திங்கள், நவம்பர் 30

தண்ணீருக்காக பலதாரமணம்...??!!

உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக பலதாரமணம் புரிவர். இவ்விசயத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் மதத்துக்கும் கூற வித்தியாசம் உண்டு.   இந்தியாவைப் பொறுத்தவரை பலதாரமணம் சட்டப்படி குற்றம்.  மலைஜாதி மக்களில் இந்த பழக்கம் இருக்கிறது என கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் சட்டத்தை அலட்சியம் செய்துவிட்டு  தெரிந்தும் தெரியாமலும் பலதார மணம் புரிவது  உண்டு.  பண வசதியைப் பொருத்தும்  ஜாதி மதம் நோய் மரணம் உடல் குறைபாடு என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இரண்டு மூன்று பேரை கல்யாணம் செய்வதும் உண்டு.  சட்டத்தின் பார்வைக்கு வராதவரை இவை ஏதும் பிரச்சனையாக இருந்ததும் இல்லை.  அரசியல்வாதியாக இருந்தால் ஒருத்தரை மனைவி என்றும் மற்றொருவரை துணைவி என்றும் சொல்லி சமாளித்து  கொள்ளலாம். 

ஆனால் ஒரு ஊரில் உள்ள அத்தனை பேரும்  பலதாரமணம் புரிகிறார்கள் என்பதை அறியும் போது முதலில் ஆச்சர்யமாக இருந்தது, உண்மை தெரிந்ததும்  மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏதோ  அயல்நாட்டில் நடக்கவில்லை நமது இந்தியாவின் இதயபகுதியான மகாராஷ்டிராவில் (Dengalmal village) உள்ள ஒரு ஊரில் நடக்கிறது,  பலதாரமணம் ஒன்றே அவர்களின் பிரச்சனை தீருவதற்கான ஒரே வழி  !!!??



தானே மாவட்டத்தில்  டெங்கல்மல் என்ற ஊரில் அரசாங்கத்தின் குடிநீர் விநியோகம் என்பது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரியில் வரும் ஆயிரம் லிட்டர் கலங்கிய நீர் மட்டுமே...அதை பிடிக்க ஒரே சமயத்தில் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு   முட்டி மோத, இதற்கு காத்துகிடந்து மல்லு கட்டுவதை  விட கிணறு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று பல பெண்கள் நடையை கட்டி விடுகிறார்கள். அந்த ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ள மலையடிவாரத்தில் இருக்கும் இரண்டு கிணறுகள் மட்டும்தான்  இவர்களின் ஒரே நீர் ஆதாரம்.  பலமணி நேர நடையும் பலமணி நேர காத்திருப்பும் இருந்தால் தான் இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும்.  40 டிகிரி வெயிலிலும் அடர்ந்த இரவுகளிலும் தண்ணீரை நாடி  நடந்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஊரின் ஆண்கள் வாழ்வதற்கான பொருளாதாரத்தை தேட பெண்கள் தண்ணீர் மனைவிகளாக மாறுகின்றனர்.
 

அந்த ஊரை சேர்ந்த ஒருவர் சொல்கிறார், இது சட்டப்படி குற்றம் என்பது தெரியும் ஆனால் என்ன செய்வது யார் எங்களுக்கு தண்ணீர் கொடுப்பது,  அரசாங்கம் எங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் தவறு செய்கிறது , அதனால் தண்ணீர் தேவைக்காக மூன்று மனைவிகளை மணந்து நானும் ஒரு தவறு செய்யவேண்டியதாகிறது. இது எங்களின் தவறல்ல அரசாங்கத்தின் தவறு என்று கூறும் அந்த வெள்ளந்தியானவரின் குரலில் ஒலிப்பது தண்ணீரின் தாகம்.  வீட்டிற்குள் நுழையும் புது பெண்தான் இள வயதின் காரணமாக தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பிற்கு மாறுகிறார். இவரின் முதல் இரு மனைவிகள் சமையல் குழந்தைகளை வளர்ப்பது  மாடுகளை கவனிப்பது விவசாயத்தில் கணவருக்கு உதவுவது என்றிருக்க மூன்றாவது மனைவி தண்ணீர் சுமக்கிறார்.  



தண்ணீருக்கான போர் இனி வரவேண்டும் என்பதில்லை இந்தியாவில் ஏற்கனவே பலகாலமாக நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.   பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த  பத்தாவது நாள் முதலே  தண்ணீர் கொண்டுவர கட்டாயப் படுத்தப்  படுகிறார்கள்.  இத்தகைய தண்ணீர் மனைவிகளுக்கு முதுகு வலி, கழுத்துவலி, கருவுருதலில் பிரச்சனை, வளர்ச்சி குறைபாடு, வழுக்கை (தலையில் சுமப்பதால்)  இன்ன பிறவும் ஏற்படுகின்றன. பெண்களை தவிர சிறு வயதினரும் பள்ளிகளுக்கு செல்லாமல்  தண்ணீர் சுமக்கிறார்கள். இள வயதிலேயே  மனமும் உடலும் சோர்வுற்று நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களின் எதிர்காலம் சூன்யமாவதை பற்றி யாருக்கிங்கே கவலை...?! 

இது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உள்ள  ஒரு கிராமத்தின் அவலநிலை  மட்டுமல்ல.  இது போல் பல ஊர்கள் இருக்கின்றன. ஆட்சி பொறுப்பேற்கும்  அத்தனை ஆட்சியாளர்களும் சரமாரியாக வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் , இவர் வந்தால் விடிந்துவிடும் என்று நம்பி ஓட்டு போட்டு ஆட்சி கட்டிலில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.  ஆனால் குறைந்தபட்ச தேவைகளான  குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்துத் தராமல் டிஜிடல் இந்தியா கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

பொழியும் மழை நீர் வடிய தேவையான வடிகால் வசதி இன்றி தெருவெங்கும் தேங்கி பலவித தொற்று நோய்கள்  பரவுகிறது.  பருவக்காலத்தை கணக்கிட்டு மழை நீரை சேமிக்கும்  ஏரி குளங்களை பாதுகாத்து தூர் வாரி வைக்கலாம். (ஏரி குளத்தையே காணும்  அப்புறம் எங்க தூர் வார ...?) எவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவும் கடலுக்கு சென்று சேருகிறது. நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் மேலும் தொடர்ந்தால் இன்று டெங்கல்மல் கிராமத்தின் நிலை தான் இன்னும் சில வருடங்களில் மொத்த இந்தியாவிற்கும் நடக்கும். 
    
டிஜிடல் இந்தியாவின் மறுபக்கம் தண்ணீரை தேடும் அவலம் !!?

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் : முடிந்தால் டெங்கன்கல் ஊரை பற்றிய செய்தியை பகிர்ந்துக் கொள்ளுங்கள்... Let's work together, spread the story and make the government take notice  

ஆங்கிலத்தில் உள்ள இந்த லிங்க்கை ஷேர் செய்தால் கூட போதுமானது. 

http://www.indiatimes.com/news/india/waterwives-men-marry-multiple-women-and-leave-them-by-the-wells-in-this-indian-village-233693.html

நேரம் இருப்பின் யூ டியூபில் உள்ள இந்த விடியோவை பாருங்கள்.


பின்குறிப்பு :-

இங்கே மழை வெள்ளம்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு, அதை பத்தி கவலை இல்ல, எங்கயோ குடிக்க தண்ணீ இல்லன்னு சொல்ல வந்துட்டாங்க என்பது  உங்களின் எண்ணமாக இருக்கலாம். அதை பற்றி பேசவும் எழுதவும் ஏன் ஓடோடிச் சென்று உதவி செய்யவும்தான்  நீங்க இருக்கிங்களே  என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. அதுதான் சொந்த மாநிலத்தை பற்றிய கவலையை உங்களிடம் விட்டு விட்டு அடுத்த மாநிலத்தை பற்றி பேசுகிறேன்.  புரிதலுக்கு நன்றி. 

- கௌசல்யா  

நன்றி 
கட்டுரை :- ஆங்கில இணையப் பத்திரிகைகள்  
படங்கள் - கூகுள் 

சனி, நவம்பர் 28

சகிப்புத்தன்மைக்கு வந்த சோதனை... !

A test of endurance- சகிப்புத்தன்மைக்கு வந்த சோதனை



இந்தியா சகிப்புத்தன்மை உள்ள நாடு என்ற ஒரு நல்ல பேரு நம்ம  நாட்டுக்கு உண்டு, அந்த பேரை சூட்டியதும் நாமதான். ஏகப்பட்ட இனம் மதம் சாதி இங்க இருக்கு, ஆனாலும் நாம ஒற்றுமையா இருக்கிறோம் அப்டினு நாட்டுக்கு வெளில இருக்கிறவங்கள விட நாமதான் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி பெருமைப்பட்டுக்குவோம். ஆனா சொல்றதோட சரி  செயலில் இல்லை அதுதான் நம்ம பிரச்சனையே.

ரோட்ல நடந்து போறப்போ மேல மழை தண்ணிய அடிச்சிட்டு போற பைக் காரன நடந்து போறவனும்,  கார்ல போறவனை பைக் காரனும் கெட்ட வார்த்தையால திட்டித்  தீர்க்கிற நாம  தான் இப்ப சகிப்புத் தன்மையை பற்றி பேசுகிறோம். திட்டுவதால் மேல விழுந்த தண்ணீ உடனே காயாது என்பது தெரிந்தாலும் திட்டினால் தான் அப்போதைக்கு நமது மனசு ஆறும். இப்படிதான் கூட்ட நெரிசலில் பஸ்ல தெரியாமல் கால் மிதி படுவது, மேல இடிபடுவது என்று தினமும் நாம் சந்திக்கும் அத்தனையிலும் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் நாமெல்லாம் மனுஷ லிஸ்ட்லயே சேர்த்தி இல்ல. அப்படிப்பட்ட நாம சகிப்புத்தன்மையை பற்றி இப்ப கிளாஸ் எடுக்கிறோம். குறைந்தபட்சம்  ஊர்ல எத்தனை பேர் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுறாங்க. அதுவும்தவிர  ஆம்புலன்ஸ் பின்னாடியேப்  போனா சுலபமா நமக்கும் வழி கிடைக்கும் என்று போகிற ஜந்துக்கள் எல்லாம் சகிப்புத்தன்மை, தேசபக்தி என்று பேசுதுகள் !!?

சமீப காலமாக  இந்தியா என்றால் இந்து என்ற கூச்சல் அதிகரித்திருப்பதற்கு காரணம் மோடி அரசு என்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது அவர்கள் அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.  இத்தனை காலமாக பிற மதத்தினரின் காலடியில் நாடு இருந்ததைப்  போலவும் அதை மீட்பதே தங்களின் தலையாய கடமை என்பதுமான அவர்களின் செயல் முட்டாள்தனம் தவிர வேற என்ன. இந்துமதம் பிரதான மதம், மற்றவை அதன் அடிப்பொடிகள் அடங்கிக்  கிடக்கவேண்டும் மீறினால் அடக்கப் படுவீர்கள். இதுதான் இன்றைய நிஜம்.  இந்து மதத்தை விட்டு வெளியேப்  போனவர்கள் தான் கிறிஸ்துவம் முஸ்லிம் புத்தம்  என்றால் ஏன் சென்றார்கள் இந்து மதத்தில் ஏதோ பிடிக்கவில்லை அல்லது அடுத்த மதத்தில் ஏதோ பிடித்திருக்கிறது என்பது தானே அர்த்தம். அவ்வாறு விரும்பிச்  சென்றவர்களை திரும்பி அழைக்க இந்து மதத்தில் உள்ள நல்லதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லி வலியுறுத்தலாம். அதை விடுத்து பிற மதத்தினர் ஒரு கருத்தைக்  கூறினாலும் அதற்கு கண் காது மூக்கு எல்லாம் வைத்து தேசிய பாதுகாப்புச்  சட்டத்தை பாய்ச்சும் லெவலுக்கு கொண்டுப்  போவது மதவெறி அல்லாமல் வேறு என்ன?!

என்னே தேசபக்தி

இத்தனை காலமாக இல்லாத தேசபக்தி இப்ப திடீர்னு பொத்துக்கிட்டு ஊத்துது, தேசபக்தி ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்றால் மத்தவங்க எல்லாம் தேசத்தை(தேசபக்தியை) அடகு வச்சா சாப்ட்டுறாங்க.  பிற மதத்தினரை தேசத்துரோகி என்று  கட்டம் கட்டிவிடுவதில் காட்டும் தீவிரத்தை நாட்டின் வளர்ச்சியில் காட்டினால் நல்லது. ஆனால் அதை செய்ய மாட்டார்கள், ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல் செய்ய ஏதோ ஒன்று தேவை. மொத்தத்தில் பொதுசனம் பற்றிய அக்கறை யாருக்கும் இங்கே  சுத்தமாக இல்லை.

நாமெல்லோருமே ஏதோ ஒருசமயத்திலாவது நாட்டை குறை சொல்பவர்கள் தான். நாடாடா இதுன்னு காரி துப்பியவர்களும் உண்டு. வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகவும் பலருக்கும் ஆசைதான். இக்கரைக்கு அக்கரை பச்சை தானே.  அப்படிப்பட்ட ஆட்கள் இன்று அமீர்கானை வாரி தூற்றுவதைப்  பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அமீர்கான் சொன்னது  'முஸ்லிம்களுக்கு இப்படியே பிரச்னை தொடர்ந்தால் நாமும் நாட்டை விட்டு போகவேண்டி இருக்குமா என்று என் மனைவி என்னை கேட்டார்' என்பதை தனது பேச்சோடுப்   பேச்சாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்குள்  மீடியாக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி காரச்சார பொடியை தூவ அவ்வளவு தான் பத்திக்கிச்சு. ஒரு இந்து இதை சொல்லி இருந்தால் கதையே வேற ஆனா சொன்னது ஒரு முஸ்லிம் ஆச்சே.  

அமீரின் பிகே , சத்யமேவ ஜெயதே ப்ரோகிராம் பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து வரிஏய்ப்பு பிரச்சனையை மறைக்க பிளான் பண்ணியே அமீர் இப்டி பேசினார்னு ஒரு வாரமாக மீடியாக்கள், சமூகத் தளங்களிலும் கருத்து சொல்றேன்னு ஆளாளுக்கு தங்களின் மத துவேசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்தார் என்றால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்க வேண்டியது தானே, மாறாக மத துவேசத்தை கையில் எடுத்து கொடும்பாவி எரிப்பு , பாடை கட்டுறது என்று கீழ்த்தரமா ஏன் இறங்கணும்.  இதையெல்லாம் அரசு செய்யவில்லை சில குரூப்புகள் என்றால் அவர்களை மத்திய அரசு தடுக்காமல் ஏன் வேடிக்கைப் பார்க்கிறது? அவர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களில் இருந்து  பொதுமக்களை  பாதுகாப்பது அரசின் கடமை அல்லவா?  ....... இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நானும் தேசத்துரோகி ஆகிவிடுவேனோ!?  

எது சகிப்புத்தன்மை 

அப்புறம் அம்பேத்காரை எதற்கு இவ்விசயத்தில்  இழுக்கிறார்கள் என்று தான் என் புத்திக்கு  எட்ட மாட்டேன்றது. முஸ்லிம் மக்களுடன் சகோதர அன்பை பாராட்டி மகிழ்ந்தவர், முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு முதல் வெற்றியைப்  பெற்றவர். மத பேதம் பார்க்காமல் பழகிய/வாழ்ந்த அவரது பெயரை தங்களின் தேவைக்கு இப்போதைய அரசியல்வாதிகள் உபயோகிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் காந்தியை கொன்ற  கோட்சேவுக்கு சிலை வைப்பார்கள், அவர் ஒரு போராளி என்று மாணவர்களின் பாட புத்தகத்தில்  எழுதியும்  வைப்பார்கள்.  

பிற மதத்தினரின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது, எதை சாப்பிடுவது என்பதிலும் மூக்கை நுழைப்பது,....என்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்கள். கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை  எல்லாம் இந்த நாட்டில் பிறந்த எல்லோருக்கும்  உண்டு. ஒரு பிரபலம் சாதாரணமாக பேசினால் பெரிதாக்குவதும், எளியமக்கள் 'வாழும் உரிமை'க்கு குரல் கொடுத்தால் கண்டுக் கொள்ளப்படாததும் தற்போதைய நிலை.  நீ  சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை சொல்வதற்கான உரிமை உனக்கு உண்டு அதை நான் மதிக்கிறேன் என்று சொல்வதற்கு பெயர் தான் சகிப்புத் தன்மை.

இதை ஆட்சியில் இருப்பவர்கள் முதலில் உணரவேண்டும். அதை விடுத்து சொன்னவர் என்ன சாதி என்ன மதம் என்று அலசி ஆராய்ந்து ஓ நீ அந்த மதமா அதுதான் அப்படி பேசுகிறாய் என தரம் பிரிப்பது அநாகரீகம். இதை அரசு , மீடியா தனி நபர்  யார் செய்தாலும் தவறுதான் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. சகிப்புத்தன்மை உள்ள நாடு என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தால் போதாது... செயல்களில் காட்டவேண்டும் முக்கியமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது இதை செயல்படுத்தினால் நல்லது. ஆனால் அதற்கு சிறிதும் வாய்ப்பே இல்லை.  

சமூக வலைத்தளங்களில் அமீர்கானை இழுத்துவச்சு படு கேவலமாக  கும்மி அடிக்கிறவங்களைப்  பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. கண் முன்னாடி நடக்குற கொடுமையை வேடிக்கை பார்த்துட்டு போற நமக்கெல்லாம் சகிப்புத்தன்மைப்  பற்றி பேச என்ன அருகதை இருக்கு   தனிநபரை தாக்குவதாக கூறிக் கொண்டு அவரது மதத்தை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களை போன்ற மத வெறியர்களுக்குத்  தேவை ஒரு சந்தர்ப்பம்...அது யார் மூலமாக எவ்வகையில் ஏற்பட்டாலும் தங்களின் மன வக்கிரங்களை வெளிக் காட்டியேத் தீருவார்கள்... அரசிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிப்பவர் முஸ்லிமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு ஓடணும், கிறிஸ்துவராக இருந்தால்  ஜெருசலமிற்கு  ஓடணும் என்பதை சட்டமாக்கி விடுவார்கள் போல ! ஒரு ஜனநாயக நாட்டில் அரசை குறைக் கூற, விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை இல்லை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பொதுமக்களை பொறுத்தவரை 'ம்' என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் ??!!!


சொற்களை சிறை வைத்தீர்கள்
பிரியங்களை கல்லெறிந்தீர்கள்
கருணையை கழுவேற்றினீர்கள்
இவையெல்லாம் பிரபஞ்சம் சாட்சியாக
நீங்கள் தான் பரிசளித்தீர்கள்
உடலில் இருக்கும் சொச்ச உயிரை
கொஞ்சம் மிச்சம் வையுங்கள்
உங்களுக்கு பின்னால் கடவுள் வேற நிற்கிறான் !

(பேஸ்புக்கில் நண்பர் செய்தாலி அவர்கள் எழுதிய இந்த கவிதையை இன்று காலை படிக்க நேர்ந்தது.  எளிமையான இந்த வரிகள் பல அர்த்தங்களை எனக்கு உணர்த்தியது. நன்றி செய்தாலி !!)  

சகிப்புத்தன்மையை சகித்துக்கொள்ளப்  பழகிக் கொண்டோமென்றால் இங்கே வாழ்தல் இனிது !!!


புரிந்தவர்களுக்கு...
கௌசல்யா  





புதன், நவம்பர் 18

காமம் - பெண்ணின் தவிப்பும் ஆணின் புரிதலும் !!!

இதுவரை  பேசாப் பொருளா காமம் - அறிமுகம்  படிக்காதவர்கள்,  அதை படித்தப்பின்  இப்பதிவைப்  படித்தால்  தொடர்ச்சிப்  புரியும். நன்றி.

* * * * *

திருமணமானவர்களே இது உங்களுக்கான கேள்வி...

=> காமத்தை காதலோடு செய்கிறீர்களா ?

* இது என்னங்க கேள்வி ... காதல் இல்லாமலா காமம் வச்சுக்க முடியும்?

=> இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க ... உங்க காமத்தில் காதல் இருக்கிறதா?

* இது என்ன  குழப்பம் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கான்ற மாதிரி??!! புரியலையே...

=> அப்ப இந்த கட்டுரை உங்களுக்குத்தான் தொடர்ந்து வாசிங்க...

* * * * *

காமத்தை காதலுடன் ரசித்து உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழாமல் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !!

தம்பதியருக்கிடையில் காதல் என்று  தனியாக இருக்கவேண்டியதில்லை என்பது உங்களின் எண்ணமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். புது தம்பதியர் இருவரும் காதல் இன்றி முதல்இரவு என்ற கட்டாயத்திற்காக உறவு வைத்துக் கொள்வதும் தற்கொலைக்கு முயலுவதும் ஒன்றுதான்.  காமத்தை கையாள கட்டாயம் அங்கே காதல் இருந்தாக வேண்டும். அத்தகைய குடும்ப உறவுகள் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும். பெரியோர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்றும்  சம்பிரதாயமாம் என்றும் திருமணத்தன்று இரவே அவசர அவசரமாக நடந்து முடிவதற்கு பெயர் காமமும் அல்ல காதலும் அல்ல... முழுமையான தாம்பத்தியமும் அல்ல.  ஒரே வார்த்தையில் சொன்னால் அது ஒரு  'விபத்து' 

Lust is not a sin. பேசாப் பொருள் அல்ல காமம்


'காதலுடன் காமம்' என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் மென்மையாக தூண்டப்பட உணர்ச்சிகள் மலரைப்  போல மெல்ல விரிய, தானும் நுகர்ந்து துணையையும் நுகரவைக்கும் அற்புத அனுபவம்... வி(மு)டிந்த பின்னும் அடுத்து எப்போது எப்போது என ஏங்க வைக்கும்! சும்மா தொட்டதும் இந்த நிலை ஏற்பட்டுவிடாது, அதற்குத்தான் காதலை துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றேன்.

வெறும் காமத்துடன் உடல்கள் ஒன்று சேர்ந்தால்   குழந்தை பெற்றுக் கொள்ளலாமே தவிர இறுதிவரை சந்தோசமாக குடும்பம் நடத்த முடியாது. அதுவும் மன அழுத்தம் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில் காமம் மட்டும் என்றால் வேலைக்காகாது. அட ச்சே இவ்ளோதானா மேட்டர் இதுக்குத்தானா இவ்ளோ பில்ட்அப் என்று அசால்ட்டா தூக்கிப் போட்டுவிட்டு கண்டுக்காமப்  போயிக்கிட்டே இருப்பாள் பெண்! நேசத்திற்கும் வலுக்கட்டாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

காதலையும் காமத்தையும் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள்.  ஒரு ஆண்,   தன் மனைவியுடன் படுக்கையில் இணைவதையே  காதல் என்கிறான். தன் மனைவியின் மீதான நேசத்தை இவ்வாறு, தான் வெளிப்படுத்துவதாக திருப்திப் பட்டுக் கொள்கிறான்.  என்னிடம் கவுன்செலிங்க்கு வந்த பெண் நாலு பக்கத்திற்கு கணவனின் மீது குறைகளை வாசித்தாள், அதன் மொத்த சாராம்சம் 'தன் மீது கணவருக்கு அன்பில்லை' என்பதே.  கணவனிடம் கேட்டபோது 'நான் அவளை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, வாரத்தில் இரண்டு மூணு  தடவை அவளுடன் உறவு வச்சுக்கிறேன், இப்படி என் அன்பை வெளிப்படுத்தியும் அவ புரிஞ்சுக்கலைனா நான் என்னங்க பண்ண'    என்று ரொம்பவே அப்பாவியாக(?) கேட்டார்.

நிறைய ஆண்கள் இவரை போன்றுத்தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி என்பது செக்ஸ் ஆல் ஏற்படும்  என்பது மிக மிக தவறான புரிதல்.  உங்களைப்   பொருத்தவரை செக்ஸ் என்பது பெரிய மேட்டர் என்றால் பெண்ணோட  தேவையெல்லாம் ரொம்ப  சின்ன  மேட்டர். செல்ல வருடல், மென்மையான தொடுதல்,   கொஞ்சம் டைட்டான முரட்டுத்தனமான அணைப்பு, கொஞ்சலான பேச்சு, எண்ணிக்கை வைக்காமல் கிடைக்கும் முத்தம்... இப்படி ஆரம்பித்து மெல்ல மெல்ல முன்னேறி பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே  ஆண் தனது தேவையை தீர்த்துக் கொள்வது ......இதுதான் முழுமையான செக்ஸ்! ஆணின் ஐந்து நிமிட காமம் பெண்ணிற்கு  வெறுப்பைத்தான் தரும்,  அத்தகைய உடலுறவை சந்தோஷம்/திருப்தி என்று எடுத்துக் கொள்வது ஆண்களின்  அறியாமை!!

பெண்ணின் தவிப்பும் ஆணின் தவறான புரிதலும் 

2 குடும்பங்களை உதாரணத்துக்குப்  பார்ப்போம். சிந்தைக்குள் குடும்பச் சிக்கல்கள்  அலைமோத தூக்கம் தொலைத்துப்  புரண்டுக்  கொண்டிருக்கும் மனைவி தனது தவிப்பு கணவனின் கைக்குள் தஞ்சமடைந்தால் குறையும் என முதுகுக்  காட்டி உறங்கும் கணவனை மெல்ல தன் பக்கம் திருப்ப, ஸ்பரிசம் பட்டு லேசாக அசையும்  கணவன், 'எனக்கு மூடில்லை தூங்க விடு' பட்டென்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூக்கத்தைத்  தொடருகிறான்.   அடுத்ததாக வேறு ஒரு குடும்பம் இதே மாதிரியான ஒரு சிச்சுவேசன், ஆனா  இந்த கணவன் கொஞ்சம் நல்லவன், அணைப்பிற்குத்  தவித்தவளைப் பிடித்து இழுத்து அவளது தவிப்பைப்  போக்குகிறேன் பேர்வழி என்று பெருந்தன்மையுடன் போராடி(?) தனது ஐந்து நிமிட தேவையை (மட்டுமே) பூர்த்தி செய்துவிட்டு அப்பாடா முடிந்தது கணவனின் கடமை என்று மீண்டும் மனைவிக்கு முதுகுகாட்டி தூங்கியே விடுகிறான்.  இந்த இரண்டு விதமான படுக்கையறை காட்சிகளிலும் நடந்தது என்ன ?!


அன்பான அணைப்பிற்கு மனைவி ஏங்குவதை காமம் என பொருள் கொள்ளும் விந்தையான கணவர்களைக்  கொண்டது தான்  நம் சமூகம்  !!

முதல் குடும்பத்தில்,  மனைவி அடிபட்ட வலிகொண்ட   உணர்வுடன்  அவமானத்தில் கூனிக் குறுகி இருப்பாள், இரண்டாவது குடும்பத்தில்,   மனைவியோ குழப்பத்தின் உச்சத்தில் இருப்பாள்...  இருவருக்குள்ளும் எழும் ஒரே கேள்வி 'நான் சும்மா அணைக்கத்தானே நெனைச்சேன்??!!' பதிலற்ற கேள்வியின் இறுதியில், இந்த இடத்தில்தான்  அவள் வெறுக்கத் தொடங்குகிறாள், காமத்தையும் புரிதலற்று அதனைக்  கையாளும் கணவனையும்...

விடியும்வரை தூக்கமின்றித்  தவித்து விடிந்ததும் அவமானம்  குழப்பம் மனதை வருத்த எரிச்சலுடன் கணவனின் மீது கோபத்தைக்  காட்டுவாள். காரணம் புரியாமல் அதை எதிர் கொள்ளும் ஆண், காலை நேர டென்ஷன் என்று மனதை சமாதானம் செய்துக் கொண்டு வேலைக்குச்  சென்றுவிடுவான். இரவு வீடு திரும்புகையில் வாசலிலேயே  எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் அதே கோபத்தை வேறு ஏதோ ஒன்றைக்  காரணமாக வைத்து....... இச்சமயத்தில் ஆண் முழுதாக குழம்பி ' அப்படி நாம என்னத்தச்  செஞ்சுட்டோம், இவ இப்படி குதிக்கிறா'  என்று. இரவில் கணவன் சரியாக நடந்துக் கொள்ளாததுதான் காரணம் என்று பொதுவாக  எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல மாட்டாள், சொல்லப்போனால் அவளுக்குமே தெரியாது, தனது எரிச்சலின்    நெருப்பு?  படுக்கையறையில் தான் புகைய ஆரம்பித்தது என்று.

காமத்தின் குணம் 

இப்படித்தான் பல தம்பதிகள் சிக்கலின் முதல் முடிச்சு எந்த இடத்தில் விழுந்தது என்று  தெரியாமலேயே மேலும் மேலும் முடிச்சுகளைப்  போட்டுக் கொண்டே சென்று சிக்கலைப்  பெரிதாக்கி ஒரு கட்டத்தில்  கோர்ட் படியேறி விடுகிறார்கள்.  விவாகரத்தும்  கிடைக்கிறது, அதன் பிறகு மறுமணம் நடக்கலாம், அங்கேயும் பிரச்னை ஏற்படலாம், மறுபடியும் விவாகரத்து  என்றால் கேலிக்கூத்தாகிவிடுமே என சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டலாம். இதுதான் இதுவேதான் இன்றைய நிஜம்... யதார்த்தம்!!

இப்போது புரிகிறதா காமத்தின் வலிமை என்னவென்று.  வெறும் ஐந்து நிமிட சுகம் தானே என்ற அலட்சியம் குடும்ப உறவுகளையே சிதைத்துவிடுகிறது.  ஆணின் அணுகுமுறையை பெண்ணும் பெண்ணின் தேவையை ஆணும் புரிந்து நடந்துக் கொள்ளவேண்டும். இதனை  சரியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும்தான் சந்தோசமாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதாக நடிக்கிறார்கள்!!

காமம் - உடல், காதல் - மனம் இரண்டையும் ஒன்று சேர்த்தால் தான் அங்கே நிறைவு கிடைக்கும். ஆண் அல்லது பெண்  வெறும் காம இச்சையுடன்  மட்டும் துணையை அணுகும்போது எதிர்பாலினத்தை சந்தோசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தன் உச்சத்தை நோக்கிமட்டுமே செல்வார்கள்... இது அவர்களின் தவறல்ல காமத்தின் பிரத்தியேக குணம்.  ஆனால் காதலுடன் அணுகினால் வேறு சிந்தனையில்  துணை இருந்தாலும்   இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் காதல். அப்புறமென்ன  இருவரும் மற்றொருவருக்குள் கலக்கத் தொடங்கிவிடுவார்கள்.  இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது, காதலை துணைக்கு அழைத்ததுடன் தேமே என்று இருந்துவிட்டால் கூட  போதும், பிறகு காதல் மற்ற  வேலைகளைப்  பார்த்துக் கொள்ளும்.  காதலுக்கு இருக்கக் கூடிய வீரியம் இது.

காதலுடன் கூடும் போது ஒருவருக்குள் ஒருவர் சுலபமாக ஊடுருவ முடியும்...அது மனதென்றாலும், உடலென்றாலும்...! செல்ல வருடல் , சில பல முத்தங்கள், அன்பான பேச்சு, இறுக்கமான அணைப்பு இவை போதுமே உறவைத்  தொடங்க, இதைதான் காதல் என்கின்றேன். பலரும் உடலுடன் கூடுவதாக எண்ணி உடலுக்கு வெளியேதான் கூடுகிறார்கள்... அது செயற்கை , இயந்திரத்தனம். ஆண் பெண் படைப்பின் அர்த்தமே கூடுவதுதான். அதை இயந்திரத்தனமாக செய்யாமல் இயல்பாக மென்மையாக காதலுடன் செய்யுங்கள். காமம் உடலின் தேடலாக இல்லாமல் ஆன்மாவின் தேடலாக இருந்தால் கூடலுக்குப்பின் தியானத்தில் இருந்து எழுவதைப்  போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்... நம்புவர்களுக்கு அங்கே கடவுளின் பிரசன்னமும் தெரியக்கூடும்!!

காமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு...!!

விரல் நுனியில் கணினியில் தேடும் இருட்டறை சமாச்சாரம் அல்ல... தெருவோர புத்தகக்கடையில் விலை மலிவாய் கிடைப்பதும் அல்ல... பலரது மூளைக்குள் அமர்ந்துக்  கொண்டு பெண்களின் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருக்கும் சைத்தானும் அல்ல...காலங்காலமாய் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காகவே கல்யாணம் முடித்ததாய் எண்ணி ஆற்றிய கடமையும் அல்ல... அரசமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத்  தொட்டுப் பார்க்கும் பெண்களின் வரமும் அல்ல ........ 'மனித பிறப்பின் அர்த்தத்தை அணு அணுவாக ரசித்து தானும் இன்புற்று தன்னைச்  சுற்றி இருக்கும் உயிர்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும், வெகு சிலரே முழுதாய் உணர்ந்த ஒரு உன்னதம்' - காமம் !

* * * * * * * * * *

ஆணின் தேவை/அவசரத்தை சரியாகப்  புரிந்து உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ற விதமாய் நயைந்தும் தளர்ந்தும் ஆணின் தீவிரத்தை தாமதம் செய்து பெண்மையை  முழுமையாய் உணர்த்தி தானும் இன்பத்தில் திளைத்து  ஆணையும் உச்சத்திற்கு அழைத்துச்  செல்வது பெண்ணின் கடமை. அது எவ்வாறு என்ற கேள்வி எழுந்தால் காத்திருங்கள் பதிலுக்காக... தொடர்ந்து தொடரை  வாசியுங்கள்...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


Painting & pic - thanks google

புத்தகப் பரிந்துரை :

written by Om swamy




வெள்ளி, நவம்பர் 6

வாழத்தானே வாழ்க்கை ...!

"நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு  துரதிர்ஷ்டம் ...இன்று நாம் எல்லோரும் இந்த துரதிர்ஷ்டதிற்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்" - ஆல்பெர் காம்யு.

தற்செயலாக இதை வாசிக்க நேர்ந்தது... எவ்வளவு உண்மை !!!  கணினி செல்போன் இணையம் இல்லாத காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.  கணினி வேகத்திற்கு ஈடுக்கொடுத்து மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். ஐஸ்க்ரீம் கரைவதற்குள் சாப்பிட்டு விடவேண்டும் என்பதை போன்று வேக வேகமாக  வாழ்கிறோம் , ஆனால் உண்மையாக வாழ்கிறோமா என்றால்  இல்லை என்றுதான் சொல்வேன்.  யாருக்கு போன் செய்தாலும் பிரீயா இருக்கிங்களா பேசலாமா என கேட்டு பேசுவது எனது வழக்கம், ஏன்னா அவங்க இப்ப நான் பிசி, வை போனைனு சொல்றதுக்கு முன்னாடி நாமலா கேட்டுறது நல்லது பாருங்க. :-) இரண்டு நிமிடம் பேசவும் நேரமில்லாத மனிதர்கள் தானே  நாம், என்னையும் சேர்த்துதான். ஆனால் ஏன் இப்படி வாழ்றோம் என்று யோசிக்கவேண்டும்.      






நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் ஒரு ஹாய் ஹலோ சொல்ல கூட இயலாத நிலை நல்லதா கெட்டதா ? இது யதார்த்தம் தான் என சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உறவுகள் நட்புகளிடம் நேரில் பேசுவது குறைந்து செல்போன் இணையத்துடன் பேசிக் கொண்டும் அல்லது தனக்குள் தானே பேசிக் கொண்டு ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்து வாழ்கையை கடினப் படுத்திக் கொள்கிறோம். 

எனது நெருங்கிய தோழிக்கு  (25 வருட நட்பு)           எப்போது போன் செய்தாலும் 'கால் யூ பேக்'  என்ற sms வரும்,  பிறகு  அவளாக மாலை ஐந்து மணிக்கு அழைப்பாள்,  ஒரு கை காரின் ஸ்டியரிங்கிலும், மறுகையில் போன்னுமாக பேசுவாள், வீட்டை எட்டுவதற்குள் எங்களின் பேச்சு முடிந்துவிடும் அல்லது முடித்துக் கொள்வோம்... இதைத் தவிர வேறு நேரம் அவளுக்கு கிடைப்பதில்லை. சமையல், வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் வீட்டிலும் தோழி பிசியாகவே  இருப்பாள்... கணவன் மனைவி இருவரும் சேர்ந்து லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.   பெங்களூரில் சொந்தமாக மாடி வீடு, சென்னையிலும்  வீடு நிலம் என்று இருக்கிறது, ஒரே மகன், வாரத்திற்கு ஒரு வேளை ஒன்றாக அமர்ந்து உணவருந்தவும் இயலாமல் எப்போதும் எதன்  பின்னோ ஓடிக் கொண்டே இருக்கிறாள், நடுநடுவே சலித்தும் கொள்வாள், ஒரு நாளும் ரிலாக்ஸ் பண்ண முடியவில்லை என்று. அவள் வாழும் வாழ்க்கையை பார்த்து எனக்கு மிகுந்த  ஆயாசமாக இருக்கிறது. 

2015 வருடப் பிறப்பன்று வாழ்த்து சொல்ல தோழியை போனில் அழைத்தேன் 'ஊருக்கு போய்ட்டு இருக்கேன்,  அப்புறம் கூப்பிடுறேன்' என்று SMS, நிச்சயமாக 2016 புது வருட வாழ்த்து நான் சொல்வதற்குள் அவளாக கூப்பிட்டு விடுவாள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.  :-) இதில் சுவாரசியம் என்னவென்றால் அவளது நெருங்கிய ஒரே தோழி நான்தான். இந்த லட்சணத்தில் தான் இருக்கும் போல பலரது நட்புகளும் :-))

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்ததிற்குரியவர்கள். அவர்களால் அவர்களை சேர்ந்தவர்களுக்கு  சிறிய அளவிலான சந்தோசத்தை  கூட கொடுக்க இயலாது . பிசி   பிசி  என்று தானும் தொலைந்து அவர்களை நேசிப்பவர்களின் நேசத்தையும்  அலட்சியம் செய்கிறார்கள்.  பரப்பரப்பான வேலைக்கு நடுவிலும் சிறு புன்னகையை கூட காட்டாமல் வாழும் வாழ்க்கை உண்மையில் நரகம். பிசி என்ற முகமூடியை போட்டுக் கொண்டு அன்பானவர்களிடம் தோற்றுப் போகிறோம். பகிரப் படாத அன்பும் கவனிக்கப் படாத நேசமும் யாருக்கும் பிரயோசனம் இன்றி விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும்  ஒரு சிறிய  நலம் விசாரிப்பு சிறு புன்னகை செய்ய கூட இயலவில்லை என்றால் என்ன வாழ்க்கை.  வலிய வலியச் சென்று உறவுக் கொள்வது ஒரு கட்டத்தில் சலிப்பை வெறுப்பை கொடுக்கும், உலகத்தில் இவர் ஒருவர் தானா இருக்கிறார் நாம் பேச பழக, இந்த உலகம் ரொம்ப பெரியது என்று புது புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் தவறில்லை.  சாதாரண நட்புகள் என்றால் பரவாயில்லை... நெருங்கிய உறவாக இருந்தால் என்னாகும் யோசிக்கவேண்டும் அல்லவா?!

இயந்திர உலகில் எல்லோருக்கும் தான் வேலை, பிரச்னை இருக்கிறது அத்தனைக்கும் நடுவிலும் உறவுகள் நட்புகளுடன் தொடர்பில் இருப்பதுதான் உயிர்ப்பான வாழ்க்கை. பிறரை நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது பேரின்பம், இதனை அலட்சியப்படுத்தி வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்?!!  நேசிப்பவர்களை காயப்படுத்தி அதில் சுகம் காணுவதும் ஒரு மனநோய் தான்.

இவ்வாறுதான் நம்மில் பலரும் இருக்கிறோம், பலவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு 'சே எப்போவும் ஒரே டென்சன், பிரீயா இருக்கவே முடியல' என்று... ரிலாக்ஸ் என்பது வேறு எங்கயோவா இருக்கு, ஓய்வுக்கு தேவையான நேரத்தை நாம் தான் ஒதுக்கவேண்டும். அதையும் நம்மை நேசிக்கிறவர்களுடன் செலவிட்டால்  உற்சாகம் இரட்டிப்பாகும்.   

நட்புகள் உறவுகளை நேரில் சந்தித்து பேச இயலாவிட்டாலும் போனில் தொடர்பு கொண்டு பேசலாம் . ஆனால் சமூக வலைதளங்கள் வந்தப் பின் அதற்கும் நேரமில்லாமல்  'அப்புறம் கூப்டுறேன்' என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக்கில் நுழைந்து   'ஹாய் சொல்லுடா கூப்டியே' என்று டைப் பண்ற அளவுக்கு போய்டுச்சு. போனில்   இரண்டு வார்த்தை பேச வழியில்லை ஆனால் பேஸ்புக்கில் அன்பொழுக  பேசுவது    வேடிக்கை.

அப்புறம் இன்னொன்னும் புரிய மாட்டேங்குது, போன் ல பேச நேரம் இல்ல பிசி பிசி சொல்ற ஆட்கள் பேஸ்புக் ஸ்டேடஸ் ஒரு பக்கத்துக்கு டைப் பண்ண எப்டி முடியுது... லைக் கிடைக்குதுன்றதுக்காவா ?! என்னவோ போங்க ...அன்பு நேசம் பாசம் நட்பு எல்லாம் விரல் நுனிக்குள் அடங்கிவிட்டன.  

தம்மை நேசிக்கும் உறவுகளிடம் ஏன் இந்த அலட்சியம். இயந்திர உலகில் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் மிகவும் குறைவு என்றபோது   மிக சிலரிடம் கூட உறவை சரியாக பேணாமல் வாழும் வாழ்க்கையில்  உயிர்ப்பு இருக்குமா என்ன...நிச்சயமாக இல்லை. இளமையில் நமது இந்த அலட்சியம் பெரிதாக  தெரியாது, காலம் செல்ல செல்ல ஒரு வெறுமை  சூழும்  நம்மை பார்த்து புன்னகைக்கவும் ஒருத்தர் இல்லையே எல்லோரும் எங்கே சென்றார்கள் என்று மனசு ஏங்கும். அன்பிற்கு இன்னொரு பக்கமும்  இருக்கிறது அதற்கு பெயர் வெறுப்பு, ஆம் அதுவரை மென்மையாகவும் பரிவாகவும் நம் ஒரு விழி பார்வைக்காக  ஒரு ஐந்து நிமிட பேச்சுக்காக காத்துக் கிடந்த அன்பு வெறுப்பாக மாறி இருக்கும். அன்பை மதிக்காவரிடத்து செலுத்தப் பட்ட அன்பு இப்படி ஆகிவிடுவது இயல்பு.  ஆனால் இது நல்லது அல்ல. நாம் வாழும் சூழல் அன்பு நேசம் பாசம் பிரியம்  நிறைந்ததாக இருக்க வேண்டும் அத்தகைய இடத்தில் தான் இறைவனின் பார்வை இருக்கும்.

அப்படியல்லாமல் எதன் பின்னோ ஓடி நமக்கான வாழ்க்கையை வாழாமல் போவதுடன், காலமும் அப்படி இப்படி நம்மை  அலைகழித்து ஓடச்செய்துவிடுகிறது.  அத்தகைய ஓட்டத்தில் வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களை கவனிக்காமல் வெற்றுப்புலம்பல் எரிச்சல் சலிப்புடன் மரணித்தேப்  போகிறோம்...


அடிக்கடி இல்லையென்றாலும் சந்திக்கும் நேரத்திலாவது  மெல்லிய புன்னகை சில அன்பான வார்த்தைகளை பிறருக்கு கொடுத்துச் செல்வதை வழக்கமாக்கி கொண்டோம் என்றால் இவையே நம்மை வாழும் காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்...

இனியாவது இப்படியும் கொஞ்சம் வாழ்ந்துப் பார்ப்போமே... ஆம்  'வாழத்தானே வாழ்க்கை' !!!





பிரியங்களுடன்
கௌசல்யா