புதன், நவம்பர் 18

PM 12:01
10

இதுவரை  பேசாப் பொருளா காமம் - அறிமுகம்  படிக்காதவர்கள்  அதை படித்தப்பின்  இரண்டாவது பாகத்தை படித்தால் தொடர்ச்சி புரியும். நன்றி.

* * * * *

திருமணமானவர்களே இது உங்களுக்கான கேள்வி...

=> காமத்தை காதலோடு செய்கிறீர்களா ?

* இது என்னங்க கேள்வி ... காதல் இல்லாமலா காமம் வச்சுக்க முடியும்?

=> இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க ... உங்க காமத்தில் காதல் இருக்கிறதா?

* இது என்ன  குழப்பம் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கான்ற மாதிரி??!! புரியலையே...

=> அப்ப இந்த கட்டுரை உங்களுக்குத்தான் தொடர்ந்து வாசிங்க...

* * * * *

காமத்தை காதலுடன் ரசித்து உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழாமல் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !!

தம்பதியருக்கிடையில் காதல் என்று  தனியாக இருக்கவேண்டியதில்லை என்பது உங்களின் எண்ணமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். புது தம்பதியர் இருவரும் காதல் இன்றி முதல்இரவு என்ற கட்டாயத்திற்காக உறவு வைத்துகொள்வதும் தற்கொலைக்கு முயலுவதும் ஒன்றுதான்.  காமத்தை கையாள கட்டாயம் அங்கே காதல் இருந்தாக வேண்டும். அத்தகைய குடும்ப உறவுகள் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும். பெரியோர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்றும்  சம்பிரதாயமாம் என்றும் திருமணத்தன்று இரவே அவசர அவசரமாக நடந்து முடிவதற்கு பெயர் காமமும் அல்ல காதலும் அல்ல... முழுமையான தாம்பத்தியமும் அல்ல.



'காதலுடன் காமம்' என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் மென்மையாக தூண்டப்பட உணர்ச்சிகள் மலரை போல மெல்ல விரிய, தானும் நுகர்ந்து துணையையும் நுகரவைக்கும் அற்புத அனுபவம்... வி(மு)டிந்த பின்னும் அடுத்து எப்போது எப்போது என ஏங்க வைக்கும்! சும்மா தொட்டதும் இந்த நிலை ஏற்பட்டுவிடாது, அதற்குத்தான் காதலை துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கிறேன்.

வெறும் காமத்துடன் உடல்கள் ஒன்று சேர்ந்தால்   குழந்தை பெற்றுக் கொள்ளலாமே தவிர இறுதிவரை சந்தோசமாக குடும்பம் நடத்த முடியாது. அதுவும் மன அழுத்தம் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில் காமம் மட்டும் என்றால் வேலைக்காகாது. அட ச்சே இவ்ளோதானா மேட்டர் இதுக்குத்தானா இவ்ளோ பில்ட்அப் என்று அசால்ட்டா தூக்கிப் போட்டுவிட்டு கண்டுக்காம போயிட்டே இருப்பாள் பெண்! நேசத்திற்கும் வலுகட்டாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

காதலையும் காமத்தையும் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள்.  ஒரு ஆண்   தன் மனைவியுடன் படுக்கையில் இணைவதையே  காதல் என்கிறான். தன் மனைவியின் மீதான நேசத்தை இவ்வாறு தான் வெளிப்படுத்துவதாக திருப்திப் பட்டுக் கொள்கிறான்.  என்னிடம் கவுன்செலிங்க்கு வந்த பெண் நாலு பக்கத்திற்கு கணவனின் மீது குறைகளை வாசித்தாள், அதன் மொத்த சாராம்சம் 'தன் மீது கணவருக்கு அன்பில்லை' என்பதே.  கணவனிடம் கேட்டபோது 'நான் அவளை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, வாரத்தில் இரண்டு மூணு  தடவை அவளுடன் உறவு வச்சுக்கிறேன், இப்படி என் அன்பை வெளிப்படுத்தியும் அவ புரிஞ்சுக்கலைனா நான் என்னங்க பண்ண'    என்று ரொம்பவே அப்பாவியாக(?) கேட்டார்.

நிறைய ஆண்கள் இவரை போன்றேதான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி என்பது செக்ஸ் ஆல் ஏற்படும்  என்பது மிக மிக தவறான புரிதல்.  உங்களை  பொருத்தவரை செக்ஸ் என்பது பெரிய மேட்டர் என்றால் பெண்ணோட  தேவையெல்லாம் ரொம்ப  சின்ன  மேட்டர். செல்ல வருடல், மென்மையான தொடுதல்,   முரட்டுத்தனமான அணைப்பு, கொஞ்சலான பேச்சு, எண்ணிக்கை வைக்காமல் கிடைக்கும் முத்தம்... இப்படி ஆரம்பித்து மெல்ல மெல்ல முன்னேறி பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே  ஆண் தனது தேவையை தீர்த்துக் கொள்வது ......இதுதான் முழுமையான செக்ஸ்! ஆணின் ஐந்து நிமிட காமம் பெண்ணிற்கு  வெறுப்பைத்தான் தரும்,  அத்தகைய உடலுறவை சந்தோஷம்/திருப்தி என்று எடுத்துக் கொள்வது ஆண்களின்  அறியாமை!!

பெண்ணின் தவிப்பும் ஆணின் தவறான புரிதலும் 

2 குடும்பங்களை உதாரணத்துக்கு பார்ப்போம். சிந்தைக்குள் குடும்பச் சிக்கல்கள்  அலைமோத தூக்கம் தொலைத்துப்  புரண்டுக்  கொண்டிருக்கும் மனைவி தனது தவிப்பு கணவனின் கைக்குள் தஞ்சமடைந்தால் குறையும் என முதுகு காட்டி உறங்கும் கணவனை மெல்ல தன் பக்கம் திருப்ப, ஸ்பரிசம் பட்டு லேசாக அசையும்  கணவன், 'எனக்கு மூடுல்லை தூங்க விடு' பட்டென்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூக்கத்தை தொடருகிறான்.   அடுத்ததாக வேறு ஒரு குடும்பம் இதே மாதிரியான ஒரு சிச்சுவேசன், ஆனா  இந்த கணவன் கொஞ்சம் நல்லவன், அணைப்பிற்கு தவித்தவளைப் பிடித்து இழுத்து அவளது தவிப்பைப்  போக்குகிறேன் பேர்வழி என்று பெருந்தன்மையுடன் போராடி(?) தனது ஐந்து நிமிட தேவையை (மட்டுமே) பூர்த்தி செய்துவிட்டு அப்பாடா முடிந்தது கணவனின் கடமை என்று மீண்டும் மனைவிக்கு முதுகுகாட்டி தூங்கியே விடுகிறான்.  இந்த இரண்டு விதமான படுக்கையறை காட்சிகளிலும் நடந்தது என்ன ?!


அன்பான அணைப்பிற்கு மனைவி ஏங்குவதை காமம் என பொருள் கொள்ளும் விந்தையான கணவர்களை கொண்டது தான்  நம் சமூகம்  !!

முதல் குடும்பத்தில்  மனைவி அடிபட்ட வலிகொண்ட   உணர்வுடன்  அவமானத்தில் கூனிக் குறுகி இருப்பாள், இரண்டாவது குடும்பத்தில்   மனைவியோ குழப்பத்தின் உச்சத்தில் இருப்பாள்...  இருவருக்குள்ளும் எழும் ஒரே கேள்வி 'நான் சும்மா அணைக்கத்தானே நெனைச்சேன்??!!' பதிலற்ற கேள்வியின் இறுதியில், இந்த இடத்தில்தான்  அவள் வெறுக்கத் தொடங்குகிறாள், காமத்தையும் புரிதலற்று அதனை கையாளும் கணவனையும்...

விடியும்வரை தூக்கமின்றி தவித்து விடிந்ததும் அவமானம்  குழப்பம் மனதை வருத்த எரிச்சலுடன் கணவனின் மீது கோபத்தை காட்டுவாள். காரணம் புரியாமல் அதை எதிர் கொள்ளும் ஆண், காலை நேர டென்ஷன் என்று மனதை சமாதானம் செய்துக் கொண்டு வேலைக்கு சென்றுவிடுவான். இரவு வீடு திரும்புகையில் வாசலிலேயே  எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் அதே கோபத்தை வேறு ஏதோ ஒன்றை காரணமாக வைத்து....... இச்சமயத்தில் ஆண் முழுதாக குழம்பி ' அப்படி நாம என்னத்த செஞ்சுட்டோம், இவ இப்படி குதிக்கிறா'  என்று. இரவில் கணவன் சரியாக நடந்துக் கொள்ளாததுதான் காரணம் என்று பொதுவாக  எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல மாட்டாள், சொல்லப்போனால் அவளுக்குமே தெரியாது தனது எரிச்சலின்    நெருப்பு?  படுக்கையறையில் தான் புகைய ஆரம்பித்தது என்று.

இப்படித்தான் பல தம்பதிகள் சிக்கலின் முதல் முடிச்சு எந்த இடத்தில் விழுந்தது என்று  தெரியாமலேயே மேலும் மேலும் முடிச்சுகளைப்  போட்டுக் கொண்டே சென்று சிக்கலை பெரிதாக்கி ஒரு கட்டத்தில்  கோர்ட் படியேறி விடுகிறார்கள்.  விவாகரத்து கிடைக்கிறது, அதன் பிறகு மறுமணம் நடக்கலாம், அங்கேயும் பிரச்னை ஏற்படலாம், மறுபடியும் விவாகரத்து  என்றால் கேலிக்கூத்தாகிவிடுமே என சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டலாம். இதுதான் இதுவேதான் இன்றைய நிஜம்... யதார்த்தம்!!

இப்போது புரிகிறதா காமத்தின் வலிமை என்னவென்று.  வெறும் ஐந்து நிமிட சுகம் தானே என்ற அலட்சியம் குடும்ப உறவுகளையே சிதைத்துவிடுகிறது.  ஆணின் அணுகுமுறையை பெண்ணும் பெண்ணின் தேவையை ஆணும் புரிந்து நடந்துக் கொள்ளவேண்டும். இதனை  சரியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும்தான் சந்தோசமாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதாக நடிக்கிறார்கள்!!

காமம் - உடல், காதல் - மனம் இரண்டையும் ஒன்று சேர்த்தால் தான் அங்கே நிறைவு கிடைக்கும். ஆண் அல்லது பெண்  வெறும் காம இச்சையுடன்  மட்டும் துணையை அணுகும்போது எதிர்பாலினத்தை சந்தோசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தன் உச்சத்தை நோக்கிமட்டுமே செல்வார்கள்... இது அவர்களின் தவறல்ல காமத்தின் பிரத்தியேக குணம்.  ஆனால் காதலுடன் அணுகினால் வேறு சிந்தனையில்  துணை இருந்தாலும்   இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் காதல். அப்புறமென்ன  இருவரும் மற்றொருவருக்குள் கலக்கத் தொடங்கிவிடுவார்கள்.  இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது, காதலை துணைக்கு அழைத்ததுடன் தேமே என்று இருந்துவிட்டால் கூட  போதும், பிறகு காதல் மற்ற  வேலைகளைப்  பார்த்துக் கொள்ளும்.  காதலுக்கு இருக்கக் கூடிய வீரியம் இது.

காதலுடன் கூடும் போது ஒருவருக்குள் ஒருவர் சுலபமாக ஊடுருவ முடியும்...அது மனதென்றாலும், உடலென்றாலும்...! செல்ல வருடல் , சில பல முத்தங்கள், அன்பான பேச்சு, இறுக்கமான அணைப்பு இவை போதுமே உறவை தொடங்க, இதைதான் காதல் என்கின்றேன். பலரும் உடலுடன் கூடுவதாக எண்ணி உடலுக்கு வெளியேதான் கூடுகிறார்கள்... அது செயற்கை , இயந்திரத்தனம். ஆண் பெண் படைப்பின் அர்த்தமே கூடுவதுதான். அதை இயந்திரத்தனமாக செய்யாமல் இயல்பாக மென்மையாக காதலுடன் செய்யுங்கள். காமம் உடலின் தேடலாக இல்லாமல் ஆன்மாவின் தேடலாக இருந்தால் கூடலுக்குப்பின் தியானத்தில் இருந்து எழுவதை போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்... நம்புவர்களுக்கு அங்கே கடவுளின் பிரசன்னமும் தெரியக்கூடும்!!

காமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு...!!

விரல் நுனியில் கணினியில் தேடும் இருட்டறை சமாச்சாரம் அல்ல... தெருவோர புத்தகக்கடையில் விலை மலிவாய் கிடைப்பதும் அல்ல... பலரது மூளைக்குள் அமர்ந்துக்  கொண்டு பெண்களின் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருக்கும் சைத்தானும் அல்ல...காலகாலமாய் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காகவே கல்யாணம் முடித்ததாய் எண்ணி ஆற்றிய கடமையும் அல்ல... அரசமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத்  தொட்டுப் பார்க்கும் பெண்களின் வரமும் அல்ல ........ 'மனித பிறப்பின் அர்த்தத்தை அணு அணுவாக ரசித்து தானும் இன்புற்று தன்னை சுற்றி இருக்கும் உயிர்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும், வெகு சிலரே முழுதாய் உணர்ந்த ஒரு உன்னதம்' - காமம் !

* * * * * * * * * *

ஆணின் தேவை/அவசரத்தை சரியாக புரிந்து உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ற விதமாய் நயைந்தும் தளர்ந்தும் ஆணின் தீவிரத்தை தாமதம் செய்து பெண்மையை  முழுமையாய் உணர்த்தி தானும் இன்பத்தில் திளைத்து  ஆணையும் உச்சத்திற்கு அழைத்துச்  செல்வது பெண்ணின் கடமை. அது எவ்வாறு என்ற கேள்வி எழுந்தால் காத்திருங்கள் பதிலுக்காக... தொடர்ந்து தொடரை  வாசியுங்கள்...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Painting & pic - thanks google


Tweet

10 கருத்துகள்:

  1. வாவ்! தோழி! என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கும் உங்கள் பதிவு எழுத்து! அருமை அருமை. டிட்டோ டிட்டோ நான் அடிக்கடிச் சொல்லுவது என்னிடம் ஆலோசனைக் கேட்பவர்களுக்கு. நான் புரிந்து கொண்ட விதத்தில் நீங்கள் அருமையாக அதே வார்த்தைகள் எனக்கு ஆச்சரியம் ஆச்சரியம்! இப்படியும் இருவர் ஒரே போன்று அதே வார்த்தைகளுடன் திங்க் பண்ண முடியுமா என்று!

    ஆச்சரியத்தில் இருந்து விடுபடாமல் இந்தக் கருத்து. வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படியும் இருவர் ஒரே போன்று அதே வார்த்தைகளுடன் திங்க் பண்ண முடியுமா என்று! //

      நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது முடியும் என்றே தோன்றுகிறது :-)
      தளத்தில் வேறு சில பதிவுகளையும் படித்து கருதிட்டமைக்கு மகிழ்கிறேன் தோழமை.

      வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள் !!!!

      நீக்கு
  2. அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோதரியாரே
    அதிக எண்ணிக்கையிலான வாசகர்களை இப்பதிவு சென்றடைய வேண்டும்
    என்பதே என் விருப்பம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிக எண்ணிக்கையிலான வாசகர்களை இப்பதிவு சென்றடைய வேண்டும்//

      உங்களின் நல்ல எண்ணத்திற்கு நன்றிகள்.

      நீங்கள் எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருவதற்கு மகிழ்கிறேன் + வாழ்த்துகிறேன் !!

      நீக்கு
  3. அதிகம் பேசவேண்டிய பொருள்!
    த ம 8

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை....
    எல்லாரும் அறிய வேண்டிய பேச வேண்டிய சொல் இது...

    பதிலளிநீக்கு
  5. அன்பான அணைப்பிற்கு ஏங்கும் பெண்ணை. காமத்தைத்தான் எதிர்பார்க்கிறாள் என் என்னும் கணவன் --- இந்தப் புரிதலைத் தான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் ஆண்கள். அதைப் கணவரிடம் புரிய வைக்கச் செய்யலாம் பெண்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணின் மனதை புரிந்துக் கொண்ட கணவன் கூட இந்த விசயத்தில் (பதிவில் குறிப்பிட்டபடி) புரிதலற்றுதான் இருக்கிறான்... ஆண்களுக்கு தானாக கற்றுக் கொள்வது சிரமம் தான் , அவர்களின் சூழல், வளர்ப்பு இப்படி காரணங்கள் இருகின்றன. பெண் தான் முன் வர வேண்டும், மென்மையாக எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும் தோழி.

      தொடரும் உங்களின் கருத்துக்கு நன்றிகள்.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...