விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 22

அமராவதி...!? கேரளாவின் அலட்சியம் !!


அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான  ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே   இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துகிட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம்,  யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலத்துக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு  போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.

அடடா அமராவதி!


மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும் அழகே அழகு !

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும்  பாசனம் பெற்றன. 

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?! 

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 டி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து  போய் கொண்டிருக்கும் மக்கள் !!!  இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...அரசு இதை எல்லாம் கவனித்து, எப்போது நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ  மன்னர்கள்  காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !! 

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்னைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இதுவே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!


இன்று உலக தண்ணீர் தினமாம்...!! அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை முடிவு செய்து அந்த ஒரு நாளுடன் முடித்து(?) கொண்டிருக்கிறோம்...ஆனால் மற்றவை மாதிரி அல்ல தண்ணீர்....நம் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நம்மிடம் கேட்பார்கள் "எங்களுக்கான தண்ணீர் எங்கே ?" என்று...என்ன பதில் சொல்ல போகிறோம் !?

ஒரு சில நீர் ஆதாரங்களையாவது பாதுகாத்து அவர்களுக்காக விட்டு செல்வோம்...அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தட்டும்...!!



* * * * * * * 


எனது இந்த பதிவு கழுகு தளத்தில் வெளிவந்தது.

புதன், ஜனவரி 25

இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!!

பதிவினை படிக்கும் முன்


'இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன்' என்று ஒரு கட்டுரை மெயில் மூலமாக வந்தது. தலைப்பை பார்த்ததும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  உண்மைதானா என்ற யோசனையில் உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா அவர்கள் இது தொடர்பாக எழுதிய ஒரு பதிவை படித்து பார்த்தேன்...அதன் மூலம் எனக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது...எனவே மெயிலில் வந்த விவரங்களையும் எனது புரிதல்களையும் சேர்த்து இங்கே பதிவாக எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்... 


* * * * * * * *

மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள். 

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.

ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி
மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை
மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.


முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை
மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு
ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு
நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி
நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம்
ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.

4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப
வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு
சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும்  ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு  ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது. 

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.


7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்
போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு
மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால்
இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம்
கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!

9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை
செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க
வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை
கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.


கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும். இது பற்றிய முழு விபரங்களை காண: http://timesofindia.indiatimes.com/topic/search?q=idli-dosa%20batter (நன்றி-உணவு உலகம்)


நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி,
மாட்டிரைச்சிகளில் காணப்படும்  ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி
சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான  இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.

இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.

தயவு செய்து இயன்றால் இதை பலருக்கும் பகிரவும், முடிந்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். 


நன்றி -  தமிழ் உலகம் 


* * * * * * * * 

பின்குறிப்பு 


இன்றைய உலகில் அனைத்தும் மிக வேகமாகி விட்டது. எல்லாமே ரெடிமேட் !! பொதுவாக வெளியில் வாங்கப்படும் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் முழுமையான சுத்தம் என்பது இருக்காது...சமையல் அறையில் ஒரு மணி நேரம் செலவு செய்வதை கூட நேர விரயம் என நினைக்கிறோம் . ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்றாலும், தங்களின் ஆரோக்கியத்திலும் சிறிது அக்கறை காட்டினால் நல்லது. பணம் சம்பாதிப்பது நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்க்காகத்தான், மருத்துவருக்கு கொடுப்பதற்காக இல்லை என்பதை புரிந்து கொண்டு உணவுகளை கூடுமானவரை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது உத்தமம் ! எந்த உணவு பொருளில் எந்த ஆபத்து ஒளிந்திருக்குமோ தெரியவில்லை...!! அனைத்தையும் விட நமது உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை புரிந்து நடந்துகொள்வோம்.



நன்றி - படங்கள் கூகுள் 

செவ்வாய், டிசம்பர் 27

இது நம்ம பூமி...!



முந்தைய  பதிவின் தொடர்ச்சி......விழிப்புணர்வு பேரணி முடிந்ததும் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஸ்நாக்ஸ்,  ஐஸ்க்ரீம், தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. எனது கணவர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று , பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் திரு. சங்கர்ராம் மற்றும் திரு.நாராயணன் இருவரும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை பற்றி மிக அருமையாக எடுத்துரைத்தனர். அவர்கள் சொன்ன பல விசயங்கள் மிக முக்கியமானவையாக இருந்தன...அனைவருக்கும் மனதில் பதியும் விதத்தில் இருந்தது. மாணவ மாணவர்களுக்கு எந்த விதத்தில் சொன்னால் புரியுமோ அந்த விதத்தில் குட்டி கதை, ஒரு பாடல் இவற்றுடன் சொன்னது அசத்தல்.  இறுதியில் இரு ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்திய போது பசங்க பக்கமிருந்து இருந்து பயங்கர அப்ளாஸ்...!!



பரிசு பொருட்கள் மற்றும் மரக் கன்றுகள் 

ஒவ்வொரு பள்ளியிலும் படிப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவ மாணவிகள் 102 பேருக்கு ஸ்கூல் பேக் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் சிறப்பு அழைப்பாளர் Mr. Mori (Japan) அவர்களால் கொடுக்கப்பட்டது.


                                         
மற்றும் மாணவர்களிடம் மரகன்றுகளை கொடுத்து அவரவர்  பள்ளிகளில் நடவேண்டும் என்றும், அவற்றை தண்ணீர் ஊற்றி பேணி வளர்ப்பது அவர்களின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாணவ  மாணவிகள் போட்டி போட்டு கொண்டு பெற்றுச்  சென்றார்கள்.

இறுதியாக என் கணவர் நன்றியுரை வழங்கினார். அனைவரும் எழுந்து நிற்க தேசிய கீதம் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

எவ்வாறு நடத்தி முடிக்க போகிறோம் என்று ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது...ஆனால் நிகழ்ச்சிகள் அனைத்தும் நாங்க நினைத்ததை விட நன்றாக நடந்து, இன்னும் பல சமூக பணிகளை செய்வதற்கு எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

மனதை கவர்ந்தவை !

பேரணியின் போது பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை குறித்து எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

=> அதை படித்து பார்த்த மாணவர்களில் சிலர் 'மேடம் எனக்கும் கொடுங்க,  வீட்டுக்கு கொண்டு போய் படிச்சி காட்டுறேன், அவங்களும் தெரிஞ்சிக்கட்டும்' சொல்லி என்னிடம் பெற்று கொண்டார்கள். அந்த வாக்கியங்களை எழுத நான் கொண்ட மெனக்கிடலின் பலன் எனக்கு கிடைத்த நிறைவு ஏற்பட்டது.

=> ஆசிரியர் பேசியபோது இறுதியாக மாணவர்களிடம் 'எல்லோருக்கும் புரிந்ததா ?' என்று கேட்கவும், மாணவர்கள் கோரசாக ஒரே குரலில் " பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் சார்" என்ற பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யம் ! 'புரிந்ததா' என்று கேள்வி கேட்டால் 'புரிந்தது' என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தேன், ஆனா ஆசிரியர் சொன்னவற்றை உள்வாங்கி கொண்டு அவர்கள் பதில் அளித்த விதம் மனதை தொட்டது.  

=> மரக்கன்றுகளை கொடுத்ததும், 'இது என்ன வகை மரம்' என்று ஆர்வமாக விசாரித்து பெற்று கொண்டார்கள் !

எதையும் தெரிந்து கொள்ளவேண்டும், அதை நடைமுறையில் செயல் படுத்த வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வத்தை நேரில் கண்டு பிரமித்தேன். இன்றைய 'மாணவர்கள் விளையாட்டுத் தனமாக இருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தை மாற்றிகொண்டாகவேண்டும்' எனக்குள் சொல்லிகொண்டேன் !!

எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்காக மேற்கொண்ட முதல் நிகழ்வு இது...இதனை தொடர்ந்து வேறு பல திட்டங்கள், திட்ட வடிவில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக முறைப்படி செயல் படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன்...!!

                                              * * * * * * * * * * * * * * * * * * * *
சுற்றுச்சூழல் !!

நாளைய உலகின் அழிவிற்கு உலக வெப்பமயமாதல் முக்கிய காரணம், இதை ஏற்படுத்தியதும் மனிதன் தான்.


மனிதன் எப்போதும் தன்னை பற்றி மட்டுமே நினைப்பவனாக இருக்கிறான்...தன்னை உயர்ந்தவனாகவும் இயற்கை, பிற உயிர்கள் போன்றவற்றை தன்னை விட மிக கீழானதாகவும் எண்ணி கொண்டிருக்கிறான். அதன் காரணமாகத்தான் நாசமானது, இன்றைய சுற்றுச்சூழல்  !! 


தனக்கு எது சாதகம் என்று பார்த்தானே தவிர ஒருபோதும் இயற்கைக்கு சாதகமாக அவன் சிந்தனை, செயல்கள் இருந்ததில்லை !!?
நாம் பிறந்த போது இருந்த பூமி வேறு இப்போது இருப்பது வேறு. மூன்று புறமும் நீரால் சூழப்பட்டும் குடிநீர் பற்றாகுறை ! குடிநீருக்காக மாநிலங்களிடையே நடக்கும் பிரச்சனை நாளை இரு நாடுகளிடையே போராக மாறக்கூடும் !!

தண்ணீருக்காக பிறரை நம்பி இருக்கவேண்டிய நிலையை அரசும் மக்களும் நினைத்தால் மாற்றமுடியும். நம்மிடம் இருக்கும் நீர் நிலைகளை தூர் வாரியும், ஆழப்படுத்தியும், பல ஏரி, குளம், குட்டைகளை வெட்டியும் மழை நீரை சேமித்து வைக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்ச்சி செய்தோ அல்லது முற்றிலும் தவிர்த்தோ அதனால் ஏற்படக்கூடிய தீமையை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு பத்து கி.மீ சாலை விரிவாக்க பணிக்கும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை சுமார் 2 ,000 !!!!?  


சுலபமாக வெட்ட தெரிந்த மனிதனுக்கு அதை வெட்ட தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற சிந்தனை இல்லையே...?!


இது நம்ம பூமி, இனி நன்றாக பார்த்துகொள்வோம்


வாழ்க்கை ஒரு முறை...இயன்றவரை, நம்மால் இயன்ற நல்லதை செய்து நிறைவாய் வாழ்ந்து முடிப்போம்...!

                                                        * * * * * * * * * * * * * * * * * * * *
பிரியமானவர்களே !


சுற்றுச்சூழலுக்கென்று புதியதொரு தளம் !

இணையத்தின் துணை மிக அவசியம் என்பதை உணர்ந்ததின் காரணமாக சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தான செயல்கள், திட்டங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள தளம் ஒன்றை தொடங்கி உள்ளேன். தற்போது இதில், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் பிரபுகிருஷ்ணா(பலே பிரபு) , சூர்யபிரகாஷ் மற்றும் செல்வகுமார் அண்ணா (செல்வா ஸ்பீக்கிங்)  போன்றோரும் இணைந்து செயலாற்ற உள்ளார்கள்.

(தளத்தை பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பகிர்கிறேன்.)


மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் களமிறங்கி பணியாற்றுவது சுற்றுச்சூழலை பொறுத்தவரை மிக அவசியம் என நினைக்கிறேன். இப்பணியாற்ற எனக்கு கைகொடுக்க கூடிய சமூக ஆர்வம் உள்ளவர்களை தற்போது இனம் கண்டு வருகிறேன். விரைவில் வலிமையான 'பசுமைப் போராளிகள் படை' ஒன்றை திரட்டி விடலாம் என நம்புகிறேன்.

நாட்டை ஒரு வழி பண்ணாம விடகூடாது என்று முடிவே பண்ணியாச்சு :))

உங்களின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எனக்கு என்றும் வேண்டும், தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கௌசல்யா

செவ்வாய், டிசம்பர் 20

நாங்கள் நடத்திய பேரணி...!






அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதற்காகதான். ஆனால் சில கண்டுபிடிப்புகள் இன்று நம் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய அளவிலேயே இருக்கின்றன. அதில் ஒன்று தான் நம் மண்ணை, சுற்றுச்சூழலை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் என்னும் அரக்கன் ! முன்பு துணிப் பைகள் அதிலும் மஞ்சள் நிறப் பைகள் எங்கும் புழக்கத்தில் இருக்கும். இப்போதோ பல நிறத்தில் விதவிதமான பிளாஸ்டிக் பைகள் வந்துவிட்டன...

எது ஒன்றும் ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது அதன் பின்விளைவுகள் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை, போக போகவே அதன் தீமைகள் புரிந்து 'இப்படி ஆகிபோச்சே' என்று வருந்துகிறோம். பிளாஸ்டிக்கை பொறுத்தவரை இதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகம், ஆனால் முறைப்படி அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதில்தான் நமக்கு சரியான திட்டமிடல் இல்லை.

சுயநல கழிவுகள் !?

தன்னுடைய வீட்டின் நடுவில் சிறிய காகித குப்பை, ஏன் சிறு முடி விழுந்து கிடந்தாலும் உயிரே போற மாதிரி உடனே அப்புறபடுத்த தெரிந்த மனிதனுக்கு, பொது இடங்கள், காடுகள், நீர்நிலைகள், விளை நிலங்களிலும் யோசிக்காமல் வீசி எறியப்படும் பிளாஸ்டிக்கை பற்றிய அக்கறை ஏன் இல்லை...?!! 

சட்டத்தின் மூலமே ஒவ்வொன்றையும் சரி கட்டணும் என்றால் மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் எதற்கு ? எப்போதும் தீமைகளை பற்றி யாராவது எடுத்து சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா ? மனித குலத்திற்கு தீமை என்று தெரிந்ததும் அதை தவிர்க்க வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் திருந்துங்க,மாறுங்க என்று குரல் கொடுத்து கொண்டே இருப்பது ? 

பிளாஸ்டிக்கை ஒழிக்கணும் என்று ஒரு சாரார் குரல் கொடுத்து வந்தாலும் பலரின் செவியை இது எட்டுவதே இல்லை...ஆனால் அரசு, தொண்டு நிறுவனங்கள் மட்டும் பிளாஸ்டிக் வேண்டாம் என்று குரல் கொடுத்தால் போதுமா? தனி மனிதன் என்ன செய்கிறான்...?! தன் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்து கொண்டால் போதும் என்ற 'சுயநல கழிவுகள் கொண்டவன்' எப்போது மாறுவது...!?


தன் வீட்டு குப்பையை கூட அடுத்த வீட்டின் வாசலில் கொட்டுபவன் முதலில் மாற வேண்டும். பிளாஸ்டிக்கின் உபயோகம் முடிந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் தூக்கி வீசுபவனுக்கு இதன் தீமையை பற்றிய விழிப்புணர்வு வேண்டும். நச்சு என தெரிந்தும் 'தனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை' என்று எண்ணுவான் என்றால் அவனை போல தாய் மண்ணின் துரோகி வேறு ஒருவரும் இருக்க முடியாது.

 "நாளை இங்கே வாழப்போகும் சுயநல மனிதனின் குழந்தைகள், குடிநீர் கிடைக்காமல்,சுகாதாரம் இல்லாத,சுவாசிக்கத் திணறி, நோய்களின் கூடாரமாகி போன உடலுடன், வாழவே தகுதி இல்லாத பூமியில் உழன்று சிதைந்து சின்னாபின்னமாகி போவார்கள்" இது இதுதான் இந்த பூமித்தாயின் சாபமாக இருக்க கூடும்...!?

பொறுமையின் இலக்கணமான பூமித்தாயை இதுக்கு மேல நாம் கொடுமைபடுத்த முடியாது...!  

நம்மை பாதுகாத்து பேணி வளர்த்து கொண்டிருக்கும் இயற்கை அன்னையை போற்றுவோம்.

எல்லாம் சரிதான்,பிளாஸ்டிக் பொருளால் என்ன தீமைனு சொல்லாம இருந்தா எப்படின்னு நினைகிறீங்களா...?!அதுதான் எல்லோருக்கும் நன்றாகவே தெரியுமே ! அதான் இங்கே சொல்லல ! பொதுவா என்னதான் பேரணி, முகாம், கருத்தரங்கம்னு மாத்தி மாத்தி பண்ணினாலும் மக்களும், கடைகாரர்களும் புரிஞ்சிக்கலையேனு வருத்தம்  இருக்கு...!! (அந்த வருத்தத்தை உங்களை தவிர வேற யார்கிட்ட போய் நான் சொல்வேன் !)

* இங்க பக்கத்தில இருக்கிற கன்னியாகுமரி மக்கள் இந்த பிளாஸ்டிக் விசயத்தில் கவனமா,விழிப்புணர்வாக இருந்து கட்டுபடுத்திட்டு வர்றாங்க...கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்வமா செயல்பட்டாலும் மக்கள் ஒத்துழைக்கலைனா எந்த நல்லதையும் நடைமுறை படுத்தவே முடியாது. நெல்லையில் இருந்து அங்கே செல்பவர்கள் விட்டுட்டு போற பிளாஸ்டிக்தான் அவர்களை கொஞ்சம் இம்சை படுத்துகிறது !! 

நாங்கள் நடத்தின பேரணி !

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையை குறித்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தவேண்டும் என்ற எனது நெடு நாள் எண்ணத்தின்படி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 13 ஆம் தேதி அன்று எங்கள் ஈஸ்ட் தொண்டு நிறுவனத்தின்(EAST TRUST) சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினோம். ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.

                                        தினசரியில் வந்த படம் + செய்தி

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி திருமதி.ச.முத்துசெல்வி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்க, ஆணையாளர் திரு.ம. செந்தில்முருகன் முன்னிலை வகிக்க நகராட்சியின் சுகாதார அலுவலர் திரு வே.குருசாமி, மேலாளர் திரு ஆ.இராஜாமணி,கவுன்சிலர் திருமதி ஜெயலக்ஷ்மி,  ஆசிரியர்கள் வே.சங்கர்ராம் மற்றும் ச.நாராயணன், பல்வேறு  பள்ளிகளை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள்,நகராட்சி பணியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஜப்பானின் ஹேப்பி சைன்ஸ் இந்தியா அசோசியேஷன் மேலாளர் Mr. யோஷிகிரோ மோரி, மற்றும் நண்பர்கள்  வந்திருந்தனர்.

விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பேனர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்தோம், வந்திருந்த மாணவர்களிடம் கொடுத்ததுடன் வேலை முடிந்ததுன்னு இருந்தேன். மாணவர்களில் ஒருவன் 'மேடம் நாங்க என்ன சொல்லி கோஷம் போட' புத்திசாலித்தனமா கேட்டான்...அப்போ வேகமா என்கிட்ட வந்த என் கணவர் 'சேர்மன் உட்பட மத்த எல்லோரும் தயார் நிலையில இருக்கிறாங்க, பேரணி முன்னாடி போகாம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற ?'னு கேட்க(அவர்கிட்ட எப்படி சொல்ல, 'எல்லாம் சரியா பண்ணிடுவேன் யு டோன்ட் வொர்ரி'னு தைரியம் கொடுத்தவளாச்சே !) 'இதோ வந்துடுறேன், நீங்க போங்க'னு சமாளிச்சு அனுப்பினேன்.


வாசகம் எழுதி கொடுக்க பேப்பர், பேனா வேணுமே என்ன பண்ணனு சுத்தியும் ஒரு லுக் விட்டு ஒரு ஆசிரியர் ஷர்ட் பாக்கெட்ல இருந்த பேனாவை பிடுங்காத குறையா வாங்கி,  ஆசிரியை ஒருவரிடம் பேப்பரை வாங்கி துண்டு துண்டா கிழிச்சு(?) பின்னாடி 'பிளாஸ்டிக்கை தூக்கி எறி, காகிதத்தை கையில் எடு', 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்' , 'மரம் வளர்ப்போம்' அப்படி இப்படின்னு தோணுறதை எல்லாம் கடகடன்னு எழுதி வரிசைல கடைசில இருந்து 'யார் குரல் கம்பீரமா இருக்கும்'னு கேட்டு அவங்க கைல கொடுத்துட்டு அப்படியே முன்னாடி (ஓடி) போய் சேர்ந்தேன். இதில சில பசங்க, 'பரவாயில்லை மேடம் பேனர்ல இருக்கிறதை அப்ப அப்ப திருப்பி பார்த்து சொல்லிகிறோம்'னு ஆறுதல் வேற !! (ம்...புத்திசாலி புள்ளைங்க !)  


முதல் முறையாக நடத்துறோம்,நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் உள்ளுக்குள் இருந்தாலும் பல பேரணிகளை நடத்திய அனுபவம்(!?) இருக்கிற மாதிரியே எவ்ளோ நேரம் தான் சமாளிக்கிறது...முடியல சாமி !! :) பேரணியில நடந்து போகும் போது, சேர்மன் மேடம் வழியில, கடைல தென்படுற அத்தனை பேரையும் பார்த்து 'பிளாஸ்டிக் இனி பயன்படுத்தாதிங்க சரியா' என சொல்லி வணக்கம் போட்டுட்டே வந்தாங்க...! அவங்க இந்த அளவு ஆர்வமா ஒத்துழைப்பு கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்கவே இல்லை.




மாணவர்களையும் சும்மா சொல்ல கூடாது, என்னமா உற்சாகமா இருக்காங்க...?! 'பிளாஸ்டிக் ஒழிக', 'காகிதம் வாழ்க', 'மரம் வாழ்க'ன்னு எக்ஸ்ட்ரா பிட் எல்லாம் போட்டு கலக்கிட்டாங்க...! மெயின் ரோட்ல வாகனங்கள் ஓரமாக ஒதுங்கி வழிவிட கம்பீரமாக ஒவ்வொரு இடமாக பேரணி கடந்து சென்றது...இறுதியாக தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்தது.


பின்னர் திருமண மண்டபம் ஒன்றில் கருத்தரங்கம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்...அதன் விவரங்கள் அடுத்த பதிவில்... 



வெள்ளி, டிசம்பர் 9

நாங்க மாறிட்டோம்...அப்ப நீங்க ?!!







திருநெல்வேலி சாலைகளில் பறக்கும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது யார் என்றே இனி கண்டுபிடிக்க முடியாது...ஏன்னா இப்ப எங்க தலை ஹெல்மெட்டுக்கு மாறியாச்சு...!! :) எங்கு காணினும் ஹெல்மெட் தலைகள்...பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது...

அது எப்படி மக்களுக்கு தங்கள் உயிர் மேல் அக்கறை வந்துடுசானு கேட்கபடாது...மக்கள் உயிர் மேல எங்க புது கமிஷனருக்கு அக்கறை அதிகம்...நல்ல மனிதர்.புதிதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக திரு. கருணாசாகர் அவர்கள் பதவி ஏற்றதும் போட்ட முக்கியமான உத்தரவே ஹெல்மெட் அணிவது இனி கட்டாயம் என்பதுதான். 


ஒரு வாரம் அவகாசம் கொடுத்தார். எத்தனை நாள் அவகாசம் கொடுத்தாலும் நமக்கு கடைசி நாள்ல முட்டி மோதி கூட்டத்தோட கூட்டமா எதையும் வாங்குறதுதான் பழக்கம்...! நாம தான் அப்படினா ஊரே அப்படிதான் இருக்கு...ஹெல்மெட் வாங்குற இடத்தில செம கூட்டம்...! 

பழசு ஒன்னு உபயோகம்(?) இல்லாம ஸ்டோர் ரூமில இருக்கு, என்ன கொஞ்சம் தூசி அடைஞ்சி போய் பார்க்க ஒரு மாதிரியா இருந்தாலும் 'பரவாயில்லை அதையே தூசி தட்டி போட்டுகோங்க' சொன்னா இவர் கேட்டாதானே...(சிக்கனத்தில  பெண்களை அடிச்சிக்கவே முடியாது ஆமாம் !)

ம்...நான் சொல்றத கேட்ட மாதிரி தெரியல...!! ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க என்னவர் செம புத்திசாலி...நெல்லையில் இப்ப நம்பர் ஒன் பிசினஸ் எது என்றால் ஹெல்மெட் தான்...பிளாட்பாரம், திருமண மண்டபம் என்று குவிச்சு போட்டு விக்கிறாங்க...விலை இஷ்டம்போல சொல்றாங்க...ஆளுக்கு ஏத்தமாதிரி 600 ல இருந்து 1,500 , 1,800, 2000௦ என்று விக்கிறாங்க...மக்களும் வேற வழி இல்லாம (புலம்பிட்டே தான்)வாங்குறாங்க...! 

ஆனா பக்கத்து மாவட்டத்துக்கு ஒரு வேலையா போன கணவர் அங்கேயே  ஹெல்மெட் வாங்கிவிட்டார். விலை 500 மட்டுமே...நெல்லையில் தான் அதிக விலை, அடுத்த மாவட்டத்தில கம்மியா இருக்கும்னு பிளான் பண்ணி வாங்கின என் கணவர் புத்திசாலிதான்...ஆனா வாங்கிட்டு வந்து இதை சொன்னதும் எனக்கு செம கோபம்...நாம சரியாதானே பண்ணி இருக்கிறோம் எதுக்கு இப்படி முறைக்கிறானு அவருக்கு ஒரே யோசனை ! பின்ன என்னங்க வாங்கினது தான் வாங்கினார், கூட நாலு வாங்கிட்டு வந்திருந்தா அதை அக்கம் பக்கத்துல கொடுத்து இரண்டு மடங்கு அதிக பணம் பார்த்திருப்பேனே...! (என்னதான் சொல்லுங்க இந்த ஆண்களுக்கு சாமார்த்தியம் போதவே போதாது !)


* * * * * * * * * * * * * * * 


என்னங்க படிச்சாச்சா ? இனி நேரா விசயத்துக்கு வரேன்...(அப்ப இப்ப வரை சொன்னது !!?) மேலே சொன்னவை நகைசுவை மாதிரி சொன்னாலும் பலபேரின் பேச்சுக்கள் இப்படிதான் இருக்கிறது...எது எதுக்கோ அனாவசியமா பணம் செலவு செய்வது ஆனா உயிரின் பாதுகாப்பு பற்றிய இந்த விசயத்தில ரொம்ப யோசிச்சு மிச்சம் பிடிக்கிறது...?!! 


தலை கவசம் அவசியம் என்று அரசு சொல்வது நமது நம்மைக்காகத்தான் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். வீட்டில் கிடக்கும் பழையதை தூசி தட்டி போடுவது, பிளாட்பாரத்தில் நூறு, இருநூறுக்கு மலிவாக  கிடைக்கிறதே என்று வாங்கி சாமாளிப்பதும் புத்திசாலித்தனம் அல்லவே அல்ல...


ஹெல்மெட் பற்றிய சில தகவல்கள் 




பைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி.ஸ்டேபிலைசெர் இவற்றின் உதவியுடன் பல அடுக்குகளாக கொண்டு தயாரிக்கபடுகிறது.இதில் ஒவ்வொன்றும் பல தரத்தில் இருக்கிறது. நல்ல தரமான பொருட்கள்  பயன்படுத்தப்பட்டு தயாரிக்க பட்டதை வாங்கவேண்டும். இதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது என்கிற போது ஒரே வழி சிறந்த கம்பெனிகளின் நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவதுதான். சாலை ஓரங்களில் விற்கபடுபவை எந்த அளவிற்கு தரமானவை என்று சொல்ல முடியாது. 


* எடை 800 கிராமுக்கும் 2  கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமானவைகள்.


* உள்ளே இருக்கும் துணியை விலக்கி பார்த்தால் கரடு முரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். இது போலி.


*எடை அதிகமுள்ள ஹெல்மெட் தவிர்த்துவிடுங்கள்...இஞ்ஜக்சன் மோல்டிங் வகையில் கிடைக்கிறது...விலை அதிகம், ஆனால் அணிந்திருப்பது அவ்வளவாக சுமையாக தெரியாது. 


தரமில்லாத ஹெல்மெட் போட்டும் பிரயோசனம் இல்லை, விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால் தலைக்கும் சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே விலையை பார்க்காமல் தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை. 


ஏன் அணியவேண்டும்?! 

சாலை விபத்துகளில் அதிகமாக நடப்பது இருசக்கரவாகனத்தால் என்கின்றனர். எனவே அவசியம் ஹெல்மெட் அணிவது உயிரிழப்பை தடுக்கும். 


ஹெல்மெட் அணிவதினால் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம் சும்மா என்று ஆய்வுகள் சொல்கின்றன. எனவே நம்பாதிர்கள். உண்மையில் இதை அணிவதனால் தலைக்கு பாதுக்காப்பு என்பதுடன் மறைமுகமாக வேறு பல நன்மைகள் இருக்கின்றன என்பதை யோசித்து பார்த்தால் புரியும். 


* பிற வாகனங்களின் இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சப்தம், வாகனங்களின் இரைசல் ஒலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.  


* மார்கழி மாத குளிரில் இருந்து ஓரளவு தப்பிக்கும் காது.


* தூசிகள், மாலை இரவு நேரங்களில் சாலையில் எதிர்வரும் பூச்சிகளில் இருந்து கண்ணையும் காதையும் காத்துக்கொள்ளலாம். 


* மிக முக்கியமா செல்போன் அடிச்சா கேட்காது, வைபிரேசன் மூலம் தெரிந்தாலும் வண்டி ஓட்டிகொண்டு போகும் போது பேச முடியாது !! (அதுதான் நாங்க ஹெட் போன் போட்டுப்போமே என்கிறீர்களா ! ம்...விதி யாரை விட்டது!) 


தெருவுக்கு தெரு இங்கே போலிஸ் நிற்கிறார்கள் போடாதவர்களை பிடித்து ஸ்பாட் பைன் போடுகிறார்கள், வழக்கும் பதிவு செய்யபடுகிறது. கமிஷனர் உத்தரவு போட்டதற்காக அணியவேண்டும் என்பதை விட நம் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அணியவேண்டும்...நெல்லையில் தானே இந்த உத்தரவு கடுமையாக்கபட்டிருக்கிறது. நமக்கு இல்லையே என்று நினைக்காமல் ஹெல்மெட் வாங்கி அணியுங்கள்...அனைத்து ஊர்களுக்கும்  உத்தரவு போட பட்டு இருந்தாலும் இன்னும் சரி வர கடைபிடிக்க படவில்லை. 


சிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல போக முடியல, வியர்வையால் பெரும் சிரமமாக இருக்கிறது என்று. சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!

புரிந்து கொண்டு செயல் படுங்கள்...பெறுவதற்க்கறிய இந்த மானிட பிறப்பை சரியாக வாழ்ந்து முடிக்கும் முன்னே, அனாவசியமாக சாலையோரத்தில் உயிரை விட்டு விடகூடாது...


ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள்...வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் என்றும் எப்போதும்...!!


அரசு தொடர்ந்து முழு உத்வேகத்துடன் ஹெல்மெட் அணிவதை கட்டாயம் செயல்படுத்தபடவேண்டும்...உத்தரவிடும் போது இருக்கும் கண்டிப்பு,அதே வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும்...


நெல்லையில் இதை அருமையாக நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் எங்கள் கமிஷனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! 

                                  தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! 

                                                              * * * * * * * * * 





ஹெல்மெட் பற்றிய தகவல்கள், படங்கள் - நன்றி கூகுள் 

சனி, அக்டோபர் 22

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

கழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது.  அப்பதிவை அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். படித்து உங்களின் மேலான ஒத்துழைப்பை தாருங்கள். நன்றி.

* * * * * * * * *




அன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் முக்கியான செய்திகளில் ஒன்று சாலை விபத்து. அதுவும் நாட்டில் நடக்கிற விபத்தில் 90 % விபத்து வாகனக்களால்   நடக்கிறது . 


Statistics Related To The Road  Accidents In India

• 93% of all accidents are caused due to human 
factors.
• 80% crashes involve driver inattention within 3 
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per 
WHO.
• 20% of GDP covers the accidental portion.


முகப்பு விளக்குகள் 

இதில்  இரவில்  நடக்கும்  விபத்துக்கள்  மிக  அதிகம். எதிரில் வரும் வண்டிகளில் பளிச்சிடும் விளக்குகள்(HEAD LIGHTS) விபத்துக்களுக்கு முக்கிய காரணம் !! அந்தந்த வாகனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள் தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...

முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....


இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???

"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். அரசு ஒரே ஒரு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும். சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...?

பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ... 

National Automotive Testing and R AND D Infrastructure Project.    
Ministry of Road Transport & Highways. 
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009. 
Transport Secretaries OF Government of Tamil Nadu . 

இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும்.

அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.


இந்திய அரசாங்கம்:-

* National Automotive Testing and R AND D Infrastructure Project:- 
* Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in

* Transport Secretaries of Government of Tamil Nadu:-transec@tn.gov.in



அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...

நாம் முயன்றால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!

நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.


மேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள்,தேவையான மெயில் ID-கள் ,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ...

நீங்களாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் பார்மேட்டை உபயோகித்து கொள்ளுங்கள். நன்றி.

மின்னஞ்சல் பார்மேட்

Please save us and others from road accidents by introducing an order that, "all head lights should be manufactured or sold with a black circle inside so that it can’t be removed easily. It should not be allowed to be sold without the black circle inside. Take this obligation as very urgent and do the needful".






திங்கள், ஜூன் 27

கழுகு பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?!



கழுகு என்ற ஒரு விழிப்புணர்வு தளம் இருப்பது பலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அந்த சிலருக்காக எனது இந்த பதிவு. பொதுவா விழிப்புணர்வு அப்படின்னு அடிக்கடி சொல்றோமே அந்த பொருள் தான் என்ன ? சிலருக்கு இந்த சொல்லே ஒரு சலிப்பை கொடுக்கிறது, இதன் பொருள் புரியாமலேயே !!  சிம்பிளா சொல்லணும் என்றால் விழிப்புணர்வு என்பது எச்சரிக்கையாக இருப்பது, எதை பற்றியும் அதிக விவரங்களை தெரிந்து வைத்துகொள்வது, தெரியாதவர்களுக்கு எடுத்துசொல்லி புரியவைப்பது.

உதாரணமாக ரத்ததானம் செய்ய சொல்லும் போது மக்களிடம் ரத்தம் கொடுக்கணும் என்று பொதுவாக சொல்கிறோம் என்றால் 'ஐயையோ ரத்தம் எடுத்தா நான் என்ன ஆவேன்' என்ற அச்சம் வருவது மக்களின் பொது இயல்பு. ஆனால் அவர்களிடம் ரத்தம் எடுத்தா ஒன்றும் ஆகாது, மிக குறைந்த அளவு  தான் எடுப்பாங்க, அதுவும் குறிப்பிட்ட நாளில் மீண்டும் ஊறி விடும், என்று கூடுதல் தகவல்களையும் சேர்த்து எடுத்து சொன்னா அதற்கு பெயர் தான் விழிப்புணர்வு. 

ஒரே வரியில் சொல்லணும் என்றால் 'உணர்வுகளை விழித்தெழ வைப்பது' 

இத்தகைய ஒரு அளப்பரிய செயலை தான் கழுகு செய்து கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல், அறிவியல்,தனி மனித ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு,  இப்படி பலவற்றிலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதுகிறார்கள் கழுகு தோழமைகள்.
    
யார் நடத்துகிறார்கள் ?

துபாயில் இருக்கும் தேவா அவர்கள், சென்னையில் இருக்கும் விஜய் மற்றும் சௌந்தர் இவர்கள் மூவரும் சேர்ந்து தொடங்கினார்கள். இப்போது  முப்பதுக்கும் மேற்பட்ட  தோழமைகள் கழுகுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் ...கட்டுரைகள்  வடிவமைப்பது , செய்திகளை சேகரித்து  தருவது , விவாதங்களை முன்னிறுத்தி  நடத்தி  செல்வது, பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது, போன்ற பலவேறு வேலைகளை பலரும் பிரித்து வைத்துகொண்டு செயல் படுத்தி கொண்டு வருகிறார்கள்.இத்தனை வேலைகளையும் அவர்கள் தங்களின் சொந்த அலுவலக பணிகளுக்கு மத்தியில் இந்த சமூகத்திற்காக மேற்கொள்கிறார்கள் என்பது பாராட்ட படவேண்டிய ஒன்று.இவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது என்ற பெரிய பொறுப்பான வேலையை தேவா அவர்கள் திறம்பட செய்துகொண்டு வருகிறார்.   

ஏன் தேவை ?

விழிப்புணர்வு நமக்கு தேவையானதா என்று பார்த்தால் அது நிச்சயம் நமக்கு தேவை, ஆனால் சிலர் சொல்லலாம் நான் விழிப்புணர்வுடன்  தான் இருக்கிறேன் என்று..... ஆனால் அது நிச்சயம் போதுமானதாக இருக்காது.

நம் சமூகம் பழமை பற்று மிகுந்த ஒன்று, சாதீய எண்ணமும், ஆழமாக பதிந்த தேவையற்ற மூட நம்பிக்கைகளும் வாழ்வை பற்றிய பயம், கவலையும் சேர்ந்து சாகாமலேயே செத்தவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்பது தான் இன்றைய நிதர்சனம்.

சிந்தனையை தெளிவடைய செய்யும் திருக்குறளும், மற்றும் பல இலக்கிய நூல்களும் இருந்தாலும் அது எல்லோரையும் சென்றடைவது இல்லை...ஏன் படித்தவர்களே அதன் வழித்தடம் ஒற்றி நடக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அவரவருக்கு தனிப்பட்ட கொள்கைகள் , கருத்துக்கள் ! படித்தவர்கள் நிலையே இது என்றால் படிக்காதவர்களை பற்றி என்ன சொல்வது. மக்கள் முன்னேற்றத்துக்கு ஏற்ற கொள்கைகளையும் கருத்துக்களையும் வகுப்பது யார் ? அதை  மக்களிடம் கொண்டு செல்வது யார் ? 

விழிப்புணர்வு அவசியம் 


* நமது அடிப்படை உரிமைகள் எவை என்பதை பற்றி இங்கே எத்தனை பேருக்கு சரியாக தெரியும்.

* சட்டங்கள் பற்றிய முழு தெளிவு இருக்கிறதா ?

* அரசியல் பற்றிய அடிப்படை அறிவு ?

* பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்ன, அதற்கு தீர்வு என்ன, அதை பற்றி பெண்ணுரிமை இயக்கங்கள் என்ன சொல்கிறது ? என்ன செய்கிறது ?
இப்படி நிறைய ????

சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பல ஆகியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் 'ஒட்டு போடுங்கள்' என்று தெரு தெருவாக அறிவிப்பது வருந்தகூடிய ஒன்று. காரணம் ஒட்டு போடுவதின் அவசியத்தை, விழிப்புணர்வை  மக்களிடம் சரியான முறையில் இன்னும் கொண்டு செல்லாதது தான்.

ஊத வேண்டிய சங்கை ஊதினால் போதும் , விடிகிற போது விடியட்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு விழிப்பாவது ஏற்படட்டுமே என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க பட்டது தான் கழுகு என்கிற தளம். 

மேடை போட்டு பிறர் பாராட்ட வேண்டும், பரிசு வழங்க வேண்டும் தம் பெயர் பிரபலம் அடைய வேண்டும் என்பது போன்ற சுயநலம் சிறிதும் இன்றி விழிப்புணர்வு என்ற ஒன்றே லட்சியம் . யார் என்ன சொல்வார்கள், மாற்று கருத்து வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி ஒடுங்கி முடங்குவதை விட உண்மை எதுவென்று காட்டிட துணிந்து செய்பவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலர் சேர்ந்து சீரிய நிலையில் தெளிவான சிந்தனையோடு சிறப்பாக கால் ஊன்றி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் கழுகின் சிறகை வலுபடுத்துவது நல் மனம் படைத்த ஒவ்வொருவரின் கடமை. மீளா தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் அறியாமையில் ஊறிய மக்களை / சமுதாயத்தை எழுப்புவது என்பது எளிய காரியம் அன்று . 

தமிழன் நாம் என்பதே மறந்து பிறர் சொல்லும் போதுதான் 'ஓஹோ நாம் தமிழர்' என்று விழித்து எழுகிறான்.  ஏதோ ஒரு போராட்டம் புரட்சி திடிரென்று வரும் போது தான் 'தன் இனம் இது' என்பது போல உணர்வு கொள்கிறான். தன் இனத்தை நினைவு படுத்தவே இது போன்ற நிகழ்வுகள் தேவை படுகிறது என்னும் போது விழிப்புணர்வு எவ்வளவு அவசியமாகிறது என்பது புரியும். 

விழிப்புணர்வு வேற சமூக சேவை வேற !

விழிப்புணர்வு வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா களத்தில் இறங்கி போராட வேண்டும் என்ற ஒரு வாதம் கழுகின் முன் வைக்கப்பட்டது. உண்மைதான் களத்தில் இறங்கி போராடுவதின் மூலம் மக்களை உடனே சென்று அடைய முடியும். ஆனால் தொடர்ந்து விழிப்புடன் வைத்துகொள்வது மிக அவசியம். உதவி செய்ய ஆள் இருக்கிறது என்று சோம்பி திரிய கூடிய மந்த புத்தி படைத்த மனித இனம் தானே நாம், மனிதனின் ஆழ்மனதை தட்டி எழுப்பவேண்டும்.....அதில் நல்லவைகளை ஆழமாக பதிய வைக்கவேண்டும்.....இதை செய்வது தான் விழிப்புணர்வு.  

இரண்டும் ஒன்று போல் பாவித்து குழம்பி கொள்பவர்கள் பலர். விழிப்புணர்வை  யார் வேண்டும் என்றாலும் எங்கே இருந்தும் ஏற்படுத்த முடியும்...அதற்கு தேவை ஆர்வமும், பல துறைகளை பற்றிய தெளிவும்,புரிதலும் தான். ஆனால் சமூக சேவை என்பது களத்தில் சென்று செயல்படுவது. கண்முன் ஒருத்தர் கஷ்டபடுகிறார் என்றால் என்ன பிரச்சனை பண உதவியா, வேற என்ன தேவை என்று பார்த்து செய்து கொடுப்பது. இது அப்போதைய உடனடி தீர்வாகும். அத்துடன் நின்றுவிடும். ஆனால் விழிப்புணர்வு என்பது சம்பந்த பட்ட மனிதனுடன் நின்றுவிடாமல் காலத்திற்கும் அவனது சந்ததிக்கும் ஆலோசனை சென்று சேரும். புத்தியை தெளிவடைய வைத்துவிட்டால் போதுமே, அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான், பிறர் தயவு தேவையில்லை. இதை தான் கழுகு அமைதியாக செய்து கொண்டிருக்கிறது. 

"குளிரில் நடுங்கும் பிச்சைகாரனுக்கு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்வெட்டர் வாங்கி கொடுப்பது சமூக சேவை என்ற கருத்தினை கொண்டால்.....

பிச்சைக்காரனே உருவாகாமல் இருக்க எல்லா சாத்தியக்கூறுகளையும் மனித மூளைக்குள் விதைப்பதற்கு பெயர் தான் விழிப்புணர்வு.....!" 
                                                                                                                                (நன்றி-தேவா)


மனித மனம் என்றும் நிறைவு அடைவதில்லை பொருளாதார தேவை மற்றும் வேறு சில காரணங்களால்.  ஆனால் ஓரளவு தன்னிறைவு அடைந்த மனிதன் முடிந்தவரை சில விழிப்புணர்வு விதைகளையாவது தூவி விட்டு செல்லலாம், பின் நீர் ஊற்ற வேறு யாரேனும் வருவார்கள்.....சூழல் சரியாக இருக்கும்பட்சத்தில் தன்னால் முளைத்துவிடகூடும்...!!

விழிப்புணர்வு விதைகளை மனங்களில் தூவும் வேலையை இப்போது செய்துகொண்டிருக்கும்   அதே நேரம், தேவைபட்டால் களத்தில் இறங்கி போராடவும் கழுகு தயங்காது.....! அதற்கு வேண்டிய போராட்டகுணம், தைரியம், தோழமைகளின் பலம் அனைத்தும் ஒருங்கே தன்னகத்தே கொண்டிருக்கிறது.....திறக்கப்பட வேண்டிய கதவுகள்  தட்டிபார்த்தும் திறக்கவில்லை என்றால் உடைத்து திறக்ககூடிய ஆற்றல் கொண்டவர்கள் தோழமைகள்...

உயரிய திட்ட வரைமுறைகள் 

நோக்கம் இருக்கிறது என்பதற்காக ஒழுங்கற்ற விதத்தில் ஏனோ தானோ வென்று தளம் செயல் படவில்லை. நேர்த்தியாக, சீராக, கட்டுபாடுடன், ஒழுங்குடன், தங்களுக்கு என்ற விதிமுறைகளுடன் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இந்த தளத்திற்கு குழு என்ற ஒரு அமைப்பும், மீட்டிங் ஹால் என்ற மற்றொரு முக்கிய அமைப்பும் இயங்கி வருகிறது. 

கழுகின் முக்கிய உறுப்பினர்கள் 

தேவா - தீராத சமூக முன்னேற்ற வேட்கை கொண்டவர். இருப்பது கடல் தாண்டி என்றாலும் நினைவுகளால் தாய்நாட்டை ஒரு கணமும் பிரியாதவர். நாட்டின் மீது கொண்ட அதிக பற்றின் காரணமாகவே இந்த தளத்தை உருவாக்கி நடத்திக்கொண்டு வருகிறார். 

சௌந்தர் - மிக முக்கிய பங்கு இவரது...வெளிநாட்டில் இருந்து தேவா  இயக்க இவர் இங்கிருந்து கழுகின் பல பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

கொக்கரக்கோ - சௌமியன் பல துறை சம்பந்தப்பட்ட விசயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். கழுகில் இவரது பணி மிக அதிகம்.

சமீர் அஹமத் - கழுகின் செயல்கள் அனைத்திலும் பக்க பலமாக இருக்கிறார்.

மகேஸ்வரி - பல கட்டுரைகள் எழுதி தருவதும், விவாதங்களில் கலந்துகொள்வதும் என்று உற்சாகமாக செயலாற்றி வரும் இவர் கழுகின் இன்றியமையாத தோழமை.  

ஆனந்தி - விவாதங்களை உற்சாகபடுத்துவதில் இவங்க ஸ்டைல் தனி. தினம் திருக்குறள் சொல்லி அன்றைய பொழுதை தொடக்கி வைப்பவர்.

எஸ்.கே - எஸ்.கே குழுவின் திட்டமிடுதலில் பங்கெடுத்துக் கொள்வதோடு, வலுவான விவாதங்களை முன்னெடுத்து வைப்பார். மேலும் பிற வலைத்தளங்களில் வெளி வந்த நல்ல பதிவுகள் மிகைப்பட்ட பேரால் வாசிக்கபடாமல் இருப்பதை குழுவினருக்கு அடையாளம் காட்டும் பணியும் செய்து வருகிறார்.

கல்பனா - இவர் கழுகின் விவாதங்களில் ஆர்வமுடன் கலந்து தனது கருத்துக்களை எடுத்துவைக்க தவறமாட்டார்.

இன்னும் பல இளம்புயல்கள் ஆர்வமாக பங்கேற்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள்.முப்பது பேரை பத்தியும்  சொன்னா பதிவு தொடர்தான் போட வேண்டி வரும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...!!

இவர்கள் ஒருவருக்கும் ஒருவர், எந்த உறவும் இல்லை என்றாலும்  ஒரு குடும்பம் போல் செயல் பட்டுவருவது வரவேற்க்கதக்க ஒன்று.

குழு 

குழுவில் இணைய விரும்புவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது...
அதை ஏற்றுகொண்டவர்கள் இணைந்து கொள்ளலாம். விவாதத்திலும் கலந்து கொள்ளலாம், கருத்து வெளியிட இயலாதவர்கள் நடக்கும் விவாதங்களை மெயிலின் மூலம் அறிந்துகொள்ளலாம். முதலில் நமக்கே பல விசயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கும், அதை சரி படுத்திக்கொள்ளவும், ஒரே நேரத்தில் பல துறைகளை பற்றிய செய்திகளை தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும். 

இதனை பற்றி இன்னும் விவரங்கள் தேவை என்றால் கீழே  உள்ள சுட்டியை கிளிக்கவும். 


எல்லோருக்கும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளுக்குள் இருக்கும், ஆனால் வாய்ப்பு இல்லை என்ற ஒரு நிலை இருந்தால் தங்களது வேலை நேரத்தில் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இத்தள கட்டுரையை படித்து இவர்களை உற்சாக படுத்துங்கள். கழுகு இன்னும் அதிக முனைப்போடு செயல்பட உதவியாக இருக்கும்.  இது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே, உடனே கழுகை தொடருங்கள்...கட்டுரைகளை வாசித்து உங்கள் குறைகளையும் நிறைகளையும் வெளிப்படையாக சொல்லுங்கள்.  கழுகு உங்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...!

பல நல்ல பதிவுகளை படித்து நம்மை இன்னும் அதிகமாக தெளிவு படுத்திகொள்வோம்...கழுகு தளத்தில்  இணையுங்கள். கழுகின் சிறகை வலுபடுத்துங்கள்......!!