Monday, October 3

12:30 PM
16



மனித வாழ்வு இன்று பணம் பணம் என்று பொருளை தேடுவதில் ஓடி முடிந்துவிடுகிறது. வாழ்வதற்கு பணம் தேவை என்பது போய் பணம் தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இப்படி பணம் பின்னே மட்டும் ஓடி வாழ்வின் சந்தோசங்களை தொலைத்தவர்கள் பலர். 

இங்கே தேடியது போதாது என்று நாடுவிட்டு கடல் தாண்டி பொருளை தேடி ஓடுபவர்கள் இறுதியில் கண்டது என்ன ?? சிலர் கடல் தாண்டி சென்றவர்கள் பொருளுக்காக செல்கிறார்கள், தங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற செல்கிறார்கள்...ஆனால் தன் குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் நபர்களின் நிலைமையை கேட்டால் கண்ணில் நீரை வரவழைக்கும். கிடைத்தற்க்கரிய இந்த மனித வாழ்வை தன் பெற்றோர், மனைவி, குழந்தை, உடன்பிறந்தோர் இவர்களுடன் கழிக்க வழியின்றி போய் விடுகிறார்கள். 

வெளிநாட்டில் இருக்கும் தெரிந்தவர் ஒருவர், மாதா மாதம் கணிசமான ஒரு தொகையை மனைவிக்கு அனுப்புவார். மனைவியும் அந்த பணத்தை வைத்து சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டை கட்டினார். இவரும் கிரகபிரவேச நாளை மிக ஆவலாக எதிர்பார்த்து,  வேலைபார்க்கும் கம்பெனியில் லீவ் கேட்டு வரேன் என்று போனில் மனைவியிடம் சொல்லி இருக்கிறார், அதற்கு மனைவி நீங்களாக விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்துவிடுவார்கள், அவங்க லீவ் கொடுக்கும்போது மட்டும் வந்தா போதும் என்று கண்டிசனாக சொல்லிவிட இவர் மிக வேதனை அடைந்துவிட்டார். கடைசியில் இவர் இன்றியே அந்த விழாவும், அதை தொடர்ந்த பெண்ணின் பூப்புனித விழாவும் விமரிசையாக நடந்து முடிந்துவிட்டது. தன் வாழ்வின் பெரிய லட்சியமாக எண்ணிய சொந்த வீட்டின் கிரகசபிரவேசதிற்கும்,ஒரே பெண்ணின் முக்கியமான சந்தோஷ நிகழ்வுக்கும் வர முடியவில்லை என்றதின் பின் என்ன காரணம் இருக்கிறது...?? பணம் பணம் பணம் மட்டுமே...!! 

திருமணம் முடித்து சிறிது நாளில் மனைவியை பிரிந்து வெளிநாடு சென்றவர்கள் பலர். இங்கே அவர்களின் குழந்தை பிறந்து, வளர்ந்து அப்பா என்ற உருவத்தை உணர்வால் தொட்டு உணராமல் நிழல் படத்தில் பார்த்து தெரிந்து கொள்கிறது. தகப்பனின் அணைப்பை குழந்தையும் , பெற்ற குழந்தையின் அருகாமையை  தகப்பனும் உணராமல் வாழ்ந்து என்ன இன்பம் ?!! குழந்தையின் வளர்ச்சியை அருகில் இருந்து காண்பதை போன்ற நிறைவு, மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. இது போன்ற பெரிய,சின்ன சந்தோசங்களை தொலைத்து வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்...?! 

இவர்கள் ஒரு விதம் என்றால் சில பணம் படைத்தவர்கள் ஆணவத்தால் ஆடும் ஆட்டம் மற்றொரு விதம் ! 

வீடல்ல சத்திரம் 

மிக பெரிய கோடீஸ்வரன் ஒருவன் தங்களது குடும்பத்தினரின் பழைய பங்களா ஒன்றை நிறைய பணம் செலவு செய்து புதுப்பித்துக் கட்டினான்.பெருமிதமாக சொந்தகாரங்களை எல்லாம் வரவழைத்து தடபுடலாக விருந்தளித்து உற்சாகமாக வலம் வந்தான். வீட்டை சுற்றிப் பார்த்த பலரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ள இவருக்கு பெருமைப் பிடிபடவில்லை. அந்த நேரம் வயதான பெரியவர் ஒருவர் வந்தார், அவரிடம் சென்று மிக ஆணவமாக நெஞ்சை நிமிர்த்தி "வீடு எப்படி இருக்கிறது" என்று கோடீஸ்வரர் கேட்க, அதற்கு பெரியவர் நிதானமாக, ''சத்திரம் நன்றாக இருக்கிறது'' என்று சொல்லவும் இவருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. " எத்தனை கோடி செலவு செய்து வீடு கட்டி இருக்கிறேன், இதை பார்த்து சத்திரம் என்றா சொல்றீங்க, உங்களுக்கு மூளை ஏதும் குழம்பிவிட்டதா'' என ஆக்ரோசமாக கூற,  

''உனக்கு புரியும் படி சொல்கிறேன், இதற்கு முன் இங்கே யார் குடியிருந்தார்கள்'' என்று கேட்டார் பெரியவர் . ''என் தந்தை , அவருக்கு முன் அவரது தந்தை இருந்தார்...இப்படி ஆறு தலைமுறை கண்ட வீடு இது'' என்று மிதப்பாக கோடீஸ்வரர் சொன்னார். அதற்கு பெரியவர் ''அப்போது நான் சொன்னதும் சரி தானே, ஒருவர் சென்றதும்(மறைந்ததும்) அடுத்தவர், பின் அவர் சென்றதும் மற்றொருவர்...அப்ப இது சத்திரம் என்பது தான் சரி'' என்று நிதானமாக கூறினார். இது தான் நிதர்சனம். 

இதை உணர்ந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் ஏதோ அகத்தியர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவது போலவும் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழப்போவது போலவும் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் நகைப்பிற்கு உரியது அல்லாமல் வேறு என்ன ?!! நாளை என்பதே நிச்சயம் இல்லாத போது அதற்காக ஓடி ஓடி பொருள் தேடுவதை பற்றி கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் புரியும். பல கோடி போட்டு கட்டிய வீடு என்பதற்காக இறந்ததும் அவரை அங்கே அடக்கம் செய்யமுடியுமா ?! ஆறு அடி நிலம்  கூட சொந்தமாக தன் இடத்தில் எடுத்துக் கொள்ள உரிமை இல்லை...! 

ஒரு மதம் புதைக்க ஆறு அடி கொடுக்கிறது...மற்றொரு மதமோ சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிடுகிறது...!

இந்துமதம் இதனாலேயே மனிதனுக்கு நிலையாமையை போதித்தது..... 
அனுபவத்தில் இதை கண்டு தெளிய, ஒரு முறை சாவு நடந்த வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும். 

(எங்கோ படித்தது) 

நாளை இறக்க போகிறவர்கள் 
இன்று இறந்தவனுக்காக 
அழுதுகொண்டிருக்கிறார்கள் !

ஓடி கொண்டிருக்கும் ஜீவன் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை சொந்தங்களும் ஒட்டி கொண்டிருக்கும். அன்பே, உயிரே, கண்ணே, செல்லமே எல்லாம் முடிந்துபோய் பிணம் என்ற ஒற்றை அடையாளமாகி விடுவோம். அவர், அவள், என்பது மாறி அது என்றாகி போவோம். இறந்த பின் ஒருநாளுக்கு மேல கூட வைத்திருக்க மாட்டார்கள்...எடுத்து கொண்டு போனதும், வேக வேகமாக வீட்டை கழுவி விட்டு விடுவார்கள். பிணத்துடன் பீடையும் போகட்டும் என்று மூணு நாளில் விசேசம்(?) வைத்து நன்றாக உணவருந்தி சோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து விடுவார்கள், அப்புறம் பதினாறு, முப்பது என்று நாள் எண்ணிக்கை வைத்து நினைத்து விட்டு, ஒருநாள் ஒட்டு மொத்தமாக நினைவுகளும் அழிக்கப்பட்டு விடும். இது யதார்த்தம் !

இதே மனித வாழ்வு. இதை உணர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாட்கள்  இயற்கையின் அன்பளிப்பு என்று நன்றி சொல்லி பொருளின் பின்னே மட்டும்  ஓடாமல் சம்பாதித்த/சேர்த்த பொருளில் பிறருக்கும் சிறிது கொடுத்து சக மனிதன் சிரிப்பில் பேரின்பம் காண்போம்.   

பணக்காரன் தர்மம் செய்யாமல் நிம்மதியாக இறந்தது இல்லை என்பார்கள் . சம்பாதித்த பொருளை தர்மம் செய்யாமல் இருப்பவர்களுக்கு அனுபவிக்க வாரிசுகளும் ஏனோ இருப்பதில்லை.இது இயற்கையின் அமைப்பா? இறைவனின் தர்மமா ??

இருக்க ஒரு வீடு, பாதுகாப்பிற்கு போதுமான பொருள் சேமிப்பில், போக்குவரத்துக்கு ஒரு வாகனம், போதும் என்ற மனநிறைவு அடைந்து, அதற்கு மேல் வரும் வருமானத்தை வறியவர்கள், எளியவர்களுக்கு பாத்திரத்துக்கு தக்கபடி கொடுத்து வாழ்வின் மிச்ச நாட்களை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிக்கலாமே...! 

பகைமை மறந்து அன்பால் மனிதர்களை தழுவுவோம்...இயன்றவரை உழைப்பதில் அடுத்தவருக்காக கொஞ்சம் கொடுப்போம்...இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்...!

'மனிதநேயம்' வார்த்தையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்வோம்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்...!


                                                                                        

Tweet

16 comments:

  1. 'மனிதநேயம்' வார்த்தையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்வோம்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்...!

    அழகான பதிவு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. //நாளை இறக்க போகிறவர்கள்
    இன்று இறந்தவனுக்காக
    அழுதுகொண்டிருக்கிறார்கள் !//

    //புரிந்து கொள்ளாமல் ஏதோ அகத்தியர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவது போலவும் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழப்போவது போலவும் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் நகைப்பிற்கு உரியது அல்லாமல் வேறு என்ன ?!! நாளை என்பதே நிச்சயம் இல்லாத போது அதற்காக ஓடி ஓடி பொருள் தேடுவதை பற்றி கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் புரியும். பல கோடி போட்டு கட்டிய வீடு என்பதற்காக இறந்ததும் அவரை அங்கே அடக்கம் செய்யமுடியுமா ?! ஆறு அடி நிலம் கூட சொந்தமாக தன் இடத்தில் எடுத்துக் கொள்ள உரிமை இல்லை...! //

    அருமையான உண்மைகளை, தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்பு சகோதரி
    மனிதநேயம் பற்றி அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.
    ஓடி ஓடி உழைக்கணும்
    ஊருக்கெல்லாம் கொடுக்கணும் னு
    சொல்லலை...
    உழைத்ததில் சிறு பகுதியை ஆதரவற்றோருக்கு கொடுத்தலால்
    நாம் சேர்க்கும் பணத்திற்கு பணம் எனும் பெயர் கிடைக்கும்
    இல்லையேல் அது வெறும் காகிதமே என
    அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.
    அருமை அருமை.

    ReplyDelete
  5. //அனுபவத்தில் இதை கண்டு தெளிய, ஒரு முறை சாவு நடந்த வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும். //
    உண்மை, உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை.

    ReplyDelete
  6. மனித நேயம் காக்க மனதில் தைக்கும் விதத்தில் உங்கள் பதிவு. நன்றி கௌசல்யா.

    ReplyDelete
  7. எல்லாம் பணம் படுத்தும் பாடு கௌசல்யா

    ReplyDelete
  8. அருமையான பதிவு .எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் இறக்கும் போது அதை கொண்டு போக முடியாது .பணத்தால் நிம்மதியை வாங்கவும் முடியாது .

    ReplyDelete
  9. அழகான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //உருவத்தை உணர்வால் தொட்டு உணராமல் நிழல் படத்தில் பார்த்து தெரிந்து கொள்கிறது.//

    கொடுமையான விஷயம் தான் கவுசல்யா

    ஒவ்வொரு வெளிநாட்டில் பணம் தேட வந்தவர்களும் இப்படியொரு கண்ணீர் கதையை சுமந்துக்கொண்டு தான் வேலை செய்கிறார்கள்

    ReplyDelete
  11. //இருக்க ஒரு வீடு, பாதுகாப்பிற்கு போதுமான பொருள் சேமிப்பில், போக்குவரத்துக்கு ஒரு வாகனம், போதும் என்ற மனநிறைவு அடைந்து, அதற்கு மேல் வரும் வருமானத்தை வறியவர்கள், எளியவர்களுக்கு பாத்திரத்துக்கு தக்கபடி கொடுத்து வாழ்வின் மிச்ச நாட்களை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிக்கலாமே...! //

    அதே அதே. இறந்த பின் எதைக் கொண்டு செல்லப் போகிறார்கள்?
    சிலருக்கு ஆறடி, சிலருக்கு அதுவும் இல்லை.

    ReplyDelete
  12. ஒருவர் சென்றதும்(மறைந்ததும்) அடுத்தவர், பின் அவர் சென்றதும் மற்றொருவர்...அப்ப இது சத்திரம் என்பது தான் சரி'' என்று நிதானமாக கூறினார். இது தான் நிதர்சனம். Nice!

    ReplyDelete
  13. மனிதநேயச் செயல்பாடுகள் எளிதல்ல.

    ReplyDelete
  14. Hi Kousalya,Glad to find ur blog.Lu ur interesting posts here.Luv to follow U.I'm from Tirunelveli Dist but currently in Chennai.I write a foodblog here.Visit my space when U r free.Luv ur blog.

    ReplyDelete
  15. வாழ்வியல் குறித்த பதிவு அருமை.

    ReplyDelete
  16. தங்கள் இடுகையோடு தொடர்புடைய

    துபாயா? அபுதாபியா?

    என்னும் இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_26.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...