செவ்வாய், மார்ச் 12

மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் தமிழ் நண்டுகள் !?

சிகப்பு கம்பள வரவேற்பு ஒரு பக்கம், நேரில் சென்று பொன்னாடை போர்த்து வாழ்த்துவது ஒருபக்கம் நடக்க மேடையில் ஈழத்துக்காக உயிரை விடவும் தயார் என இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை தான் நமக்கு தெரியும். மாணவர் சக்தியை அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்துவதையும் அறிவோம்.

மாறாக இன்று ஈழ மக்களுக்காக உண்ணாவிரத்தை கையில் எடுத்திருக்கும் கல்லூரி மாணவர்களின் உணர்விற்கு என் வணக்கங்கள். மாணவர்கள் நினைத்தால் சமூகத்தில் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும். இப்படி ஒரு போராட்டம், புரட்சி இங்கே வராதா என் சமூக அக்கறை உள்ள எல்லோரின் மனதிலும் நிச்சயம் ஒரு கேள்வி எழும். அதற்கான பதிலாய் இவர்களின் போராட்டத்தை பார்க்கிறேன்.


ஈழம் முழுமையாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டு இன அழிப்பு வேலைகள் கனகச்சிதமாக நடைபெறுகிறது. நெஞ்சில் ஈரம் உள்ள எவரும் நம் பாலச்சந்திரனுக்காக இரு சொட்டு கண்ணீர் விடாமல் இருந்திருக்க முடியாது. சிறு பாலகனையும் சுட்டுக்கொல்லும் அளவுக்கு ஈனமதி படைத்த அரக்கர்கள் ! இவர்களிடம் பணிந்து போகும் மத்திய அரசு. கொலை பாதகங்களை, பாலியல் ரீதியிலான கொடூரங்களை ரசித்து கொண்டாடும் சர்வ தேச அரசியல் !!

அகிம்சை வழியில்  போராடும் மாணவர்களை பல இன்னல்கள் கொடுத்தும் அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் ஒரு கல்லூரி தானா இருக்கிறது தமிழகத்தில்...?! தீ பரவட்டும் அனைத்து மாணவர்களிடையே...நீதி கிடைக்கட்டும்...! மாபெரும் ஜன சமுத்திரத்தில் மாணவர்கள் தம் மக்களின் உரிமைக்காக கொடுக்கும் குரல் சர்வ தேசம் எங்கும் ஒலிக்கட்டும். மாணவர்கள் உலகம் கேளிக்கை நிறைந்தது மட்டுமல்ல சமூக அக்கறை அதிகம் கொண்டது என சுயநல உலகம் உணரட்டும்.

அதிகார வர்க்கத்தினரின்/ஆசிரியர்களின் இன்டெர்னல் மார்க் கிடையாது என்ற மிரட்டல்கள் ஒரு பக்கம்... மனிதர்களை உணர்ச்சி அற்றவர்களாக்கும் முயற்சி இது. இன்றைய மாணவர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று சொல்லும் நாவுகள் தான் இப்படி பேசுகின்றன.  இன்று வாழும் தேசம் நாளை பறிபோகும் என்றானாலும் படிப்பில் முதல் இடம் பிடிப்பது எப்படி என்ற சிந்தனையில்  இருக்க சொல்கிறது இன்றைய கல்வி !

தமிழ் நண்டுகள்

இந்த சூழலில் எனக்கு தமிழ் நண்டுகள் கதைதான் நினைவுக்கு வருகிறது. தமிழர்களின் குணம் இது போன்றதுதான் என அடிக்கடி நிரூபிக்கிறார்கள் இங்கே சிலர் ! இணையத்தில் பலரது வாதத்தையும், கருத்துக்களையும் பார்த்தால் நண்டு கதை இவர்களை வைத்து தான் சொல்லப்பட்டது போல இருக்கிறது. பூட்டப்பட்ட அறைக்குள் உணர்ச்சி பிழம்பாய் கொந்தளித்தால் போதும் நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை போல வேறு சிலரது எண்ணமாக இருக்கிறது !! இப்படி எல்லாம் இருக்காமல் ஒன்று மாணவர்களின் போராட்டத்திற்கு கருத்துக்களால் வலிமை சேர்க்கலாம் அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவது உத்தமம்.

ஈழத்தில் நடக்கும் இன அழிப்புகள் பற்றி சிறிதும் அக்கறையற்ற தமிழ்நாட்டு தமிழர்கள்(?) மாணவர்கள் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மாணவர்கள் சிறு பிள்ளைகளாம், மன முதிர்ச்சி இல்லாதவர்களாம் ...அரசியல்வாதிகளால் தவறாக கையாளப்படலாம் என்பது பலரின்  எண்ணம் ஆனால் மாணவர்களின் எழுச்சிக்கு காரணமே இன்றைய அரசியல்வாதிகள் மேலுள்ள கோபம் தானே. மக்கள் நலனை மறந்த ஊழல் மலிந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட மாணவர் சமுதாயத்தால் மட்டும் தான் இயலும். இவர்களுக்கு தலைவன் என்று யாரும் தேவை இல்லை, சமூக நலன் மட்டும் தான் தலைவன் என்பதாக இருந்தால் இவர்களின் வேகத்திற்கு முன் பொய்மை கயமை ஏதும் நிற்க முடியாது. முக்கியமாக இவர்களிடம் இருக்கவேண்டியது துணிவுடன் கூடிய பொதுநலம் மீதான ஒற்றுமை.

இன்று சேனல் நான்கை பார்த்து பொங்குகிற நீங்கள், இத்தனை நாள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விகள்  மனதை வதைக்கிறது. என்ன பதிலை சொல்வது எங்களின் கையாலாகாத்தனம் என்றா ?! குத்த குத்த  பொறுத்துக்கொண்டே இருக்கும் புழு ஒரு கட்டத்தில் தன் உடலை வளைத்து எதிர்ப்பைக் காட்டும். அது போல அரசியல்வாதிகளால ஏதாவது நல்லது நடந்துவிடாதா என பொறுத்து பொறுத்து இன்று அதற்கு வழியே இல்லை என்று ஆனதும் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள். முத்துகுமரன், செங்கொடியை யாரும் மறக்கவில்லை, அன்று அவர்கள் பற்ற வைத்த தீ இன்று எரிய தொடங்கி  இருக்கிறது. எனது கவலை எல்லாம் நெருப்பு நீர்த்து போய்விடகூடாது என்பதாகத்தான் இருக்கிறது. மாற்றம் தேவை அதுவும் உடனடியாக...சப்பை கட்டும் பேச்சுக்கள் கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது.  

மாணவர்கள் ஒன்றுகூடுவது கேளிக்கைக்காக திரைப்பட கதாநாயகர்களுக்காக, கிரிகெட்டுக்காக என்ற போது   கண்டுகொள்ளாத பெற்றோர்கள் உண்ணாவிரதம் என்றதும் அவர்களின் படிப்பை பற்றி/எதிர்காலம் பற்றி  கவலைப்படுகிறார்கள். நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவனை அனுப்பியதும் நாம் தான் !   மாணவர்கள் தான் தேசத்தின் தூண்கள் என்பதை உணருங்கள்.

நேற்றைய செய்தி ஒன்று 

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை போராட்டத்தை முடக்கியபின் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களை ஒன்றாக இணைத்து போராட இருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் மாணவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் 'எங்கள்  அமைப்புக்கு அரசியல் சாயத்தை பூச வேண்டாம் எனவும் எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட வேண்டாம்' எனவும் கேட்டுள்ளனர்.   

இவர்கள் தெளிவாகவே உள்ளனர். கருத்து சொல்றோம்னு இணைய போராளிகள் எதையாவது சொல்லி குழப்பாம இருந்தால் சரி.

மாணவர்கள் சமூக உணர்வு பெறுவதை அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அதனால்  பல எதிர்ப்புகளை சமாளித்தாக வேண்டும்.  வேகமாக பரவக்கூடியது என்பதால் விரைவாக போராட்டத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாட்டை சீரழித்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளிலும் மாணவர்களின் தலையீடு மிக அவசியம் என்பதை போராட்டத்தை குறை சொல்பவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் .

மாணவ நண்பர்களே !!! 

சினிமா, விளையாட்டு, கேளிக்கை தவிர வேறு ஏதும் தெரியாது என நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரது எண்ணத்தையும் தவிடுபொடியாக்குங்கள்...பிற மாநிலத்து இளைஞர்கள் அவர்களின் உரிமைக்காக உறுதியுடன் நின்று போராடும் போது அவர்களை விட நீங்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டீர்கள்...நம் பாரதியின் அக்னிகுஞ்சுகள் நீங்கள்...! நினைவில் கொள்ளுங்கள் !!

யாருடைய போலி சமாதானத்தையும், பொய்யான வாக்குறுதிகளையும் நம்பாதீர்கள். உங்கள் போராட்டத்தை சிதைக்க பல வகையிலும் முயற்சிகள் எடுக்கப்படும்...எதற்கும் அஞ்சாதீர்கள்...உள்ளஉறுதியுடன் ஒற்றுமையாக நில்லுங்கள்...! பல நல்ல உள்ளங்கள் தூரத்தில் நின்று உங்களுக்காக உங்களின் நலன் வேண்டி மனதார தொழுது கொண்டிருக்கின்றன... என்பதை மறக்காதீர்கள் ! 

வெல்க தமிழ் ! வெல்லட்டும் இளைஞர்களின் ஒற்றுமை !

வெள்ளி, மார்ச் 8

மகளிர் தின வாழ்த்தும் போலித்தனமும் ?!!

முகநூல்  சுவற்றில்  
நேற்றுவரை  
பெண்ணின் புகைப்படம் பகிர்ந்தும்  
அங்கங்கள் குறித்த அர்த்தமற்ற கவிதைகள் எழுதியும்  
ரசித்து விளையாடியவர்கள்  
இன்று 
தெய்வம் என்கிறார்கள் 
தேவதை என்கிறார்கள் 
சகோதரியாம் 
தோழியாம்  
சிலரோ அதிக உணர்ச்சிவசப்பட்டு 
அம்மா தாயே பெற்றவளே என்கிறார்கள்...
நாளையே இது அத்தனையும் மாறி 
பெண் என்பவள் போகப்பொருள் மட்டும் 
என்ற தங்கள் ஆழ்மன அசிங்கத்தை அரங்கேற்றுவார்கள்
அதையும் கண்டு காறித்துப்பிவிட்டு 
வழக்கம் போல எங்கள் வேலைகளை 
நாங்கள் பார்க்கவேண்டும்  !?
  
பெண்னை 
தூற்றலும்
வதைப்பதும்  
சிதைப்பதும்
எல்லாம் செய்து 
துதிக்கவும் முடிகிறது 
ஆண்களால் ??!!

இங்கே பல ஆண்களின் சுயவிளம்பர போற்றுதலுக்கு ஆளாகும் பெண்ணின் நிலை அடுத்த சில மணிநேரங்களில் தலைகீழாக மாறிவிடும்.

வெளியிடங்களிலும் எங்குப்பார்த்தாலும் மகளிர் கொண்டாட்ட வாழ்த்தொலிகள், பாராட்டு விழாக்கள் ! 

சிங்கள அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த பலமாக யோசிக்கும் நிலையில் மகளிர் தினத்தை கொண்டாடுவது ரொம்ப முக்கியம்தான்  !! வரிசையாக  பெண்ணை சிதைத்துக் கொன்று உடலுடன் உறவு கொண்டான்  சிங்களவன் என்ற செய்தியை கேட்டும் பார்த்தும் கொதிக்காத நெஞ்சில் இருந்து எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் வருகிறது...கொத்துகொத்தாக பெண்கள் சின்னாபின்னாமாகி சீரழிந்து போனதுக்கு காரணமானவர்களை சாமரம் வீசி நாட்டுக்குள் வரவேற்பார்கள், அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூட சொல்ல தைரியம் அற்ற கோழைகள் தானே நாம்!?

சிறுகுழந்தையையும் விட்டுவைக்காமல் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை  ஒரு செய்தியாய் சகஜமாய் கடந்து போகும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். நமது பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் சரியானமுறையில் ஒரு கழிவறை வசதி இல்லை. காதல் என்ற பெயரில் நடக்கும் ஆசிட் வீச்சுக்கள், கௌரவ கொலைகள், சாதி மதத்தின் பெயரால் காட்டுமிராண்டித்தனங்கள்.......இன்னும் பல கேவலங்கள், அசிங்கங்கள் !!   

பெண்ணுக்கு எங்கே எந்த கொடுமையும் நடக்கட்டும் என் வீட்டு பெண் பத்தரமா  இருக்கிறாள் என்ற தெம்பில், திமிரில் ஒரு நாடுனா நாலும் நடக்கத்தான் செய்யும் அதற்காக பண்டிகை, தினம் எல்லாம் கொண்டாடாம, வாழ்த்தாம இருக்க முடியுமான்னு சில அறிவாளிகள் கேள்வி கேட்பதை தான் சகித்து கொள்ள முடியவில்லை. 

ஏன் சொல்றோம் எதற்கு சொல்கிறோம் என்பதைவிட அவன் சொல்றான் அதனால் நானும் சொல்றேன் என்ற ஆட்டுமந்தை குணம் மனிதர்களை விட்டு என்று ஒழியுமோ தெரியல. எந்த தினமாக இருந்தாலும் அத்தினத்தின் உண்மையான பொருள் விளங்கப்படாமலேயே அந்த தினம் முடிந்துவிடுகிறது.  

முகநூலில்  முன்பின் தெரியாத பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி பெண்கள் மீதான  அக்கறைய காட்டுற மாதிரி, அப்படியே மறக்காம உங்க வீட்டிலும் அம்மா, மனைவி, சகோதரி  என்று பெண்கள் இருப்பாங்க அவங்களுக்கும் சொல்லிடுங்க, சந்தோபடட்டும். ஆண்களே ! தயவுசெய்து தினங்களை விட்டுவிடுங்கள் உங்கள் வீட்டு பெண்களை கொண்டாடுங்கள் !

முகநூலில் பெண்ணை வர்ணித்து எழுதும் சில கவிதைகள் ஆபாசத்தின் உச்சம் ! நடிகைகள், பெண்கள் படங்களை போட்டு கருத்து சொல்றோம்னு ஒட்டுமொத்த பெண்களை வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார்கள். இளம்பெண்கள்  குடிக்கிற மாதிரியான படங்களை பகிர்ந்து ஆண்கள் நாங்கள் குடிக்கிறது நாட்டுக்கு நல்லது,ஆனா பெண்கள் இப்படி குடிச்சா உலகத்துக்கே கெட்டது என்பதை போல பறைசாற்றுகிறார்கள். இந்த படங்களை போடுவதன் மூலம் தாங்கள் குடிப்பதை நியாயபடுத்திக்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீருக்கும், அவலநிலைக்கும் பெரும் காரணமான டாஸ்மார்க் வியாபாரத்தை தீவிரமாக்கி வருமானம் பார்த்துக் கொண்டிருப்பதும்  ஒரு பெண் என்ற அளவில் இந்த மகளிர் தினத்தை நாம் கண்டிப்பாக சிறப்பாக கொண்டாடியே தீரவேண்டும் !? வேதனை !!

பெண்கள்

ஆண்களுக்கு சிறிதும் குறைந்தவர்கள் அல்ல ஒரு சில பெண்கள்... பிறரை கவர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ ஜாலங்கள் செய்து அதை உரிமை ,சுதந்திரம் என்று நியாயப்படுத்துவது, ஆண்களை ஆணாதிக்கம் என்று மட்டுபடுத்துவதன் மூலமே பெண்மை ஒளிரும் என்று எண்ணிக்கொண்டு செயல்படுவது,  ஆணை சாடுவது எதிர்த்து பேசுவது மட்டுமே பெண்ணியம் என்பதை போல நடப்பது.....இப்படி இன்னும்... இதுபோன்ற சில பெண்களின் செயலால் ஒத்துமொத்த பெண்களின் சுயகௌரவம் பாழாவதை  பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.  

குடும்பத்தை பொருத்தவரை ஆணுக்காக,பிறருக்காக மட்டுமே வாழ்கிறோம் என்றில்லாமல் தனக்காக வாழ்கிறோம் அதன் மூலம் தன்னை சேர்ந்தவர்களை சந்தோசப்படுத்துகிறோம் என்ற மனநிலை பெண்ணுக்கு வேண்டும். 

அரசியலில்  பெண்கள் ஈடுபடுவது பாராட்டுதற்குரியது...இதில் இரண்டு விதம்,  ஒன்று பெயருக்கு பதவியில் இருந்து கொண்டு ஆணின் சொல்கேட்டு செயல்படுவது மற்றொன்று ஒட்டுமொத்த அதிகாரத்தையும்  கையில் எடுத்துக்கொண்டு  சுயநலத்துக்காக எல்லோரையும் ஆட்டிப்படைப்பது ! இது இரண்டுமே சமூகத்தின் சாபக்கேடுகள்  ! மாறாக பெண் தனக்குரிய சிறப்பு தன்மைகளை மட்டுமே வெளிப்படுத்தி சுயமரியாதையுடன் ஒரு சமூகத்தை, நாட்டை வழிநடத்தி செல்வது என்று நடக்குமோ அன்றே நிறைவான பெண்களின் தினம் !

எல்லா நிலைகளிலும் எல்லா இடத்திலும் சமவாய்ப்பு பெறுவது தான் பெண்ணுரிமையே தவிர  ஆண்களுக்கு சமம் என்ற பெயரில் அவர்களை போல நடப்பது அல்ல என்பதை முதலில் பெண் உணரவேண்டும். ஆண்களும் தனது தாய், சகோதரி, மனைவி, மகள் தவிர மற்ற பெண்கள் வெறும் சதை பிண்டங்கள் என்ற எண்ணத்தை மாற்றியாக வேண்டும். 

ஆண், பெண் இருவரின் மனதில் இந்த மாற்றம் ஏற்படாமல் வெறும் பேச்சிற்கு மகளிர்தின வாழ்த்துக்கள் என்று சொல்வதில் அர்த்தமும் இல்லை...அந்த வார்த்தையில் ஜீவனும் இல்லை !!!!


                                                                        * * *



படம் :கூகுள்


போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...