செவ்வாய், மார்ச் 27

AM 10:34
31



'தமிழ் நாட்டில் மக்கள் இருக்காங்களா ?' 'இருக்கிறார்கள்...' அப்புறம் 'அவங்க எப்படி இருக்கிறார்கள் ?' 'நோ, இந்த கேள்வி கேட்கபடாது...' கேட்டால் நாங்கள் நடை பிணங்களாக இருக்கிறோம் என பதில் சொல்ல வேண்டி வரும்...! உடனே அடடா அப்படியானு கேட்டு வருந்தி பிரச்சனைய தீர்க்க போறீங்களா என்ன...? யார் நினைச்சாலும் ஒண்ணையும் ஒண்ணும் பண்ண முடியாது...போறபோக்குல என்னை மாதிரி புலம்பிட்டு போக மட்டும் தான் இப்போதைக்கு முடியும். வாட்டி வதைக்கும் மின்சார வெட்டில் ஓரவஞ்சனை பண்றதை தாங்க பொறுத்துக்க  முடியல...!! ஒற்றுமையில் வேற்றுமையை வளர்க்கிறது மின்சார வெட்டு...!!

இதற்கு முந்தைய ஆட்சியில் 4 மணி நேரம் மட்டும் என்ற கணக்கில் எடுத்தார்கள்...ஒரு ஒழுங்கு இருந்தது...ஆனால் இப்போது ஒரு வரைமுறை இல்லை, இஷ்டபடி தடை செய்கிறார்கள். ஒருவேளை முன்னாடி ஆண்டவங்க கஜானாவோடு சேர்த்து , கரண்டையும் காலி பண்ணிட்டு போய்ட்டாங்களா ?!! 
9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை எடுக்கிறார்கள். 

நாளைய  சே குவேராக்கள் , பாரதிகள் , கட்டபொம்மன்கள், குமரன்கள், வாஞ்சிநாதன்கள், ஜான்சி ராணிகள் போன்றவர்கள் எல்லாம் தற்போது இருட்டறையில்...?! 

இரவு நேர அவலம்...

பகலை ஓரளவு சமாளித்துவிடும் மக்கள் இரவு வந்தாலே கிலி பிடித்தது போலாகி விடுகிறார்கள்...மாலை 6.30 இருந்து மின் வெட்டாட்டம்  தொடங்கி விடிய விடிய நடக்கும்...! ஒரு மணி நேரம் மின்சாரம் இருக்கும் அடுத்து ஒரு கட், அரை மணி நேரம் இருக்கும் அடுத்து ஒரு கட்......இப்படியே விடியும் வரை தெளிய வச்சி தெளிய வச்சி...ம்...என்னத்த சொல்ல (மின்சாரம் இருக்கும் போது தூங்கியும், போனதும் எழுவதும் என நடக்கும் போராட்டத்தில் சோர்ந்து மூணு மணிக்கு மேல அசந்து தூங்கி விடுவதால் அப்போது மின் தடை செய்ய பட்டாலும் தெரியாது ) தொடர்ச்சியான தூக்கம் இல்லாமல் காலையில் எழுந்திரிக்க இயலாமல் படு சோர்வாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு உடல், மன ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பது சர்வ நிச்சயம் !

ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் மறுநாள் வேலைகளை எவ்வாறு கவனிப்பது ? கண்கள் எரிய, உடம்பு சோர்ந்து மந்த நிலையில், உற்சாகமின்றி ஒருவித நோய் பீடித்த நிலையில் தவிக்கும் நடுத்தர ஏழை குடும்பங்கள் !

எல்லா மருத்துவமனைகளிலும், எக்ஸ்ரே , ஸ்கேன் சென்டர்களில் ஜெனெரேட்டர் வச்சிருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அவசரத்திற்கு இவைகளின் உதவி எந்த அளவிற்கு இருக்கும் என தெரியவில்லை. ஒரு சில மருந்து பொருட்கள் வைக்கபட்டிருக்கும் குளிர்சாதன பெட்டிகள் மின் தடையினால் முழு அளவில் பாதுகாப்பு கொடுக்குமா? சந்தேகம் தான்...!

தூக்கம் கெடுவதால்,


அதிகம் பாதிக்கபடுவது பள்ளி, கல்லூரி  மாணவ மாணவிகள் தான். இரவில் படிக்க இயலாதது ஒரு பக்கம் இருந்தாலும், சரியான தூக்கமும் இல்லாமல் மறுநாள் பரிட்சையை எதிர்கொள்ளும் போது சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக கண் எரிச்சல், தலைவலி போன்ற சிறு உபாதைகள்...!

வயதான பெரியவர்கள் பொதுவாகவே தூங்குவது சிரமம். இப்போதோ அவர்களின் நிலை மிக பரிதாபம். சொல்லவும், சமாளிக்கவும் இயலாமல் உடல்நிலை குறைவுற்று மருத்துமனை நோக்கி தள்ளபடுகிறார்கள்...

கைகுழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் படும்பாடு அவர்களுக்கே வெளிச்சம்...!! நடு இரவில் மின்சாரம் போனதும் வீறிட்டு எழும் குழந்தைகளை சமாளிப்பது மிக கஷ்டம்...காற்று இல்லாமல் பேப்பர், விசிறி போன்றவற்றால் கை வலிக்க காற்று வீசியே தன் குழந்தைகளை தூங்க வைக்கிறாள் தாய்...

ஒரு முறையும்
தன் புறம்
திருப்ப மாட்டாள்
விசிறியை...
குழந்தை உறங்க
வியர்வையில்
புழுங்கிக்
கொண்டிருக்கிறாள்
தமிழக தாய்...!

வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என அனைவரையும் படுத்தி எடுக்கிறது மின்தடை !!

சென்னைக்கு மட்டுமேன் இந்த முக்கியத்துவம்...?!

மாநிலத்தின் பிற மாவட்டங்களின் நிலை இவ்வாறு இருக்க சிங்கார சென்னையில் மட்டும் 2 மணி நேர மின் தடை...!!??? ஏன் இந்த ஓரவஞ்சனை ?அங்கே இருப்பவர்கள் மட்டும் தான் மக்களா ?! பிற மாவட்ட முதியோர்கள், குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள்  எல்லோரும் சபிக்க பட்டவர்களா??

இந்த வருடம் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், மதிப்பெண் விகிதம் தென் மாவட்டங்களில் குறையும்...சென்னை மாணவர்கள் மட்டும் முன்னணியில் இருப்பார்களோ...?! 

தமிழ் நாட்டின் தலை நகரம் என்பதும்,அரசு அலுவலகங்கள் மற்றும்  மல்டி நேசனல் கம்பெனிகள், சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை இருக்கும் இடம் என்பதாலா? அந்த கம்பெனிகள் நிம்மதியாக மின்சாரம் உபயோகிக்க பிற மாவட்ட தொழில் நிறுவனங்கள் , விவசாயம் நலிந்து போகணுமா?

இந்த கோடை விடுமுறைக்கு தென்மாவட்டங்களுக்கு சென்னை மக்கள் வர தயங்கும் அளவிற்கு மின் பிரச்சனை இருக்கிறது...ஒரே மாநிலத்துக்குள் ஒதுக்கபட்டுவிட்டன பிற மாவட்டங்கள்...மாவட்டங்களுக்கிடையே பிரித்தாளும் போக்கை வளர்க்கும் இது போன்ற நிலை வருத்தத்திற்குரியது...


ஒரு நாட்டை, மக்களை மாட்டு மந்தைகளாக மாற்ற வேண்டுமென்றால்  முதலில் அவர்களின் சிந்திக்கும் திறனை முடக்கி போட்டாக வேண்டும்...இத்தகைய மழுங்கடிக்கும் வேலையை இது போன்ற மின் வெட்டுகள் மிக சரியாக செய்துவிடும் என்பது மட்டும் நல்லா புரியுது...!

இப்படி பகலிலும் ஒழுங்கா செயல்பட முடியாமல் இரவிலும் நன்றாக ஓய்வெடுக்க முடியாமல் சோர்ந்து போன தமிழா, "உனக்கு ஒரு பிரச்சனை என்றால் எவ்வாறு புரட்சி செய்வாய் ? எப்படி போராடுவாய் ?!" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ஒரு ஓரமா காற்றோட்டமான மரத்தடி நிழல்ல ஒரு பாய விரிச்சு படு...அப்படியே மெல்ல கண்ணை மூடு...! நாடு சுபிட்சம் அடைந்துவிடும் !!

கூடங்குளம் தேவை ?!!

இந்த மின்தடை மக்களின் மனதில் வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் , "கூடங்குளம் அணு உலையை திறந்தால் தான் என்ன ?" என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. அங்கே நடைபெறும் போராட்டம் இங்கே இருக்கும் சில மாவட்டங்களின் பிரச்சனை என்பதை போலவும், எல்லோருக்காக நடப்பது இல்லை என்பது போலவும் புரிந்துகொள்ள பட்டிருக்கிறது...அணு உலையினால் நன்மையா, கேடா என சிந்திக்க கூடிய தன்மையை இந்த மின்தடை கெடுத்து ஒரு குழப்பநிலையில் வைத்திருக்கிறது. மக்களின் இந்த குழப்பநிலை ஆட்சியாளர்களுக்கு சாதகம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

 சரி செய்தே ஆகவேண்டும்

சென்னைக்கு மின்தடை அதிக நேரம் இருப்பது சரி இல்லை என ஆயிரம் காரணங்கள்(?!) சொல்லபட்டாலும், பாரபட்சமின்றி எங்கும் ஒரேவிதமான மின்தடை என்பதே ஏற்புடையதாக இருக்கும் என்பதே சாமானிய மக்களின் எண்ணம்.

சென்னைக்கு தற்போது வழங்கி வரும் 22 மணி நேர மின்சாரத்தை குறைத்து பிற இடங்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும்...ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் ஒரே விதமான மின்தடை நேரம் என ஒதுக்க வேண்டும்...எங்கும் 4 அல்லது 5 மணி நேர தடை என முறை படுத்தினால் பிற மாவட்ட மக்களும் சற்று தங்களை ஆசுவாசபடுத்தி கொள்வார்கள்...! தொழில் நிறுவனங்கள், விவசாயம் பிரச்சனையின்றி நடைபெறும்...தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா !?

* * * * * * * * *

வேறு திசைக்கு திருப்பி விடப்பட்ட கூடங்குளம் போராட்டம் ?! அடுத்த பதிவில்...

* * * * * * * * *

படங்கள் - நன்றி கூகுள்


Tweet

31 கருத்துகள்:

  1. ஆஹா... சென்னை மக்கள் 2 மணி நேர மின்வெட்டுக்கே புலம்பறாங்க. இன்னும் நிறைய நேரம் மின் வெட்டணுமாங்க..?

    பதிலளிநீக்கு
  2. @@ கணேஷ் said...

    //ஆஹா... சென்னை மக்கள் 2 மணி நேர மின்வெட்டுக்கே புலம்பறாங்க. இன்னும் நிறைய நேரம் மின் வெட்டணுமாங்க..?//

    10 - 12 மணி நேர மின்வெட்டை அனுபவிக்கிற நாங்க பாவம் இல்லையா கணேஷ் ? :)

    பதிலளிநீக்கு
  3. ஏங்க இது என்ன நல்ல கதையா இருக்கே உங்களுக்கு கரெண்ட் வேணும் கேளுங்க அதுல ஒரு ஞாயம் இருக்கு....

    அதை விட்டுட்டு சென்னைக்கு இன்னும் கரெண்ட் போகணும் சொல்றது சரியா..??

    எனக்கு ஒரு கண்ணு போயிருச்சு அவனுக்கும் ஒரு கண்ணும் போகணும் சொல்ற மாதரி இருக்கு..!!

    நீங்க இப்படி புலம்பி புலம்பி தான் சென்னைக்கு 2 மணி நேரம் பவர் கட் ஆகிருச்சு....

    பதிலளிநீக்கு
  4. ///நாளைய சே குவேராக்கள் , பாரதிகள் , கட்டபொம்மன்கள், குமரன்கள், வாஞ்சிநாதன்கள், ஜான்சி ராணிகள் போன்றவர்கள் எல்லாம் தற்போது இருட்டறையில்...?! ///

    நாளைய சேகுவேராக்கள், பாரதிகள், ஜான்சிராணிகள் எல்லாம் இங்கு இல்லவே இல்லை. நாளைய என்ஜினியர்கள், டாக்டர்கள், இதர அடிமைகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சுருக்கமாக சொல்லப் போனால் நாளைய அடிமைகள் இன்று இருட்டில் தவிக்கிறார்கள் என்று சொல்லலாம்...

    சென்னையிலும் 4 மணி நேரம் மின்வெட்டு செய்ய ஆலோசித்து வருகிறார்கள்... விரைவில் இது அமலுக்கு வரலாம்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்துவிட்டால் மட்டும் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்று யோசியுங்கள்... வாய்ப்பே இல்லை.

    இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மின்திட்டங்கள் எதையும் சமீபகாலமாக அறிவிக்காமலே போய்விட்டார்கள்.

    வீட்டில் சாதனங்களை வைத்து சூரிய ஒளியில் எடுக்கப்படும் மின்சாரத்தை ஒரு வீட்டில் பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கும் மின்சாரத்தை பயன்படுத்தும் தேவை குறையும். அந்த சாதனங்களை வாங்க மானியமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கலாமே செய்தார்களா...? இல்லையே...

    மொத்தத்தில் காசு வாங்கிவிட்டு ஓட்டு போடும் கூட்டம் இருக்கும்வரை தலைவன் (கேவலம் இவர்களை தலைவன் என்றே சொல்ல முடியாது...) என்ன சொன்னாலும் ஜால்ரா அடிக்கும் கூட்டம் இருக்கும் வரை இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான்...

    பதிலளிநீக்கு
  5. @@ சௌந்தர் said...

    //ஏங்க இது என்ன நல்ல கதையா இருக்கே உங்களுக்கு கரெண்ட் வேணும் கேளுங்க அதுல ஒரு ஞாயம் இருக்கு....//

    ஆமாம் வேணும்னு கேட்டா உடனே கொடுத்திட போறாங்க... :)

    //அதை விட்டுட்டு சென்னைக்கு இன்னும் கரெண்ட் போகணும் சொல்றது சரியா..??

    எனக்கு ஒரு கண்ணு போயிருச்சு அவனுக்கும் ஒரு கண்ணும் போகணும் சொல்ற மாதரி இருக்கு..!!//

    இரண்டு கண்ணும் போகனும்னு சொல்லல...தமிழகம் முழுவதும் ஒரே விதமான மின்தடை அமல்படுத்தினால் நல்லது என்று சொல்றேன்.

    //நீங்க இப்படி புலம்பி புலம்பி தான் சென்னைக்கு 2 மணி நேரம் பவர் கட் ஆகிருச்சு....//

    நான் புலம்புரதுக்கு இவ்ளோ பலன் இருக்கா என்ன...?! :)

    அப்புறம் சௌந்தர், சென்னைல இருக்கிற அம்மாவீட்டுக்கு விடுமுறைக்கு வரலாம்னு இருக்கிறேன். :))

    பதிலளிநீக்கு
  6. //நீங்க இப்படி புலம்பி புலம்பி தான் சென்னைக்கு 2 மணி நேரம் பவர் கட் ஆகிருச்சு..../
    என்னங்க அநியாயம்...நாங்கலாம் மக்கள் இல்லையா..இங்க வந்து பாருங்க எத்தனையோ சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறத..உங்களுக்கு என்ன மாசம் பொறந்தா சம்பளம் ..இங்க அப்படியா..எடுத்த ஆர்டர் குறிப்பட்ட டைம் க்குள் முடிக்காம, வேலை ஆட்களுக்கு சம்பளம் தரமுடியாம...வங்கி கடன் கட்ட முடியாம...இப்படி நிறைய...நாங்களும் தானே வரி கட்டுறோம்..தென் மாநில மக்களும் தானே வரி கட்டுறோம்.
    ///எனக்கு ஒரு கண்ணு போயிருச்சு அவனுக்கும் ஒரு கண்ணும் போகணும் சொல்ற மாதரி இருக்கு..!!///அப்போ நீங்க மட்டும் தான் நல்லா இருக்கணும்..மத்தவங்க நாசமா போகனுமா...

    பதிலளிநீக்கு
  7. கௌசல்யாம்மா... சென்னை மக்கள் புலம்பறாங்கன்னுதான் சொன்னேனே தவிர... நான் உங்க பக்கம்தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. என்னத்தை சொல்லி என்னத்தை எழுதி எல்லாம் நம் விதி

    பதிலளிநீக்கு
  9. \\10 - 12 மணி நேர மின்வெட்டை அனுபவிக்கிற நாங்க பாவம் இல்லையா :)\\
    அதானே!
    இந்த வருடம் தேர்வு எழுதும் மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  10. அய்யா எவ்ளோ பிரச்னை வந்தாலும் நிர்வாக இடத்தை விட்டு கொடுக்க மாட்டார்...அம்மா தொடர்ருறாங்க போல!

    பதிலளிநீக்கு
  11. எப்ப வரும்? எப்ப போகும்? எப்படி வரும் வெளிச்சம்.....ஒண்ணும் புரியல.

    பதிலளிநீக்கு
  12. என்னமா எழுத்யிருக்கீங்க.எங்க மனசில் ஓடுறதை நீங்க கொட்டிட்டீங்க,மல்டி நேஷனல் கம்பெனிகள் சென்னைக்கு வந்த பின்பு தான் நமக்கு இந்த கெதி,அதற்கு தகுந்த மின்சார உறப்த்தியில்லாமல் எல்லாரையும் வரவேற்று விட்டு மின்சாரம் கொடுக்கணும்ல,25 வருட முயற்சியின் பலனாக வந்த கூடங்குளம் கட்டமைப்பை இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியுமா? என்ன?!!???..
    நானும் இதைப் பத்தி எழுதனும் நினைச்சிகிட்டு இருக்கேன்,செய்தி மனசில் பொங்கி வரமாட்டேங்குது.நீங்க எழுதுங்க தோழி.

    பதிலளிநீக்கு
  13. சென்னைக்கு 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 2 மணி நேரமாக மாற்றி இதர மாவட்டங்களுக்கு கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் இதில் முதல் பாதி மட்டும் தான் நடந்தது.... இரண்டாம் பாதி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.... ???

    ஒரு வேலை இந்த பதிவை படித்த பின்னர் நடந்தால் கௌசல்யா மேடம்க்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  14. இன்னும் நாலு வருஷம் இவங்க ஆட்சி இருக்காம்ல!!!

    பதிலளிநீக்கு
  15. @@ HOTLINKSIN.com திரட்டி said...

    //சென்னையிலும் 4 மணி நேரம் மின்வெட்டு செய்ய ஆலோசித்து வருகிறார்கள்... விரைவில் இது அமலுக்கு வரலாம்.//

    அப்படியே பிற இடங்களில் குறைத்தால் மிக நல்லது.

    //கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்துவிட்டால் மட்டும் தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்று யோசியுங்கள்... வாய்ப்பே இல்லை.//

    எனது கருத்தும் இதே தான்...நிச்சயமாக முடியாது.

    //வீட்டில் சாதனங்களை வைத்து சூரிய ஒளியில் எடுக்கப்படும் மின்சாரத்தை ஒரு வீட்டில் பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கும் மின்சாரத்தை பயன்படுத்தும் தேவை குறையும். அந்த சாதனங்களை வாங்க மானியமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கலாமே செய்தார்களா...? இல்லையே...//

    நல்ல யோசனை. முதலில் சூரியஒளியில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினால் கூட போதும்... அதை பற்றிய விவரங்களை மக்களிடம் எடுத்து கூறினால் இயன்றவர்கள் அவர்களாகவே தங்கள் வீட்டிற்கு ஏற்பாடுகள் செய்துகொள்வார்கள்.

    * * *

    உங்களின் வருகைக்கும் ஆதங்கத்துடன் கூறிய கருத்துகளுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  16. @ சௌந்தர், சென்னையும் தமிழ் நாட்டுக்கு உட்பட்ட பகுதி தானே ? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது நியாயமில்லை . மற்றவர்களும் மனிதர்கள் தான் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  17. Surya Prakash , 11:48 AM, March 28, 2012
    @ சௌந்தர், சென்னையும் தமிழ் நாட்டுக்கு உட்பட்ட பகுதி தானே ? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது நியாயமில்லை . மற்றவர்களும் மனிதர்கள் தான் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்//

    மச்சி நானும் அதான் மச்சி சொல்றேன்... உங்க கண்ணுல சுண்ணாம்பு வைசுட்டாங்க சொல்லி எங்க கண்ணுல வைக்க சொல்றது சரியா... உங்க கண்ணுக்கும் வெண்ணை வேணும் கேளுங்க... அதானே சரி..??

    ;)

    பதிலளிநீக்கு
  18. @@ Kovai Neram said...

    //என்னங்க அநியாயம்...நாங்கலாம் மக்கள் இல்லையா..இங்க வந்து பாருங்க எத்தனையோ சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறத..உங்களுக்கு என்ன மாசம் பொறந்தா சம்பளம் ..இங்க அப்படியா..எடுத்த ஆர்டர் குறிப்பட்ட டைம் க்குள் முடிக்காம, வேலை ஆட்களுக்கு சம்பளம் தரமுடியாம...வங்கி கடன் கட்ட முடியாம...இப்படி நிறைய...நாங்களும் தானே வரி கட்டுறோம்..தென் மாநில மக்களும் தானே வரி கட்டுறோம்.//

    சரியான கேள்வி கேட்டீங்க !! சென்னை சொகுசா இருக்க நாம மட்டும் கஷ்டப்படனும் என்பது எந்த விதத்தில் சரி ? இதை கூட எண்ணு கேட்க மாற்றாங்க நம்ம மக்கள்...எவ்வளவு அடிச்சாலும் வாங்கிட்டு இருக்கிறாங்க... :(

    ///அப்போ நீங்க மட்டும் தான் நல்லா இருக்கணும்..மத்தவங்க நாசமா போகனுமா...//

    உங்களை போல நாலு பேர் கேள்வி கேட்டா கூட போதும், ஆனா எங்க, யாருக்கு வந்த விதியோனு இருக்கிறவங்கள என்ன சொல்ல...

    கருத்திற்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  19. @@ கணேஷ் said...

    //கௌசல்யாம்மா... சென்னை மக்கள் புலம்பறாங்கன்னுதான் சொன்னேனே தவிர... நான் உங்க பக்கம்தான்.//

    நானும் நல்லா புரிஞ்சிட்டுதான் சிரிச்சேன், அதான் :)போட்டேன்.

    அதானே நீங்க சென்னை இல்லையே எங்க பக்கம் தான். :)

    நன்றிகள் கணேஷ்

    பதிலளிநீக்கு
  20. @@ வியபதி said...

    //என்னத்தை சொல்லி என்னத்தை எழுதி எல்லாம் நம் விதி//

    அப்படின்னு நாம விட்டுட்டா எப்படி, அட்லீஸ்ட் எழுதி எழுதியாவது புலம்புவோம் :)

    * * *

    நன்றிகள் வியபதி

    பதிலளிநீக்கு
  21. @@ வியபதி said...

    //என்னத்தை சொல்லி என்னத்தை எழுதி எல்லாம் நம் விதி//

    அப்படின்னு நாம விட்டுட்டா எப்படி, அட்லீஸ்ட் எழுதி எழுதியாவது புலம்புவோம் :)

    * * *

    நன்றிகள் வியபதி

    பதிலளிநீக்கு
  22. @@ அம்பிகா said...

    //அதானே!
    இந்த வருடம் தேர்வு எழுதும் மாணவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.//

    உண்மை. வருத்தபடக்கூடிய ஒன்றுதான் இது.

    * * *

    நீண்ட நாள் கழித்த வருகைக்கு நன்றிகள் அம்பிகா

    பதிலளிநீக்கு
  23. @@ விக்கியுலகம் said...

    //அய்யா எவ்ளோ பிரச்னை வந்தாலும் நிர்வாக இடத்தை விட்டு கொடுக்க மாட்டார்...அம்மா தொடர்ருறாங்க போல!//

    யார் வந்தாலும் மக்கள் பாடு திண்டாட்டம் தான்.

    * * *

    நன்றிகள் விக்கிஉலகம்

    பதிலளிநீக்கு
  24. @@ மனசாட்சி™ said...

    //எப்ப வரும்? எப்ப போகும்? எப்படி வரும் வெளிச்சம்.....ஒண்ணும் புரியல//

    இப்படி மக்களை புலம்ப வச்சதுதான் அரசின் சாதனை !!!

    * * *

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  25. @@ Asiya Omar said...

    //மல்டி நேஷனல் கம்பெனிகள் சென்னைக்கு வந்த பின்பு தான் நமக்கு இந்த கெதி,அதற்கு தகுந்த மின்சார உறப்த்தியில்லாமல் எல்லாரையும் வரவேற்று விட்டு மின்சாரம் கொடுக்கணும்ல,//

    ம்...நிறைய காரணம் இருக்கு தோழி. நமக்கு போக மிச்சம்னு ஒரு விஷயம் கூட இருக்கு. எல்லாம் சொல்லனும்னா பல பதிவு எழுதணும். :)

    //25 வருட முயற்சியின் பலனாக வந்த கூடங்குளம் கட்டமைப்பை இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியுமா? என்ன?!!???..//

    முடிவெடுக்க வேண்டாம்னு தான் அங்கே இருக்கிற மக்களும் சொல்றாங்க...யோசிக்கணும். 25 வருட முயற்சி , அதிக பணம் இருந்தாலும் மக்களின் அச்சத்தை போக்குவது தான் மிக முக்கியம். அதை செய்ய தவறிவிட்டது அரசு.

    //நானும் இதைப் பத்தி எழுதனும் நினைச்சிகிட்டு இருக்கேன்,செய்தி மனசில் பொங்கி வரமாட்டேங்குது.நீங்க எழுதுங்க தோழி.//

    எழுதணும் தோழி. மக்களின் உணர்வுகள் எது என்பதை எல்லோரும் அறியவேண்டும். நேரம் கிடைப்பின் அவசியம் எழுதுங்கள்.

    * * *

    நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  26. @@ KowThee said...

    //சென்னைக்கு 1 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 2 மணி நேரமாக மாற்றி இதர மாவட்டங்களுக்கு கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் இதில் முதல் பாதி மட்டும் தான் நடந்தது.... இரண்டாம் பாதி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.... ???//

    சீக்கிரம் நடக்கும்னு நம்புவோம்...இப்பவரை இத தான பண்ணிட்டு இருக்கிறோம்.
    :))

    //ஒரு வேலை இந்த பதிவை படித்த பின்னர் நடந்தால் கௌசல்யா மேடம்க்கு நன்றி!!!//

    நீங்க பதிவை படித்த பின் நடந்தால் உங்களுக்கு நன்றி.

    :))

    பதிலளிநீக்கு
  27. @@ விச்சு said...

    //இன்னும் நாலு வருஷம் இவங்க ஆட்சி இருக்காம்ல!!!//

    அப்படிதான் போல...என்ன பண்ணலாம் ?! அனுபவிப்போம்.

    * * *

    நன்றி விச்சு.

    பதிலளிநீக்கு
  28. @@ Surya Prakash said...

    //@ சௌந்தர், சென்னையும் தமிழ் நாட்டுக்கு உட்பட்ட பகுதி தானே ? ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது நியாயமில்லை . மற்றவர்களும் மனிதர்கள் தான் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்//

    தமிழ்நாட்டுல பிற மாவட்டங்கள் இருப்பதை மறந்துட்டாங்க சூர்யா. அரசும் அப்படிதான், ஒரு சில மக்களும் அப்படிதான்.

    பதிலளிநீக்கு
  29. @@ மாலதி said...

    //நன்றி.//

    வருகைக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  30. மிகவும் ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

    ஒரு நல்ல எழுத்தைப் படித்த திருப்தி மற்றும் சிந்திக்கவேண்டிய கருத்துக்களுடன்..

    மண்மூலமும் மக்களைப் பிரித்தாளமுடியும் என்று சொல்கிறார்கள்.. சென்னைவாசியாக இருந்தாலும்..

    உள்ளிருக்கும் ஊர்நாட்டானின் கொதிப்பு அப்படியேதான் இருக்கிறது.

    நல்ல எழுத்து..

    இப்போதுதான் படிக்க வாய்த்தது.. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...