செவ்வாய், ஜூலை 19

AM 10:14
38

முன்னுரை :

மரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்பினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
            
மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.

நல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் !

இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.

கருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica).  இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது. 

இம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்... 


   மரம் 

இலை, பூ 

                                                                                                  காய் 

* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும். 

                                                                              மரம் 
                                                                       

                                                    இலை, பூ 
                                  
                                                                            காய்

இம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.

பெரிய பாதிப்புகள் 

நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.

புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி  விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...!!?  

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.  

விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!

அடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.

* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.

* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய ?!!

இன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா ??

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.

கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின்   தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...!

உடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம் 

அறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.

இம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை ! 

நமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது !!?

உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)


கெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் !! 

தலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் !

இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.

மரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்... 

 'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் !! 

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  முழு அளவில் உதவி செய்யவேண்டும்.

கடைசியாக ஒரு கேள்வி

இம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன ??!!

சில ஆதாரங்கள் 

http://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Prosopis_juliflora.html

எனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...


"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து  உதவுவீர்களாக !"




*********************************************









Tweet

38 கருத்துகள்:

  1. விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!
    ////

    விழிப்புணர்வூட்டும் பதிவு

    பதிலளிநீக்கு
  2. அருமையான் விழிப்புணர்வு பதிவு சகோ ...நல்லா இருக்கு உங்க முயற்ச்சிக்கு என்னோட வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
  3. நல்ல விஷயம் தான் .. உறுதுணையாய் இருப்போம்.

    பதிலளிநீக்கு
  4. விழிப்புணர்வூட்டும் பதிவு.

    பதிலளிநீக்கு
  5. அரிவாள எடுத்திடவேண்டியதுதான் ....

    பதிலளிநீக்கு
  6. மவனே சீம கருவை கண்டா வெட்டுத்தான்

    பதிலளிநீக்கு
  7. மேடம் வெட்டுகத்தியுடன் நான் ரெடி எங்கே எப்போன்னும் மட்டும் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  8. விழிப்புணர்வூட்டும் பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. விழிப்புணர்வூட்டும் பதிவு
    உறுதுணையாய் இருப்போம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள்.

    சீமைக்கருவேல மரங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உபயோகமற்றதாக மாற்றிவிடுகின்றன என்பது சரிதான். ஆனால் அது குறித்து சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    1. இம்மரங்களை அடியோடு ஒழிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.

    2. அது விஷச்சத்து வாய்ந்த மரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எனக்குக் கிடைகவில்லை. காய்களை உட்கொல்லும் 1% கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. அதுவும் விஷத்தன்மையால் அல்ல.

    3. வேறு எதுவும் வளர சாத்தியமற்ற உப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் இதை வளர்ப்பது ஒருவேளை நன்மையாக இருக்கக் கூடும்.

    ஆனால் நம் தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் இது கட்டுப்படுத்த முடியாமல் பரவி மிகுந்த சேதம் விளைவித்துக் கொண்டிருப்பது உண்மை. அவற்றை அழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    ஆனால் அதற்கு தீவிர முயற்சி தேவை. மரத்தை அரைகுறையாக வெட்டிவிட்டால் எதிர்விளைவை ஏற்படுத்தும். மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து, அதிக மலர்கள், காய்களை காய்க்கும். எனவே வெட்டும் போது வேரோடு முழுமையாக வெட்டி அகற்றிவிட வேண்டும்!

    பகிர்தலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் அனுமதித்தால், இப்பதிவை என் பஸ்சில் பகிர்ந்து கொள்கிறேன்...!

    பதிலளிநீக்கு
  12. நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு .
    உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ.....

    பதிலளிநீக்கு
  13. விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு ...!

    உறுதுணையாய் இருப்போம்.!

    பதிலளிநீக்கு
  14. சகோ சரியான கருத்து. எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட காலி நிலத்துல நெறைய இந்த மரம் இருக்குது. அத வெட்டுறதுக்கு என்ன பண்ணலாம். ஏதாவது அரசு துறை அணுகலாமா? ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க!!

    பதிலளிநீக்கு
  15. விழிப்புணர்வூட்டும் முக்கியமான பதிவு சகோ ...

    அனைவரையும் சென்றடைய வேண்டிய விஷயம் .

    பகிர்வுக்கு நன்றி சகோ ..

    பதிலளிநீக்கு
  16. தங்களின் நீண்ட நாள் கனவு, நிலங்களைப் பாழ்படுத்தும் இம்மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்திட கூட்டு முயற்சி தேவை.

    பதிலளிநீக்கு
  17. @ ஆமினா...

    நன்றி தோழி



    @ இம்சை அரசன் பாபு...

    வாழ்த்திற்கு நன்றி பாபு


    @ சி.பி.செந்தில்குமார்...

    உங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி


    @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா...

    நன்றி ரமேஷ்


    @ சே.குமார்...

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  18. @ koodal bala...

    //அரிவாள எடுத்திடவேண்டியதுதான் //

    உங்க முடிவுக்கு மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு
  19. @ கவி அழகன் said...

    //மவனே சீம கருவை கண்டா வெட்டுத்தான்//

    ஆமாம் விடாதிங்க :)

    நன்றி யாதவன்.



    @@ கே. ஆர்.விஜயன் said...

    //மேடம் வெட்டுகத்தியுடன் நான் ரெடி எங்கே எப்போன்னும் மட்டும் சொல்லுங்க.//

    இவ்வளவு ஆர்வமா இருக்கிற உங்களை எங்க டீம்ல சேர்த்தாச்சு. மிக விரைவில்... !!

    நன்றி விஜயன்



    @ இராஜராஜேஸ்வரி...

    மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  20. @@ பன்னிக்குட்டி ராம்சாமி said...


    // இம்மரங்களை அடியோடு ஒழிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.//

    கேரளாவில் எப்படி சாத்தியம் ஆச்சு ? அமெரிக்காவிலும் அழித்துவிட்டார்கள் என்றும் தகவல் படித்தேன்.

    //2. அது விஷச்சத்து வாய்ந்த மரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எனக்குக் கிடைகவில்லை. காய்களை உட்கொல்லும் 1% கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. அதுவும் விஷத்தன்மையால் அல்ல.//

    அப்படியா ? ஒரு தகவல் படித்தேன்...அதுதான் எழுதினேன். உங்களின் இந்த விளக்கத்திற்கு நன்றி

    //3. வேறு எதுவும் வளர சாத்தியமற்ற உப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் இதை வளர்ப்பது ஒருவேளை நன்மையாக இருக்கக் கூடும்.//

    மண் ஒ.கே ஆனால் காற்றில் இருக்கும் ஈரபதத்தை உறிஞ்சி விடுகிறதே...?! :(

    //ஆனால் அதற்கு தீவிர முயற்சி தேவை. மரத்தை அரைகுறையாக வெட்டிவிட்டால் எதிர்விளைவை ஏற்படுத்தும். மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து, அதிக மலர்கள், காய்களை காய்க்கும். எனவே வெட்டும் போது வேரோடு முழுமையாக வெட்டி அகற்றிவிட வேண்டும்!//

    உண்மைதான். இதற்க்கு இயந்திரங்கள் கொண்டு ஆழமாக வெட்டி எறிய வேண்டும்...அரசாங்கம் மிகுந்த கவனம் எடுத்து இதை செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் வேண்டுகோள்.

    உங்களின் அக்கறை கொண்ட விரிவான கருத்திற்கு மகிழ்கிறேன். இது தொடர்பான எந்த ஆதாரங்கள் உங்களுக்கு கிடைத்தாலும் எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்...இனி நான் மேற்கொள்ள போகும் செயலுக்கு உதவியாக இருக்கும்.

    மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு
  21. @@ அம்பாளடியாள்...

    நான் இதை ஆசீர்வாதமாக எடுத்துகிட்டேன்.

    மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  22. @@ ஈரோடு தங்கதுரை...

    ரொம்ப நன்றி தங்கதுரை.

    பதிலளிநீக்கு
  23. @@ ராசா said...

    // எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட காலி நிலத்துல நெறைய இந்த மரம் இருக்குது. அத வெட்டுறதுக்கு என்ன பண்ணலாம். ஏதாவது அரசு துறை அணுகலாமா? ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க!!//

    அரசு துறையை அணுகினா எந்த அளவிற்கு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை...!

    கூடிய சீக்கிரம் அரசாங்கமே அவங்க அவங்க நிலத்தில இருக்கிற மரத்தை வெட்ட சொல்லி உத்தரவு போடணும் என்று விரும்புறேன், நம்புறேன் :))

    முதல் வருகை என்று நினைக்கிறேன்.
    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  24. @ FOOD said...

    //தங்களின் நீண்ட நாள் கனவு, நிலங்களைப் பாழ்படுத்தும் இம்மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்திட கூட்டு முயற்சி தேவை.//

    உண்மைதான் அண்ணா ! என் கனவு இதுதான் என்பதை நன்கு புரிந்தவர் நீங்கள்... என் கனவை நிறைவேற்ற உங்க உறுதுணையும் வேண்டும்.

    நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  25. கெளசல்யா -தாங்களே அந்த கட்டுரையை முதலமைச்சர் செல்லுக்கு இ மெயில் அனுப்பிவிடலாம் !

    பதிலளிநீக்கு
  26. வேரறுக்க வேண்டிய விஷயம் தான்...

    பதிலளிநீக்கு
  27. தெரியாத விவரங்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. 'வேலிக்காத்தானைப் போடு' என்ற அறிவுரை கேட்டு வீட்டைச் சுற்றி இதை வளர்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    பன்னிக்குட்டி ராம்சாமியின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. அரைகுறை என்றைக்குமே ஆபத்து தான்.

    பதிலளிநீக்கு
  28. //இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.
    'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் !! //

    நல்ல உபயோகமான பதிவு அனைவரையும் சென்றடையட்டும்... அருமை

    பதிலளிநீக்கு
  29. சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம்.

    தெரியாத தகவலைத் தெரிந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  30. தமிழ்நாட்டையும்,தமிழ் மக்களையும் சாவடிக்க வேண்டும் என்று காங்.அரசாங்கம் 1950 லே முடிவு பண்ணிட்டா.ஐயா,காங்.அரசியல்வாதிகளே தமிழர் மேல் உங்களுக்கு ஏன்?இவ்வளவு கோவம்?உங்க பாவத்த போக்குவதற்கு நீங்க தூவி உருவான இந்த கருவேல மரத்தை அழிப்பதற்கு நீங்களே சரியான முடிவை சொன்னால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  31. எங்கள் ஊர்ப்பக்கம் இதனை "சீத்த மரம்" என்கிறோம்.

    பதிலளிநீக்கு
  32. இதை நாங்கள் சர்க்கார் முள் , விவசாய முள் என்று அழைக்கிறோம் .... இதனை பற்றிய விழிப்புணர்வை பரப்ப நானும் பங்கு எடுத்து கொள்கிறேன் என தெரிவித்து கொள்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  33. பட்டணம் டவுண் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி அவர்கள் பதவி ஏற்ற முதல் வாரத்திலேயே கிராமத்திலுள்ள விவசாய முட்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் முழுவதுமாக அகற்றினார். மேலும் எங்கள் கிராமத்தில் இருக்கும் ஏரியிலுள்ள விவசாய முட்களையும் அகற்ற முயற்சி மேற்கொண்டுள்ளார்.அதற்கு அரசாங்கம் தரப்பிலும் , உங்கள் தரப்பிலும் இருந்து ஆதரவு தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  34. Ilaidhaaga mulmaram kolga kalayunar kai kollum kaazhthavidathu.. -Kural

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...