ்வாய், ஜூலை 23

தாம்பத்தியம் - 30 'பழையக் காதலை கணவரிடம் சொல்லலாமா ?!'



ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்துப் போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் திருமணத்தில் இணைவர். இதில் ஒரு பெண்ணை காதலித்து வேறு பெண்ணை மணக்கும் ஆணுக்கு அவ்வளவாக பிரச்சனை இருக்காது. ஆனால் ஒருவரை காதலித்து மற்றொருவரை மணக்கும் பெண் ஆரம்பம் முதலே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். காதலனை எப்படி மறக்க  என்பது ஒரு பக்கம் என்றாலும் அக்காதலை கணவனிடம் சொல்லவா  மறைக்கவா என்ற கேள்வி ஒரு பக்கம் !!

ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தேன் என்று எல்லா ஆண்களும் தன் மனைவியரிடம் சொல்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு ஆணின் கடந்த காலத்தை பெண் பெருந்தன்மையுடன்  கடந்துவிடுகிறாள்.(விதிவிலக்கின் சதவீதம் குறைவு) 

அதைப்  போல ஒரு பெண் தனது கடந்தகால காதலை கணவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிலைமை என்ன? சொல்லாமல் மறைத்தாலும் என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவரின் மூலமாக கணவனின்  காதுக்கு விஷயம் தெரியவரலாம். யார் மூலமாகவோ தெரிந்து பிரச்சனையாவதை விட நாமே சொல்லிவிடுவது பெட்டர் என்று சில பெண்கள் சொல்லிவிடுகிறார்கள் ...அவ்வாறு சொன்ன ஒரு பெண்ணின் நிலை இன்று மிக பரிதாபம். சந்தேகம் கொண்டு தேளாய் கொட்டுகிறான் கணவன், உறவினர்களிடம் போனில் பேசினாலும்  'அவன்கிட்ட தானே பேசுற, உருகி உருகி காதலிச்சிட்டு எப்படி மறக்க முடியும்?' 'அவன விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்ட அப்போ அவனுக்கு உண்மையா இல்ல, இப்போ எனக்கு மட்டும் எப்படி உண்மையா இருக்க முடியும்?' 'காதல் எதுவரை கை வரையா இல்ல அதுக்கு மேலயா?' என்று வித விதமான கொடிய வார்த்தைகளால் தினமும் அர்ச்சனை. துன்புறுத்தல் தொடர இப்போது விவாகரத்துதான் ஒரே முடிவு என்ற நிலை.

பருவ வயதில் காதல் வந்தது தவறா ? தன் காதலை ஏற்காமல் வற்புறுத்தி இவரை திருமணம் செய்வித்த பெற்றோரின் தவறா ?  கணவனிடம் எதையும் மறைக்காமல் உண்மையாக வாழ எண்ணிய தனது தவறா ? இப்படி பல கேள்விகளுக்குள் தன்னை புதைத்துக்கொண்டிருக்கிறாள்...

இன்றைய சூழலில் பல குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இச்சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்பது ஆண் பெண்ணின் பரஸ்பர புரிதலைப்  பொறுத்து அமைகிறது.  இந்த விசயத்திற்கு  எப்படி  கவுன்சிலிங்  கொடுத்தேன்?! என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை கணவரிடம் சொல்லாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியுடன் உள்ள பெண்கள் அல்லது கடந்த காலத்தைப்  பற்றிய குழப்பத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அவர்களுக்கு  இங்கே சொல்லப் போகிறவைகள் உபயோகப்படலாம். தொடர்ந்து வாசியுங்கள்... 

ஆண்களின் கடந்த காலம் எப்படி இருந்தாலும்  அட்ஜெஸ்ட் செய்து வாழ பெண்கள் பழகிக் கொள்வார்கள். இந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே !

நம் திரைப் படங்களில் ஏற்கனவே ஒருவரால் காதலித்து கைவிடப்பட்ட கதாநாயகியை திருமணம் செய்யும் கதாநாயகன் தியாகச்சீலனை போல காட்டப்படுவான். அப்புறம் மறுமணத்திற்கு தயாராகும் கதாநாயகிக்கு குழந்தை இருக்காது, அதாவது முதல் கணவன் முதலிரவுக்கு முன்னரே இறந்துவிடுவான் அல்லது குடும்ப வாழ்விற்கு தகுதி இல்லாதவனாக இருப்பான். திரைப்படங்கள் என்றில்லை நம் சமூகமே இப்படித்தான் பெண்ணைச்  சித்தரித்து வைத்திருக்கிறது.

நம் சமூகத்தில் ஆண்கள் பலருடன்  நட்பாக இருக்கலாம், காதலிக்கலாம், சில பல திருமணங்கள் கூட செய்துக்  கொள்ளலாம். அவர்களின் மதிப்பு எவ்விதத்திலும் குறைவதில்லை. நான் ஆம்பளை என்பதில் அடங்கிவிடுகிறது அத்தனையும்...! ஆனால் பெண்கள் தாங்கள் காதலித்ததையே மறைத்தாக வேண்டும் !! காதல் வயப்பட்டவள் என்றால் அவள் இங்கே மதிப்பிழந்தவளாக  கருதப்படுகிறாள். பெண் என்பவள் ஒருவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வாழ்ந்து அவனுடனே இறந்து விடவேண்டும் என்ற ஆழ்மன புதைக்குழியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த சமூகம். (அதனால்தானோ என்னவோ  முறைத்தவறிய பொருந்தாக்  காதல்கள்,  கல்யாணங்கள் பல !)

காதல்

காதல் என்பது அழகான ஒரு உணர்வு. பலரின் மனதிலும் முதல் காதல் ஒன்று என்றும் இருக்கும். அந்த காதல் உங்களை அழகாய் பார்த்துக் கொள்ளும் சோர்வுறும் நேரம் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தும். தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தும். நிகழ்கால குடும்பச் சுமைகளை உங்களிடம் இருந்து பகிர்ந்து எதிர்காலத்தை பற்றிய ஆவலை ஏற்படுத்தி வாழவைக்கும்! ஆனால்   கணவரிடம் கடந்தக்  காலத்தை வெளிப்படுத்தும் போது அதன் அழகு , இயல்பு ஒருவேளை குறைந்துப்போகலாம். காதலின்  உண்மையான வடிவம் சிதைந்து போகலாம். கணவனுக்கு உண்மையாக இருப்பதாக எண்ணிக் கொண்டு கடந்த காலத்தைச்  சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. உண்மையாக இருப்பது என்பது வேறு, உண்மையைப் போட்டு உடைப்பது என்பது வேறு. உண்மையைச்  சொல்லி அதுவரை தெளிவாக இருக்கும் கணவனின் மனதில் குழப்பத்தை குடி வைத்து விடக்கூடாது. அதன்பின் ஆயிரம் சத்தியங்கள் செய்தாலும் குழப்பத்தை வெளியேற்றுவது மிகக் கடினம்.

தீக்குளிக்கச்  சொல்லும் ராமன்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்காக நாம் சீதையாகிவிட முடியாது. கடந்தகாலத்தை கூறி... நிகழ்காலத்தை நரகமாக்கி... எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் !!

பொய் சொல்லக் கூடாதே தவிர உண்மையை மறைப்பதில் தவறில்லை. 

பொய் சொல்லக்கூடாது என்றால் காதல் அனுபவம் உண்டா என்று கணவன் கேட்கும் போது என்ன செய்வது என யோசிக்கிறீர்களா ? இந்த கேள்வி வந்தவுடனே உஷாராகி விட வேண்டியதுதான். பரந்த உள்ளம் கொண்ட ஒரு ஆண் தன் மனைவியின் கடந்த காலத்தை ஆராய விரும்ப மாட்டான், அவளாக சொல்லாதவரை !  மீறி கேட்கிறான் என்றால் இவனை போன்றவர்களிடம் பொய் சொல்வதைத்  தவிர வேறு வழியில்லை. பிறகு  வேறு யாரோ மூலமாக காதல் விவகாரம் தெரியவந்தாலும் 'ஆமாம், அதை நானே மறந்துவிட்டேன், மறந்த ஒன்றைப்  பற்றி இப்போது  ஏன் பேசணும் ...இப்போது என் சிந்தனை எல்லாம் நீங்க, குழந்தைகள் பற்றி மட்டும்தான்' என்று கூறி அத்துடன்  முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்.  

பெண்களே...

திருமணத்திற்கு முன் பல நம்மை கடந்துச்  சென்றிருக்கும். பெற்றோரின் கருத்து வேறுபாடுகள், யாரோ ஒருவரின் தவறான தொடுதல், ஏமாற்றம், தோல்வி இப்படி ஏதாவது இருக்கலாம் இதை எல்லாம் அப்படியே சொல்லிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிகழ்கால நிம்மதியான வாழ்க்கைக்கு ஆண், பெண் யாருடைய கடந்த (கசந்த)காலமும் தேவையில்லை. இது உங்கள் இருவருக்கும் மட்டுமேயான ஒரு புதிய வாழ்க்கை. இதில் தேவையற்ற பழையன கழிதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இவர்களுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பற்றிய பேச்சுக்கள் மட்டும்தான் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டும். 

கண்ணைவிட்டு மறைந்த கடந்த காலம் பற்றிய கவலை இன்றி
கண்ணுக்கே தெரியாத எதிர்காலம் பற்றிய அதிக எதிர்பார்ப்பும் இன்றி
கண்முன் தெரியும் நிகழ்காலத்தில் எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்பதைப்  பற்றி மட்டுமே நினையுங்கள்...பேசுங்கள்... வாழ்வு வளமாகும்... தாம்பத்தியம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடட்டும்...........

இது ஆண்களுக்காக...


பெண் நம்மை போன்ற உயிரும் உணர்வும் உள்ளவள், பருவ வயதில் உண்டாகும் ஈர்ப்புக்கு ஆளாவது சகஜம் தான்' என்று ஒத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வேண்டும்.  தன் மனைவியானவள் தன் கடந்தகால காதலை தெரிவித்தால் 'பரவாயில்லை போனதுப்  போகட்டும், உன் தவறு ஏதுமில்லை...கடந்த காலத்தை காதலனுடன் சேர்த்துத்  தூக்கிப் போட்டுவிடு... இனி உனக்கு நான்தான் எனக்கு நீ தான்' என்று பெண்ணின் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியை முதலில் போக்குங்கள். ஆண்கள் இந்த விசயத்தில் கட்டாயம் மாறித்தான் ஆகவேண்டும். உண்மையை வெளிப்படையாக சொன்ன மனைவியின் வெள்ளை மனதைப்  புரிந்து அகமகிழ்ந்து அணைத்துக் கொள்ளும் அளவு மனம் பக்குவப்பட்டாக வேண்டும். அப்போதுதான் மனைவியும் கணவனிடம் தான் எதையும் மறைக்கவில்லை என்ற ஒரு மனநிம்மதியுடன் தன்னை புரிந்துக் கொண்ட கணவனைப்  போற்றுவாள், மனதார முழுமையாக காதலிக்கத் தொடங்குவாள் அந்த நொடியில் இருந்து ...!  இனிவரும் நாட்கள் நிச்சயமாக நலமுடன் அமையும்.   

* * *

ஒரு ஆண் தனது கடந்த காலத்தை மனைவிடம் "சொல்லாமல் தவிர்ப்பதா? சொல்லி தவிப்பதா?" எப்படி என்றும் பாக்கணுமே :) அதையும் பார்த்துடுவோம் இனி வரும் பதிவில் ... 

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


செவ்வாய், ஜூலை 16

பிரியமானவன் - MJ

ஒவ்வொருவரும்  யாரோ ஒருவரின் ரசிகராக இருப்பார்கள். பிடிக்கும் என்பதையும் தாண்டி ஒரு ரோல் மாடலாக, குருவாக எண்ணி அவரது கருத்துகளை பின்பற்றலாம். சிலர் நேசிக்கவும் செய்வார்கள், இது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நேசம். இத்தகைய நேசம் நம்மை நெறி படுத்துகிறது என்றால் நேசிப்பதில் தவறென்ன. என்றுமே ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பே இல்லையென்ற போதில் அவரை பற்றிய  நினைவுகளை சுமந்து வாழ்வது என்பது சுகம். இதை எழுத்தில் சொல்வது  மிக சிரமம், உணர வேண்டும்.  

ஒவ்வொரு வருடமும் ஒரு தினத்தில் MJ வின் மீதான நேசம் எழுதப்படவேண்டும் என்பது எனது முடிவாகிவிட்டது, என்றாலும் அழுத்தும் பணிச்சுமை, அதனை தொடர்ந்த பிரச்னை,சிக்கல் என்று என்னை தனித்து செயல்படவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. எப்போதோ ஒருசில நேரங்கள்  மட்டும் தனக்கு பிடித்தவர்களை நினைப்பவர்களுக்கு அவர்களை குறித்த தினங்கள் மட்டும் முக்கியமானதாக  இருக்கும். ஆனால் பிடித்தவர்களின் நினைவுகளுக்குள்  முப்பொழுதும் மூழ்கி கிடப்பவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம்தான். எனக்கும் அதுபோன்றே ஆகிவிட்டது, அவரது நினைவுதினம் முடிந்து சில நாட்கள் கழிந்தபின் கிடைத்த இந்த தனிமை, இதோ இப்போது என்னை எழுதவைத்துக் கொண்டிருக்கிறது.

ஜூன் 25 அன்று இந்த பதிவை எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதை விட நான் தனித்திருக்கவில்லை என்பதுதான் சரி. உறவுகள் நட்புகள் என்ற பெயரில் யார் யாரோ சூழ்ந்துக்கொண்டு  அவர்கள் இயக்க  இயங்கிக் கொண்டிருக்கிறேன் ஒரு இயந்திரமாக ! இவர்கள் எல்லோரும் எப்போதும் எதையோ பேசுகிறார்கள்... பேசியதற்கு மாறாக செயல்பட்டு அதுதான் இயல்பு, இயற்கை, கடவுள் என்று ஏதேதோ கூறி தங்கள் தவறுகளை தெய்வீகமாக்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நேசத்தை கொண்டாடும்  என் போன்ற ஆனந்தக் கூத்தாடிகளை பார்க்கும் போது உளருபவர்களாக தெரியலாம்...எனக்கென்னவோ நாங்கள் வாழ்க்கையை வாழ்வதாகவும்...மற்றவர்கள் வாழ்வதாக சொல்லிக்கொண்டு  எப்பொழுதும் பிறரின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிகிறது ! 

பிற பதிவுகளுக்கும் இதற்கும் ஒரே   ஒரு வித்தியாசம். மற்றவை பிறர் வாசிக்க  இது நான் வாசிக்க...சுவாசிக்க !  வார்த்தை அலங்காரங்களோ மேதாவித்தனமோ சிறிதும் இன்றி ஆழ்மன உணர்வுகள் அப்படியே வெளிப்படும் ஒரு இடம் இது...கட்டுக்கடங்கா நேசம் கொண்ட மனது குழந்தையாய் துள்ளிகுதித்து  எழும் உணர்வுகளை வார்த்தைகளாக்கிவிட்டே அமைதிக் கொள்கிறது . அப்படி என்ன ஒருவரின் மீது ஈடுபாடு என்று  பலர் பல வருடங்களாக கேட்டுள்ளனர். இதே கேள்வியை எனக்குள்ளும் கேட்டிருக்கிறேன் பதில் என்னவோ வழக்கம் போல 'பிடிச்சிருக்கு அவ்வளவுதான்' என்பதாக இருந்துவிடுகிறது.




அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் நுழைந்தே பழக்கப்பட்டு போன இந்த மனித சமூகத்திற்கு புரிவதில்லை இது போன்ற நேசங்கள். இன்றைய நட்புகளின்  நலம் விசாரிப்பதில் கூட ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சுயநலம் மட்டுமே பெரிதென்று வாழும் இந்த உலகில் உண்மையான நேசம்  பெரிதாய் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவர்கள்  சிரித்தால் நாம் சிரிக்கவேண்டும் அழுதால் அழவேண்டும்...இதற்கு மாறாக இருந்துவிட்டால் அந்த நிமிடமே நேசம் பொய்யென்று ஆகிவிடுகிறது.       

எல்லோருக்கும் பேச பழக ஏதோ ஒரு காரணம் தேவையாக இருக்கிறது...தேவைகள் ஏதுமின்றி நேசம் கொள்ள யாருக்குமிங்கே நேரமுமில்லை...அவசர உலகில் அன்பும் அலட்சியமாகிவிட்டது.

ப்ரியம் எந்த கணமும் எதன் மீதும் யார் மீதும் வரலாம், ஆனால் சக மனிதன் மீது கொள்ளும் நேசம் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவிடும். அது எப்படி இது எப்படி என்று வினா எழுப்பியே வீணாய் போனவர்கள் நிறைந்த மண் இது. எப்போதோ சிறுவயதில் கேட்ட ஒரு குரல், இப்போதும் சோர்ந்து போகும் நேரமெல்லாம் தோள் சாய்த்து ஆறுதல் படுத்துகிறது, இதை உணர பெரிதாய் ஏதும் தேவையில்லை நேசம் நம்மில் நிறைந்திருந்தால் போதும்.  

என்  பிரியமானவனே...

என்னை சுற்றி மனிதர்கள் பலர் இருக்க நானோ உன்னை உன் இசையை உன் குரலை சுற்றிக் கொண்டிருக்கிறேன். இது பிடித்திருக்கிறது, மிக பிடித்திருக்கிறது  !!  அழகாய் அருமையாய் என்னை பார்த்துக் கொள்கிறது உன் இசை. புது செல்போன் ஒன்று எனக்கு வாங்கியதும் எனது மகன்கள் இருவரும் பாடல்களை நெட்டில் இருந்து download செய்து போட்டி போட்டு போனில் அப்லோட் செய்து முடித்தார்கள் ...அத்தனையும் உனது பாடல்கள்  ! என் கணவரும் தன் பங்கிற்கு   'லிஸ்ட்ல அந்த 'You are not alone' சாங் விட்டுடாதிங்கடா' என அக்கறையாய் சொல்ல, எனக்கு பிடித்த உன்னை என் குடும்பமே கொண்டாடிய  அத்தருணத்தில் வானம் என் வசப்பட்டிருந்தது !

அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம்...காய்ச்சலின் தீவிரத்தில் படுக்கையில் இருந்த என் காதில் முதன்முறையாக ஒலிக்க தொடங்கியது ஒரு பாடல், அர்த்தம் சரியாக புரியாத நிலையில் அந்த குரலில் தெரிந்த ஏதோ ஒன்று  எனக்குள் அன்பு,இரக்கம், கருணை என அத்தனையும் சேர்ந்த ஒரு உணர்வு கலவையாய் எனக்குள் ஊடுருவிய நிலையில் மெல்ல கண் மூடினேன்...அன்று மூடிய விழிகளுக்குள் ஆழ்ந்துவிட்ட  அந்த குரல் இன்று வரை வெளிவரவே இல்லை !  இன்று வரை மானசீகமாய் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்,  'யாரோ நீ...? உனக்கு என் நன்றிகள்' ! எனக்குள்  இரக்கம், கருணை,நேசம்  இருக்கிறதென்றால் உன்னால் மட்டும் தான் என சத்தியம் செய்வேன். அறியா வயதில் எனக்குள் நீ விதைத்த நல்லவைகள் இன்றும் என்னை வழிநடத்துகிறது...

Think about the generations and to say we want to make it a better
world for our children and our children's children. So that they know
it's a better world for them; and think if they can make it a better
place.

Heal the world
Make it a better place
For you and for me and the entire human race
There are people dying
If you care enough for the living
Make a better place for
You and for me.

If you want to know why
There's a love that cannot lie
Love is strong
It only cares for joyful giving.
If we try we shall see
In this bliss we cannot feel
Fear or dread
We stop existing and start living
Then it feels that always
Love's enough for us growing
Make a better world, make a better world.

உனக்கு மரணம்  இத்தனை சீக்கிரம் வந்திருக்கக் கூடாது என அன்று  நினைத்தேன்...கோவில் சிலையிலும் ஆபாசத்தை தேடும் மோசமான உலகம் இது...அடுத்தவரில் குற்றம் குறை கண்டுபிடித்தே தன்னை ஒரு புத்தனாக காட்டிக் கொள்ள துடிக்கும் மனிதர்கள் நடுவில் வாழ்ந்தால் உன் போன்றோரை சாவிற்கு அவர்களாகவே அழைத்து சென்றுவிடுவார்கள். உன்னை குறித்த ஒவ்வொரு செய்தியையும் விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நீ மரித்து  நாலாண்டுகள் கழிந்த பின்னும்...

ஜூன் 25 அன்று  மண்ணைவிட்டு நீங்கினாய் என் போன்ற ரசிகர்களை விட்டு அல்ல...உண்மையில் முன்பை விட இப்போதுதான் என்னை மிக நெருங்கி இருக்கிறாய். சுவாசமாய் உன் குரல் இருக்க வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் அழகிய நினைவுகளுடன்  நினைவாய் !

உனது பாடல்
உன் ஞாபகத்தை கூட்டி
விழிகளில் நீர் பெருக்கி
இமைகளை நனைத்து நனைத்து
வரைய வைக்கிறது
உன்னை ஒரு ஓவியமாய்...

* * *

உனது இசையலைகள் 
மோதி மோதி
கரைத்துவிடுகின்றன
எனது சோகக்கரைகளை...

* * *

தேடி தேடி  சேகரித்த
உன் புகைப்படங்கள்
உன் வார்த்தைகள்
உன்  பாடல்கள்
உன் வெள்ளை சிரிப்பும்
அங்கும் இங்குமாய்
பதிந்திருக்கும் உன் தடங்கள்

இவை போதுமெனக்கு
இந்த ஜென்ம ஓட்டத்தை
முழுதாய்
நிறைவாய் ஓடி முடிக்க...

* * *

இன்றும் எனக்குள்
நீ இருக்கிறாய்...
உன் இசை இருக்கிறது...
நானும் இருக்கிறேன் !!

* * *

*  'People ask me how I make music. I tell them I just step into it. It's like stepping into a river and joining the flow. Every moment in the river has its song. So I stay in the moment and listen' 
    
  *  “Let us dream of tomorrow where we can truly love from the soul and know love as the ultimate truth at the heart of creation.”

*  “I spend a lot of time in the forest. I like to go into the forest and I like to climb trees. My favorite thing is to climb trees, go all the way up to the top of a tree and I look down on the branches. Whenever I do that it inspires me for music. There are these two sweet little kids, a girl and a boy, and they're so innocent; they're the quintessential form of innocence, and just being in their presence I felt completely speechless, 'cause I felt I was looking in the face of God whenever I saw them. They inspired me to write ‘Speechless.’”
- Michael Jackson 
* * *
சிலநேரம் மீண்டும் மீண்டும் பலமுறை கேட்கும் ஒரு பாடல் இது...தனது ரசிகரிடம் சொல்வதை போன்ற பாட்டின் இந்த வரிகள் வலிகொடுக்கும் தனிமைக்கு ஆறுதல் ! கேட்கும் ஒவ்வொருமுறையும் கண்கலங்காமல் இருக்கமுடிவதில்லை...கண்ணீரில் கரைந்தும்விடுகிறது மனக் கு(க)றைகள் 
You are not alone
I am here with you
Though we're far apart
You're always in my heart
You are not alone 
 
 
நான் எழுதிய  
முந்தைய பதிவுகள் 
பிரியங்களுடன்
கௌசல்யா