வெள்ளி, ஜூன் 22

AM 11:57
13

பதிவர் வவ்வால் அவர்கள் வீட்டுத் தோட்டம் பதிவில் நான் சொல்லியிருந்த கீரை வளர்ப்பதற்கான எளிய வழிமுறையினால் நீர் கசிவு ஏற்படும், தளம் பாதிக்கப்படும் என்று பின்னூட்டத்தில் கூறி இருந்தார். அத்துடன் தொடர்ந்து துணை பதிவு ஒன்றும் (பசுமை மாடி - வீட்டுத்தோட்டம் ) எழுதி இருந்தார். கடந்த ஒரு வாரமாக என்னால் இணையம் வர இயலாத சூழ்நிலை. அதனால் உடனே வாசித்து பதில் சொல்லமுடியவில்லை. அப்பதிவில் மிகவும் விளக்கமாக எல்லா நுணுக்கங்கள்  பற்றியும் விரிவாக தெளிவாக எழுதி இருந்தார். உபயோகமான நல்ல பல தகவல்கள். அப்பதிவை பற்றி சொல்லும் முன் ஒரு சிறு தன்னிலை(வீட்டுத் தோட்டம் தொடரை குறித்த) விளக்கம்...

ஆர்வமின்மை 

தோட்டம் போடுவது என்பது அக்ரி படித்தவர்கள் , விவசாயம் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்டது, அவர்களுக்கு தான் தெரியும் நமக்கும் இதுக்கும் ஒத்துவராது என்பதே பலரின் எண்ணம்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூட முயற்சி செய்து பார்ப்பது  இல்லை. சுலபம் இல்லை மிகவும் கடினம் என்று தெரிஞ்சவங்க சிலர் என்னிடம் கேட்கிறப்போ 'என்னடா இது சோதனை' என்பது போல இருக்கும்...எங்க வீட்டு தோட்டத்துல ரோஜா செடிகள் நிறைய பூ பூக்கும் அதை பார்க்கிறவங்க 'உன் கை ராசி, அதுதான் இப்படி, நானும் எத்தனையோ வச்சு பார்த்துட்டேன் ஒரு பூவோட நின்னுடுது'னு சொல்வாங்க...அவங்களுக்கு பொறுமையா சில நுணுக்கங்களை சொல்வேன். மொத்தமா எல்லாம் கேட்டு விட்டு 'நீ என்னதான் சொல்லு, இதுகெல்லாம் ராசி வேணும்'...!!?? மறுபடியும் முதல்ல இருந்தான்னு எரிச்சல் வரும்.

இப்படி நம்மில் பலரும் ஒவ்வொன்னுக்கும் ஏதோ சில சமாளிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கிறோம்...தோட்டத்தை பொறுத்தவரை செய்து பார்ப்போமே, அதன் நெளிவு சுளிவுகளை கத்துக்கணுமேன்னு முயற்சி பண்றதே இல்ல. பணம் சம்பாதிக்க காட்டும்  ஆர்வம், முயற்சிகள் இதில் சிறிதும் இல்லை. உடம்பிற்கு ஏதும் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய தயங்காத நாம் இதற்கு மிகவும் யோசிப்பது சரியில்லை. தோட்டம் போடுவது என்பது நம் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது...!! உடல்நலத்துடன் மனநலமும் பேணப்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  இதில் ஆர்வம் வரணும், இனியும் அசட்டையாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்தவே தான் இந்த வீட்டு தோட்டம் தொடரே எழுதத் தொடங்கினேன். 

ஆர்வம், அக்கறை வர வைத்துவிட்டால் போதும், இதில் இருக்கும் சாதக பாதகங்களை அவங்களே புரிஞ்சிப்பாங்க. கூகுள்ல தட்டினா வந்து விழும் பல தகவல்களை விட அனுபவத்தில் பெற்றதை சொல்லும் போது " அட இவ்வளவுதானா மேட்டர், நாமும் செஞ்சு பார்த்தால் என்ன?" என ஒரு ஆர்வம் வந்துவிடாதா என்கிற ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கையில் எழுதுகிறேன். படிக்கும் ஒருவர் இரண்டு பேர் முயன்றால் கூட போதும் என்கிற விருப்பம் காரணமாகவே எளிமையாக பெரிய மேற்கோள்களை காட்டாமல் எழுதுகிறேன்.

அரிசி மண்ணுக்கு மேலா, அடியிலா என்பது தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத தலைமுறையினருக்கு நடுவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மில் பலரும் விவசாய பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விவசாயத்தை வெறுக்கிற, அதன் மேல் பற்று இல்லாதவர்களாக இருக்கிறோம். இது நல்லதுக்கல்ல. வீட்டில் தோட்டம் போடுவதின் மூலமாக இயற்கையுடன் நம்மை பிணைத்து கொள்ளமுடியும். இயந்திரங்களின் துணையுடன் வாழும் வாழ்க்கைக்கு நடுவில் கொஞ்சம் பசுமையுடன் வாழ்ந்து மனதை மென்மையாக்கி கொள்வோம்.

'இது செடி, இதுதாங்க மண், இதில் நட்டுவிட்டால் போதும்' என்று சொல்வதற்கு பல இணைப்புகள் கூகுளில் இருந்தாலும் ஆர்வம் இல்லாதவர்கள் எப்படி தேடி போவார்கள்...?! நிச்சயம் போக மாட்டார்கள்...அவர்களை தேட வைக்கணும்...தேடி கண்டடைந்த பின்னர் முயற்சி செய்து பார்க்கலாம்...பலன் கிடைத்ததும் புது புது நுணுக்கங்களை அவர்களாகவே கண்டு பிடிப்பார்கள்...பின் செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்...ஒரு முறை தோட்டம் போட்டு அதன் மகத்துவத்தை அனுபவித்து விட்டார்கள் என்றால் இறுதிவரை விட மாட்டார்கள். மரம், செடிகளுடனான காதல் இன்பம் எத்தகையது என்பதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும் !! மீளவே முடியாத போதை அது !! 

ஒகே, இப்ப நேரா விசயத்துக்கு வரேன்...அப்ப இதுவரை சொன்னது விசயமே இல்லையானு கேட்ககூடாது :)

ஆர்வத்தை கொண்டுவருவது முதல் படி என எண்ணியதால் சில வரிகளில் மட்டும் முடித்துக்கொண்டேன்...தொடராக எழுத போவதால் ஒவ்வொன்றை பற்றியும் தனித்தனியாக மேலும் பல தகவல்களை சேர்த்து எழுதுகிறேன். 

தோட்டக்கலை பொறுத்தவரை நாள்தோறும் ஏதாவது புது புது முறைகள்  வரும், போகும். வீட்டுத்தோட்டத்தில் அவரவர் கிரியேடிவிட்டிக்கு  தகுந்த மாதிரி கண்டுபிடித்து செய்து கொண்டே போகலாம்...சட்டதிட்டங்கள் இருக்குமோனு யோசிச்சிட்டே இருக்ககூடாது...சில விதங்கள் இப்படி இருந்தால் நல்லது என வழி  காட்ட முடியும் அவ்வளவே. அடிப்படை தேவையான மண், நீர், விதை இவற்றை வைத்து இருக்கிற இடத்திற்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ள வேண்டியது தான்.

முன்னாடி எல்லாம், மொட்டை மாடியில் தொட்டிகள் வைத்தால் ரூப் கனம் தாங்காமல் இறங்கிவிடும்(சேதமாகி விடும்) என்று கூட பயந்திருக்கிறோம் ??! :) 

மாடியில் கீரைத்தோட்டம் போடுவதில் சிறந்தது  என்பது கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்கை/விரிப்பை சரியான விதத்தில் பயன்படுத்துவதில் இருக்கிறது. தென்னை நார் கழிவை அடியில் பரவலாக விரிக்கலாம்...நீரை உறிஞ்சி வைத்துகொள்ளும்...மண்ணில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்...அதிகபடியான நீர் வெளியேறவும் செய்யாது...தொட்டியில் செடி வைக்கும் போதும் இதை பயன்படுத்தி கொண்டால் நல்லது. தினம் தண்ணீர் ஊற்றவேண்டுமே என கவலை படவேண்டாம்.3 அல்லது 4 நாள் வரை தாங்கும்.

திரு வின்சென்ட் சார் அவர்களின் இந்த பதிவும், காணொளியும் உங்களுக்கு மாடியில் கீரை பயிரிடுவதை பற்றிய ஒரு தெளிவினை/புரிதலை கொடுக்கும்.

மாடியில் கீரை வளர்ப்பு - லிங்க் சென்று பார்க்கவும்.

http://youtu.be/s5gXutQws8E


'வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்' என்று வலியுறுத்துகிறது வின்சென்ட் சாரின் இந்த  Powerpoint Presentation. அவசியம் பாருங்க...

 http://www.authorstream.com/Presentation/vincent2511-607128-home-garden/

மொட்டை மாடியில் கீரைத் தோட்டம் அமைக்க

"ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது." - வவ்வால் 
கழிவு நீர் சுத்திகரிக்கும் முறை,தொழு உரம் தயாரிப்பது என்பதை குறித்து விரிவாக பதிவிட்டதையும் அவசியம் படிங்க...

(காய்கறி கொடி பந்தலின் கீழே கீரை வளர்ப்பதை போல் அமைத்து கொள்வது நன்று)

பதிவர் வவ்வால் அவர்களுக்கு,

உங்கள் பின்னூட்டத்துக்கும் துணை பதிவுக்கும் முதலில் என் நன்றிகள். 

எனது பதிவை ஊன்றி படித்து அதில் தங்கள் பார்வையில் குறையாக தெரிந்ததை பின்னூட்டத்தில் குறிப்பிட்டதோடு அல்லாமல் விரிவான விளக்கம் கொடுக்கவேண்டும் என தனி பதிவு எழுதிய உங்களுக்கு  என் பாராட்டுகள். 

அதிலும் துணை பதிவு என்று குறிப்பிட்டது என் கவனத்தை மிக ஈர்த்தது...(எனக்கு தெரிந்ததெல்லாம் எதிர்பதிவு?!) :) இச்சமயத்தில் எதிர்பதிவுகள் எழுதிய சகோதர, நண்பர்கள் என் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பதிவின் கருத்தை குறித்த விமர்சனத்தை விட எழுதியவரை பற்றிய கடும்விமர்சனத்தை தான் இதுவரை பார்த்திருக்கிறேன். அத்தகையோரை பற்றி மட்டும் தெரிந்த எனக்கு வவ்வால் அவர்களின் துணை பதிவை படித்து ஆச்சர்யம் ஏற்பட்டது ! சக மனிதரை மதிக்கக்கூடிய இந்த பண்பை கற்றுக்கொள்ளவேண்டும் நான் உட்பட...பதிவில் இருக்கும் குறைகளை(?) சுட்டிக்காட்டுகிறேன் என்ற போர்வையில் தனிமனித தாக்குதல் நடத்தும் பதிவுலகத்தில் நாகரீகமான இவரது அணுகுமுறையை எண்ணி உண்மையில் மகிழ்கிறேன். ஒருவருக்கொருவர் நல்ல கருத்துக்களை, நிறை குறைகளை பரிமாறும் ஆரோக்யமான நிலை தொடர இவரை போன்றோர் இருக்கிறார்கள் என்ற மன நிறைவுடன் இப்பதிவை முடிக்கிறேன். 

கௌசல்யா  

தகவல்,படங்கள் உதவி 
நன்றி வின்சென்ட் சார் 

Tweet

13 கருத்துகள்:

  1. நல்ல விஷயம் தொடருங்கள்

    பதிவர் வவ்வால் இந்த பதிவை படிக்கும் போது மிக மகிழ்வார்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் படங்கள், தோட்டத்தின், ஒழுங்கையும் அழகையும் நன்றாக காட்டுகின்றன.
    மிக அக்கறையுடன், வளர்ப்பது தெரிகிறது.

    அந்த பச்சை நிற பைகள் எங்கே கிடைக்கின்றன?
    எங்கள் ஊரில் கிடைப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு.
    தோட்டம் தொடரட்டும்.
    துணைப் பதிவிட்ட திரு. வவால் அவர்களுக்கு நீங்கள் பகிர்ந்த இந்தப் பகிர்வு கண்டிப்பாக சந்தோஷம் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  4. கவுசல்யா,

    வணக்கம், முதலில் நன்றியை சொல்லிடுறேன்.

    நல்லா இருந்தால் நல்லா இருக்கு என்றும், இல்லைனா இல்லைனும் பிளைனாக சொல்லிவிடுவேன்,அதனாலே நிறைய பேருக்கு என் மேல செம காண்டு. நல்ல வேளை நீங்கள் அப்படி நினைக்காமல் நேர்மறையாக எடுத்துக்கொண்டீர்கள்.

    நீங்க சொல்ல வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் சொல்லிட்டிங்க , விடுபட்ட சில விஷயங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்,அப்போ துணைப்பதிவு தானே :-))

    உங்கள் பதிவு தேவையான ஒன்று ,அப் பதிவுக்கு ஏதோ எனக்கு தெரிந்ததையும் சேர்த்து சொன்னேன்,அவ்வளவே.

    நான் அடிக்கடி குறைக்கண்டுப்பிடிக்கிறேன் அதனால் மக்கள் எல்லாம் நொந்துப்போய்விட்டதாக ஒரு பதிவர் சொல்லி இருக்கார், நீங்க என்னவென்றால் பாராட்டிக்கிட்டு இருக்கிங்க :-))

    பெருந்தன்மையுடன் ஒரு பதிவிட்டு இருக்கிங்க, நன்றி!
    -------

    மோகன்,

    இங்கேயும் வருவிங்களா, உமக்கு ரெண்டு துணைப்பதிவு போட்டிருக்கேன் சாமி, அதுக்கு எப்பவாது இப்படி சொல்லி இருக்கீரா:-))

    நல்ல விஷயம்னா கத்துக்கணும் ஓய்!

    -----
    சே.குமார்,

    சண்டைக்கு வராமல் சரியாக புரிந்துக்கொண்டு இருப்பதே மகிழ்வாகவே இருக்கு.
    ---------

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு.எங்கள் மொட்டை மாடி ரொம்ப வருடங்க்காளக மொட்டையாகவே இருக்கிறது;(

    வீட்டைக் சுற்றி நிறைய வகைக் செடிகள் வைத்திருக்கிறார். இதையும் முயற்சி செய்கிறேன். நன்றிமா.

    பதிலளிநீக்கு
  6. @@ மோகன் குமார்...

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. @@ Vetrimagal said...

    //மிக அக்கறையுடன், வளர்ப்பது தெரிகிறது.அந்த பச்சை நிற பைகள் எங்கே கிடைக்கின்றன?//

    இந்த படங்கள் வின்சென்ட் சார் அவர்களால் எடுக்கப்பட்டவை.
    http://maravalam.blogspot.in
    இந்த பை HDPE என்ற பொருளால் ஆனது,கடையில் வாங்கி தனது வசதிக்கு ஏற்றதுபோல் தயார் செய்திருக்கிறார்.

    மட்காத கடின வகை பிளாஸ்டிக் விரிப்பு/பை போல் கிடைத்தால் செய்து பாருங்கள்.

    நான் கொடுத்திருக்கும் லிங்கில் சென்று பார்த்தால் மேலும் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும்.

    ...

    வருகைக்கு மகிழ்கிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. @@ சே. குமார் ...

    மிக்க நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  9. @@ வவ்வால் said...

    வணக்கம்.

    // நல்ல வேளை நீங்கள் அப்படி நினைக்காமல் நேர்மறையாக எடுத்துக்கொண்டீர்கள்.//

    சொன்னவிதம் விதம் நன்றாக இருந்தது. பதிவின் நோக்கத்திற்கு துணை புரிந்தது என்பதால் மகிழவே செய்தேன்.

    //விடுபட்ட சில விஷயங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்,அப்போ துணைப்பதிவு தானே :-))//

    உண்மைதான். துணை பதிவு என்றது எனக்கு வித்தியாசமாக இருந்தது...பிடிச்சது.

    தோட்டம் பற்றிய தொடரும் பதிவுகளில் இன்னும் சிரத்தை எடுத்து எழுத முயலுகிறேன்...குறைகள் அல்லது விடுபட்டது இருப்பின் நேரம் கிடைக்கும் போது தெரிவியுங்கள், சரி செய்து கொள்கிறேன்...

    மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. @@ வல்லிசிம்ஹன் said...

    //எங்கள் மொட்டை மாடி ரொம்ப வருடங்க்காளக மொட்டையாகவே இருக்கிறது;(//

    அப்படி மொட்டையாக விட்டுட கூடாதுன்னு தான் இந்த பதிவே. :)
    உடனே வேலையில் இறங்குங்கள், விரைவில் மாடி தோட்டத்தின் புகைப்படம் வரும் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு தோட்டம் அமைக்க உந்துதல்

    பதிலளிநீக்கு
  12. மாடியில் கீரை வளர்ப்பு லிங்கில் போய் பார்த்தேன்,அப்பாப்பா எவ்வளவு தகவல்கள் தேங்காய் நார் மட்டையில் இவ்வளவு சிறப்பா...லிங்கிற்கு நன்றி தோழி!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...