வெள்ளி, நவம்பர் 6

PM 1:54
9

"நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு  துரதிர்ஷ்டம் ...இன்று நாம் எல்லோரும் இந்த துரதிர்ஷ்டதிற்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்" - ஆல்பெர் காம்யு.

தற்செயலாக இதை வாசிக்க நேர்ந்தது... எவ்வளவு உண்மை !!!  கணினி செல்போன் இணையம் இல்லாத காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.  கணினி வேகத்திற்கு ஈடுக்கொடுத்து மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். ஐஸ்க்ரீம் கரைவதற்குள் சாப்பிட்டு விடவேண்டும் என்பதை போன்று வேக வேகமாக  வாழ்கிறோம் , ஆனால் உண்மையாக வாழ்கிறோமா என்றால்  இல்லை என்றுதான் சொல்வேன்.  யாருக்கு போன் செய்தாலும் பிரீயா இருக்கிங்களா பேசலாமா என கேட்டு பேசுவது எனது வழக்கம், ஏன்னா அவங்க இப்ப நான் பிசி, வை போனைனு சொல்றதுக்கு முன்னாடி நாமலா கேட்டுறது நல்லது பாருங்க. :-) இரண்டு நிமிடம் பேசவும் நேரமில்லாத மனிதர்கள் தானே  நாம், என்னையும் சேர்த்துதான். ஆனால் ஏன் இப்படி வாழ்றோம் என்று யோசிக்கவேண்டும்.      






நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் ஒரு ஹாய் ஹலோ சொல்ல கூட இயலாத நிலை நல்லதா கெட்டதா ? இது யதார்த்தம் தான் என சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உறவுகள் நட்புகளிடம் நேரில் பேசுவது குறைந்து செல்போன் இணையத்துடன் பேசிக் கொண்டும் அல்லது தனக்குள் தானே பேசிக் கொண்டு ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்து வாழ்கையை கடினப் படுத்திக் கொள்கிறோம். 

எனது நெருங்கிய தோழிக்கு  (25 வருட நட்பு)           எப்போது போன் செய்தாலும் 'கால் யூ பேக்'  என்ற sms வரும்,  பிறகு  அவளாக மாலை ஐந்து மணிக்கு அழைப்பாள்,  ஒரு கை காரின் ஸ்டியரிங்கிலும், மறுகையில் போன்னுமாக பேசுவாள், வீட்டை எட்டுவதற்குள் எங்களின் பேச்சு முடிந்துவிடும் அல்லது முடித்துக் கொள்வோம்... இதைத் தவிர வேறு நேரம் அவளுக்கு கிடைப்பதில்லை. சமையல், வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் வீட்டிலும் தோழி பிசியாகவே  இருப்பாள்... கணவன் மனைவி இருவரும் சேர்ந்து லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.   பெங்களூரில் சொந்தமாக மாடி வீடு, சென்னையிலும்  வீடு நிலம் என்று இருக்கிறது, ஒரே மகன், வாரத்திற்கு ஒரு வேளை ஒன்றாக அமர்ந்து உணவருந்தவும் இயலாமல் எப்போதும் எதன்  பின்னோ ஓடிக் கொண்டே இருக்கிறாள், நடுநடுவே சலித்தும் கொள்வாள், ஒரு நாளும் ரிலாக்ஸ் பண்ண முடியவில்லை என்று. அவள் வாழும் வாழ்க்கையை பார்த்து எனக்கு மிகுந்த  ஆயாசமாக இருக்கிறது. 

2015 வருடப் பிறப்பன்று வாழ்த்து சொல்ல தோழியை போனில் அழைத்தேன் 'ஊருக்கு போய்ட்டு இருக்கேன்,  அப்புறம் கூப்பிடுறேன்' என்று SMS, நிச்சயமாக 2016 புது வருட வாழ்த்து நான் சொல்வதற்குள் அவளாக கூப்பிட்டு விடுவாள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.  :-) இதில் சுவாரசியம் என்னவென்றால் அவளது நெருங்கிய ஒரே தோழி நான்தான். இந்த லட்சணத்தில் தான் இருக்கும் போல பலரது நட்புகளும் :-))

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்ததிற்குரியவர்கள். அவர்களால் அவர்களை சேர்ந்தவர்களுக்கு  சிறிய அளவிலான சந்தோசத்தை  கூட கொடுக்க இயலாது . பிசி   பிசி  என்று தானும் தொலைந்து அவர்களை நேசிப்பவர்களின் நேசத்தையும்  அலட்சியம் செய்கிறார்கள்.  பரப்பரப்பான வேலைக்கு நடுவிலும் சிறு புன்னகையை கூட காட்டாமல் வாழும் வாழ்க்கை உண்மையில் நரகம். பிசி என்ற முகமூடியை போட்டுக் கொண்டு அன்பானவர்களிடம் தோற்றுப் போகிறோம். பகிரப் படாத அன்பும் கவனிக்கப் படாத நேசமும் யாருக்கும் பிரயோசனம் இன்றி விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும்  ஒரு சிறிய  நலம் விசாரிப்பு சிறு புன்னகை செய்ய கூட இயலவில்லை என்றால் என்ன வாழ்க்கை.  வலிய வலியச் சென்று உறவுக் கொள்வது ஒரு கட்டத்தில் சலிப்பை வெறுப்பை கொடுக்கும், உலகத்தில் இவர் ஒருவர் தானா இருக்கிறார் நாம் பேச பழக, இந்த உலகம் ரொம்ப பெரியது என்று புது புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் தவறில்லை.  சாதாரண நட்புகள் என்றால் பரவாயில்லை... நெருங்கிய உறவாக இருந்தால் என்னாகும் யோசிக்கவேண்டும் அல்லவா?!

இயந்திர உலகில் எல்லோருக்கும் தான் வேலை, பிரச்னை இருக்கிறது அத்தனைக்கும் நடுவிலும் உறவுகள் நட்புகளுடன் தொடர்பில் இருப்பதுதான் உயிர்ப்பான வாழ்க்கை. பிறரை நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது பேரின்பம், இதனை அலட்சியப்படுத்தி வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்?!!  நேசிப்பவர்களை காயப்படுத்தி அதில் சுகம் காணுவதும் ஒரு மனநோய் தான்.

இவ்வாறுதான் நம்மில் பலரும் இருக்கிறோம், பலவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு 'சே எப்போவும் ஒரே டென்சன், பிரீயா இருக்கவே முடியல' என்று... ரிலாக்ஸ் என்பது வேறு எங்கயோவா இருக்கு, ஓய்வுக்கு தேவையான நேரத்தை நாம் தான் ஒதுக்கவேண்டும். அதையும் நம்மை நேசிக்கிறவர்களுடன் செலவிட்டால்  உற்சாகம் இரட்டிப்பாகும்.   

நட்புகள் உறவுகளை நேரில் சந்தித்து பேச இயலாவிட்டாலும் போனில் தொடர்பு கொண்டு பேசலாம் . ஆனால் சமூக வலைதளங்கள் வந்தப் பின் அதற்கும் நேரமில்லாமல்  'அப்புறம் கூப்டுறேன்' என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக்கில் நுழைந்து   'ஹாய் சொல்லுடா கூப்டியே' என்று டைப் பண்ற அளவுக்கு போய்டுச்சு. போனில்   இரண்டு வார்த்தை பேச வழியில்லை ஆனால் பேஸ்புக்கில் அன்பொழுக  பேசுவது    வேடிக்கை.

அப்புறம் இன்னொன்னும் புரிய மாட்டேங்குது, போன் ல பேச நேரம் இல்ல பிசி பிசி சொல்ற ஆட்கள் பேஸ்புக் ஸ்டேடஸ் ஒரு பக்கத்துக்கு டைப் பண்ண எப்டி முடியுது... லைக் கிடைக்குதுன்றதுக்காவா ?! என்னவோ போங்க ...அன்பு நேசம் பாசம் நட்பு எல்லாம் விரல் நுனிக்குள் அடங்கிவிட்டன.  

தம்மை நேசிக்கும் உறவுகளிடம் ஏன் இந்த அலட்சியம். இயந்திர உலகில் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் மிகவும் குறைவு என்றபோது   மிக சிலரிடம் கூட உறவை சரியாக பேணாமல் வாழும் வாழ்க்கையில்  உயிர்ப்பு இருக்குமா என்ன...நிச்சயமாக இல்லை. இளமையில் நமது இந்த அலட்சியம் பெரிதாக  தெரியாது, காலம் செல்ல செல்ல ஒரு வெறுமை  சூழும்  நம்மை பார்த்து புன்னகைக்கவும் ஒருத்தர் இல்லையே எல்லோரும் எங்கே சென்றார்கள் என்று மனசு ஏங்கும். அன்பிற்கு இன்னொரு பக்கமும்  இருக்கிறது அதற்கு பெயர் வெறுப்பு, ஆம் அதுவரை மென்மையாகவும் பரிவாகவும் நம் ஒரு விழி பார்வைக்காக  ஒரு ஐந்து நிமிட பேச்சுக்காக காத்துக் கிடந்த அன்பு வெறுப்பாக மாறி இருக்கும். அன்பை மதிக்காவரிடத்து செலுத்தப் பட்ட அன்பு இப்படி ஆகிவிடுவது இயல்பு.  ஆனால் இது நல்லது அல்ல. நாம் வாழும் சூழல் அன்பு நேசம் பாசம் பிரியம்  நிறைந்ததாக இருக்க வேண்டும் அத்தகைய இடத்தில் தான் இறைவனின் பார்வை இருக்கும்.

அப்படியல்லாமல் எதன் பின்னோ ஓடி நமக்கான வாழ்க்கையை வாழாமல் போவதுடன், காலமும் அப்படி இப்படி நம்மை  அலைகழித்து ஓடச்செய்துவிடுகிறது.  அத்தகைய ஓட்டத்தில் வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களை கவனிக்காமல் வெற்றுப்புலம்பல் எரிச்சல் சலிப்புடன் மரணித்தேப்  போகிறோம்...


அடிக்கடி இல்லையென்றாலும் சந்திக்கும் நேரத்திலாவது  மெல்லிய புன்னகை சில அன்பான வார்த்தைகளை பிறருக்கு கொடுத்துச் செல்வதை வழக்கமாக்கி கொண்டோம் என்றால் இவையே நம்மை வாழும் காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்...

இனியாவது இப்படியும் கொஞ்சம் வாழ்ந்துப் பார்ப்போமே... ஆம்  'வாழத்தானே வாழ்க்கை' !!!





பிரியங்களுடன்
கௌசல்யா




   





Tweet

9 கருத்துகள்:

  1. நன்றாக சொன்னீர்கள் ...,மற்றவர்கள் நம்மைக் கண்டவுடன் மலரும் முகத்தில் தெரிந்துவிடும் நாம் வாழ்க்கை எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று ,மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதிலும்,அவர்களுக்கு தரும் முக்கியத்துவத்திலும் தான் .. அந்த ரகசியம் ஒளிந்து உள்ளது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்றவர்கள் நம்மைக் கண்டவுடன் மலரும் முகத்தில் தெரிந்துவிடும் நாம் வாழ்க்கை எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்//

      மிக அருமையாக சொன்னீர்கள் தோழி.

      வருகைக்கு நன்றி .

      நீக்கு
  2. வாழ்க்கையே வாழத்தான்
    புன்னகையோடு, நட்போடு,
    நல்வார்த்தைகளோடு
    வாழ்வோம்
    அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கையில் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம்.

    நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை சகோ. நம் வாழ்க்கை எதை நோக்கியோ பயணித்துக் கொண்டிருக்கின்றது. எதை என்ற இலக்கில்லாமல். மனிதமே மரித்துக் கொண்டிருக்கும் போது....

    நல்ல கட்டுரை....

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை,,,
    எல்லாவற்றிலும் மனம் ஒன்றினால் இயல்பாகும்,,,, நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...