திங்கள், பிப்ரவரி 7

மரங்களுக்காக உயிர் கொடுத்த மக்கள் !!



இப்போது நாம எல்லோரும் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது, எதிலும் சுகாதார கேடு, சுவாசிக்கும் காற்றிலும் சுத்தம் இல்லை என்று புலம்புறோம் ஆனால் இன்னும் சரியான விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. சமீப காலமாகத்தான் 'மரங்களை வளர்க்கணும்', 'மரங்களை வெட்டகூடாது' என்ற கோஷங்கள் வலுப்பெற தொடங்கி உள்ளன. மரங்களை வெட்டகூடாது என்பது சம்பந்தமான ஒரு ஆச்சரியமான வரலாறு ஒன்று நம்ம நாட்டில் இருக்கிறது. நமக்கு முந்தைய காலகட்டத்திலேயே இதற்காக ஒரு பெரிய உயிர் போராட்டம் நடந்திருக்கிறது...!!

சுற்றுசூழல்மாசுக்கு எதிராக முதல் முறையாக ஒரு போராட்டம் நடைபெற்றது நம் இந்தியத் திருநாட்டில்தான் ! 

பல ஆச்சரியங்களுக்கும், அதிசயங்களுக்கும் ஆரம்பம் மட்டும் நம் நாடாகத்தான் இருக்கும்...?!!

கி.பி. 1730  ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங் தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க நினைத்தார். ஆனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் இவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. அந்த மரங்களை வெட்ட தனது ஆட்களை அனுப்பினார்.

அந்த பகுதியில் வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்' என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். மன்னரின் ஆணையை கேட்ட மக்கள் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். பதறிப்போன மக்களும் வேறு வழியின்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மரத்தையும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். அதில் பெரும் பாலானவர்கள் பெண்கள் ! 

வீரர்களும் மன்னரின் உத்தரவை மீற முடியாமல் மரத்தை கட்டிபிடித்தவர்களை முதலில் வெட்டிப் போட்டுவிட்டு பின் மரத்தை வெட்டினார்கள். மூணு பெண் குழந்தைகளுக்கு தாயான 'அம்ரிதா தேவி' என்ற பெண் தனது குழந்தைகளுடன் முதலில் உயிரை விட்டார். இப்படியே 363 மரங்களையும் அதனை கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டிய பின்னரே மன்னரின் மனம்  இளகியது.....?!! 'போதும் நிறுத்துங்கள் இந்த இடம் வேண்டாம்' என்று போர்வீரர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார். மரங்களுக்காக தங்களின்  உயிரை விட்ட அம்மக்களின் தியாகம் எவ்வளவு பெரிது ?!! 

இந்த தியாகத்தின் ஆழம் இன்றைய மக்களுக்கு புரியவில்லை...இதனை நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டும். மரங்களை வளர்க்க சொல்லி ஊக்கபடுத்த வேண்டும். 

இந்த மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபெற்ற முதல் எதிர்ப்பு என்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை 'சிப்கோ இயக்கம்' என்று கொண்டாடுகிறார்கள். 'சிப்கோ' என்றால் தழுவுதல் என்று அர்த்தம். 'கொண்டாடுகிறோம்' என்று சொல்ல இயலவில்லை !? ஏன்னா பலருக்கும்  இந்த இயக்கம் பற்றியே தெரியாது என்பதே உண்மை.  

இந்த இயக்கத்தை தோற்றுவித்தவர் திரு சுந்தர்லால் பகுகுணா என்பவர் ஆவார். இப்படி ஒரு இயக்கம் இருப்பதால் தான் மரங்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றன....!!

1981-ம் ஆண்டு இந்திய அரசு, சுந்தர்லால்  பகுகுணா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க வந்ததை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ''இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த 'வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும் !'' என்றாராம். 


தற்போது வரை அந்த தகுதியை அவர் அடையவில்லை என்பது சந்தோஷபடகூடிய செய்தி அல்ல !!?

மரங்கள் மனிதனின் தயவு  இல்லாமல் கூட வளர்ந்துவிடும்,
மனிதனால்  மரங்கள் இன்றி வாழ இயலாது என்பது நிதர்சனம் "

"இந்த பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும், அவற்றின் நலனுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது, எந்த  உயிரினமும் அடுத்த உயிரின் உரிமைகளை பறிப்பது பெரும்பாவம்"  
                                                                                                         - ஈசோபநிஷதம்.




நறுமணம்
என்னில் எதற்கு...
வெட்டுகிறார்களே 
கதறுகிறது
சந்தன மரம் !?

 மரங்களை வெட்டுவதை தடுப்போம்...மனிதம் காப்போம். !!!



***********************************************************************
அன்பான பதிவுலக நட்புள்ளங்களே,

வணக்கம்.  

சொந்த தொழில் சம்பந்தமாக எனக்கு நிறைய  வேலை, அலைச்சல் இருக்கிறது. பதிவுகள் எழுதவும், பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதவும்  நேரம் கிடைப்பது இல்லை. தவிரவும் எனக்கு ஒரு ஸ்பேஸ் தேவை படுகிறது. அதனால் இந்த மாதம் முழுவதும் விடுமுறை  எடுத்துக்கிறேன். (ஸ்...அப்பாடான்னு தோணுதா...?? வந்து சேர்த்து மொத்தமா எழுதிடுவேன்ல.....?!!)
   
என்றும் உங்களின்  ஆதரவு ஒன்றே என்னை எழுத வைத்துகொண்டிருக்கிறது. உங்கள் அனைவரின் நட்பே என்னை அதிகம் உற்சாகப்படுத்துகிறது   மீண்டும் பல பதிவுகளுடன், உற்சாகமாக உங்களை  சந்திக்கிறேன்....நன்றி.

பிரியங்களுடன் 
கௌசல்யா  


வெள்ளி, பிப்ரவரி 4

வழி விடுங்கள்...!


மத்திய, மாநில அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.....இது இப்போதைக்கு அவசியமா என்பதே எனக்குள் எழும் ஒரு கேள்வி. இதனை பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்கள் உங்களின் மேலான  ஆலோசனைகளுக்காக இங்கே !

மத்திய அரசு 

மத்திய நிதித்துரை,  மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60  இல் இருந்து 62  க்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. மொத்தம் இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் ஊழியர்கள் ஓய்வு பெற இருக்கிறார்கள் . இவர்கள் ஓய்வு பெறும்  போது ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் பிற  சலுகைகள் என பல  ஆயிரம் கோடிகள் வழங்க வேண்டும்.

* இவர்களுக்கு ஓய்வு கொடுப்பதின் மூலம் பெரும் நிதி சுமை ஏற்படும்

* அந்த இடத்திற்கு புதிய ஆட்களை தேர்ந்து எடுக்க செலவு.

அதற்கு  பதில் இவர்களை, கூட இன்னும் இரண்டு வருடங்கள் பணி நீட்டிப்பு செய்வது நல்லது என்று நிதித்துறை காரணங்களை அடுக்குகிறது. இப்படி செய்வதால்  நிதிசுமையை இந்த வருடம் சமாளித்து விடலாம், ஆனால் இரண்டு வருடம் நீட்டிப்பதின் மூலம் தொடரும் செலவுகளை என்ன செய்வார்கள்......?! நீட்டித்த வயது வரம்பை மறுபடி குறைத்து விடுவார்களா.....?!! 

மாநில அரசு

மத்திய அரசு போல மாநில அரசில் பணியாற்றுவோரின் ஓய்வுறும் வயதை 58  இல் இருந்து 60 க்கு நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அதுவும் இப்போது நடைபெறப் போகிற இடைக்காலக்  கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று செய்திகள் உறுதி படுத்துகின்றன.

ஆனால் இதில் அரசின் சுயநலம் தான்  இருக்கிறது. இந்த ஆண்டில் 2 லட்சம் பேர் ஓய்வு பெற உள்ளனர், அவர்களின் ஓட்டு வங்கியை கைப்பற்ற இப்படி ஒரு வழி என்பதுதான் உண்மை.

இப்படி மத்திய, மாநில அரசுகள் தங்களின் சுயநலதிற்க்காகவும், நிதிசுமையை காரணம் காட்டியும் இப்படி ஓய்வுறும் வயதை நீட்டிப்பது சரியன்று என்பது என் கருத்து. 

படித்த பட்டதாரிகள் - பரிதாபம்    


ஓய்வுறும் வயதை நீட்டிப்பதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தாமதபடுகிறது இல்லை மறுக்கபடுகிறது.....படித்துவிட்டு அரசாங்கம் வேலை கொடுக்கும் என்ற கனவில் காத்திருப்பவர்களின் நிலை என்ன???

தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை மட்டும் 49,85,289 பேர் !!?? (49 லட்சத்து 85  ஆயிரத்து இருநூற்றி எண்பத்தைந்து ) 

இந்த கணக்கு 2004 ம் ஆண்டு  மார்ச் வரை எடுக்கப்பட்டது...இப்போது 2011.....?!!

இன்றைய இளைஞர்கள் நன்றாக படித்து கல்லூரி படிப்புடன், கணினி படிப்பு போன்ற  பிற தகுதிகளையும் வளர்த்து வைத்து இருக்கிறார்கள்...உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பிலும் இருக்கிறார்கள். ஆனால் அரசாங்க வேலை என்பது பலருக்கு எட்ட கனியாகவே இருந்து விடுகிறது. அரசாங்க வேலை கிடைத்ததும் திருமணம் என்ற உறுதியில் பலரும் இருப்பதால் திருமணமும்  தள்ளி போய், காலம் கடந்து பரிதாபமாக  நிற்கிறார்கள்.

சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல் வெளிநாட்டு வேலைக்கு செல்லலாம் என்று  வயல், வீடு விற்று பணம் ஏற்பாடு செய்து சிலர் சென்றாலும், அதிலும் பலர் சரியான வழிகாட்டுதல் தெரியாமல், தவறானவர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து போகிறார்கள் . வெளிநாடு சென்ற நம் இளைஞர்களும் தங்களது திறமையை, அடுத்த நாட்டின்  முன்னேற்றத்துக்கு செலவிடுகிறார்கள்....?!  


நம் அரசாங்க அலுவலகத்தில் இளைஞர்கள் இருக்கிறார்களா என்று தேட வேண்டி இருக்கிறது.

இன்று மின்னல் வேகத்தில் போய்கொண்டிருக்கிற,வேகமான உலகத்தில வயதானவர்களை மட்டும் முன் நிறுத்தி எதை சாதிக்க முடியும் ??

அரசியலில் ஏன் இல்லை ஓய்வு ?


எனக்கு ரொம்ப நாளா ஒரு பெரிய சந்தேகம்.

மத்திய, மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் என்று அனைத்திலும் ஓய்வு என்று ஒன்று நிச்சயம் இருக்கிறது.... பெரிய அறிவார்ந்த நீதிபதிகள், திறமையான ராணுவ அதிகாரிகள், கலெக்டர்கள் மற்றும் போலிஸ்  துறை உயர் அதிகாரிகள் யாராக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஆனால் இந்த அரசியலில் மட்டும் ஏன் அப்படி ஒன்று இல்லை ?? இதை பற்றி ஏன் யாரும் கேள்வி எழுப்புவதும்  இல்லை....?!! 

பாராளுமன்றம், சட்டமன்றம் எங்கு பார்த்தாலும் ஒரே வயதானவர்களின் தளர்வான நடைகளின் அணிவகுப்பு. மிக கொடுமைங்க.....!?  இளைஞர்கள் எங்கே போனார்கள் ?! அவர்களுக்கு அரசியல் தெரியாதா ??!  தகுதி இல்லையா ?? வயது முதிர்ந்தவர்களிடம் அனுபவம் இருக்கும் மறுப்பதற்கில்லை, ஆனால் வெறும் அனுபவம் மட்டுமே இந்த நவீன காலத்திற்கு போதும் என்று சொல்ல இயலாது. இன்றைய காலத்திற்கு ஏற்ப  திறமையான, நன்கு படித்த, உத்வேகத்துடன் கூடிய, கால மாற்றத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய இளைஞர்கள் தான் தேவை.  

சமீபத்தில் நமது குடியரசு தினம் அன்று தமிழக தலைநகரில் நடந்த கொடி ஏற்றும் வைபவத்தின் போது நம்ம கவர்னரையும், முதல்வரையும் பார்த்து மிக பரிதாபமாக இருந்தது. (இதை இன்னும் தெளிவாக விளக்குவது அவ்வளவு மரியாதையாக இருக்காது)  

வயதானவர்களை ஏன் இப்படி அனுபவம், கௌரவம் என்ற பெயரில் பதவியில்  அமர்த்தி அவர்களை துன்பப்படுத்தணும். அதற்காக அனுபவஸ்தர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதல்ல. அவர்களின் தகுதி, திறமை ,அறிவு, அனுபவம் இவற்றை வைத்து அரசின் ஒவ்வொரு துறைக்கும்  ஒரு ஆலோசனை குழு என்று ஒன்றை அமைக்கலாம். 


அரசியல்வாதிகளுக்கு குறிப்பிட்ட வயதுடன் ஓய்வு கொடுக்கப்பட  வேண்டும். அவர்களும் தங்கள் வயதோதிகத்தை மனதில் வைத்து தானாக முன் வந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்...?!  
  
புதிய சிந்தனைகள், புதிய கருத்துக்கள், புதிய எண்ணங்கள், புதிய தீர்வுகள், புதிய உலகம் காண பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை இளைஞர்கள்  வசம் ஒப்படைக்க வேண்டும்.   

வயதுமுதிர்ந்தவர்களே ! இளைஞர்களுக்கு  வழிவிடுங்கள் !! இந்தியா (இனியாவது)ஒளிரட்டும் !!!