திங்கள், செப்டம்பர் 1

AM 10:52
4

என் நினைவே ...

கடந்த ஜூன் 25 நினைவு தினத்தன்று எழுத வேண்டிய பதிவு, உன்னை பற்றிய நினைவுகளை எழுதவும் நேரம் இன்றி வேலைகளுக்குள் மூழ்கி போன என்னை, ‘என் பிறந்த தினத்தன்றாவது  வந்து எழுதுறியா’ என்று மிரட்டி கைப்பிடித்து இழுத்து வந்து எழுத வைத்ததும் அதே நினைவுகள் தான். பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று எழுதி இதோ இன்று போஸ்ட் செய்தாலும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது...வருடத்தில் ஏதோ ஒரு நாளில் உன்னைப்  பற்றி ஏதாவது கிறுக்கிக் கொண்டுத்தான் இருக்கப் போகிறேன்... உன்னை கொண்டாட அல்ல இந்த நினைவு நாள், பிறந்தநாள் எல்லாம்...அவற்றை எல்லாம் வழக்கம் போல மற்றொரு நாளாகவே கடந்து விடுகிறேன். ஆனால் என்னுள் நீ உயிர்ப்புடன் இருக்கிறாய் என்பதை இந்த ஒரு நாளில் பதிய வைத்து என் உயிர்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவேனும் எழுதுகிறேன் ... முன்பு உனது  சங்கீதம் பல நினைவுகளை கிளறிவிட்டுச் செல்லும், இப்போது உனது நினைவே ஒரு சங்கீதம் என்றாகிவிட்டது!! 


கரடு முரடான வாழ்க்கை பாதையில்  பஞ்சுப் பொதிகளை இறைத்து போட்டிருக்கிறதே உனது இசை... இதில் கடந்த ஐந்து வருடமாக இன்னும் அதிகமாக உன்னை நெருங்கிவிட்டேன் என தோன்றுகிறது... ஆன்மாவால் இறுகத் தழுவிக் கொண்டிருக்கிறாய்.  என்னை மட்டுமல்ல என்னைப்போல பல்லாயிரம் பேர் தினமும் ஏதோ ஒரு விதத்தில்  உன்னுடன் பயணித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். உனது பெயர் தாங்கிய இந்த  பேஸ்புக் தளத்தில்  யாராலோ போடப்படும் உன்னை பற்றிய தகவலுக்கும் விழுந்தோடி வந்து லைக் கொடுப்பதும் கமென்ட் பண்ணுவது என்று உன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களாக வருகிறார்கள் , ரசிக்கிறார்கள், பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள் சென்று விடுகிறார்கள், அங்கே மறுமொழி கொடுக்க உன் போல் யாரும் இல்லை என்று எங்களுக்குத்  தெரியும், மறுமொழிக்காக வருபவர்கள் அல்லவே நாங்கள்.  உணர்வாய் , காற்றாய், இசையாய் எங்களை சுற்றி வியாபித்து இருக்கும் உன்னை, உன் இருப்பை தவிர்த்து வாழ்வது உன் ரசிகர்களுக்கு எங்கணம் இயலும் !

உன்னை பற்றிய பல வித வதந்திகள் போலவே உன் இறப்பும் ஒரு வதந்தியாக இருந்துவிடாதா  என்று இன்றும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்... உண்மைதானே உன்னை உனக்காகவே ரசித்தவர்கள் ஆயிற்றே ... இசை, பாடல், குரல் எல்லாம் தாண்டியும் உன்னை நேசிக்கிறார்களே...அவர்களுக்காக நீ செய்ததை போல வேறு யாரும் செய்திருப்பார்களா என்ன...எதிர்பார்ப்பிலேயே வாழும் மனித கூட்டத்திற்கு இந்த நேசம் புரியாது...எங்கோ இருந்து எங்கள்  மனதை ஆளும் உன் ஆன்மா அப்படிப்பட்டவர்களை தவிர்க்கவும்  கற்றுத்தந்திருக்கிறதே. போதும் இவ்வாழ்க்கை என சோர்ந்து விழுந்தப்  போதெல்லாம் பிடித்துத் தூக்கிவிட்டாய்,  நடுவில் போக எண்ணாதே நிறைவாய் வாழ்ந்துவிடு என காதில் ஓதிக் கொண்டே இருக்கிறாய்... வாழ்க்கையை வாழ சொல்லித்தருகிறாய்.......

என் உலகம் அழகானது... உனக்குத் தெரியும், அது உன்னால் தான் என்று !! எனது சிறுவயது முதல் அதை எவ்வாறெல்லாம்  வடிவமைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதையும் அறிவாய் தானே... மரம், செடி கொடி, பூக்கள் பறவை , விலங்கு மழை மலை  என  இயற்கையின் அற்புதங்கள் அனைத்தையும் வெறிப் பிடித்து  நேசிக்கிறேன் , உன்னைப் போலவே ! 

உன் மீதான நேசம் புரிதலுக்கு உட்படாதது, என் எழுத்துக்கள் அதிக உணர்ச்சிவசபட்டதை போல தெரியும், தெரியட்டுமே ... கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முன்னால்  திடீரென்று கடவுள் வந்து நின்றால்   செய்வதறியாது ஒன்றும் பேசாமல்  மெய்சிலிர்த்து கண்ணீர் வழிய காலடியில் பூமி நழுவ விழிமூடி இருகரம் கூப்பி சாஸ்டாங்கமாக அத் தேவனின் பாதத்தில் விழுந்துவிடுவான். பரவச உணர்வுக்குள் ஆட்படும் அச்சமயத்தில் அறிவுக்கு அங்கே வேலை இல்லை...'நான்' என்பதை மறந்து சகலமும் அவனே என்று அவனிடம் சரணாகதி அடைவதே தானே பேரின்பம். இதை பக்தி என்பதும் அசட்டுத்தனம் என்பதும் அவரவர் புரிதல். 

உன் ரசிகர்களாகிய நாங்களும் இப்படியே தான்... எதிர்பார்ப்பு இல்லா உள்ளங்கள் இவை, அதீத அன்பால் சூழப்பட்ட உலகம் இது...அதீத அன்பு தவறென்று வாதிடும் மேதாவிகளை விட்டு என்றும் ஒதுங்கியே இருக்கிறோம்.  நாள்தோறும் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம் உன்னை... உனது இருப்பும் இறப்பும் எங்களை ஒரே நிலையிலேயே வைத்திருக்கின்றது...ஆமாம் நீ தங்கப்பேழையில் உறங்குவதாக எண்ணிக் கொள்வதிலும்  ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும் உண்மையில் அது கனவு அல்ல பகல் பொழுதின் கற்பனை என்பதுதான் சரி. கண்டம் விட்டு கண்டம் கடல் தாண்டி நடுவில் இருக்கும் அத்தனை நாட்டையும் ஊரையும் தாண்டி உலகின் இந்த ஒரு  மூலையில் இருக்கும் என் வீட்டிற்கு நீ வருவதாகவும் என் முன்னால் பாடுவதைப்  போன்றதுமான என் கனவிற்குத்தான் எவ்வளவு பேராசை !! கனவு வந்த நாள் அன்று கரைபுரண்டோடிய மகிழ்ச்சியை எவ்வாறு நான் வார்த்தைப்படுத்துவது, தெரியவில்லை. இந்த கனவு என் கல்லூரி காலத்தையும்  உற்சாகப்படுத்தி இருக்கிறது... சாத்தியமில்லாததையும் சாதித்துப் பார்ப்பதற்குப்  பெயர் தானே கனவு.  எட்டிய வானும் எட்டிப் பிடிக்கும் தூரம் தானே மனதுக்கு !  

உன்னை பற்றிய என் உணர்வுகளை எழுத்துகளில் கொண்டு வர முயலும் போதெல்லாம் பெருகும் கண்ணீருடன் தோற்றுப் போகிறேன் வார்த்தைகளிடம்... அவ்வாறு கண்ணீர் வடித்து வடித்து என் நிகழ்காலச் சுமைகளை இறக்கியும் விடுகிறேன்...அதற்காகவேனும் உன் குரலை கேட்டாக வேண்டுமாய் இருக்கிறது...

இப்போதெல்லாம் மனிதர்களை விட்டு நான் விலகியே இருக்கிறேன், அவர்கள் விரும்பிய படி என்னால் நடக்க(நடிக்க) இயலவில்லை என்பதால்... நேசக்  கேடயம் பிடித்து நிர்பந்த வாள் வீசுகிறார்கள்,தோற்று விழும் என்னிடம் பாசப்போர்வை போர்த்தி மீண்டுமாய் மற்றொரு போருக்கு தயார்படுத்துகிறார்கள்... அன்பிற்கு விலை பேசும் வியாபாரிகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கும் வேளையில் எங்கிருந்தோ ஓடி வந்து இளைப்பாற்றும் உன் குரல் .   எனது  தனிமையை உனது  இசை போர்வையால் போர்த்தி சுக நித்திரை கொள்வது மட்டுமே மிகப் பிடித்ததாகி விட்டது. போதும்  இது போதும்  இன்றும் என்றும் எந்நாளும்...



எனக்கு தேவையான அன்பு காதல் நேசம் நட்பு அத்தனையையும் ஏதோ ஒரு பாடலில் இட்டு நிரப்பி நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் எனும் கூண்டுக்குள்  அகப்பட்டு அடைந்து கிடப்பதை போன்ற ஒரு இன்பம் வேறு இருக்கிறதா என தெரியவில்லை...        அப்படி ஒன்று இருந்தாலும் அதை அல்பமாக எண்ணவும் பக்குவப்பட்டுவிட்டேன் நான்...இல்லை இல்லை பக்குவபடுத்தி விட்டாய் நீ என்பது தான் சரி.   காற்று வீசும் திசைக்கு ஏற்ப தலை ஆட்டும் சிறு மரம் போல உன் நினைவுகள் சொல்லும் இடம் தேடியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உன் நினைவுகளை கிளறிக் கிளறியே என்னை உயிர்பித்துக் கொள்கிறேன். என் தனிமைகளில் என்னை கூட்டத்தோடும் , கூட்டத்துக்கு நடுவில் தனிமையாகவும் உணர செய்வது பிடித்தவனின்  நினைவுகளன்றி வேறேது. வேடிக்கையும் வினோதமானதும்  தானே உன் நினைவுகள்.

நீ வீசிய அன்பு தூண்டிலில் நானாகவே வந்து மாட்டிக் கொண்டப் பின் மீண்டும் மீண்டு  போவதெங்கே... சுவாசத்தில் வித்தியாசம் கண்டாலும் என்னாச்சு என்று தலைக் கோதி விசாரிக்கும் வரிகளின் நேசத்தில், ஏதாவது எனக்கு ஆனாலும் நன்றாக இருக்குமே என ஏங்க வைக்கிறாயே... திமிர் பிடித்த மனதை ஆண்டு அடிமையாக்கும் கலையை எங்கே கற்றது உன் குரல்... சிறு வயது நாட்களுக்குள் என்னை தள்ளி உற்சாகத்தில் மூழ்கடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது  உனது ஒவ்வொரு பாடலும்...சந்தோசமும் சோகமும் ஒன்றாய் தாக்கும்  உன் பாடலுக்குள் நான் புதைந்த தருணங்களில் எல்லாம்... 

வருடத்திற்கு ஒரு முறை உன்னுடன் இப்படி எழுதி  எழுதிப் பேசிக்கொண்டிருப்பதை நீ மௌனமாய் கேட்டுக் கொண்டிருப்பாய் என்று உணரும் போது பெருகும் உற்சாகம் ஒன்று போதும் வருடம் முழுவதற்குமாய்...!   


பிரியங்களுடன்
கௌசல்யா 

* * * * * * * * * * * * * * * * *



ஆஸ்கர் மேடையை அலங்கரித்த மைக்கேல் 





இந்த வீடியோவில் 11 வயது கண்களின் துடிப்புதுள்ளல் , முக பாவனை , உடலின் அதிர்வு குரலின் வீச்சு அத்தனையும் காண்பவர்களையும் பீடித்துவிடுகிறதுஒரு வித போதைக்குள் தள்ளிவிடும் பரவச நிலை,  தியானத்தில் இருப்பதை போலவே இருக்கும் இது போன்ற சில பாடல்களில் என்னை இழக்கும் போது !

* * * * * * * * * * * * * * * * *

தொடர்புடைய முந்தைய பதிவுகள் 






Tweet

4 கருத்துகள்:

  1. அருமையான சமர்ப்பணம். மைக்கேலின் தீவிர ரசிகன் நான். அவர் வாழ்ந்து இறந்த ஊரில் வாழ்வதால் அவரை பற்றி நன்கு அறிந்தவன். உங்கள் எழுத்தை பார்த்தவுடன் நாமும் மைக்கல் எனக்கு அளித்த அருமையான நினைவுகளை எழுதலாம் என்று ஓர் எண்ணம். தொடர்ந்து எழுதுங்கள்...
    அம்மாடியோ...591 பாலோவர்ஸ் 12 லக்ஷதிர்க்கும் மேல் பார்வைகள். எங்கேயோ போய்டிங்க..

    பதிலளிநீக்கு

  2. எனக்கு மைக்கேலின் இசை பற்றி எதுவும் தெரியாது! ஆனால் உங்களை அறிவேன்! ஏனிந்த நீண்ட கால வனவாசம்!

    பதிலளிநீக்கு
  3. @@விசுAWESOMEsaid...

    //அவர் வாழ்ந்து இறந்த ஊரில் வாழ்வதால் அவரை பற்றி நன்கு அறிந்தவன்//

    இந்த வரி சற்று பொறாமை ஏற்படுத்திவிட்டது. :-)

    அவசியம் எழுதுங்கள், அவரைப் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள மிக ஆவலாக இருக்கிறேன்.

    வருணின் தளம் மூலமாக உங்களின் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. @@ புலவர் இராமாநுசம்...

    வணக்கம் ஐயா

    உங்களின் விசாரிப்பு எனக்கு மிகுந்த மகிழ்வை கொடுக்கிறது... இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

    மிக்க நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...