friendship லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
friendship லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 13

இணைய நட்பு


இணைய நட்பு




சலனம் 
                                           
மௌனமாய் இருக்க மனதும்                                          இடம் கொடுக்க வில்லை...!
விலகிச் செல்ல பாதையும் 
எனக்கு தெரியவில்லை....?!

                       ********                                                  
எந்த நிமிடம் என் மனதினுள் நுழைந்தாய்?
நட்பு என்ற அடையாளத்துடன் நுழைந்து 
என் உணர்வோடு கலந்தது ஏன்?
தெளிந்த என் மன நீரோடையில் 
முதல் கல் எரிந்தது நீ..... ஏன்?
கலங்கிய நீரில் நான் 
கரைந்துப் போகவா...இல்லை
துடித்து சாகவா.....?    
காரணம் 
சொல் விட்டு விடுகிறேன் 
நிரந்தரமாக என் மன கூட்டில் இருந்து...!

*****

 நீ எழுதிய  ஒவ்வொரு வார்த்தையும் 
முள்ளாய் தைத்ததை நீ அறிவாயா?
தைக்கட்டும் என்று அறிந்தே எழுதினாயா 
வெறும் எழுத்துக்கள் ஒருவரை 
சித்திரவதை செய்யுமா....... ?   
செய்கிறதே என்னை......!?
                       
                     **********
கல் நெஞ்சகாரனடா  நீ ! 
என் நெஞ்சை ரணமாக்கி விட்டு, 
துயில்கிறாய்  நிம்மதியாக !!
விடமாட்டேன் உன்னை...?
கடவுளிடம் வருந்தி 
வரம் பெறுவேன் நிதமும் 
உன் கனவில் வருவதற்கு!!
                                              
                                                               **********
                      
                             மறந்தும் உன் நட்பை இழக்க, 
               மனம்  இடம் கொடுக்காது 
           என்றானபின், உன் மன நிலையை 
               நான் அறிவது எவ்வாறு ?
           முகமூடி  போட்டு பேச எனக்கு 
               விருப்பம் இல்லை,  உடைத்தே 
           சொல்கிறேன்,  உன் அன்பு வேண்டும் 
               வாழ்வின் இறுதிவரை...!!
           அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் 
                வைத்துகொள்....?! மண்ணுக்குள் நான்  
           போகும் கடைசி நொடி வரை கூட, 
                உன்னை நேரில் சந்திக்காது என் கண்கள் !
           பின் எவ்வாறு நம்  நட்பு கற்பிழக்கும்....??!
                ஆதலினால், தூய நட்பு  கொள்வோம் !!
                                                              
                                                                 ************


இணையம் பிரபலம் ஆன புதிதில் என் நெருங்கிய கல்லூரி தோழி இணைய நட்பை வைத்து எழுதிய கவிதைகள் தான் மேலே இருப்பவை. அவள் இப்போது பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறாள்.  நான் இணையத்தில் எழுதுவதை அறிந்த அவள் அப்போது விளையாட்டாய் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய இந்த கவிதைகளை எனக்கு அனுப்பி வைத்தாள்.  அதை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எழுதியவற்றில் பலதும் மறந்துவிட்டது என்று சொன்னாலும் நினைவில்  இருக்கும் இவற்றை படிக்கும் போது வியப்பாகத் தான் இருக்கிறது !! 

இணையத்தின் உதவியால் இன்று  முகம் தெரியாமல் பல நட்புகள் உருவாகின்றன.  அவை அனைத்தும் ஆரோக்கியமாகவே இருக்கவேண்டும்.  இந்த நட்பால் புது கலாச்சாரம் உருவாகிவிடக்  கூடாது என்பதில் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். சிறு சலனமும்  நம் மனதில் நுழைய இடம் கொடுக்காமல் இருந்தால் நட்பு என்பது நீடித்து நிலைத்து இருக்கும்.  

ஆண், பெண் நட்பு மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்றுதான், ஆனால் இருவரும் தங்களுக்கு என்று எல்லைகளை வரையறுத்துக்கொண்டு அதன்படி நடப்பதே நன்று. இணைய நட்பைப்  பொறுத்தவரை முகமறியா நட்புதானே என்று கவனக்குறைவாக இல்லாமல், வார்த்தைகளை பரிமாறும்போது மிகவும் கவனமாக கையாள்வது நட்பைக்  கொண்டாடும் இருவருக்குமே நலம் பயக்கும்.

வார்த்தைகளில் மரியாதையை கையாளும்போது அந்த நட்பு வணங்கப்பட கூடியதாகி விடுகிறது! அவசரப்பட்டோ, உணர்ச்சி வேகத்திலோ, வார்த்தைகளை வெளி இடாமல் நிதானமாக, தேவைக்கு ஏற்ப,  பதில் சொல்வது கண்ணியத்தைக்  கொடுக்கும்.  நன்கு பழகியவர்கள் ரூபத்திலேயே பிரச்சனைகள் உருவாகும் கால சூழ்நிலையில் இணைய நண்பர்கள், அது இரு ஆண்களுக்கு இடையிலான நட்பு, இரு பெண்களுக்கு இடையிலான    நட்பு என்றாலுமே கவனமுடன் நட்புக்கொள்வது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தாது.  

தோழமைக்கு  உரிமை அதிகம்தான் ,  அது வரம்பு மீறாதவரை.....?!!
                               
நல்ல பல பதிவுகளை எழுதுவதற்கு இணைய நட்பு உதவியாக  இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த மாதிரி நல்ல நட்பை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ! அந்த மாதிரி 30 நண்பர்களை followers ஆகவும் , வோட் மற்றும் பின்னூட்டத்தின் மூலமாக பல நல்ல நண்பர்களை பெற்றதின் மூலம் நானும் கொடுத்து வைத்தவள்தான் !! 

என் நண்பர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு அதிகம் உண்டு என்பதை என்னால் மறைக்க முடியாது .  என் இணைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் மூலமாக என் அன்பையும் , நன்றியையும் தெரிவித்துக்  கொள்கிறேன்.  எழுதும் என் கையை பலப்படுத்த  உங்கள் நட்பு தொடர்ந்து வேண்டும்....!                                 
                           
எனது தாம்பத்தியம் பாகம் 5 பதிவு அடுத்ததாக  வெளி வரும்....!  காத்திருங்கள் !! நன்றி