செவ்வாய், மார்ச் 6

AM 11:50
11


இன்றைய மாணவர்களின் உலகம் எங்கே செல்கிறது ? தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன், சென்னையை போல இங்கயும் உங்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய மாணவர்கள், வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவன், பிளேடால் கையை கிழித்த மாணவன், இதெல்லாம் போதாது என்று நெல்லையை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்...!!?

எதனால் இப்படி?!

பொருளாதார வசதி பெருகிவிட்ட இன்றைய காலத்தில் கை விரல் நுனியில் உலகத்தை கொண்டுவந்து விடும் இணையம், கம்ப்யூட்டர், டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்குகள் என சுற்றிலும் குழந்தைகளின் உலகம் வண்ணமயமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் மனது எந்த நிலையில் இருக்கிறது...எதை சிந்திக்கிறது...எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கிறோம் . 

மாணவன் தவறு செய்தால் பெற்றோர்கள் பள்ளியை கை காட்டுகிறார்கள், பள்ளிகள்  ஆசிரியர்களை கைகாட்ட , ஆசிரியர்கள் கல்வி முறையை கைகாட்ட , கல்வி முறைக்கு காரணம் அரசாங்கத்தில் வந்து முடிகிறது...இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்ததின் மேல் பழியை போட்டு தப்பிவிடுகிறார்கள் அல்லது நழுவி விடுகிறார்கள். ஆனால் தொடரும் அவலங்களை தடுத்து நிறுத்த போவது யார் ? கண் முன்னே சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டு போகும் இன்றைய மாணவச் செல்வங்களை காப்பாற்ற வேண்டாமா ? இவர்கள் தானே நாளைய உலகை ஆளப் போகிறவர்கள், ஆனால் எப்படி ஆள முடியும் இவர்களால்...குப்பைகள் சேகரிக்கும் தொட்டியாக மனதை வைத்துள்ளார்களே ?!

ஏதோ ஒரு மாணவன் முதல் மாணவனாக வந்துவிட்டான் என பெருமை பாராட்டி அவன் பின்னால் ஓடும் சமூகம் பிற மாணவர்களின் மனநிலை பற்றி சிறிதாவது யோசிக்கிறதா ?

நெல்லை மாணவனின் தற்கொலை முயற்சி

பாளையங்கோட்டையை சேர்ந்த மார்டின் ஆரோக்கியராஜ் இவருடைய 13 வயது மகன் ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை வைத்து நெற்றிப் பொட்டில் தன்னைத் தானே சுட்டு கொண்டான். அலறி அடித்து மாடிக்கு சென்ற பெற்றோர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.படிப்பு சரியாக வரவில்லை, தேர்வில் நல்ல மார்க் வாங்கவில்லை, அந்த வருத்தத்தில் சாக முடிவு செய்தததாக கூறி இருக்கிறான்.

இதில் எங்கே நடந்தது தவறு ? பள்ளியிலா, கல்வி முறையிலா எதில் தவறு...?! இவை இரண்டையும் விட தவறின் பக்கம் பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.


இன்றைய பெற்றோர்களே ?!!!

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை  என பிள்ளைகள் மனதில் பதிய வைத்த பெற்றோர் தான் முக்கிய காரணம். சரியாக படிக்கவில்லை, மார்க் குறைவாக எடுக்கிறான் என்று பெற்றோரை அழைத்து சுட்டி காட்ட வேண்டியது பள்ளியின் கடமை. ஆனால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்...?!


தங்கள் பிள்ளைக்கு படிப்பில் நாட்டம் இல்லை என்று தெரிந்ததும், " ஏண்டா இப்படி இருக்கிற, அந்த பையனை பாரு, எல்லா சப்ஜெச்டிலும் 90 க்கு மேல, அவனுக்கு மட்டும் எப்படி முடியுது, நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேனே, இருந்தும் ஏண்டா இப்படி இருக்கிற, எனக்குன்னு வந்து பிறந்தியே ,மத்தவங்க முன்னாடி மானத்தை வாங்கிட்டியே...அப்படி இப்படின்னு பையனை படுத்தி எடுக்கிறார்கள் பெற்றோர்கள். தங்களது டென்ஷனை பையனின் மீது திணித்து அவனை மன அழுத்தத்தில் விழ வைத்து விடுகிறார்கள்...

இது போன்ற ஒரு நிலை நமது குழந்தைக்கு ஏற்பட்டால் கலவரமடைந்து விடாமல் நிதானமாக பொறுமையாக அணுகி பாருங்கள்...

* படிப்பது மனதில் பதியவில்லையா

* படிப்பின் மீது விருப்பம் இல்லையா ? அல்லது வேறு எதன் மீதும் விருப்பம் இருக்கிறதா

* பள்ளி/ஆசிரியர்கள் பிடிக்கவில்லையா?

* அவர்கள் நடத்துவது புரியவில்லையா?

* நாங்க சொல்லி கொடுத்தா பிடிக்குமா?

இப்படி எல்லாம் கேட்டு விட்டு எதற்கும் சரியாக பதில் வரவில்லை என்றால்

" கொஞ்சம் விருப்பம் வைத்தால் சுலபமாக படித்து விடலாம்...உன்னை முதல் மாணவனாக வா என சொல்லவில்லை...ஆனால் போதுமான அளவு படிச்சா போதும், குறைவான மார்க் தான் எடுக்கிறான் என்று ஆசிரியர் புகார் பண்ணினால் அவர்களை நான் பேசி சமாளித்து கொள்கிறேன்...இனி அதை பற்றி கவலைபடாத...ஜாலியா படி...நிறைய விளையாடு...எந்த சப்ஜெக்ட் பிடிக்குதுன்னு சொல் அதையே 11 வது வகுப்பிலும் எடுப்போம்...உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் , உன் மார்க் இல்லை...இதை மனசுல வச்சுக்கோ" சரியாக படிக்காத உங்கள் பிள்ளையிடம் இந்த விதத்தில் சொல்லி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தே இராத  ஒரு மேஜிக் விரைவில் நடக்கும்.

பாண்டிச்சேரியில் மனநல ஆலோசகர் ஒருவர் கவுன்செலிங் கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். குழுமி இருந்த மாணவர்களிடம்,

" என்ன தப்பு செய்தாலும் தண்டனை  கிடையாது, அப்படின்னு சொன்னா யார் யார் என்ன என்ன தப்பு பண்ணுவீங்க " என்றார்.

* சாக்லேட் திருடி தின்பேன்

* அப்பா மூக்கு கண்ணாடியை உடைப்பேன்

* சாம்பாரில் உப்பு அள்ளி போடுவேன், போன்ற பதில்களை தொடர்ந்து ஒரு சிறுவன் " என் அம்மா அப்பாவை குத்தி கொள்வேன்" என்றான்...! நம்பித்தான் ஆகணும் நடந்து உண்மை இது.

காரணம் கேட்டதற்கு, " பகல் புல்லா ஸ்கூல்ல படிச்சிட்டு வந்தா வீட்டிலும் படி படினு நச்சரிக்காங்க, அப்புறம் டியூசன் , ஹிந்தி ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் முடிய 9 மணி ஆகிடும்...சனி, ஞாயிறும் புல்லா ஹோம்வொர்க் கொடுப்பாங்க  ...அதை செய்ய லேட் ஆனா வீட்ல ஒரே திட்டு...இந்த அப்பா அம்மா எனக்கு வேண்டாம் "

அங்கிருந்த ஒருத்தர் முகத்திலும் சிறிதும் சலனமில்லை, வெறித்தபடி இருந்தனர், அவனது பெற்றோர் உட்பட...!! அப்புறம் அந்த பையனுக்கு மட்டும் தனியா கவுன்செலிங் கொடுத்திருக்காங்க...!

ஆகையால்,

" உங்கள் குழந்தை எதுவாக ஆகவேண்டும் என நீங்க எண்ணுகிறீர்களோ அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்...தாங்கள் என்னவாக வேண்டும் என குழந்தைகள் எண்ணுகிறார்களோ அதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள், அது போதும் "

தற்கொலைகள் ?!!

கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளியின் விடுதியில் ஆசிரியர் தன்னை துன்புறுத்துகிறார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டான் பிளஸ் 1 மாணவன். இது ஒரு வகையான பழிவாங்கும் மனோநிலை. ஆசிரியரை பலி வாங்குவதாக எண்ணி தன்னை மாய்த்து கொள்ளும் இத்தகைய செயல் மிகவும் ஆபத்தான ஒன்று. வெளியே பார்க்கும் போது சாதாரணமாக காணப்படும் குழந்தைகளின் மனதில் இதை போன்ற எத்தனை ஆபத்துகள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை.

பெற்றோரின் அதீத கண்டிப்பால் வீட்டைவிட்டு வெளியேறும் மாணவர்களும் இருக்கிறார்கள். பெற்றோரின் கவனிப்பு சரி இன்மையால் வன்முறைக்கு மாறுபவர்களும் உண்டு.

அதிக அழுத்தத்தை மாணவர்களால் சமாளிப்பது இயலாது...பெற்றோரின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு தன் பிள்ளை மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிடவேண்டும் அது கல்வியால் மட்டும் தான் முடியும் என்பது என்னை பொறுத்தவரை ஒரு தவறான கண்ணோட்டம்.

ஒரு பக்கம் பெற்றோர்களின் படி படி என்ற வற்புறுத்தல் மற்ற்றொரு பக்கம் தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற வேண்டும் என்று நெருக்கும் பள்ளி இவற்றுக்கிடையே தத்தளிக்கிறார்கள். அவர்களின் மெல்லிய இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. ஒரு சில பிள்ளைகள் நன்றாக படித்து நெருக்கடியை சுலபமாக சமாளித்துவிடுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சுமாராக படிக்ககூடியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.


அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டும் அறிவாளிகள் அல்ல. யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை, முயற்சி,உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும். பள்ளிப்படிப்பை கூட தாண்டாத பலர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து புரியவைக்க வேண்டும். அது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.


பக்குவபடுத்துங்கள் !! 


தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று உணராத நாம் தான் பிள்ளைகளை குறை சொல்கிறோம். "ஆமாம், அந்த டீச்சருக்கு வேற வேலை இல்லை, எதையாவது சொல்லி கொண்டே இருக்குங்க, நீ கண்டுக்காத விடு " என்று சொல்லும் பெற்றோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். "நானே என் பிள்ளையை அடித்ததில்லை, ஆசிரியர் எப்படி உன்னை அடிக்கலாம்" என்று கூறினால் அந்த பிள்ளைக்கு எப்படி தன் ஆசிரியர் மேல் மரியாதை வரும், ஆசிரியர் தனது நன்மைக்கு தான் கண்டிக்கிறார் என்பது எப்படி புரியும்?!! அறிவுறுத்தும் தனது ஆசிரியரை ஒரு எதிரி போல் தான் எதிர்கொள்வார்கள். 

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் பெற்றோர் பாலமாக இருக்கவேண்டும்.ஆசிரியரை மதிக்க வேண்டும், யாராக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஒருவேளை ஆசிரியரிடமே தவறு இருந்தாலும், கண்டிப்பில் குறை இருந்தாலும் அதை நம் குழந்தைகள் சுலபமாக சமாளித்துவிடுவார்கள், பெரிது படுத்த மாட்டார்கள்.  அவர்களின் மனம் பக்குவபட்டுவிடும். இந்த பக்குவ பட்ட மனநிலைக்கு நம் பிள்ளைகளை தயார் படுத்தி வைத்துவிட்டால் போதும், அதிக பாட சுமையோ, ஆசிரியரின் அதீத கண்டிப்பா எதுவுமே அவர்களை அசைக்காது, தெளிவாக இருப்பார்கள்.

 "ஐயோ உலகம் இப்போ மோசமா இருக்கே என் பிள்ளை இதன் நடுவில் எப்படி, என்ன பாடுபட போறானோ " என்று கவலைபடாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் மெனகிடத்தான் வேண்டும்.


எந்த சூழ்நிலையையும், எத்தகைய மனிதர்களையும் சமாளிக்க கூடிய விதத்தை குழந்தைகள் மனதில் அவர்கள் வயதின் ஒவ்வொரு கட்டத்திலும் பதிய வைக்க வேண்டும்...சிறிய வயதில் பதிந்தவை நாம் உடன் இல்லாத போதிலும் அவர்களுக்கு கைகொடுக்கும்.

பின்குறிப்பு :

அதிக வேலை பளுவின் காரணமாக முந்தைய பதிவில் சொன்னது போல உடனே அடுத்த பதிவை வெளியிட இயலவில்லை. குழந்தைகள் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் , அந்த அளவிற்கு இன்று இப்பிரச்சனை மிக முக்கியமானதாக இருக்கிறது. முடிந்த வரை தொடர்ந்து எழுதுகிறேன். மெயில்/பின்னூட்டம் மூலம் கருத்துக்கள் கூறிய உள்ளங்களுக்கும் தோழி ஏஞ்சலின்க்கும் என் நன்றிகள். 


படங்கள் - நன்றி கூகுள் 

Tweet

11 கருத்துகள்:

  1. சகோ உங்க பதிவில் பல விஷயங்கள் பொதுவானதாக இருந்தாலும்...எனக்கு பட்ட விஷயங்களை இங்கு பகிர்கிறேன்...

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு முனிவனின் தவம் போன்றது...அதிலும் அவன் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ இதில் தவறு இழைக்க வாய்ப்பு இல்லை...

    பெரிதும் தவறானது இந்த கல்வி முறை மட்டுமே...இத வைத்துக்கொண்டு பொருள்கள் அதாவது Products தயார் செய்து கொண்டு இருக்கிறோம்...

    ஒரு குடும்ப தலைவனின் முக்கிய கடைமை அந்த குடும்பத்துக்கான பொருளீட்டலே!

    இப்படி இருக்க தனிக்கவனம் என்பது சிரமம்...அதே நேரத்தில் மார்க் வைத்து குழந்தைகளை தரம் பிரிப்பது கேவல்மானது..

    இதற்க்கு முழு காரணமாகிய இந்த சிஸ்டத்த மாத்தனும்..அதை விடுத்து என்ன ஊதுனாலும் வெறும் ஏட்டு சுரக்காயே!

    பதிலளிநீக்கு
  2. அவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. @@ விக்கியுலகம்...

    ஒரு குடும்பத்தலைவனின் முக்கிய கடமை பொருளீட்டல் , அது யாருக்காக தன் மனைவி பிள்ளைக்காகத் தானே ?!

    இன்று ஒரு குழந்தை தான் பெரும்பாலான வீட்டில் அந்த ஒரு குழந்தைக்கு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றால் எப்படி ?! பணத்தின் பின்னே ஓடி ஒரு கட்டத்தில் திரும்பி பார்க்கும்போது பணம் நிறைய இருக்கும், நல்ல பிள்ளை ??!

    கல்வி முறையில் மாற்றம் தேவை முழுமையாக ஒத்துகொள்கிறேன். ஆனால் அதில் உடனடியாக மாற்றம் என்பது வந்துவிட போவதில்லை. அதே சமயம் அதன் சுமையில் சிக்கி மன அழுத்தத்தில் விழுந்துவிடாமல் இருபதற்க்கு பெற்றோரின் கவனிப்பு தேவை.

    பெற்றோர்கள் சிறிது கவனிப்பு கொடுத்தால் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் திறனை குழந்தைகள் பெற்றுவிடுவார்கள், கல்வி என்ன அதை விட பிற துறைகளிலும் கலக்குவார்கள்.

    நேரம் இருப்பின் இந்த லிங்க் படித்து பாருங்கள் சகோ , ஏதோ தெரிந்ததை கொஞ்சம் எழுதி இருக்கிறேன்.
    http://www.kousalyaraj.com/2010/12/blog-post_13.html

    கருத்திட்டமைக்கு நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  4. @@ சே.குமார்...

    நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  5. எதை சொல்வது என தெரியவில்லை..அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாம் தாய் என்பதை உணர்ந்து , அவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தினால், படிப்பு என்பது கனியாக மாறிவிடும். பிரச்சனையே இயந்திரத்தனமாக திணிப்பு தான். என்னைப் பொறுத்தவரை பிரச்சனையின் ஆரம்ப புள்ளி ஆசிரியர்கள் தான். கடைசி புள்ளியும் ஆசிரியர்கள் தான். என்று கல்வியில் புரிதல் ஏற்படுமோ அன்று தான் இப்பிரச்சனைகளுக்கு விடிவு காலம் வரும்… பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  6. இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது அவளுக்காக எதையும் செய்யத் துணிகிறான் ...அவளும் அப்படித்தான் ... அவர்கள் திருமணம் செய்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மீதும் இதே அன்பை செலுத்தினால் இது போன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை .......குழந்தைகளையும் காதலிக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு தலைமுறையிலும் நடக்கிறது. எனினும் இதைப் பற்றி எழுதுவது அவசியமே.

    பதிலளிநீக்கு
  8. //உங்கள் குழந்தை எதுவாக ஆகவேண்டும் என நீங்க எண்ணுகிறீர்களோ அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்...தாங்கள் என்னவாக வேண்டும் என குழந்தைகள் எண்ணுகிறார்களோ அதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள், அது போதும் //

    பதிவை, விரிவாக உண்மைகளை
    உணர்த்தி, நன்மைகளை எடுத்துக்காட்டி
    ஆய்ந்து எழுதியுள்ளீர்
    நன்று சகோதரி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...