செவ்வாய், ஜூன் 26

AM 10:40
18

இணையதளங்கள் இன்று பலராலும் கூர்ந்து கவனிக்க படுகிறது, விமர்சிக்க படுகிறது...இங்கே உள்ள தகவல்கள், துணுக்குகள், போன்றவை பத்திரிகைகள், தினசரிகளில் பகிரபடுகிறது. இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...! இத்தகைய இடத்தில் இருக்கும் நமக்கு, நல்லது செய்ய ஒரு வாய்ப்பு  கிடைத்தால் செய்யாம இருக்கலாமா?! வேற யாருக்கும் உதவி கேட்கல, நம்ம தமிழுக்காகத் தான் கேட்கிறேன்...'அப்படி என்னங்க ஆச்சு  தமிழுக்கு' ன்னு நீங்க பதறினா நிச்சயம் உதவி செய்வீங்க தானே...?! இப்ப தமிழுக்கு ஒன்னும் ஆகல, (ஏதோ  அப்டி இப்டின்னு ஓரளவு பெட்டரா இருக்குது ?!) ஆனா தமிழை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே...! தமிழ் தமிழன்னு சொன்னா மட்டும் போதுமா இந்த தமிழுக்காக இதுவரை நாம என்ன செஞ்சிருக்கோம் ?! செய்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு...தமிழ் நன்றாக நிலைத்து வாழட்டும் நம் தலைமுறை தாண்டியும்...! அதிகம் யோசிக்காம கை கொடுங்க...! எப்படின்னு புரியலையா...சரி நான் இத்தோட முடிச்சிகிறேன்...தொடர்ந்து படிங்க...புரியும் !
கழுகு இணைய தளம் ஒரு பதிவு வெளியிட்டது...அதனை இங்கே அப்படியே பகிர்கிறேன்...படித்து கழுகின் லிங்க் சென்று எடுத்து நீங்களும் பகிருங்கள் பலரையும் சென்றடையட்டும்...நன்றிகள் !

                                                                         * * * * *
நமது சந்ததியினருக்கு நம் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்பை விட்டுச் செல்வது எழுத்து ஒன்றினாலே சாத்தியம். அப்படி தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணங்களாக விளங்கப்போகும் எண்ணற்ற நூல்களை பாதுகாக்கும் ஒரு கடமை நமக்கு காத்திருக்கிறது. 

புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா மற்றும் அவரது துணைவியார் திருமதி டோரத்தி அம்மாள் இருவரும் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்து தமிழனின் ஒப்பற்ற வரலாற்றின் பாகங்களை சுமார் 90,000க்கும் மேற்பட்ட பழைமையான நூல்களாகவும், சிற்றிதழ்களாகவும், அரிய கடிதங்களாகவும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதற்காக தங்களது வாழ்நாளில் ஈட்டிய பொருளை எல்லாம் அதைப் பராமரிக்கக் கொட்டி கொடுத்து இருக்கின்றனர்.  

தங்களின் பணிக்காலம் முடிந்த பின்பு கிடைத்த ஓய்வூதிய பணத்தால் ஞானாலயா என்னும் மிகப்பெரிய, தமிழகத்தின் அளவில் இரண்டாவதும் அறிவில் முதலாவதுமான புத்தக சேகரத்தை புதுக்கோட்டையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

அரசினையும், அரசியல் தலைவர்களையும் அவர்கள் முட்டி மோதி இந்த மிகப்பெரிய நூலகத்திற்கு எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. 70 வயதுகளைக் கடந்திருக்கும் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் இதற்காக சில தனியார் நிறுவனங்களை அணுகியபோது அவர்கள் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் தங்களின் வியாபார நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி திட்டமாக முன் வைத்திருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தின் பெருமைகளை எல்லாம் நம் சந்ததிகள் கற்றறிய வேண்டும் என்ற பெரு நோக்கில் புத்தகங்களை சேகரித்து இன்று மலை போல அறிவினை நூல்களில் குவித்து வைத்திருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் நோக்கம், இந்த மிகப்பெரிய நூலகத்தின் பயன்பாடுகள் சாதாரண பொதுமக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே! அதோடு மட்டுமில்லாமல் நூலகத்தின் பயன்பாடுகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாய்ப் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வர்த்தக ரீதியாய் வந்த உதவிகளை எல்லாம் மறுத்தும் விட்டார்கள்.

புதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புற ஊர்களும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் சூழப்பட்டது. தமிழுக்கு அரும் தொண்டாற்றியுள்ள இச்சமூகத்தார் இருக்கும் இடத்திலேதான் தமிழகத்தின் மிகையான பதிப்பகங்கள் இருந்தது என்று நினைவு கூறும் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள், வெள்ளைக்காரன் காலத்தில் புதுக்கோட்டை மட்டும் தனி சமஸ்தானமாக இருந்ததால் இங்கே காகிதத்துக்கு வரி விலக்கு இருந்ததாலும் நிறைய பதிப்பகங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

இதனை நினைவு கூறும் பொருட்டு மட்டுமில்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞானாலயா போன்ற மிகப்பெரிய புத்தக சேகரங்கள் இருந்தால் மிகையான வெளிநாடு வாழ் தமிழர்கள் வந்து போகும் இடமாக தென் தமிழகம் மாறுவதோடு,  இயற்கையாலும் வர்த்தகத்தாலும் பின் தங்கிப்போயிருக்கும் தென் தமிழகத்திலிருந்து அறிவுப்புரட்சி தொடங்கட்டும் என்ற பெரு நோக்கமுமே புதுக்கோட்டையில் ஞானாலாயாவைப் பிறப்பித்தது என்றும் கூறுகிறார்.



ஞானாலயாவில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் முதல் பதிப்பிலேயே ஐயா அவர்களால் வாங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யார் எந்த புத்தகம் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு புத்தகத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களையும், பின் புலங்களையும், பதிப்பிக்கப்பட்டபோது நிகழ்ந்த வரலாற்றையும் நம் கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறார் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள்.

தனி மனிதர்களால் உருவாக்கம் கொண்ட இந்த ஞானாலயாவால் பயன் பெற்றிருக்கும் அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இன்று வாழ்க்கையின் உயரத்தில் மிகப்பெரிய பிரபலங்களாய் ஆனதோடு ஞானாலயாவை மறந்து விட்டார்கள். விபரம் அறிந்த பெருமக்கள் அனைவரும் தெளிவாய் அறிவர். தமிழகத்திலேயே தமிழர் வரலாறு அறியவும், தொன்மையான விடயங்களை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெறவும் ஞானாலாயா என்னும் அறிவுக் களஞ்சியத்தை விட்டால் வேறு வழியில்லை என்று....

இருப்பினும் இந்த அரிய பொக்கிஷம் காலமெல்லாம் தலை நிமிர்ந்து நின்று தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்போதும் வழிகாட்டும் ஒரு அறிவுக் கோயிலாய் திகழ வேண்டும் என்ற பெரு விருப்பத்தை யாரும் கொண்டிருக்கவில்லை என்ற நிதர்சனத்தை நாம் வலியோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதன் விளைவே ஞானாலயாவை உருவாக்கிய கிருஷ்ண மூர்த்தி ஐயா இன்று தனது தள்ளாத வயதிலும் இந்த பெரும் பொக்கிஷத்தை காலத்தால் அழியாத காவியமாய் ஆக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

அ)  ஞானாலயாவிற்காக தங்களிடம் இருந்த பொருளை எல்லாம் கொட்டி இன்று கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் போதவில்லை மேலும் மேல் தளத்தில் இதன் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட வேண்டும். பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.. நம்மைப் போன்றவர்களை நம்பி....

ஆ ) ஞானாலயாவில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் தொகுத்து மின் புத்தகங்களாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். காகிதங்களில் அச்சிடப்பட்ட நூல்களில் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிந்து போய் விடும் அபாயம் இருக்கிறது அல்லவா?

இ) ஐயா. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒவ்வொரு பழந்தமிழ் நூல்களைப்பற்றியும், அவை சம்பந்தமான சுவாரஸ்யமான விவரங்களைப் ஒலிவடிவத்தில் பதிவு செய்து அவற்றையும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.

ஈ) நூலகத்தைப் பராமரிக்கவும், அங்கே பணி செய்யும் இரண்டு பணியாளர்களுக்கும் மாதா மாதம் ஊதியம் கொடுக்கப்படவேண்டும்.

 உ)  புத்தகங்களை மின்னேற்ற தொழில் நுட்பத்தில் தேர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் இதற்கு உதவ முன் வரவேண்டும். மேலும் மின்னேற்றுவதற்கு தேவையான கருவிகளையும் வாங்க வேண்டும்.

இப்படி பல கட்டங்களாய் விரிந்து கொண்டிருக்கும் இந்த அரிய பணியை செய்ய பணத்தேவை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. நம்மில் அத்தனை பேராலும் பெரும் பொருள் கொடுத்து உதவ முடியாது என்ற நிதர்சனத்தை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. நம்மால் என்ன இயலுமோ அதை நேரடியாய்க் கொடுக்கலாம் என்ற கோரிக்கையை வேண்டுகோளாய் உங்களிடம் வைக்கும் இந்த நொடியில்...

ஞானாலயா பற்றிய செய்தியை காட்டு தீயாய் தமிழ் பேசும் தமிழர்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற வேண்டுகோளினை நாங்கள் வலுவாக வைக்கிறோம். 



நாம் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரிடமும் ஞானாலயாவைப் பற்றி பேசுவோம், இப்படியான பேச்சுக்கள் சமூக நல ஆர்வலர்கள்,  புரவலர்கள், நல்லெண்ணம் கொண்ட தமிழ் நேசர்கள் அத்தனை பேரிடமும் செல்லும் போது அவர்கள் ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்து கொண்டு தங்களின் சுய தெளிவோடு உதவிகள் செய்வது தவிர்க்க முடியாததாய் போய்விடும்.

தமிழ்த் தாத்தா ஐயா. உ.வே.சா அவர்களை நாம் கண்டதில்லை ஆனால் ஐயா உ.வே.சா அவர்கள் அரும்பாடு பட்டு கரையான் அரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து அவற்றை புத்தகமாக்கி இருக்காவிட்டால் நாம் வாசித்தறிய மிகையான தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது. 

அந்த சூழ்நிலையின் சாயலைக் கொண்டதே இப்பணியும்..

நமது தமிழ்சமூகம் தொன்று தொட்டே தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம். கலை, இலக்கியம், பண்பாடு, வீரம் என்று நம் மூததையர்கள் வாழ்ந்த வரலாறுகளை நாம் எடுத்து வாசிக்கும் போது நமது அறிவு விசாலப்படுகிறது. .ஒப்பற்ற ஒரு சமூகத்தின் அங்கம் நாம் என்ற தன்னம்பிக்கையில் எட்ட முடியாத உயரங்களையும் நாம் எட்டிப்பிடிக்க முடியும்.

எந்த மொழியில் நாம் விபரங்களை விளங்கிக் கொண்டாலும், பிறப்பால் நமது உணர்வோடு கலந்துவிட்ட, உயிர் தாய்மொழியில் நமது தொன்மைகளை வாசித்து உணரும் போது பிறக்கும் உற்சாகம்...இந்த உலகை படைத்து அதை நாமே இயக்குகிறோம் என்ற இறுமாப்பினை ஒத்தது.

இணையத்தில் எழுத வந்து விட்டு, எத்தனையோ குழுக்களாய் பிரிந்து நின்று எது எதையோ நிறுவ நாம் போராடிக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி நாம் நமது கருத்துக்களைப் பகிர நம்மிடம் இருக்கும் தாய் மொழியாம் தமிழுக்கு, தமிழர் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணக்கிடக்கை உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாய் ஞானாலயாவுக்கு ஏதேனும் செய்யுங்கள்......

குறைந்த பட்சம் இந்த கட்டுரையின் கருத்துக்களை இணையத்திலும், இணையம் சாராத தமிழர்களிடம் கொண்டு சேருங்கள். நம்மால் முடிந்த அளவு நன்கொடை, அல்லது நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு உதவச் செய்தல் அவசியம். எந்த கட்சிக்காவும், மதத்திற்காகவும், சாதிக்காகவும், இல்லாமல் நாங்கள் தமிழுக்காய் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறோம்.....

எம் தாய்த் தமிழ் உறவுகளே...தமிழுக்காய் ஒன்று கூடுங்கள்....! 

ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;



ஞானாலயாவிற்கு பொருளதவி செய்ய;

வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
Branch Code: 000112

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

மேலும் ஞானாலயாவுக்காக தொடர்ச்சியாக இயங்கப்போகும் கழுகோடு கரம் கோர்க்க கழுகிற்கு (kazhuhu@gmail.com) தகவல்களை மின்னஞ்சல் செய்யவும். உங்களின் ஆதரவினைப் பொறுத்து ஞானாலயாவிற்கு என தனி வலைப்பக்கம் துவங்க உத்தேசித்து தொடங்கியும் விட்டோம்...அதில் எல்லோரும் பங்கு பெரும் அளவில் செய்ய இருக்கிறோம்...உங்களின் மேலான ஆதரவினை தாருங்கள். நன்றி.

ஞானாலயா வலைப்பக்கம் லிங்க் - http://gnanalaya-tamil.blogspot.in/ 
                                                               * * * * *

பின் குறிப்பு 

கழுகு இணைய தளத்தின் பதிவை இங்கே பதிவிட்டதில் மகிழ்கிறேன்...பதிவிட அனுமதி கொடுத்த கழுகிற்கு என் நன்றிகள். நல்லனவற்றை தேடி பிடித்து வெளிக்கொண்டு வரும் கழுகிற்கு என் பாராட்டுகள்...!

கட்டுரை உதவி - கழுகு 

Tweet

18 கருத்துகள்:

  1. நல்ல பணி. கழுகுக்கும் கழுகின் பதிவை கொடுத்த அன்பு சகோதரி உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
    முடிந்ததை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.!

    பதிலளிநீக்கு
  3. ஞானாலயாவிற்கு என தனி வலைதளம் ஒன்று உருவாக்கி இருக்கிறோம். அதில் ஆர்வமுடையவர் அனைவரையும் பங்கெடுக்கும் வகையில் மாற்ற விருப்பம் சகோ :)

    http://gnanalaya-tamil.blogspot.in/

    தங்களின் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  4. @@ நிகழ்காலத்தில் சிவா said...

    //ஞானாலயாவிற்கு என தனி வலைதளம் ஒன்று உருவாக்கி இருக்கிறோம். அதில் ஆர்வமுடையவர் அனைவரையும் பங்கெடுக்கும் வகையில் மாற்ற விருப்பம் சகோ//

    தகவல் தெரிவித்ததுக்கு நன்றி சிவா. நீங்க கொடுத்த லிங்க் பதிவில் இணைத்து விட்டேன்.

    ஆர்வமுடையவர்கள் நிறைய இருக்கிறார்கள் அவசியம் பங்கேற்பார்கள்...அதற்கேற்ற விதத்தில் மாற்றலாம்...

    என் பங்கை கண்டிப்பாக கொடுப்பேன்.
    இது நம் கடமை.

    வாழ்த்துக்கள் சிவா.
    :)

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவினை ஏற்கனவே படித்த ஞாபகம் கழுகில் தானா என்று புரியவில்லை..//

    நல்ல முயற்சி தொடர வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  6. கழுகு பதிவில் நானும் படித்தேன் மறு மொழியும் எழுதி யுள்ளேன் அவசியம் உதவுவேன் நன்றி! சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா6:50 PM, ஜூன் 26, 2012

    நல்ல முயற்சி...
    கழுகுக்கும் உங்களுக்கும் நன்றி...

    I will try to spread the word...

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான முயற்சி.......தொடர்க!

    பதிலளிநீக்கு
  9. நல்ல பணி. கழுகுக்கும் கழுகின் பதிவை கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தொடரட்டும் உங்கள் சீரிய பணி. வாழ்த்துக்களுடன் நன்றிகளூம்.

    பதிலளிநீக்கு
  11. @@ Bhuvaneshwar said...

    //முடிந்ததை செய்கிறேன்//

    உங்களால் முடியும் என்பது எனக்கு தெரியும். செய்யுங்கள்.

    நன்றி புவனேஷ்

    :)

    பதிலளிநீக்கு
  12. @@ வரலாற்று சுவடுகள்...

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. @@ சிட்டுக்குருவி said...

    //இந்த பதிவினை ஏற்கனவே படித்த ஞாபகம் கழுகில் தானா என்று புரியவில்லை..//

    அங்கே படித்திருக்கலாம்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. @@ புலவர் சா இராமாநுசம் said...

    //கழுகு பதிவில் நானும் படித்தேன் மறு மொழியும் எழுதி யுள்ளேன் அவசியம் உதவுவேன் நன்றி!//

    மிக்க நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  15. @@ ரெவெரி said...

    //I will try to spread the word...//

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  16. @@ சே. குமார்...

    நன்றி குமார்.

    ***

    @@ FOOD NELLAI...

    நன்றிகள் அண்ணா.
    :)

    பதிலளிநீக்கு
  17. நல்ல விஷயம்...!!

    ஆனால்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பதியப்பட்டிருக்கிறது.
    கொஞ்சம் பாருங்கள்.

    http://www.surekaa.com/2010/02/blog-post_18.html

    நாங்கல்லாம்..... !! :))

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...