வெள்ளி, ஜனவரி 23

PM 6:39
10

அன்பு நண்பர்களே! 


திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நடந்த பிறகு தற்போது பெரியளவில் நடக்க இருக்கும் ஒரு சந்திப்பு ‘தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம்’
பேஸ்புக் நண்பர்கள் அதிக அளவில் கலந்துக் கொள்வதால் பெயரை முகநூல் நண்பர்கள் என்று வைத்துவிட்டோம். அதும் தவிர இப்போது நம்ம பதிவர்கள் எல்லோரும் பதிவுலகத்தை விட அதிக நேரம் பேஸ்புக்கில் தானே இருக்கிறோம். அந்த வகையில் பார்த்தாலும் இந்த பெயர் சரிதானே !! :-)




நாள் - 25/1 /2015 ஞாயிற்றுக் கிழமை அன்று (நாளை மறுநாள்)

இடம் -  பதிவர் சந்திப்பு நடந்த அதே ஜானகிராம்  ஹோட்டலில் பெரிய ஹாலில் நடக்க இருக்கிறது. ஹோட்டலுக்கு வெகு அருகில்தான் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் இருப்பதால் வெளியூர் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். 

இந்த சங்கமத்தை நடத்துவதில் பெரும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்  எங்க மண்ணின் மைந்தன் எழுத்தாளர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள். என்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும் விழா குறித்த செய்திகள், தகவல்களை விரிவாக பகிர்ந்துக் கொள்வார். இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவமிக்கவர்.
(கத்துக்குட்டியா இருந்தாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசுறதே நம்ம பொழப்பாப் போச்சு :-) ஆனா அவரு முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போற மாதிரியே படப்படப்பா பேசுவார். என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்) 

கடந்த மூன்று மாதங்களாக நடத்தப் பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நண்பர்கள் கலந்துக் கொண்டு அதன் அடிப்படையில் நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப் பட்டுள்ளது. அனுபவமிக்கவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இளைஞர்களுக்கும் கொடுக்கப்படுவது ஆரோக்கியமான நட்பை பலப்படுத்தும் என்பதை சங்கம ஏற்பாடுகளை கவனித்து புரிந்துக்கொண்டேன்.  

வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் இரு புத்தகங்கள் வெளியீடும், இணைய உலகத்தின் எதிர்ப்பார்ப்புகள் சில பற்றியும் இங்கே பகிரப் பட இருக்கின்றன. பல்வேறு மத இன மொழியினரை இணையம் இணைத்து வைத்திருக்கிறது என்ற சிறப்புடன் மட்டுமே நாம் நின்றுவிடாமல் இந்த சந்தர்ப்பத்தை ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நடைபெறப்போகும் இந்த சங்கமம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

நிகழ்ச்சி நிரல் 

கரிசல்குயில் இசை நிகழ்ச்சியுடன் துவக்கம்.
உறுப்பினர் பதிவு
வரவேற்புரை: இரா.நாறும்பூநாதன்.
முகநூல் நண்பர்கள் சுய அறிமுகம் (தன்னோட பெயர்,ஊர்,பணி, இயங்கும் துறை இதை மட்டுமே சொல்ல வேண்டும்.)
இரண்டு நூல்கள் வெளியீடு.
1.திரு.விமலன் எழுதிய "பந்தக்கால்"
2.திரு.மொஹம்மத் மதார் எழுதிய "வல்லினம் நீ உச்சரித்தால்..."
சிறப்பு விருந்தினர்கள்
எழுத்தாளர்கள் திரு.வண்ணதாசன்,கலாப்ரியா,உதயசங்கர்,மாதவராஜ்,தேவேந்திரபூபதி,சௌந்திரமகாதேவன்,இரா.எட்வின் மற்றும் மனநல மருத்துவர் ராமானுஜம்,கதிர் ஆகியோர் வலைத்தள பதிவுகள் பற்றி எளிமையான துவக்கவுரை

நண்பர்கள் கலந்துரையாடல்.
நன்றியுரை: திரு.மணிகண்டன்.
பிற்பகல் 2 மணி : மதிய உணவு.
நிறைவு.

நிகழ்வை ஒழுங்குபடுத்துபவர்கள் :-  
திரு.சுப்ரா.வே.சுப்ரமணியன்
திருமதி.ருபீனா ராஜ்குமார்
திரு.அனில் புஷ்பதாஸ்

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்குபவர் :-  
குறும்பட இயக்குனர் நெல்லை முத்தமிழ்.

நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவதாக தெரிகிறது. சுத்துப்பட்டி மாவட்ட மக்களை தவிர்த்து தொலைவில் இருந்து யாரெல்லாம் வராங்கனு பார்த்தால் (இதுவரை பெயர்  கொடுத்துத்தவர்கள்) கத்தாரில் இருந்து திருவாளர்கள் ஜூமாலி ரசூல், சென்னையில் இருந்து ராஜதுரை தமயந்தி, திருச்சியில் இருந்து இரா.எட்வின், கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி சிவாஜி, மதுரையில் இருந்து விசுவேஸ்வரன், குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து தக்கலை ஹலிமா, நாகர்கோவில் பாபு,விருதுநகரில் இருந்து மணிமாறன், சிவகாசியில் இருந்து ரெங்கசாமி மற்றும்    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நம்ம ரத்னவேல் ஐயாவும் அம்மாவும் வராங்க.  அப்புறம் சில படைப்புகளும் அங்கே விற்பனைக்கு வைக்கப் பட இருப்பதாக இருக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க பொறுப்பு மட்டுமே. 


சந்திப்பு குறித்த நேரத்தில் துவங்க நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் . தொலைவில் இருந்து நண்பர்கள் வருவதால் அவர்கள் ஊர் திரும்ப வசதியாக மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சியை கண்டிப்பாக நிறைவு செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தாலும் நாம நம் நண்பர்களுடன் எவ்ளோ பேசணுமோ போட்டோ எடுத்துகனுமோ எடுத்துக்க வேண்டியதுதான். எழுத்துக்களின் மூலமே பார்த்து பேசிப் பழகிய உள்ளங்கள் நேரில் என்றால் உற்சாகம் அளவிட முடியாதல்லவா...

சங்கமம் குறித்து பேஸ்புக் அப்டேட்ஸ் பார்த்தே பல நண்பர்கள் வருவதாக தெரிவித்தார்கள்...அதனால் தனிப்பட்ட அழைப்பு இல்லையே என்று எண்ணாமல் நம் குடும்ப விழாவாக எண்ணி வாருங்கள், வருகையை நாளை மதியத்திற்குள் உறுதி செய்துக் கொண்டால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

தொடர்பிற்கு - திரு.நாறும்பூநாதன் - 9629487873 

பல பெரிய படைப்பாளிகள் வாழ்ந்த, வாழும் நமது தெக்கத்தி மண்ணில் இன்னும் வெளியே தெரியாத படைப்பாளிகள் இருக்கக்கூடும், அத்தகையவர்கள் பலருக்கு தெரியாமல் பதிவுலகில் இருக்கலாம் அல்லது பேஸ்புக்கில் சில வரிகள் எழுதுவதுடன் நின்றிருக்கலாம். இந்த சங்கமம் அத்தகையவர்களை இனம் கண்டு உற்சாகப் படுத்தக் கூடிய ஒரு இடம். எனவே இது போன்ற அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நண்பர்கள் யாரும் தவறவிட்டுடக் க்கூடாது.  கண்டுக் கொள்ளப் படாத எழுத்துக்கள் இங்கே தெரிந்தக் கொள்ளப்படலாம். யாருக்கு தெரியும் இந்த சங்கமம் முடிந்ததும் பல எழுத்தாளர்கள் அடையாளம் கண்டு வெளிஉலகம் இழுத்துக் கொண்டுப் போகலாம். ஆம் ஆச்சரியங்கள் அதிசயங்கள் தானாக ஏற்படும் என்றில்லையே...நாமாகக் கூட ஏற்படுத்தலாம் !! 

புதிய கதவுகள் திறக்கட்டும் !!

வாழ்த்துக்கள் !!!
   
நன்றி!


ப்ரியங்களுடன் 
கௌசல்யா 



Tweet

10 கருத்துகள்:

  1. சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. திருநெல்வேலியில் திருவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. நண்பர்கள் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. @@திண்டுக்கல் தனபாலன்...

    மிக்க நன்றிகள் சார்.

    பதிலளிநீக்கு
  6. @@துபாய் ராஜா...

    வாங்க வாங்க...உங்களை இங்கே பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

    மகிழ்வுடன் நன்றிகள் .

    பதிலளிநீக்கு
  7. @@ராமலஷ்மி...

    மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  8. @@ -'பரிவை' சே.குமார்...

    நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  10. வலைச்சரம் சென்று பார்த்தேன். மிக்க நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...