திங்கள், அக்டோபர் 8

பிரபஞ்ச காதலன் !



பதிவர்களைப்  பற்றி விமர்சனம் எழுதவேண்டும் என முடிவு செய்து முதல் பதிவராக உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களைப்  பற்றி எழுதினேன். அதன் பின் தொடர்ந்து எழுதணும் , ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இரண்டாவதாக எழுதவேண்டும் என குறித்து வைத்திருந்த ஒருவரின் பதிவுகளில் இருந்து 'இந்த பதிவை பற்றி சொல்லலாம்' என சிலவற்றைக்  குறித்து எழுதி வைப்பேன், மறுநாளே அவர் வேறு ஒரு போஸ்ட் எழுதி விடுவார், அது இதை விட சிறப்பா இருக்கும்...ஏற்கனவே எழுதியதை டெலீட் பண்ணிட்டு புது போஸ்டை பற்றி எழுதி வைப்பேன், இப்படியே கடந்த பல மாதங்களாக மாத்தி மாத்தி எழுதி எழுதி ஒரு வழியாகி(?!) விட்டேன்...!!

இப்படியே நாட்கள் போய் கொண்டு இருந்ததே தவிர விமர்சனப்  பதிவு வெளியிடவே இல்லை, (இவரை பற்றி எழுதி விட்டு தான் மற்றவர்களை பற்றி எழுதணும்னு  முடிவு வேற பண்ணி வச்சிட்டேன்) பதிவரைப் பற்றிய விமர்சனம் தானே பதிவுகள் எதுக்கு, பதிவுகளை விட்டுடுவோம்னு இப்பதான் ஒரு புதுசா  ஞானோதயம் வந்து இதோ எழுதிட்டேன்...இனி படிக்கிற உங்க பாடு...!! என்னிடம் மாட்டிக்கொண்ட அந்த பதிவர் பாடு ?!

யார் அந்த பதிவர் ?

தமிழ்ல சுமாரா எழுதுற எனக்கு இவரது எழுத்துக்கள் ஒரு பெரிய தாக்கத்தை கொடுத்தது. பொதுவாக  அனைத்து புத்தகங்களும் விரும்பிப்  படிப்பேன் ஆனால் குறிப்பிட்ட எந்த எழுத்தாளரின்  எழுத்திற்கும் தீவிர வாசகி இல்லை. பதிவுலகம் வந்த புதிதில் பல தளங்கள் சுற்றி வந்த போது தற்செயலாக இவரது கவிதை ஒன்றைப்  படித்தேன்...என்னமோ ரொம்ப பிடிச்சது...அதிலிருந்து ஆன்லைன் வரும்போதெல்லாம் இவர் தளம் செல்வது வழக்கமாகிவிட்டது...நேரம் கிடைத்தால் படிக்க வரும் நான், பின்பு இவரது எழுத்தைப்  படிப்பதற்காக நேரத்தை ஒதுக்க தொடங்கினேன்...!

ஒரு தடவை படிக்க ஆரம்பிச்சா மறுபடி அங்க இருந்து வெளில வர்றது ரொம்ப சிரமம்னு லேட்டா புரிஞ்சது  :)

ஒவ்வொருவருக்கும் சுஜாதா,ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,பாலகுமாரன்  மாதிரி எனக்கு இவர் !!

இவர்தான் அவர்...

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அருகிலிருக்கும் குருக்கத்தி இவரது சொந்த ஊர் என்றாலும் இவர் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், இவர் தற்போது வசிப்பது துபாயில்...வாரியர் என்ற பெயரில் எழுதிவரும் திரு.தேவா  இன்று வரை 475 பதிவுகள் எழுதியுள்ளார். தமிழின் மேல் தீராக்  காதல் கொண்ட இவரது எழுத்துக்கள்  ஒவ்வொன்றும்  செந்தமிழால் செதுக்கி சீர்திருத்த சிந்தனையால் வடித்த அற்புத படைப்புகள்...


பாலகுமாரனின் எழுத்துகள் பால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகராக இருப்பவர். இவரது எழுத்துக்களில் பாலகுமாரனின் தன்மை இருப்பது இயல்பு என்று  வெளிப்படையாக ஒத்துக்கொள்வார். தனது பதிவுகளுக்கு தேர்ந்தெடுக்கும் படங்கள் இவரது படைப்பை பிரதிபலிப்பதாக, ஆயிரம் அர்த்தங்கள் உள்ளடக்கியதாக இருப்பது ஆச்சர்யம்...!

வானத்தின் தூரங்களை
என் எண்ணங்களால் அளந்துவிடுவேன்
கற்பனையில் வரும் வார்த்தைகளுக்கு
அலங்காரம் செய்து கவிதைகள் என்பேன்
தனிமையில் இருந்து கொண்டே
உற்சாக ஊர்வலங்கள் செல்வேன்
கனவுகளில் எனக்கான காதலியின்
கைப் பிடித்து போகாத தூரங்கள் போய் வருவேன்

இறை என்ற விசயத்தை....என்னுள்ளே
தேக்கி வைத்து நான் ஏகாந்த புருஷனென்பேன்
புல்லோடு சர்ச்சைகள் செய்வேன்
புயலோடு காதல் செய்வேன்
கடலோடு காவியம் பேசுவேன்
மெல்ல நடக்கையில் 

சிறகு விரித்து பறந்தே போய்விடுவேன்...!

இப்படி தன்னைத் தானே கவிதையில் விமர்சிக்கிறார். உண்மையும் அதுதான் என்பதைப்  போல அவரது எழுத்துக்கள் இருக்கும். எழுதுவதை சுவாசமாக எண்ணுபவர். 

காதல் 

மரம், செடி, பூ, மழை, காற்று, நதி, நிலா, மொட்டை மாடி என்று எதன் மீதும் காதல் கொள்வார். காதலிப்பதுடன் நில்லாமல் கவிதைகளாக எழுதி தள்ளுவார்...படிக்கும் பலருக்கும் இவர் காதலை பெற்ற பெண் யாராக இருக்கும் என்ற ஆவல் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படி உருகி உருகி இவர் எழுத்தில் கொண்டு வந்திருப்பது ஒரு மலை, சிறு பூ, ஒரு வண்ணத்துபூச்சி, நதி இவை மீதான காதலாக கூட  இருக்கலாம். இயற்கையை இவர் அளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் நாம் இவரது கண்ணால் காண வேண்டும், உணரவேண்டும்...!!  பிரபஞ்சக்  காதலன் இவர் !!

//உடலோடு சம்பந்தப்படாமல் நாம் நேசிக்கும் எல்லாமே காதல்தான்...உடல் வரும்போதுதான் அங்கே சுயநலங்கள் உயிர்த்துக் கொண்டு உண்மையை அழித்து விடுகின்றன.....//

காதல் மொழி பேசிக்கொண்டே மறுபக்கம்  'ஏனடா வீளுகிறாய் எழு' என்ற புரட்சி கொந்தளிக்கும் வரிகளை வீசி திணறடிப்பார்...!

ஈழம் 

தனி ஈழம் கிடைத்தே தீரும் என அழுத்தமாக பதிவு செய்வார். ஈழ மக்களுக்காக இவர் எழுதிய பதிவுகள், கவிதைகளைப்  படிக்கும் போது இமைகள் நனைவதை தவிர்க்க முடியாது. அந்த எழுச்சியை நம் மீதும் ஏற்றிவிடுவார். தமிழனாய் பிறந்ததை பெருமையாக எண்ணுகிறேன் என ஒவ்வொரு முறையும் சொல்லி ஆனந்தப்   பட்டுக்கொள்ளும் இவரது தமிழ் காதல் படிக்கும் நம்மையும் பெருமைக்  கொள்ளச் செய்யும்...

ஆன்மிகம்

சிவனின் ருத்ரதாண்டவம் இவரது எழுத்தில் !! ஆன்மீகத்தை பற்றிய இவர் எழுத்துக்களை வாசிக்கும் போது தேர்ந்த முதிர்ச்சி தெரியும்...சாமியாராக போய்விடுவாரோ என்று கூட தோன்றவைக்கும். ஆனால் இவரது தேடல்கள் தொலைந்துப்  போன ஒன்றை தேடுவதாக இல்லை...பிரபஞ்சத் தேடல் ! கடவுளைப் பற்றியதான   தேடல்,  இப்போது மனிதர்களின் தேடலாக மாறி இருக்கிறது ! இரண்டும் வேறல்ல என்பதைப்  போன்ற எழுத்தை நான் இதுக்கு மேல சொல்லக் கூடாது, அவை படித்து உணரக்கூடியவை !

ஆன்மிகம் தொடர்பான பதிவுகள் சாதாரணமாக எழுதியதை போல் அல்லாமல் ஆழ்ந்த தியானத்தில்  அமர்ந்தபின் எழுதியதை போல் இருக்கும், ஆழ்ந்து வாசித்தால் நாமும் தியான நிலைக்குள் ஆட்படுவது சத்தியம் ! இதை  அநேக தடவைகள் நான் உணர்ந்திருக்கிறேன்.

காமம் பற்றி குறிப்பிடும் வரிகளில் ஒரு நளினமும் நாகரீகமும் இருக்கும்...ஆன்மீகத்தையும்  காமத்தையும் இணைத்து இதோ ஒரு சில வரிகள்,

//பிரபஞ்ச சூட்சுமத்தின் இத்தியாதிகளை தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் காமமென்னும் கடலை நாம் கடந்த இடம்.

மோகத்தில் மேகங்கள் உரசி பெருமழை பெய்விப்பது போல தாகத்தில் நாம் உரசி...சாந்தியடைந்து தட்சிணாமூர்த்தி தத்துவத்தை கற்று தேர்ந்து கலவி செய்த இடம். இருந்ததனை இருந்ததுபோல இருந்து காட்டி வாய் பேசாமல் பிரபஞ்ச ரகசியத்தின் நிழல்தனை தொட்ட இடம்...!

நானற்று, நீயுமற்று வெறுமனே இருந்து மூல இருப்பினை உணரவைத்த காமத்தின் உச்சத்தில் கடவுளைக் கண்டோம் என்று மானசீகமாய் எழுதி கையெழுத்திட்ட ஒரு மடம்
.//

//விழிகளால் தீட்சைக் கொடுத்து காதலை எனக்குள் ஊற்றி, உள்ளுக்குள் அழுத்தமாய் இருந்த எல்லா ஆளுமைகளையும் அவள் உடைத்துப் போட சரணாகதியில் இறைவனின் பாதம் தேடும் பக்தனாய் நான் எனக்குள் கதறத் தொடங்கி இருந்தேன். காமம் உடல் வழியே உச்சம் தேடி அந்த உச்சத்தின் வழியே கடவுள் என்னும் சூட்சுமத்தை உணரும் ஒரு வழிமுறை... , //

இவரது எல்லா பதிவுகளையும் படித்தாலும், சிலவற்றுக்கு கமென்ட் எப்படி, என்ன  போடனு யோசிச்சிக்கிட்டே வெளில வந்துடுவேன். ஏதோ நாம ஒன்னை எழுத அது அந்த படைப்பையே திசைத்  திருப்பிக்  கெடுத்துவிடுமோனு  ஒரு பயம் தான் !! :)  என்னை மாதிரிதான் நிறைய பேர் இருக்காங்கனு நினைக்கிறேன் . :)
 

அவரது படைப்புகளில் சில அறிமுகங்கள்...

ரஜினியின் தீவிர ரசிகர். அவர் நடித்த படங்களை விட ரஜினி என்ற மனிதரின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பல பதிவுகள் இவரைப்  பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்று  ரஜினி என்னும் வசீகரம் 

தனது 200 வது பதிவில் தந்தையைப்  பற்றி எழுதி இருப்பார், படித்தவர்கள் கண்கலங்காமல் வெளிவர இயலாது. உணர்வுப்  பூர்வமான உணர்ச்சி கலவை அப்பா 

காதலை ரசித்துக்  கொண்டாடுபவர்களுக்காக  சுவாசமே காதலாக  

கவிதைகள் அதிலும் காதல் கவிதைகளின் ரசிகரா நீங்கள், அப்படினா கண்டிப்பா இந்த காதல் கவிதைகள் படித்துப்  பாருங்கள். காதலை உணருவீர்கள், காதலிக்க தொடங்கிவிடுவீர்கள்

ஆன்மிகம் என்பது மதம் சம்பந்தப்பட்டதா இல்லையா என உங்களுக்குள் ஒரு கேள்வி இருந்தால் அவசியம் இங்கே கிளிக் செய்யுங்கள், படித்து முடித்ததும் பதிலும் கிடைக்கும் கூடவே ஒரு தெளிவும் பிறக்கும்.

ஆன்மிகம் எழுதியவர் இந்த கிராமத்தான் தானா என வியக்கவைக்கும்,
கிராமத்தாய்ங்க தான்  நாங்க 

கண்களை கலங்கவைத்து, மனதை கொந்தளிக்க வைக்கும் ஈழம் 

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு வீரத்தமிழச்சி இந்த வெட்டுடையாள் 

லோக்கல் தமிழ், சென்னை தமிழ், அந்த தமிழ், இந்த தமிழ்னு பல விதமா எழுதுற திறமையை நிஜமா பாராட்டனும். அப்புறம் சீரியஸ், நக்கல், நையாண்டி, தெய்வீகம், அன்பு, பாசம், காதல், சிநேகம், வீரம்,செண்டிமெண்ட், கோபம், துக்கம், ஆதங்கம், ஆவேசம், ஏக்கம் அப்டி இப்டின்னு எல்லாம் உணர்ச்சியையும் கலந்துக்  கட்டி எழுதுற இவரது எழுத்தை இதுவரை படிக்கவில்லை என்றால் லைப்ல எதையோ மிஸ் பண்ணிட்டீங்கனு அர்த்தம் !

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம், ஆனால் முடிச்சாகனுமே என்ற ஒரு யோசனையிலும் எப்படி முடிக்க என்ற தர்மசங்கடத்திலும், ஒருவழியாக முடிக்கிறேன்.

அப்புறம் விமர்சனம் என்றால் நிறைகுறைகளை சொல்லணும். நிறை சொல்லிட்டேன், குறையும் சொல்லிடுறேன். (இங்க சொன்னா தான் உண்டு) :)

தேவா, 

* உங்களின் சில படைப்புகளின் பொருள் எல்லோராலும் புரிந்துக்கொள்ள முடியாதவை, கொஞ்சம் எளிய நடையில் இருந்தால்  புரிந்துக்கொள்ள முடியும். சாதாரண தமிழையே சிறிது ஆங்கிலம் கலந்து சொன்னால் தான் புரிகிறது. ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது  எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும். வேகமாக படித்து கடந்து செல்லும் மனநிலையில் தான் இங்கே பலரும் இருக்கிறார்கள், தவிரவும் மற்றவர்கள் படிக்கவேண்டும் என்று தானே இங்கே எழுதுகிறோம்.

ஒரு படைப்பாளியின் படைப்பு பலருக்கும் சென்று சேர்ந்தால் தான் அந்த படைப்பு முழுமை பெறும்.  நல்ல எழுத்துக்களை பலர் அறியாமல் போனால் மோசமான எழுத்துக்கள் தான் இங்கே பரவி நிரவி இருக்கும். நாளைய தலைமுறைகள் அத்தகைய எழுத்துக்களைப்  படித்துவிட்டு இதுதான் நம் முன்னோர்களின் நிலை என்று எண்ணிவிட கூடிய ஆபத்து இருக்கிறது. கம்பனையும் வள்ளுவனையும் பாரதியையும் இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு தெரியும்...??! அந்த எழுத்துக்களை புரிந்துகொள்ளக் கூடிய அளவில் இல்லை இன்றைய நம் கல்விமுறை...!! புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்ட இந்நாளில் இணையம் ஒன்றே அவர்கள் முன் இருக்கிறது. இங்கே நல்ல எழுத்துக்கள் அதிகம் படிக்கப்படணும், படிக்க வைக்கப்படணும்.

* 'புரிதல் உள்ள ஒருவர், இருவர் என் எழுத்தை படித்தால் போதும்' என்று எண்ணாதீர்கள். எளிய தமிழில் அதிகம் எழுதுங்கள்.

பாரதி அவர் வாழ்ந்த காலத்தில் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை காரணம் அவர்களை விட்டு தனித்து தெரிந்தார்...!!சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட நீங்கள், சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எழுதிவிட்டேன் என்பதுடன் நின்றுவிடக்கூடாது...!!

*  அப்புறம் ஒரு தொடர் பதிவை முடித்துவிட்டு அடுத்ததை தொடர்ந்தால் வாசகர்களுக்கு தொடர்ச்சி புரியும். (முன்னாடி என்ன படிச்சோம்னு மறந்து போய்  மீண்டும் தேடிப்  பிடித்து படிக்கிறேன்)

*  சிறந்த தளங்களின் பதிவுகளை படித்தால் அங்கே உங்களின் கருத்துகளை பதிய வைக்கலாம். பதிவுலகில் எழுதுவதை பலர் குறைத்து கொண்டிருக்கிறார்கள். உங்களது கருத்துக்கள் அவர்களை உத்வேகம், உற்சாகம் கொள்ள வைக்கலாம். இதற்காக உங்களின் நேரத்தில் கொஞ்சம் இதுக்கு  ஒதுக்கினால் என்ன ?! 

இணைய உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் 

இணையத்தில் நல்லதும் கெட்டதுமாய் பல விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கு நல்லது எது என தேடி எடுத்துக்கொள்வதை போல இவரை போன்றோரின் எழுத்துகளையும் தேடி எடுக்கவேண்டும்.

அங்கே சென்று பின்னூட்டம் இட வேண்டும் என சொல்லவில்லை ஆனால் அவசியம் படியுங்கள்...இது வேண்டுகோள் அல்ல விருப்பம்...நான் சுவைத்த நல்ல தமிழை, நல்ல பண்பை , நல்ல எழுத்தை நீங்களும் சுவைத்து பாருங்கள் !! மோசமான எழுத்துக்களும் மலிந்து கிடக்கும் இங்கே இவரை போன்றோரது எழுத்துக்களை நாம் கவனிக்கத்  தவறிவிடக்கூடாது.

படைப்பாளிகள் பலர் அவர்கள் வாழும் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்ட துர்பாக்கிய நிலை நாம் அறிந்ததே...! அதே தவறை இவரை போன்றோருக்கும் நாம் செய்துவிட கூடாது...நம்மால் கண்டுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கபட்டால் மேலும் பலர் வெளி வருவார்கள்...நம்மால் நல்ல எழுத்தை படைக்க இயலாவிட்டாலும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவோம்...ஒரு சமூகம் நல்ல எழுத்தாளர்களாலேயே கட்டமைக்கப் படுகிறது.

பின் குறிப்பு 

இனி எப்படியாவது தொடர்ந்து எனக்கு தெரிந்த படைப்பாளிகளை பற்றி எழுதவேண்டும். மூணாவதாக  ஒருத்தரை எழுதனும்னு முடிவு பண்ணி இருக்கிறேன்...! அவர் ரொம்ப பிரபலமா தான் இருந்தாரு, இப்போ கொஞ்ச நாளா சிலருக்கு பிராபளமா தெரிய ஆரம்பிச்சு இருக்காரு...!! (நான் எழுதினதுக்கு அப்புறம் எனக்கும் பிராபளமா ஆகிடுவாரோ !?) முடிவு பண்ணியாச்சு பார்ப்போம். அப்புறம் இந்த தடவை சீக்கிரம் எழுதிடுவேன்னு நினைக்கிறேன் :-)




பிரியங்களுடன்
கௌசல்யா 

வியாழன், அக்டோபர் 4

பசுமை விடியல் நிர்வாகிகளின் முதல் சந்திப்பு - காஞ்சிபுரம்

பசுமைவிடியல் அமைப்பை சேர்ந்த   அனைத்து நிர்வாகிகளின்  சந்திப்பு கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரத்தில் மிக இனிமையாக நடந்து முடிந்தது. இணையத்தின் மூலம் அறிமுகமாகி, ஒத்த கருத்தில் ஒன்றிணைந்து, அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு கொண்டிருந்த நாங்கள் அன்றுதான் நேரில் முதல்முறையாக சந்தித்தோம்.  ஒரு கிராமத்தில் ஏதாவது ஒரு பெரிய மரத்தடியில் மண் வாசனையுடன் மீட்டிங் வைக்கலாம் என கேஆர்பி செந்தில் அவர்களிடம் கேட்டபோது, 'நன்றாக இருக்கும் ஆனா இப்போ இங்க மழை காலமாக இருக்கிறது, ஏதாவது ஹால்னா பெட்டெர்'னு சொன்னதால் ஹால் என முடிவு செய்தோம் 


மண்ணோட சம்பந்தப்பட்ட பசுமைவிடியலுக்கு ஹால்,பேனர்,மைக், ஸ்பீக்கர் இந்த மாதிரி எதுவும் தேவையில்லை என்பதே நிர்வாகிகள் எல்லோரின் விருப்பமாக இருந்தது.  மண்டபம், உணவு அரேஞ்ச்மென்ட் எல்லாம் காஞ்சிபுரம் தன்னார்வலர் திரு.அருள் செய்திருந்தார். 

கலந்து கொண்டவர்கள் 

சென்னையில் இருந்து திரு.செல்வகுமார், திரு கேஆர்பி.செந்தில், திரு சிவகுமார் மற்றும் பெங்களூருவில் இருந்து திரு.பிரபு கிருஷ்ணா, திரு.சூர்ய பிரகாஷ், திருநெல்வேலியில் இருந்து திரு.ஜோதிராஜ், திருமதி கௌசல்யா கலந்து கொண்டனர். மேலும் பசுமைவிடியலின் தன்னார்வலர்கள் காஞ்சிபல்லவன் கல்லூரிபேராசிரியர்திரு.சண்முகம்,திரு.அருள்,திரு.பூபாலன், திரு.ஜெய்சங்கர் திரு.மாதேஷ், திரு.செந்தில்,திரு.கணேஷ் ,   மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

காலையில் நிர்வாகிகளின் சந்திப்பு மிக இனிமையாக நகைச்சுவையுடன் சென்றது. பசுமைவிடியல் பற்றிய பேச்சுக்கு நடுவே கேஆர்பி அவரது சில அனுபவங்களை முக்கியமாக அவர் நடித்த குறும்படம் படப்பிடிப்பு சம்பவங்களை விவரித்தபோது சிரிப்பால் ஹால் அதிர்ந்தது. எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் பேசக்கூடிய வெகு சில மனிதரில் ஒருவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்கள் என்றும் என் நினைவில்...!  


உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்த கலந்துரையாடலில் எல்லோரும் தங்கள் கருத்தை கூறியது  மிக இயல்பாக இருந்தது. ஒவ்வொருத்தர் பேச்சிலும் சமூகத்தை பற்றிய அக்கறை அதிகம் தெரிந்தது. சொல்லப்பட்ட யோசனைகள், ஆலோசனைகள் குறித்துக்கொண்டோம். வந்திருந்த உறுப்பினர் ஒருவர் "பள்ளி, கல்லூரிகளில் இருந்து நமது விழிப்புணர்வை தொடங்கவேண்டும், அவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றி பேச ஒருநாளில் ஒரு பத்துநிமிட நேரம் செலவிட்டால் போதும், அவர்கள் தான் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்படுவார்கள்" என்று சொன்னார். குறும்படம், சிலைட் ஷோ, பவர்பாயின்ட் ப்ரசன்டேசன் போன்றவை மூலமாக இன்னும் சரியாக மனதில் பதியவைத்துவிடலாம் என்பதால் அதனை தயாரிக்கும்,திரட்டும் வேலைகளில் விரைவில் இறங்க வேண்டும் என முடிவு செய்தோம். 

                                  (சிவகுமார் பேச அருகில்  KRP.செந்தில், சண்முகம் சார் )
திரு.சிவகுமார் , இயற்கையின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறை அன்று இவரது பேச்சில் முழுமையாக வெளிப்பட்டது. சாதனை மனிதர் திரு.யோகநாதன் அவர்களை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். தனிநபராக பல ஏக்கர் நிலபரப்பில் ஒரு காட்டை உருவாக்கிய திரு.ஜாதவ் பயேங் பற்றியும் பேசப்பட்டது. 

சில நிகழ்வுகள், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-

பசுமைவிடியலின் மூன்றாவது திட்டமான கிராமம் தத்து எடுப்பது குறித்த யோசனைகள் பரிமாறப்பட்டன. அந்த கிராமத்தில் என்னவெல்லாம் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை குறித்துப் பேசப்பட்டன.

                                                           (வெகு உற்சாகமாக...!!)

* கிராமத்தின் முக்கியஸ்தர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் அடிப்படையில் முதல் கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழம்பி முடிவு செய்யப்பட்டு அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமைவிடியல் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மரம் நடுவது கிராமம் முழுமைக்குமாக விரிவு படுத்தப்பட இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் ஊர் குளத்தை சுற்றி கன்றுகள்  நடப்படுகிறது.   

                                         (ஒரே சமயத்தில் ஒன்றாக வரிசையாக நடப்பட்டது) 

* இரண்டாவதாக 'திடக் கழிவு மேலாண்மை திட்டம்' (குப்பைகள் மறுசுழற்சி) குறித்த யோசனை ஒன்று  முன்  வைக்கப்பட்டது. இதனை பல்வேறு கட்டமாக படிப்படியாக செயல்படுத்த என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி நிர்வாகிகள் கலந்து முடிவு செய்தார்கள்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தின் பசுமைவிடியல் PROJECT EXECUTIVE வாக திரு.அருள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரு.கேஆர்பி.செந்தில் அவர்களால் முன் மொழியப்பட்டது. 
 
* அன்று மாலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி அருகில் உள்ள வள்ளலார் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பசுமைவிடியல் சார்பில் ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.

முக்கிய துளிகள்

திரு.சிவகுமார் அவர்கள், வருடந்தோறும் சென்னையில் நடக்கும் யூத் பதிவர் சந்திப்புக்கு அடுத்த  முறை   'PROJECT EXECUTIVE' திரு.அருள் அவர்களை அழைத்து கௌரவிப்பதாக கூறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

                                          (மரம் நடுபவர் அருள், அருகில் செல்வா அண்ணா )

திரு.அருளை பற்றி குறிப்பிட்டாக வேண்டும், பசுமைவிடியலில் இணைவதற்கு முன்பே ஊரில் பல பகுதிகளில் மரங்களை நட்டு, தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருபவர். MBA படித்திருக்கும் இவர் கெவின் கேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும் பல உறுப்பினர்களை பசுமைவிடியலில் இணைத்தும் வருகிறார்.

நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆட்களை பசுமைவிடியலின் ஆலோசனையின் படி திரு. அருள் ஏற்பாடு செய்து கவனித்துக் கொள்கிறார்.

மன நிறைவு 

கிராம மக்களின் அனுமதி, ஒத்துழைப்பு, ஆர்வம், அக்கறை இல்லாமல் வெளியில் இருந்து மற்றவர்கள் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை அறிந்திருப்பதால்  அங்குள்ள பெரியவர்களை  அவ்வப்போது கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். வெகு விரைவில் அங்கே அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திலும் களப்பணிகளை தொடர இருக்கிறோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட சந்திப்பு, களப்பணிகள் சிறப்பாக இருந்தது.  மழை குறைந்த வரண்ட பகுதிகளில் மரம் நடுவதை அதிக அளவில் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சந்தர்ப்பம் அமைந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பசுமைவிடியல் திட்டங்களை செயல்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்.


பிரியங்களுடன்                                     
கௌசல்யா
பசுமைவிடியல்