செவ்வாய், செப்டம்பர் 4

AM 10:45
73


இரண்டு வருடங்களுக்கு மேலாக பதிவுலகம் மூலம் பெற்றவை நிறைய அனுபவங்கள், படிப்பினைகள், நட்புகள், சகோதர உறவுகள் பெயரில்  மனிதர்கள் ! ஆம் மனிதர்கள்...பல்வேறு விதமான முகங்கள் கொண்ட மனிதர்கள்...இணையத்துக்கு வெளியே இருக்கும் அதே மனிதர்கள் தானே இங்கேயும், இவர்களை படித்தவர்கள், பண்பட்டவர்கள் என்று எண்ணினால் அது நம்பியவர்களின் தவறு என்கிறது பதிவுலகம். அதிலும் சகோதர உறவு பாராட்டி பழகியவர்களின் நிஜ(?)முகம் பற்றி தெரியவரும் போது பெண்கள் அடையும் மனவேதனை மிக அதிகம்.

சகோதரி என்று அழைத்தால் மனதிலும் அவ்வாறுதான் எண்ணுவார்கள் என்பதற்கு மாறாக அதே பெண்ணை பற்றி தன் நண்பர்கள் மத்தியில் குறிப்பிட்டு கிண்டல் செய்து மகிழ்கிறார்கள் என்று தெரியவரும் போது 'உறவுகளின் உன்னதம்' தெரியாத உன்மத்தர்கள் என்று சொல்வது தான் சரி. இதை பற்றிய ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பதிவுலகத்தில் ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்று காட்டிகொள்வதில் நடக்கும் ஈகோ யுத்தத்தில் சகோதர உறவுகளும் தப்புவதில்லை.  

அண்ணன் என்ன? தம்பி என்ன? 

பொதுவாக  நம்ம ஊர் வளர்ப்பு எப்படி என்றால் அண்ணனோட நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அம்மா சொல்வாங்க 'அண்ணன்னு கூப்பிடு' நாமளும் அதையே பாலோ பண்ணுவோம் (ஒன்னு இரண்டு, அண்ணன் பிரண்டை லவ் பண்ணி செட்டில் ஆகிடுவாங்க...அது வேற விஷயம்!) :)

அண்ணன் தம்பியருடன் பிறந்த பெண்கள் பிற ஆண்களுடன் சகஜமாக பேசுவார்கள், தயங்க மாட்டார்கள்.  தன்னைவிட  மூத்தவர்களை அண்ணன் என்றும் இளையவர்களை பெயர் சொல்லியும் தம்பி என்றும் அழைப்பார்கள். கூட பிறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருந்தால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என நினைக்கிறேன்.

பதிவுலகம் பொருத்தவரை புதிதாக பேசக்கூடிய ஆண்களிடம் ஒரு பாதுகாப்புக்காக அண்ணன், சகோனு சொல்லிக்கிறோமா அல்லது எதுக்கு வம்பு இப்படியே கூப்டுவோம் என்றோ இருக்கலாம்...அவரவர் விருப்பம்.

என் சகோதரர்கள் 

'செல்வா ஸ்பீகிங்' செல்வா அண்ணனை முதல் அறிமுகத்தின் போது சார்னு கூப்ட்டு பேசிட்டு, கிளம்புற சமயம் 'சார்னு சொன்னா நல்லா இல்ல, உங்களை அண்ணன்னு சொல்லட்டுமா' என கேட்டேன்... அவரும் 'தன்னியனானேன் தங்க்ஸ்' என்று கூறிவிட்டார். அப்புறம் என்ன, ஒரு வருஷமா இரண்டு பேரும் பேசாம இருந்த நாட்கள் ரொம்ப குறைவு என்ற அளவுக்கு ஆகிபோச்சு. என்னை  உற்சாகபடுத்தி எனது சமூக சேவைகள் தொடர உறுதுணையாக இருக்கும் அருமையான அண்ணன் இவர்...! 

இன்னொருத்தர்  'உணவு உலகம்' சங்கரலிங்கம் அண்ணா  'என்கூட பிறந்தவங்க எல்லோரும் ஆண்கள் , அக்கா தங்கை கூட பிறக்கலைன்னு வருத்தம் நிறைய உண்டு அந்த குறை இனி இல்லை'னு சொல்லி உரிமையாக தங்கையாக்கி கொண்டவர். டிரஸ்ட் தொடங்க தைரியம் கொடுத்த அன்பான நல்ல மனிதர் !

அப்புறம் ஒருத்தரிடம் முதல் முறையா சாட்டில் பேச, உடனே அவர் உங்க போன் நம்பர் கொடுங்க, டைப் பண்ண பொறுமை இல்லன்னு சொல்ல, "அடடா என்ன இது, ஆரம்பமே இப்படி, மத்தவங்க சொல்ற மாதிரி ஆள் ஒரு மாதிரி தானோ" என யோசிச்சு 'சரி பார்த்துக்கலாம்'னு நம்பர் கொடுத்து பரஸ்பரம் அறிமுகம், பதிவுலகம் என்று பேச்சு போனது. அப்புறம் எப்போவாவது பேசி கொண்டதுண்டு. "என்கிட்டே பேசுறதா வெளில சொல்லாதிங்க, உங்களையும் ஒரு லிஸ்ட்ல சேர்த்துடுவாங்க" என்று சிரித்துக்கொண்டே ஒருநாள் சொன்னார். பதிவுலகத்துல ரொம்ப நல்ல பேர் தான் எடுத்திருக்கிறார் போலன்னு உள்ளுக்குள் ஒரு உதறல். பேர் சொல்லி பேசிக்கொள்வோமே தவிர நண்பர் என்றோ, சகோதரன் என்றோ சொல்லிகொண்டது இல்லை. ஒருநாள் போன் செய்து சொன்னார், "கௌசல்யா உங்களுக்கு மருமகள் பிறந்திருக்கிறாள்" 

உறவுகளை எப்படி கையாளணும் என்கிற பண்பு தெரிந்தவர். முக்கியமாக முகமூடி போட்டுக்கொள்ளாதவர். தன்னை குறித்து யாரும் எதுவும் சொல்லிக்கொண்டு போகட்டும், கவலை இல்லை. நான் நானாகத்தான் இருப்பேன் என்பவர். சகோதரன் என்ற முகமூடி அணிந்து உள்ளுக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக தெரிந்தார்.

பதிவுலகின் மூலம் நிறைய தம்பிகள் இருக்கிறார்கள்...பசுமைவிடியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் அவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதில் எனக்கு மகிழ்வுடன் ஒரு நிறைவு இருக்கு. பதிவுலகம் எனக்கு இதுபோன்ற நல்ல சகோதர உறவுகளை கொடுத்திருப்பதில் பெருமைபடுகிறேன்.

உறவுகளின் உன்னதம்

பொண்ணுங்க தங்களை டீஸ் பண்ற ஆண்களை திட்டும்போது 'அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா'னு கேட்பாங்க. அப்படி பிறந்திருந்தா சகோதர உறவின் அருமை தெரிந்திருக்கும், இப்படி இன்னொரு பெண்ணை டீஸ் பண்ண மாட்ட, அவளையும் உன் சகோதரியாக தான் நினைக்க தோணும் அப்டின்னு அர்த்தம் . (பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை என்பதால்  இனி இப்படி திட்ட முடியாது போல...!?)

ஒரு  பெண் ஆணுடன் சகஜமாக பேசுகிறாள் என்பதால் அவளை பற்றி அடுத்தவரிடம் எப்படியும் பேசலாம் என்கிற உரிமையை யார் கொடுத்தார்கள்...?!

பேச்சுக்கு பேச்சு சகோ, அக்கா என்று அழைத்து பழகியவர்கள் தன் நண்பர்களிடம் பேசும் போது அந்த  பெண்ணை குறித்து விமர்சிப்பது எத்தகைய துரோக செயல் ! வெறும் உதட்டளவில் மட்டும் தானா உறவுகள் ??!  இவர்களை பற்றிய உண்மை தெரியும் போது அந்த பெண்ணின் மனநிலை ??! இப்படி பட்டவர்கள்  பெண்களை கேலி செய்யட்டும் தவறில்லை, அதற்காக சகோதர உறவு கொண்டாடாமல் சாதாரணமாக யாரோ எவரோ என்று பேசிவிட்டு போகலாம். 

இங்கே ஒரு நடிப்பு அங்கே ஒரு நடிப்பு என்று ஆளுக்கொரு வேடம் தரிக்கும் இவர்களை போன்றவர்கள் பிறரை மட்டுமல்ல தங்களையும் ஏமாற்றி கொள்கிறார்கள்...!!

சகோதரன்

சகோதர  அன்பு சாதாரணமானது அல்ல...அண்ணனை அப்பா ஸ்தானத்திலும் தம்பியை மகனாகவும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர அன்பிற்கு கிடையாது. அண்ணன் என்றால் அண்ணன் தான் அதை தவிர்த்து வேறு எதையும் யோசிக்க மாட்டாள் ஒரு நல்ல பெண்...ஒரு குழந்தையாய் விசயங்களை பகிர்வதாகட்டும், சிக்கல்களை சொல்வதற்காகட்டும் முதலில் சகோதரனை தான் தேடுவாள்.

நட்புகளிடம் சொந்த விசயங்களை பகிர மிக யோசிப்பவள், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம்  தயங்காமல் கூறிவிடுவாள். சகோதர பாசம் துரோகமிழைக்காது  என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை.

சகோதர அன்பு ஒருவர் செய்யும் தவறினை எளிதாக கண்டுபிடித்து ஒருவரை நல்வழி படுத்தவும் , சரியான பாதையில் வழிநடத்தி செல்லவும் உதவும். 

உலகின் உன்னத உறவு சுயநலமில்லாத உறவு, ஆதரவாய் தோள் கொடுக்கும் உறவு சகோதர உறவு. இந்த உறவு அமையபெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போல் கையாளுவது ஏனோ தெரியவில்லை.

கிடைத்த நல்ல உறவை தக்கவைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி தன்னை நேசிக்கும் உன்னத உறவை  ஈகோ, பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்றவற்றுக்காக இழந்துவிடுகிறார்கள்.

சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிகொண்டிருக்கும் ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்து கேலி பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்து பேசுவது போன்றதை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்வார்களா ?! நிச்சயம் செய்ய மாட்டார்கள். உடன்பிறப்பின் மானத்தை  மட்டும் தான் காப்பார்கள், பிற பெண்கள் எப்படி போனால் நமக்கென்ன, யாரோ தானே என்ற இளக்காரம் !! இப்படி பட்ட வக்கிர புத்தி இருக்கிற ஆண்கள் யாரையும் சகோதரி என்று அழைக்காமல் இருப்பது உத்தமம்.

ஆண் பெண் யாராக இருந்தாலும்...

பெண்களை மட்டம் தட்டி பேசணும், அதுவும் பொது இடத்தில் என்றால் போதும் சில ஆண்களுக்கு எங்கிருந்து வீரம்(?) வருகிறதோ தெரியவில்லை...பெண்களை குறைத்து பேசி தங்களுக்கான மதிப்பை உயர்த்தி கொள்கிறார்களாம். எப்படி புரியும் அந்த இடத்தில் தான் தங்களது மதிப்பு குறைய போகிறது என்று !!

வேடம் கலைந்தபின் அவர்களின் ஒவ்வொரு நாளும் நரகலின் மீது தான் என்பது மட்டும் உண்மை.

மனதில் சகோதரி என்று எண்ணாமல் வாயினால் அந்த வார்த்தையை உச்சரிக்க எப்படி முடிகிறது. யாரிடம் வேண்டுமானாலும் முகமூடி இட்டு நடியுங்கள். சகோதரனாய் எண்ணி பழகும் பெண்ணுக்கு எதிராக நடந்து சகோதர உறவை தயவுசெய்து கொச்சைபடுத்தாதீர்கள்.
                                                      
பதிவுலகம் என்று இல்லை வெளியிடங்களிலும், ஆண், பெண் எல்லோருக்கும் நிஜ முகம் வேறு என்பதை மனதின் ஒரு ஓரத்தில் வைத்தே பழக வேண்டிய நிலை தற்போது இருக்கிறது . வெளியில் தெரியும் முகம் தான் உண்மையானது என்று முழுமையாக நம்பி ஏதோ ஒரு சூழ்நிலையில் உண்மை தெரிந்து வேதனை படுவதை விட, எத்தகைய மனிதர்களிடத்தும் பழக நம்மை தயார் படுத்தி வைத்துகொள்வது நலம். 
                                                      
                                                         மனிதன் இங்கும் அங்கும்
                                                         எதையோ தேடி
                                                         ஓடிக்கொண்டே இருக்கிறான்...
                                                         சத்தியமாக என்றோ
                                                         தொலைத்த மனிதம் தேடி அல்ல !
                                                                                                              
                                                          உத்தமர் வேடம் கன கச்சிதம்
                                                          கலையாத வரை...
                                                          பேச்சிலும் புழு நெளிகிறது
                                                          கலைந்த பின்...!
                                                          சக மனிதனை கீறிக் கிழிப்பது
                                                          பொழுது போக்காம்...
                                                          நகைச்சுவை என்ற
                                                          சப்பைக்கட்டுகள் 
                                                          ஆறுதலாம்...!
                                                         
                                                           நம்பிக்கையுடன் பகிர்வதை
                                                           அடுத்தவருக்கு
                                                           கடத்திவிடும்
                                                           நரம்பில்லா 
                                                           நம்பிக்கை துரோகி...!
                                                         
                                                           பாழும் மனதினுள்ளே
                                                           பலவித வஞ்சகங்கள்...
                                                           பாழும் மனிதா
                                                           வாழும் வரை பொய்யன்
                                                           கொள்ளி இன்றி வெந்து சாவாய்
                                                           பிறரின் வயிற்றெரிச்சல் தீயில்...!
                                                   
                                                           உள்ளொன்று வைத்து
                                                           புறமொன்று பேசும் உறவுகளை
                                                           ஒவ்வொன்றாக
                                                           களைய முயன்றால்  
                                                           அனாதையாகிவிடுவேன் 
                                                           ஒருவருமின்றி...!

                                                           அதனால் 
                                                 
                                                           கச்சிதமாக பொருந்தும்
                                                           முகமூடி ஒன்றை
                                                           தேடி எடுத்து
                                                           பத்திரபடுத்திக் கொண்டேன்
                                                           தேவைப்படுகிறது
                                                           இனி எனக்கும்...!?


                                                       * * * * * * * * * * * * * * * * *



படம் -நன்றி கூகுள் 
Tweet

73 கருத்துகள்:

  1. கல்லூரியில் படிக்கும் போது அண்ணன்- தங்கை என சொல்லிவிட்டு உறவு மாறும் ஒரு சில கதைகள் பார்த்ததாலேயே பொதுவாய் நான் யாரையும் சகோதரி என்று சொல்வதில்லை. அதையும் மீறி, ஓரளவு பழகி, சகோதரி போல் மனதில் தோன்ற ஆரம்பித்த பின் ஒரு சிலரை அக்கா என்று கூப்பிடும் வழக்கம் உண்டு (இது விரல் விட்டு எண்ண கூடியவர்களே)

    பெண்களின் நிலையும், பார்வையும் முற்றிலும் வேறு. அவர்களுக்கு பாதுகாப்பிற்காகவும், திருமணம் ஆன பெண்கள் எனில் மற்றவர்கள் தப்பாய் நினைக்க கூடாது என்பதற்காகவும் சகோதரன் என சொல்வது அவசியமாகிறது

    இணையம் நல்லவை செய்வது ஒருபுறமிருக்க, சில போலிகளும், கெட்டவர்களும் இங்கும் இருக்கிறார்கள். ஆனால் அது எல்லா இடத்திலும் உள்ளது போல தான். இங்கு ஒரு ரிஸ்க்: அவர்கள் தங்கள் சுயத்தை வெளிபடுதாமல், அல்லது பொய்யான தகவல்களில், நம்புகிற பெண்களுக்கு ஏமாற்றம் தரக்கூடும் என்பதே !

    அவரவர் தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பெண்களுக்கு நல்லவர், கெட்டவர் யாரென மனதில் உணர்த்தும் இயல்பான எச்சரிக்கை உணர்வு அதிகம் உண்டு என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. என்ன ஆச்சு?
    உறவுகளின் அருமை புரியாமல் எள்ளுபவர்களோ உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களோ நம்மை விட்டு விலகினால் அது அவர்களுக்கு நஷ்டம். விட்டுத்தள்ளுங்கள் அக்கா.
    கரையில் கிடக்கும் ஆயிரம் கூழாங்கற்கள் வேண்டுமா ஆழியின் ஆழத்தில் சிப்பிச்சிரைக்குள் மிளிரும் ஓரிரு நல்முத்துக்கள் வேண்டுமா?
    கூழாங்கற்கள் தேடாமலேயே கிடைக்கும். முத்துக்கள் மூச்சடக்கி தேடினாலும் அரிதாக கிடைக்கும்.
    அதுவே பெரிது.




    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அக்கா,
    பதிவுலகிலுள்ள முகமூடி மனங்களை வெளிச்சம் போட்டு காட்டும் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
    குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக சொல்வார்கள். ஆனால் பல மனிதர்கள் மனித வடிவில் மிருகமாக இருப்பது தான் வேதனையான விடயம்.
    எதற்கும் அவதானமாகவே எல்லோரிடமும் பழகுதல் நலமாக அமையும அல்லவா?

    பதிலளிநீக்கு
  4. மொத்தக் கட்டுரையின் சாராம்சத்தையும் உங்கள் கவிதையின் கடைசி இரண்டு பத்திகள் தெள்ளத்தெளிவாக விளக்கி விட்டன.

    பதிலளிநீக்கு
  5. தோழி உங்கள் ஆதங்கம் எல்லோருடைய ஆதங்கவுமே. சமூகம் ஒரு பல்கலைகழகம். கற்போம் ஆனால் நாம் நாமாக இருக்கும் போது எது ஒன்றும நம்மை பாதிக்க போவது இல்லை.

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பகிர்வு. அகமொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களுக்கு சவுக்கடி. உறவு நிலையை உதட்டளவில் மட்டுமே உதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உண்மை தான்... சாயம் வெளுக்காமல் சிலரால் சாகும் வரை தொடர முடிகிறது. அவர்களை அடையாளம் கண்டு கொள்வது அனுபவம் தரும் பாடம் மூலமாக மட்டுமே.

    அடுத்தவரை ஏமாற்றியதாக நினைப்பவர்கள் தங்களைப் பற்றிய ஒரு மரியாதையை தாங்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.

    மனிதத்தை தொலைத்துவிட்டு, தேடாமல் இருப்பதற்குக் காரணம், தொலைத்ததையே உணராமல் இருப்பது அல்லது உணராதது போல் நடிப்பது. நரம்பில்லா நம்பிக்கைத் துரோகி என்ற வார்த்தைகள் கண்டிப்பாய் சிந்திக்க வைக்கும்.

    அனாதை என்ற சொல் மிகக் கடுமையானது... அந்த நிலைக்குத் தள்ளப் படமாட்டீர்கள். மனிதம் முழுவதுமாய் மரிக்கவில்லை.. முகமூடி தேவையில்லை.. முகமூடியை கலைக்க முயற்சி எடுப்போம். உறவின் உன்னதத்தை உலகிற்கு எடுத்து சொல்லுவோம்.

    அந்த முயற்சிக்கு முதல் கல்லாய் இந்த பதிவினைப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இரட்டைப்பிறவிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்பும் நமக்கு எதற்கு முகமூடி...?

    பதிலளிநீக்கு
  8. கௌசல்யா,

    இதுவரை பதிவுலகில் இத்தகைய அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் பயம் ஏற்படவே செய்யும்... அதனாலேயே மிக நம்பிக்கையானவர்கள் என உறுதிபடுத்திய நபர்களுடன் மட்டும் பழகி வருகிறேன்.

    எவ்வித தவறான எண்ணமும் அல்லாமல் தூய உறவை பேணி பழகும் போது நம்மை பற்றி ஒருவர் தவறான எண்ணம் வைத்திருகிறார் என தெரிய வந்தாலே மனம் மிகவும் வேதனைப்படும்.. ஆனால் அதிலும் சிலர் தரம் தாழ்ந்து மற்றவர்களிடத்தில் கிழ்த்தரமாக கமென்ட் போடுவது கொடுமையான விஷயம்! துரோகச்செயலே!

    இதனை அவர்கள் தற்பெருமையாகவே கருதுகிறார்கள் போலும்! தன் குடும்பத்திலுள்ளவர்கள் இத்தகைய இடைஞ்சலுக்கு ஆளாகும் போது நிச்சயம் இவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரும்!

    வேற என்ன சொல்ல? நம்பிக்கையை கெடுத்துக்கொள்வதை விட கேவலாம ஒரு விஷயத்தை யாரும் செய்துவிடமுடியாது!

    பதிலளிநீக்கு
  9. மிகவும் வருத்தமான ஒன்று.

    சிலர் ரொம்ப நட்பான வகைனு சொல்லிக்கிட்டு இப்படி இருக்காங்க.

    நீங்கள் என்று இல்லை அனைவருமே இணையத்தில் அறிமுகமானவர்களிடம் சொந்த தகவல்களை எடுத்ததும் பகிறாதீர்கள்,தொலைப்பேசி எண்ணை அனைவருக்கும் கொடுக்காதீர்கள்.

    நம்பிக்கையை பலவீனமாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

    இங்கே சிலர் பெரிய மனிதர்கள் போல் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை எனில் நம்மைப்பற்றிய விவரத்தை நமக்கு எதிரானவர்களுக்கு கொடுத்து பகிரங்கம் செய்வார்கள்.

    அப்புறம் நம்மக்கிட்டேவே அப்படியாச்சாமே அய்யோ பாவம் என்பது போல உச்ச் கொட்டவும் செய்வார்கள் :-))

    கடந்தகாலத்தில் நடந்த நிகழ்வு இது.

    எனவே கவனம் தேவை

    பதிலளிநீக்கு
  10. பொதுவாகவே எல்லாருக்குமே இருக்கும் ஆதங்கம்தான்! என்ன செய்வது? இந்த காலத்துல நம்மதானே புத்திசாலியா இருக்கனும்?

    பதிலளிநீக்கு
  11. உங்கள் ஆதங்கம் எதனால் ஏற்பட்டது எனத் தெரியாது ஆனாலும் முற்றிலும் உண்மையான, அருமையான ஒரு கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் தோழி... வாழ்த்துகள். நான் ஒரு தமிழர் சமூகம் பற்றிய தொடரை எழுதி கொண்டு இருக்கிறேன். மறக்காமல் வந்து உங்கள் கருத்தைப் பதித்து விட்டு செல்லுங்கள்.. பகிர்வுக்கு நன்றி...
    http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html

    பதிலளிநீக்கு
  12. யாராக இருந்தாலும் எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்..

    மிகவும் வருத்தமான வேதனையான விசயம்..

    பதிலளிநீக்கு
  13. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்
    சில மனிதர்கள் அப்படித்தான் தோழி
    நாம் நல்லுறவு எண்ணத்தில் பழகினாலும்
    சில ஜென்மங்கள் அதன் புத்தியை காட்டிவிடும்

    நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  14. பெண்கள் பதிவுலகம் வருவதே அரியது.அதிலும் பல சிரமங்களை,தடைகளை சந்திக்கிறார்கள் என்பதை பதிவுலக வரலாறு சொல்கிறது.புதிதாய் கிடைக்கும் ஒரே மன அலை பதிவுலக நண்பர்கள் ஆண்களுக்கு புதிய வரம் மாதிரி.பெண்களும் இந்த எல்லையை அடைவதற்கு தடைகள் உள்ளன என்பதையே உங்கள் பதிவு சொல்கின்றது.இதனை புரட்டிப்போடும் வலுவான பெண்ணியம் வளரனும்.அப்படியான பெண்களும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் ஆதங்கம் நியாயமானது கெளசல்யா, மனம் திறந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  16. என்னை வெகுவாக கவர்ந்த பதிவு .பொதுவாக அண்ணன் தம்பியோடு பிறந்தவர்கள் பிற ஆண்களோடு சகஜமாக பேசுவார்கள்.தன்னை விட மூத்தவர்களை அண்ணன் என்றும் இளையவர்களை தம்பியும் என்றும் பெயர் சொல்லியும் அழைப்பார்கள் ///////என் மனதில் நான் சொல்ல நினைத்த வரிகள மேடம் இது!சிலவேளைகளில் நாம் அனுபவிக்கும் வேதனை இருக்கே?ஆண்கள் தங்கை என்று அழைக்கலாம் ,ஆனால் அதுவே ஒரு பெண் அண்ணா என்றோ தம்பி என்றோ அழைத்தால் ..அது அந்த ஏதோ ஓர் உறவை மறைத்துக்கொள்ளும்ம போர்வை??????மீண்டும் சொல்கிறேன் என் மனதில் இருந்த சில பல விசயங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் பார்ப்பது போல் ஓரு உண்ர்வு..உறசாகமும் கூட!நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  17. தோழி உங்களின் ஆதங்கம் புரிகிறது ...........இப்படி பட்ட மனிதர்களை அடையாளம் காண முடியும் நிச்சயம் அவர்கள் மன நோயாளிகள் தான் அதை புரிந்துகொண்டால் உங்கள் வருத்தம் குறையும் .........
    நம்மில் அக்கறை கொள்ளுகிறானே என்று அனைத்தையும் கொட்டுவது நம்முடைய பிழைதான் எல்லா சமூகத்தில் பல ஆண்களும் ஆடை மீறி தான் பேசுகிறார்கள் .......அவர்களுக்கு எங்கே புரியும் அதை தாண்டி இருக்கும் மனம் என்னும் மகத்தான் விஷயம் .........தோழி பெண் எதற்கும் அஞ்சாதவள் உலகின் சக்தி இந்த சிறிய விசயத்திற்கு அசந்து போவதா ? நம்பிக்கை கொள்ளுங்கள் உலகம் பெரியது இதை தாண்டி வாருங்கள்

    பதிலளிநீக்கு
  18. மிகச் சிறந்த பதிவு சகோதரி...

    யதார்த்தத்தை அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்....என்ன கேட்டால் பெண்கள் ஆண்களிடம் ரொம்ப பழகாமல் இருப்பதே நல்லது...

    யார் யார் எப்படி என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்... சோ வரும் முன் காப்பதே நல்லது....

    பதிலளிநீக்கு
  19. ஆண்களும் பெண்களும் இணையத்தில் பழகும் போது அவரவர் எல்கையை வகுத்துக்கொண்டு பழக வேண்டும். என்ற அருமையான விடயத்தை அழகா பதிவு செய்து இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  20. சலாம் சகோதரி. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பதிவை வசிக்கிறேன் நன்றிகள்.

    பெண்கள் அனாலும் சரி ஆண்கள் அனாலும் சரி. தங்களுடைய குறைகளை கடவுளை தவிர மற்ற எவர்யிடம் பகிர வேண்டாம் (நண்பராக இருந்தாலும்). கடவுள் இடம் சொன்னால் மனஅளுத்தம் குறையும். அவன் யாரிடம் சொல்லமாட்டார்.

    நிறைகளினால் நமக்கும், மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுத்தும் என்றால் பகிரலாம்.

    பதிலளிநீக்கு
  21. அக்கா உங்கள் உறவின் புனிதம் ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது...

    கொடுத்து வைத்தவர் நீங்கள்..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. இறுதி கவிதை உங்களின் ஆதங்கத்திற்கு ஒரு முற்றுபுள்ளிவைப்பதைப்போல் நச்.
    பெண்கள்தான் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு பழகவேண்டும். உள்மனம் எச்சரித்தால், விவாதம் செய்யாமல் விலகி விடுவதே உத்தமம் என்பது பெண்ணான நான் பலவருடங்களாகக் கடைபிடித்து வரும் கொள்கை. ஆக இந்த விஷயத்தில் நான் இன்னும் அடிமட்ட ஏமாற்றங்களைச் சந்தித்ததில்லை சகோ. இதுவரையில் ஆண் நட்பில் உன்னத மனிதர்களையே சந்தித்து வந்துள்ளேன். இனியும் தொடரும்.
    தங்கை செல்வியின் மூலம், கௌசல்யாவின் நட்பு புதிதாக கிடைத்துள்ளது. இனி அடிக்கடி வருவேன். உங்களின் கருத்துகள் பிடித்திருக்கின்றது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. இவ்வளவு தெளிவா கெளசியால் மட்டுமே எழத முடியும் ..
    மனதில் பட்ட அனைத்தையும் தெளிவாக கூறியிருக்கீங்க.
    நானும் நிறைய இடங்களில் விவாதம் செய்ய யோசித்து பின்பு வேண்டாம் விஷபரீட்சை என்று விலகிடுவேன் ..
    பதிவு எழுத துவங்குமுன்னே கிட்டத்தட்ட ஒரு வருடம் வெறும் பார்வையாளராக இருந்தேன் :)) அது எனக்கொரு நல்ல அனுபவத்தை கொடுத்தது
    கவிதை வரிகள் சாட்டையடி .

    பதிலளிநீக்கு
  24. எப்படியும் எதனுள்ளும் சில கருப்பு ஆடுகள்
    நுழைந்து விடுவதுதான் இங்கு சகஜமாக இருக்கிறது
    சங்கடப்பட்ட மன் நிலையில் கூட
    தாங்கள் பதிவிட்ட விதம்
    தங்கள் முதிர்ச்சியைக் காட்டுகிறது
    தங்கள் பதிவு பிற பெண்பதிவர்களுக்கு
    நிச்சயம் நல் வழிகாட்டியாக அமையும்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. நான் பொதுவாகவே அனைவரையும் சகோதரி ! அக்கா என்று தான் அழைப்பதுண்டு ... அப்படி அழைக்கத் தான் வேண்டும் என்றில்லை. இருந்த போதும் எனக்கு உடன்பிறந்த சகோதரிகள் இல்லை என்பதால், எனக்கு ஒரு ஏக்கம் இருப்பதுண்டு, அதனால் அழைக்கின்றேன் .. !!!

    ஆனால் உண்மையில் மனதில் பட்டு சகோதரன், சகோதரி என்றழைக்கலாம், அப்படி இல்லாத பட்சத்தில் வெளி உலக அச்சத்துக்காக அப்படி அழைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... !!!

    நல்லதொரு பதிவு !!! பதிவுலகம் ஒரு பொது உலகம் போன்றதே. அனுபவம் கற்றுத் தரும் பாடங்கள் இங்கும் ஏராளமே !

    பதிலளிநீக்கு
  26. பதிவர்களும் சமுதாயம் என்கிற வட்டத்தில் இருந்துதான் வருகிறார்கள். அவர்களிடம் வித்தியாசமாக எதிர்பார்ப்பது என்பது கொஞ்சம் கடினமே. அதுவுமில்லாமல் பதிவுகளில் தவிர்த்து பொரணி பேசுவதும் பதிவர்களில் பிரபல்யமே. தவிர்க்க இயலாதுதான் எனினும், வருந்தத் தக்கதே :(

    பதிலளிநீக்கு
  27. @@ மோகன் குமார் said..

    உங்களின் விரிவான கருத்திற்கு மகிழ்கிறேன்...இதனை சார்ந்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை உங்கள் கருத்துகள் தருகின்றன.

    //இயல்பான எச்சரிக்கை உணர்வு அதிகம் உண்டு என்றே நினைக்கிறேன் //

    சகோதரர்கள் என்ற போதில் அந்த எச்சரிக்கை உணர்வு குறைந்து விடுகிறது போல.

    மனதோடு மட்டும்' ல் நான் எழுதும் பல பொதுவான பதிவுகளில் இது ஒன்று. பெண்கள் யாராக இருந்தாலும் கவனமாக பழகுவது நன்று என்பதே இந்த பதிவின் விளக்கம்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. @@ Bhuvaneshwar said...

    // என்ன ஆச்சு?//

    எனக்கு என்ன ? நல்லாதானே இருக்கிறேன்...இது என்ன கேள்வி. :)

    //உறவுகளின் அருமை புரியாமல் எள்ளுபவர்களோ உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களோ நம்மை விட்டு விலகினால் அது அவர்களுக்கு நஷ்டம். விட்டுத்தள்ளுங்கள் அக்கா//

    அதுசரி. நல்ல கருத்துதான். ஒரு பதிவு மத்தவங்களுக்கு சுலபமா சென்று சேர கவிதை மாதிரி எழுதினா அதை எனக்குனு எடுத்துபீங்களா ?

    கவிதையை அனுபவிக்கணும் ஆராய கூடாது புவனேஷ். :)



    பதிலளிநீக்கு
  29. @@ நிரூபன் said...

    நன்றிகள் நிரூபன்.


    @@ அமைதிச்சாரல்...

    புரிதலுக்கு நன்றிகள்.


    @@J.P Josephine Baba said...

    // நாம் நாமாக இருக்கும் போது எது ஒன்றும நம்மை பாதிக்க போவது இல்லை//

    நிச்சயமாக

    நன்றி தோழி.


    பதிலளிநீக்கு
  30. @@ Shankar M said...

    //சாயம் வெளுக்காமல் சிலரால் சாகும் வரை தொடர முடிகிறது.//

    கொடுத்து வைத்தவர்கள். :)

    //மனிதத்தை தொலைத்துவிட்டு, தேடாமல் இருப்பதற்குக் காரணம், தொலைத்ததையே உணராமல் இருப்பது அல்லது உணராதது போல் நடிப்பது. நரம்பில்லா நம்பிக்கைத் துரோகி என்ற வார்த்தைகள் கண்டிப்பாய் சிந்திக்க வைக்கும்.///

    எழுதி பல மாதங்கள் ஆன இந்த கவிதை இந்த பதிவுக்கு பொருத்தமா ஆகிபோச்சு. :)
    அதுவும் உங்களின் அழகான கருத்து கவிதைக்கு பொருள் சேர்க்கிறது.

    //அனாதை என்ற சொல் மிகக் கடுமையானது... அந்த நிலைக்குத் தள்ளப் படமாட்டீர்கள். மனிதம் முழுவதுமாய் மரிக்கவில்லை.. முகமூடி தேவையில்லை.. முகமூடியை கலைக்க முயற்சி எடுப்போம்.//

    முகமூடியிட்ட உலகிற்கு நாமும் அது போல் இருந்து விடுவது எப்படி இருக்கும் என ஒரு கேள்வியாக வைத்தேன்...

    //அந்த முயற்சிக்கு முதல் கல்லாய் இந்த பதிவினைப் பார்க்கிறேன்.//

    இதை தான் எதிர்பார்த்தேன்...

    கவிதை ரசிகர் என்பதை இங்கேயும் நிரூபித்துவிட்டீர்கள்.

    நன்றிகள் ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  31. @@ இராஜராஜேஸ்வரி...

    நன்றிகள்.


    @@ திண்டுக்கல் தனபாலன்...

    நன்றிகள்.


    பதிலளிநீக்கு
  32. @@ ஆமினா said...

    //இதுவரை பதிவுலகில் இத்தகைய அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் பயம் ஏற்படவே செய்யும்...//

    நல்லவேளை என்னையும் அத்தகைய அனுபவம் இதுவரை நெருங்கவில்லை. அதனால் தான் இன்னும் பதிவு எழுதிட்டு இருக்கேன். :))



    //அதனாலேயே மிக நம்பிக்கையானவர்கள் என உறுதிபடுத்திய நபர்களுடன் மட்டும் பழகி வருகிறேன்.//

    மிக சரியான வழிமுறை.

    பதிவுலக சகோதரர்கள் எனக்கு கொடுக்கும் ஊக்கம் மிக பெரியது. அவர்களை இங்கே மிக சுருக்கமாக மட்டும் குறிப்பிட்டேன். தனியாக ஒரு பதிவே எழுதலாம்.

    //ஆனால் அதிலும் சிலர் தரம் தாழ்ந்து மற்றவர்களிடத்தில் கிழ்த்தரமாக கமென்ட் போடுவது கொடுமையான விஷயம்! துரோகச்செயலே!//

    இது தான் புரியவில்லை. அது எப்படி அவ்வாறு போட முடிகிறது...விளைவை யோசிச்சு பார்க்க மாட்டார்களா ?

    உங்களின் ஆதங்கமான கருத்துக்கள் பதிவை அப்படியே பிரதிபலிக்கிறது.

    நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  33. சிறப்பான பகிர்வு. எல்லா இடங்களிலும் இது போல தொல்லைகள் இருக்கின்றன. எப்போதுமே சற்றே முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது தான்...

    பதிலளிநீக்கு
  34. @@ வவ்வால் said...

    //நீங்கள் என்று இல்லை அனைவருமே இணையத்தில் அறிமுகமானவர்களிடம் சொந்த தகவல்களை எடுத்ததும் பகிறாதீர்கள்,தொலைப்பேசி எண்ணை அனைவருக்கும் கொடுக்காதீர்கள்.//

    சரியாக புரியவில்லை. எனக்கு சொல்றீங்களா? பொதுவாக நான் இதில் கவனமாகவே இருக்கிறேன்.

    மனம் விட்டு பேச வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில் , அல்லது இருந்தும் கவனிக்கப்படாத நிலையில் இருக்கும் பெண்கள் தான் விரைவாக இது போன்ற பிரச்சனையில் சிக்குகிறார்கள்.

    //நம்பிக்கையை பலவீனமாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.//

    உண்மை.

    //இங்கே சிலர் பெரிய மனிதர்கள் போல் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை எனில் நம்மைப்பற்றிய விவரத்தை நமக்கு எதிரானவர்களுக்கு கொடுத்து பகிரங்கம் செய்வார்கள்.//

    அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. :)

    //அப்புறம் நம்மக்கிட்டேவே அப்படியாச்சாமே அய்யோ பாவம் என்பது போல உச்ச் கொட்டவும் செய்வார்கள் :-))//

    நிறைய அனுபவம் போல இருக்கே :))

    //கடந்தகாலத்தில் நடந்த நிகழ்வு இது.//

    இதுபோல நடந்துட்டு இருக்கு, என்பதை எச்சரிக்கவே தான் இந்த பதிவு.

    நன்றிகள்.

    (உங்களை இங்க பார்த்ததும் தான் வீட்டு தோட்டம் தொடர் பதிவே நினைவுக்கு வருது.)

    பதிலளிநீக்கு
  35. @@ Chamundeeswari Parthasarathy said...

    //பொதுவாகவே எல்லாருக்குமே இருக்கும் ஆதங்கம்தான்!//

    ஆமாம். நான் எழுதிட்டேன், மத்தவங்க எழுதல. :)

    //இந்த காலத்துல நம்மதானே புத்திசாலியா இருக்கனும்?//

    புத்திசாலியா மட்டும் அல்ல, நெளிவு சுளிவுகள் , ஏற்ற இறக்கங்கள், அனுசரித்து போறது, சகிச்சு போறது இப்படி நிறைய இருக்கணும்.
    மொத்ததுல கவனமா இருந்தா போதும்.

    வருகைக்கு நன்றிகள் தோழி

    பதிலளிநீக்கு
  36. ***Blogger Kousalya said...சகோதர உறவை தயவு செய்து கொச்சைப் படுத்தாதீங்க***

    நான் கஷ்டப்பட்டு மேற்கோள் வரிகளை டைப் அடிச்சேன். :)) நீங்க காப்பி-பேஸ்ட் அனுமதிக்கிறது இல்லை போல! :)))

    "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
    அம்மம்மா பூமியிலே (பதிவுலகில்) யாவும் வஞ்சம்"னு நீங்க ஒட்டுமொத்தமாக நெனைக்கவும் முடியாது. ஏன்னா ஒரு சில நல்லவங்களும் இருக்காங்க.

    ஆனால், நான் எல்லாம் பொதுவா யாரையும் நம்புறதில்லைங்க. அதனால் ஒரு சில நல்லவங்களையும் இழந்துதான் ஆகனும்! அதனால என்ன இப்போ?னு போயிடுறது :)

    பதிலளிநீக்கு
  37. தங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரியாகவே உள்ளன சகோ.கெளசல்யா. அவசியமான பதிவு. அப்புறம், ஒரே விஷயத்தை ஒரு ஆண் பதிவரும் ஒரு பெண் பதிவரும் எழுதி இருக்க, சில அனானி ஐடிக்கள்... நேரே பெண் பதிவரிடம் சென்று அங்கே மட்டும் தங்கள் வீரத்தை அநாகரிக வார்த்தைகளில் காட்டி எக்காளமிட்டு மகிழ்வதையும் பார்க்கிறேன்..! இதுவும் முகமூடிகளின் கண்டனத்துக்குரிய கேவலமான செயல்தான்..!

    பதிலளிநீக்கு
  38. புலம்பித் தள்ளியிருக்கீங்க.. ஹ்ம்ம்.. உங்க கூட பேசின வரைக்கும் நீங்க இப்படி புலம்புற ஆளாத் தெரியல. ஆச்சரியமான பதிவுத் தொனி.

    சகோதர,சகோதரியாக நினைக்கும் எதிர்பார்ப்பிலிருந்து தான் எல்லா சிக்கலுமே உருவாகுதோ? நீங்களே சொல்லியிருப்பது போல கவனமாகவும் பரஸ்பர மதிப்பும் இருந்தால் போதுமோ?

    பதிலளிநீக்கு
  39. எல்லா இடத்திலும் இந்த மாதிரி இருக்கு. பதிவுலகம் என்றில்லை... கல்லூரி/அலுவலகம், நாம் வசிக்கும் இடம்...

    அவர்களாய் திருந்தினால் மட்டுமே உண்டு

    பதிலளிநீக்கு
  40. நம்மை நாமே கண்டுகொள்ள உதவிய பதிவுலகம்,சகோதர உறவுகளையும் விட்டு வைப்பதில்லை. மற்றஉறவுகளயும் விட்டு வைப்பதில்லை.
    மிகுந்த கௌரவமான அன்பையும் திரித்து நினைக்கும் மனங்களை விட்டு விலகலாம்.முகமூடி அணிவது சிரமம்.தாமரை தண்ணீர்க் கதைதான் சரி.

    பதிலளிநீக்கு
  41. @@ அருண்பிரசாத் வரிக்குதிரை said...

    //நான் ஒரு தமிழர் சமூகம் பற்றிய தொடரை எழுதி கொண்டு இருக்கிறேன். மறக்காமல் வந்து உங்கள் கருத்தைப் பதித்து விட்டு செல்லுங்கள்.. //

    கருத்துரை இட்டமைக்கு மகிழ்கிறேன்.

    தங்கள் தளம் சென்று பார்த்தேன் மிக அழகாக எழுதி வருகிறீர்கள். புத்தகமாக வரக்கூடிய அளவிற்கு நல்லதொரு ஆக்கம். வாழ்த்துக்கள்.

    நன்றி.



    பதிலளிநீக்கு
  42. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    '//' நண்பரிடம் ஏழ்மை பேசேல் '//

    'தோழனோடு ஏழ்மை பேசேல்' அருமை. அவ்வையார் சொன்னவைகளை பாடமாக எடுக்க தவறி விடுகிறோம்.

    நண்பனாக இருந்தாலும் இல்லாமையை சொல்லாதே. சரிதான்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  43. @@ கே.ஆர்.பி.செந்தில் said...

    //யாராக இருந்தாலும் எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்..//

    உங்கள் உணர்விற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  44. @@ செய்தாலி said...

    //நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் //

    எவ்வளவு தான் விழிப்புணர்வுடன் இருந்தாலும், உண்மை இல்லாத செய்திகளை நமக்கு தெரியாமல் பகிரும் போது என்ன செய்வது.

    இருப்பினும் மிக கவனம் தேவை

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. @@ ராஜ நடராஜன் said...

    //பெண்கள் பதிவுலகம் வருவதே அரியது.அதிலும் பல சிரமங்களை,தடைகளை சந்திக்கிறார்கள் என்பதை பதிவுலக வரலாறு சொல்கிறது.//

    புரிதலுக்கு மகிழ்கிறேன்.நிறைய பெண்கள் எழுதுவதை விட்டு ஒதுங்கிவிட்டார்கள். இத்தனைக்கும் மத்தியில் எழுதி கொண்டிருக்கும் மற்ற பெண்களை எண்ணி நான் பெருமை படுகிறேன்.

    //புதிதாய் கிடைக்கும் ஒரே மன அலை பதிவுலக நண்பர்கள் ஆண்களுக்கு புதிய வரம் மாதிரி.//

    உண்மை.

    //பெண்களும் இந்த எல்லையை அடைவதற்கு தடைகள் உள்ளன என்பதையே உங்கள் பதிவு சொல்கின்றது.//

    சரியான புரிதல்.

    //இதனை புரட்டிப்போடும் வலுவான பெண்ணியம் வளரனும்.அப்படியான பெண்களும் இருக்கிறார்கள்.//

    வலுவாக பேசும் சிலர் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களையும் கருத்துக்கள் என்ற பெயரில் குதறி தள்ளுபவர்கள் அதிகம் இங்கே.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  46. @@ கலாகுமரன் said...

    வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  47. @@ selvi sk said...

    //
    சிலவேளைகளில் நாம் அனுபவிக்கும் வேதனை இருக்கே?ஆண்கள் தங்கை என்று அழைக்கலாம் ,ஆனால் அதுவே ஒரு பெண் அண்ணா என்றோ தம்பி என்றோ அழைத்தால் ..அது அந்த ஏதோ ஓர் உறவை மறைத்துக்கொள்ளும்ம போர்வை??????//

    கடவுளே இப்படி ஒன்னு வேற இதுல இருக்கா ? அடப்பாவிகளா இப்படியும் பேசும் மனிதர்கள் இருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது.

    //மீண்டும் சொல்கிறேன் என் மனதில் இருந்த சில பல விசயங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் பார்ப்பது போல் ஓரு உண்ர்வு..உறசாகமும் கூட!நன்றி மேடம்.//

    நீங்க என்று எல்லை செல்வி, பல பெண்கள் வெளியே சொல்ல தயங்கி கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது.

    என்னை பேர் சொல்லியே அழைக்கலாமே...நமக்குள் மேடம் எல்லாம் வேண்டாம் :))

    உற்சாகமாக இருங்க :))

    உங்கள் வருகைக்கு நன்றி செல்வி.

    பதிலளிநீக்கு
  48. @@ கோவை மு சரளா said...

    //நம்மில் அக்கறை கொள்ளுகிறானே என்று அனைத்தையும் கொட்டுவது நம்முடைய பிழைதான் எல்லா சமூகத்தில் பல ஆண்களும் ஆடை மீறி தான் பேசுகிறார்கள்//

    அப்படி இருக்கலாம், ஆனால் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் கதை கட்டுகிரவர்களும் இருக்கிறார்கள். சில சாதாரண விசாரிப்புகள் கூட பெரிது படுத்தபடுகிறது.

    //தோழி பெண் எதற்கும் அஞ்சாதவள் உலகின் சக்தி இந்த சிறிய விசயத்திற்கு அசந்து போவதா ? நம்பிக்கை கொள்ளுங்கள் உலகம் பெரியது இதை தாண்டி வாருங்கள்//

    இது போன்றவர்களை எண்ணி ஆதங்கம் கொண்டேன் அவ்வளவே.
    இதை படிப்பவர்களில் ஒருவர் மனது தெளிவானாலும் எனக்கு நிறைவு தான்.

    கருத்துரைக்கு நன்றி சரளா.

    பதிலளிநீக்கு
  49. @@ சிராஜ் said...

    //என்ன கேட்டால் பெண்கள் ஆண்களிடம் ரொம்ப பழகாமல் இருப்பதே நல்லது...//

    ஒரு சிலர் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக எல்லோரையும் தவறாக எண்ணக்கூடாது.

    எதிலும் ஒரு கவனம் இருக்கணும். அவ்வளவுதான்.

    நன்றி சிராஜ்

    பதிலளிநீக்கு
  50. @@ S.Bathuhur said...

    //ஆண்களும் பெண்களும் இணையத்தில் பழகும் போது அவரவர் எல்கையை வகுத்துக்கொண்டு பழக வேண்டும்.//

    புரிதலுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  51. @@ Nizam said...

    //தங்களுடைய குறைகளை கடவுளை தவிர மற்ற எவர்யிடம் பகிர வேண்டாம் . கடவுள் இடம் சொன்னால் மனஅளுத்தம் குறையும். அவன் யாரிடம் சொல்லமாட்டார்.//

    அப்போ கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க ?! :)

    மனிதர்கள் யாருக்கும் நம்பிக்கை துரோகம் பண்ண கூடாது என்ற ஒன்றை புரிந்துகொண்டால் போதுமானது

    //நிறைகளினால் நமக்கும், மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுத்தும் என்றால் பகிரலாம்//

    மிக சரி.

    வருகைக்கு மிக்க நன்றிகள் நிஜாம்.

    பதிலளிநீக்கு
  52. @@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

    //பெண்கள்தான் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு பழகவேண்டும்.//

    கண்டிப்பாக.

    //உள்மனம் எச்சரித்தால், விவாதம் செய்யாமல் விலகி விடுவதே உத்தமம் என்பது பெண்ணான நான் பலவருடங்களாகக் கடைபிடித்து வரும் கொள்கை.//

    அருமை.

    //ஆக இந்த விஷயத்தில் நான் இன்னும் அடிமட்ட ஏமாற்றங்களைச் சந்தித்ததில்லை சகோ.//

    உங்களின் திட்டமிட்ட செயல்முறை பிடித்திருக்கிறது. இனிமேலும் எந்த வித ஏமாற்றங்களும் உங்களை அணுகாது.

    //இதுவரையில் ஆண் நட்பில் உன்னத மனிதர்களையே சந்தித்து வந்துள்ளேன். இனியும் தொடரும்.//

    மகிழ்கிறேன் விஜி.

    //தங்கை செல்வியின் மூலம், கௌசல்யாவின் நட்பு புதிதாக கிடைத்துள்ளது. இனி அடிக்கடி வருவேன். உங்களின் கருத்துகள் பிடித்திருக்கின்றது. வாழ்த்துகள்//

    அருமையான தோழியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு செல்விக்கு நான் நன்றி சொல்லனும்.

    தொடர்ந்து வாருங்கள்...உங்கள் கருத்துகளை கலந்து கொள்ளுங்கள்...நானும் கற்றுகொள்கிறேன்.

    நன்றிகள் விஜி.

    பதிலளிநீக்கு
  53. வணக்கம் சொந்தமே!மனதின் ஆதங்கம் தங்கள் பதிவாக.நான் சொந்தம் என்று எல்லோரையும் அழைப்பேன்.அதுகூட சிலருக்கு பிடிக்காது இருக்கலாம்.என்னை பொறுத்தவரை விரசமற்ற அன்போடு எல்லோரும் அன்புச்சொந்தங்களாக இருச்தால் அகைத்தும் சுபமே!!

    தற்பாதுகாப்பின் அலாரம் தான் எச்சரிக்கைகள்இஅதன் சத்தத்தை ஒருபோதும் தட்டிவடக்கூடாத என்பதும் சரி சொந்தமே!சந்திப்போம்.

    பதிலளிநீக்கு


  54. கருத்தும் கவிதையும் அருமை!
    மேலும், கவிதையின் முடிவில்
    அதனால் என்பதன்கீழ் முடித்துள்ள வரிகள் என்னை. மிகவும் கவர்ந்தன!

    பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்! இதை மறந்து பழகுதல் கேடே!

    பதிலளிநீக்கு
  55. //ஒரு பெண்ணை பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்து கேலி பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்து பேசுவது போன்றதை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்வார்களா ?! நிச்சயம் செய்ய மாட்டார்கள். உடன்பிறப்பின் மானத்தை மட்டும் தான் காப்பார்கள், பிற பெண்கள் எப்படி போனால் நமக்கென்ன, யாரோ தானே என்ற இளக்காரம் !!//

    இந்த மனநிலை வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், பல ஆண்களும் தம் பதிவுகளில்/பேச்சில் பிற பெண்களை - தமக்கு அறிமுகமில்லாதவர், வழியில் பார்க்கிறவர்கள், நடிகைகள் - போன்ற தனக்கு உறவல்லாத பெண்களை கேலியாகப் பேசும்போதோ, வர்ணிக்கும்போதோ, கனவுக் கன்னி என்று ரசிப்பதையோ யாரும் தவறு என்று சொல்வதில்லை. உதாரணமாக உடன் வேலை செய்யும்/ படிக்கும்/பார்க்கும் பெண்களை (ஃபிகர் போன்ற) சில குறிப்பிட்ட வார்த்தைகளால் கிண்டல் செய்வது. காதலர் தினத்தில் முன்னர் பழகிய பெண்களை - தற்போது அவள் வேறொருவர் மனைவியாயிருந்தாலும்- இப்போதும் அதே பார்வையோடு வர்ணிப்பது போன்றவை. இவற்றை ‘லைட் ஜோக்’ என்ற அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். யாருமே அதைக் கண்டிப்பதில்லை, வாசிக்கும் பெண்கள் உட்பட. இப்படிக் கண்டிக்கப்படாமல் வளரும் தவறு, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து.. கதையாக ஒருகட்டத்தில் அறிமுகமானவர்களையும் இப்படி கேலிப்பொருளாக்குவதில் வந்து நிற்கிறது.

    விமர்சிப்பது, கேலி செய்வது, பிற ஆண்களுடன் இணைத்து பேசுவது, - என்பது தம் சொந்த சகோதரிகள் மட்டுமென்ன, அறிமுகமற்ற பிற பெண்களையும் ஆரம்பம் முதலே கண்ணியத்துடன் காணத் தலைப்பட்டால், எந்தப் பெண்ணையும் இப்படி இழிவுபடுத்த மனம் வராது.

    பதிலளிநீக்கு
  56. @@ angelin said...

    //நானும் நிறைய இடங்களில் விவாதம் செய்ய யோசித்து பின்பு வேண்டாம் விஷபரீட்சை என்று விலகிடுவேன் ..//

    சரியான புரிதல் இல்லாமல் விவாதத்தில் ஈடுபடுவது நல்லதில்லை. உங்களை போல விலகிவிடுவது/விலக்கி விடுவது உத்தமம்.

    //பதிவு எழுத துவங்குமுன்னே கிட்டத்தட்ட ஒரு வருடம் வெறும் பார்வையாளராக இருந்தேன் :)) அது எனக்கொரு நல்ல அனுபவத்தை கொடுத்தது//

    இது நல்லா இருக்கு தோழி. அனுபவம் கொடுக்கும் பாடம் போல் வேறில்லை.

    நன்றி

    பதிலளிநீக்கு
  57. @@ Ramani said...

    //எப்படியும் எதனுள்ளும் சில கருப்பு ஆடுகள்
    நுழைந்து விடுவதுதான் இங்கு சகஜமாக இருக்கிறது//

    அவைகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் சமயங்களில் நல்ல மனிதர்களை பிரித்தறிய இயலாமல் போய் விடுகிறது.

    //தங்கள் பதிவு பிற பெண்பதிவர்களுக்கு
    நிச்சயம் நல் வழிகாட்டியாக அமையும்//

    என் பதிவின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டமைக்கு மகிழ்கிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  58. @@ இக்பால் செல்வன் said...

    //ஆனால் உண்மையில் மனதில் பட்டு சகோதரன், சகோதரி என்றழைக்கலாம், அப்படி இல்லாத பட்சத்தில் வெளி உலக அச்சத்துக்காக அப்படி அழைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... !!!//

    புரிகிறது. நல்லதொரு கருத்து. வரவேற்கிறேன்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  59. @@ ILA(@)இளா said...

    //பதிவர்களும் சமுதாயம் என்கிற வட்டத்தில் இருந்துதான் வருகிறார்கள். அவர்களிடம் வித்தியாசமாக எதிர்பார்ப்பது என்பது கொஞ்சம் கடினமே.//

    உண்மை.

    //அதுவுமில்லாமல் பதிவுகளில் தவிர்த்து பொரணி பேசுவதும் பதிவர்களில் பிரபல்யமே. தவிர்க்க இயலாதுதான் எனினும், வருந்தத் தக்கதே//

    தவிர்க்க இயலாத ஒன்றில்லை. தவிர்க்கலாம், பொழுது போக வேண்டும் என்பதற்காக பிறரை குறிப்பாக பெண்களை விமர்சித்து அதில் குளிர்காய்வது நாகரீகம் அல்லவே.

    கருத்திட்டமைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  60. @@ வெங்கட் நாகராஜ் said...

    //எல்லா இடங்களிலும் இது போல தொல்லைகள் இருக்கின்றன. எப்போதுமே சற்றே முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது தான்...//

    நன்றிகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
  61. @@ வருண் said...

    வாங்க.

    //நான் கஷ்டப்பட்டு மேற்கோள் வரிகளை டைப் அடிச்சேன். :)) நீங்க காப்பி-பேஸ்ட் அனுமதிக்கிறது இல்லை போல! :)))//

    கஷ்டப்பட்டு மேற்கோள் வரிகளை அடிச்சாலும் கருத்தை சொல்லிட்டு தான் போவேன் என்கிற உங்க ஈடுபாடு பிடிச்சிருக்கு. :))

    //"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
    அம்மம்மா பூமியிலே (பதிவுலகில்) யாவும் வஞ்சம்"னு நீங்க ஒட்டுமொத்தமாக நெனைக்கவும் முடியாது. ஏன்னா ஒரு சில நல்லவங்களும் இருக்காங்க.//

    நான் எங்க ஒட்டு மொத்தவங்க என்று சொல்லி இருக்கேன். சில நல்லவங்களும் இருக்காங்க. 'என் சகோதரர்கள்' என்ற பாராவை படிக்கலையா...?

    //ஆனால், நான் எல்லாம் பொதுவா யாரையும் நம்புறதில்லைங்க.//

    அதுசரி. :)

    //அதனால் ஒரு சில நல்லவங்களையும் இழந்துதான் ஆகனும்! அதனால என்ன இப்போ?னு போயிடுறது :)//

    அதானே நல்ல பாலிசி தான்.

    இது போன்ற பதிவுனாதான் வருவேன் என்று வந்ததற்கு நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  62. @@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    //அப்புறம், ஒரே விஷயத்தை ஒரு ஆண் பதிவரும் ஒரு பெண் பதிவரும் எழுதி இருக்க, சில அனானி ஐடிக்கள்... நேரே பெண் பதிவரிடம் சென்று அங்கே மட்டும் தங்கள் வீரத்தை அநாகரிக வார்த்தைகளில் காட்டி எக்காளமிட்டு மகிழ்வதையும் பார்க்கிறேன்..!//

    இது என்னங்க நியாயம் ? பெண் என்றால் இப்படியா செய்வது ?? வன்மையாக கண்டிக்கத்தக்கது...!! இது போன்றவைகளுக்கு
    வெறும் பார்வையாளராக மட்டும் மற்றவர்கள் இருக்கும் நிலை மிக வருத்தத்துக்கு உரியது.

    வருந்துகிறேன்.

    ..........
    நன்றி.

    பதிலளிநீக்கு
  63. @@அப்பாதுரை said...

    //புலம்பித் தள்ளியிருக்கீங்க.. ஹ்ம்ம்.. உங்க கூட பேசின வரைக்கும் நீங்க இப்படி புலம்புற ஆளாத் தெரியல. ஆச்சரியமான பதிவுத் தொனி.//

    பார்த்தீங்களா என்னையே இப்படி புலம்ப வச்சுட்டாங்க...!! ம்ம்...

    //சகோதர,சகோதரியாக நினைக்கும் எதிர்பார்ப்பிலிருந்து தான் எல்லா சிக்கலுமே உருவாகுதோ?//

    பதிவுலகம் வந்த புதிதில் என்னை சிலர் சகோ என்று அழைத்து பின்னூட்டம் போடுவார்கள், இங்க இப்படிதான் சொல்லணும் போல என்று தான் நானும் சொல்ல தொடங்கினேன்...உங்களை அப்டி சொல்ல அதுக்கு நீங்க கொடுத்த விளக்கம் இப்பவும் நினைவில் இருக்கு.

    //நீங்களே சொல்லியிருப்பது போல கவனமாகவும் பரஸ்பர மதிப்பும் இருந்தால் போதுமோ?//

    ஆமா, அப்டி அழைச்சிட்டு அடுத்த பக்கம் வேற மாதிரி பேசுவதை விட பேர் சொல்லி வாங்க போங்கனு சொல்லிடலாம். பெட்டர்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  64. @@ எல் கே said...


    //அவர்களாய் திருந்தினால் மட்டுமே உண்டு //

    ம்...இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே சமாதானம் (மட்டும்)சொல்லிகொண்டு இருக்க போறோமோ தெரியல கார்த்திக்...!!!



    பதிலளிநீக்கு
  65. @@ வல்லிசிம்ஹன் said...

    //நம்மை நாமே கண்டுகொள்ள உதவிய பதிவுலகம்,//

    உண்மை. இப்படி பட்ட உறவுகளால் நேரும் பிரச்சனைகள் =நம்மை இங்கிருந்து விடை பெற வைத்தும் விடுகிறது என்பதும் உண்மை.

    //மிகுந்த கௌரவமான அன்பையும் திரித்து நினைக்கும் மனங்களை விட்டு விலகலாம்.//

    விலகினாலும் விட்டுவிடுவார்களா இப்படி பட்டவர்கள், அதுக்கும் ஒரு கதையை தயாரித்தே வைத்திருப்பார்கள்.

    //முகமூடி அணிவது சிரமம்.தாமரை தண்ணீர்க் கதைதான் சரி.//

    ம்ம்...புரிகிறது.

    நன்றிகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  66. @@ Athisaya said...

    //நான் சொந்தம் என்று எல்லோரையும் அழைப்பேன்.அதுகூட சிலருக்கு பிடிக்காது இருக்கலாம்.என்னை பொறுத்தவரை விரசமற்ற அன்போடு எல்லோரும் அன்புச்சொந்தங்களாக இருச்தால் அகைத்தும் சுபமே!!//

    உங்களின் மனது புரிகிறது. எல்லோரையும் சொந்தமாக நினைக்கும் உங்களை எண்ணி மகிழ்கிறேன்.

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  67. @@ புலவர் சா இராமாநுசம் said...

    //மேலும், கவிதையின் முடிவில்
    அதனால் என்பதன்கீழ் முடித்துள்ள வரிகள் என்னை. மிகவும் கவர்ந்தன!//

    மகிழ்கிறேன் ஐயா.

    //பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்! இதை மறந்து பழகுதல் கேடே!//

    நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  68. @@ ஹுஸைனம்மா said...

    // இந்த மனநிலை வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், பல ஆண்களும் தம் பதிவுகளில்/பேச்சில் பிற பெண்களை - தமக்கு அறிமுகமில்லாதவர், வழியில் பார்க்கிறவர்கள், நடிகைகள் - போன்ற தனக்கு உறவல்லாத பெண்களை கேலியாகப் பேசும்போதோ, வர்ணிக்கும்போதோ, கனவுக் கன்னி என்று ரசிப்பதையோ யாரும் தவறு என்று சொல்வதில்லை. //

    //இவற்றை ‘லைட் ஜோக்’ என்ற அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். யாருமே அதைக் கண்டிப்பதில்லை, வாசிக்கும் பெண்கள் உட்பட.//

    //இப்படிக் கண்டிக்கப்படாமல் வளரும் தவறு, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து.. கதையாக ஒருகட்டத்தில் அறிமுகமானவர்களையும் இப்படி கேலிப்பொருளாக்குவதில் வந்து நிற்கிறது.//

    நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள். இது போன்ற கமெண்ட்களை பெண்களும் சேர்ந்து ரசித்து கருதிடுவதுதான் மிக கேவலம். முகநூலில் தினம் பார்கிறேனே...

    பெண்களாகிய நாமே ஒரு காரணமாக இருப்பது தவறுகளை கண்டிக்காமல் வளர்த்துவிடுவது பின் இப்படி ஆகி போச்சே என்று புலம்புவதில் வந்து முடிகிறது...

    பெண்கள் எங்கே கேலிபொருளாக்க படுகிறாலோ அவள் நடிகையாக இருந்தாலுமே சரி அதை பார்க்கும் பெண்கள் தட்டி கேட்க வேண்டும்.அப்டி என்றால்தான் இது போன்றவை குறைய வழி கிடைக்கும், கூட சேர்ந்து கும்மி அடித்து பெண் இனத்தை அவமானத்துகுள்ளாகும் பெண்கள் புரிந்துகொள்வார்களா ?

    //தம் சொந்த சகோதரிகள் மட்டுமென்ன, அறிமுகமற்ற பிற பெண்களையும் ஆரம்பம் முதலே கண்ணியத்துடன் காணத் தலைப்பட்டால், எந்தப் பெண்ணையும் இப்படி இழிவுபடுத்த மனம் வராது.//

    இந்த இடத்தில் பெற்றோரின் பங்கு அவசியமாகிறது, சிறு குழந்தையில் இருந்தே ஆண் பெண் இருவரிடம் அடுத்த பாலினத்தினை மதிக்க கூடிய தன்மையை, பண்பை சொல்லி கொடுக்க வேண்டும். வீட்டில் கணவன் மனைவி இருவரின் நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு நல்ல போதனையை ஏற்படுத்தவேண்டும்.

    தவறின் ஆரம்பம் எது என்பதை மிக தெளிவாக எடுத்து கூறிய உங்களின் பாங்கு அருமை பாராட்டுகிறேன்.

    உங்களின் கருத்துரைகள் மிக முக்கியமானவை. பெண்கள் எல்லோரும் இதை படிக்கவேண்டும் என விரும்புகிறேன்.

    மிக்க நன்றிகள்.



    பதிலளிநீக்கு
  69. ***நான் எங்க ஒட்டு மொத்தவங்க என்று சொல்லி இருக்கேன். சில நல்லவங்களும் இருக்காங்க. 'என் சகோதரர்கள்' என்ற பாராவை படிக்கலையா...?**

    அய்யோ! அது நீங்க ஏற்கனேவே கற்று அறிந்த சகோதரர்கள்ங்க. அவங்கள விட்டுருங்க.

    இனிமேல் மீதி வுள்ள, எதிர்காலத்தைல் சந்திக்கப்போகும், பழகப்போகும் "சகோதர்களையும்" ஒட்டு மொத்தமாகவும் ஒதுக்க முடியாதுனு சொல்ல வந்தேன்ங்க.

    ***இது போன்ற பதிவுனாதான் வருவேன் என்று வந்ததற்கு நன்றி வருண்.***

    "என்ன வருண்! இந்தப் பக்கமே வர்ரதில்ல?" னு ரொம்பக் கோபமா சொல்றீங்க போல இருக்கு. :))இனிமேல் அடிக்கடி வர முயலுகிறேங்க, கெளசலயா. :)

    அப்புறம் இணையம், முகநூல், பதிவுலகம் இதுமாரி இடங்கள் எல்லாம் சின்னப்பசங்களும், சின்னப்புத்தி உள்ளவங்களும்தான்ங்க 75% மேலே உள்ளவங்கங்க! (இதில் சில விழுக்காடுகள் பெண்களும் அடங்கும்).

    எதற்கும், என்றுமே, நீங்க ரொம்ப ரொம்ப கவனமாத்தான் இருக்கனும்ங்க. இல்லைனா, நீங்க ஈஸியா மன உளச்சலுக்கு ஆகாமல் உங்க மனசை பக்குவப்படுத்திக்கனும்.

    மறுபடியும் சொல்றேன், நான் யாரையுமே நம்ப மாட்டேன். (I know how offensive it is for some good people but they should understand me.) This world has more bad people and few good people for sure! :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...