திங்கள், மார்ச் 21

PM 3:06
43


பூக்களில் இத்தனை நிறங்களா ? ரசிக்காதவர்கள் யாரும் இல்லை ! அதிலும் ரோஜாவில் கருப்பு நிற பூக்கள் வெகு அபூர்வம் , அதை பார்த்துவிட்டால் போதும் வியந்து அதிசயத்து போய்விடுவோம். !! ஆனால் மனிதரில் கருப்பு என்றால் வெறுப்பு...! அதுவும் ஒரு நிறம் என்பது ஏன் இந்த மனித மனங்களுக்கு புரிவதில்லை. அழகு என்றாலே அது சிவப்பு/வெள்ளை நிறம் கொண்டவர்கள் என்ற முட்டாள்த்தனமான இலக்கணத்தை வகுத்தவன்/வகுத்தவள் யார் ?இன்றும் அதை வலுவாக உறுதிபடுத்திக் கொண்டிருக்கும் நபர்கள் அடிமுட்டாள்கள்.

யார் தவறு ?

ஒரு குழந்தை பிறந்ததுமே உறவுகள் அந்த குழந்தையின் காது மடலையும், இதழையும் பார்ப்பார்கள்...அது கரு நிறத்தில் இருந்துவிட்டால் உடனே பேசத் தொடங்குவார்கள்...குழந்தை கருப்பா பிறந்துவிட்டதே...ஏன் குங்குமபூ எதுவும் சாப்பிடலையா என்ற அங்கலாய்ப்புகள் ! (குங்கும பூவுக்கும் தோல் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை என்று தான் புரிந்துகொள்வார்கள் நம் மக்கள் ?!) உறவுகளின் பேச்சுக்கள்  அக்குழந்தையை பெற்றவளின் மனதில் ரணத்தை ஏற்படுத்தாதா? அதிலும் சிலர், அந்த தாயை பார்த்து  இப்படி கேலியாக சொல்வார்கள் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்று. ஏன் இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறோம்...!? கருப்பாக பிறந்தது யார் செய்த தவறு ?  

கறுப்பு நிறத்தை பொறுத்தவரை ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை, இருவரும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். என்னவொரு வித்தியாசம் என்றால்,  சில சமயம், 'ஆண் நிறம் கம்மியா இருந்தால் நன்றாக இருக்கும்' என்றும், கறுப்புநிற ஆண் தங்கம், கட்டி வைரம் அப்படி எதையாவது சொல்லி கொஞ்சம் சமாளிச்சுக்கலாம். அதே நேரம் ஒரு பெண் கறுப்பாக இருந்து விட்டால் பிறந்தது முதல் அவள் படும் வேதனைகள் எத்தனை எத்தனை ? கறுப்பு நிற பெண் இருக்கும் அதே வீட்டில் மற்றொரு பெண் வெள்ளையாக பிறந்துவிட்டால் அவ்வளவுதான் இந்த பெண்ணை மட்டும் கொண்டாடுவார்கள், அந்த கருநிற பெண் ஒதுக்க படுவாள். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் அவர்கள் முன்னும் வேண்டுமென்றே கருநிற பெண் தவிர்க்கபடுவாள்...?! 

திருமணம்

உதாரணமாக மணமகள் தேவை விளம்பரத்தை பாருங்க, 'நல்ல சிவப்பான பெண் தேவை' என்றே இருக்கும். சிவப்பு அழகான உயர்ந்த தகுதி என்றும் கறுப்பு அவமானச்சின்னம் போல ஏன் பார்க்கப்படவேண்டும். கருப்பாக இருக்கும் தாய் தன் மகனுக்கு 'பெண் சிவப்பா இருக்கணும்' என்று தான் கோரிக்கை வைக்கிறார். பலரும் இதையே எதிர்பார்த்தால் கறுப்புநிற பெண்களின் நிலை,முடிவு...முதிர்கன்னிகளா ??!! 

வேலைக்கு பெண்களை எடுத்துக்கொள்ளும் சில நிறுவனங்கள் கூட படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம் இவற்றுக்கு முன் நிறத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

திரையில்

இன்றைய தலைமுறையினரின் மனதை பெரும்பாலும் ஆக்கிரமித்து கவர்ந்திருப்பது சினிமாத்துறை மற்றும் விளம்பரத்துறை ! அதில் வலம்  வருபவர்களையே தங்களின் ரோல் மாடல்களாக எண்ணி நடந்துகொள்பவர்கள் பலர். வேண்டும்மென்றே கருப்பான/கருப்பு சாயம் பூசப்பட்ட பெண்களை திரையில் காட்டி நகைச்சுவை என்ற பெயரில் 'ரொம்ப பொங்க வச்சிட்டாங்க போல' என்பது போன்ற வசனங்கள் அந்நிறங் கொண்ட பெண்களின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை என்று உணருவார்கள்...? (முன்பு அதிகமாக திரையில் ரௌடி/திருடன் என்றால் கருப்பா காட்டுவார்கள்...!??)

விளம்பரங்களின் பங்கு

கறுப்பை இழிவு படுத்துவதில் முதல் இடம் விளம்பரங்களுக்கு உண்டு. ஒரு விளம்பரத்தில் 7 நாட்களில் சிவப்பான பெண்ணுக்கு வேலையை கூப்பிட்டு கொடுப்பது போல காட்டுகிறார்கள். அந்த பெண்ணை காட்டும்போது கை,உடல் எல்லாம் கருப்பாக இருக்கும், சிவப்பழகு கிரீம் முகத்திற்கு போட்டபின்  முகம் முதல்கொண்டு உடல் முழுதும் சிவப்பாக மாறிவிடும்...இது என்ன  விந்தை ??? நாம இதை பார்த்து அவ்வளவா யோசிக்க மாட்டோம் என்பது அவர்களின் புரிதலா,  இல்லை பார்க்கிறவங்க முட்டாள்கள் என்று முடிவே பண்ணிட்டாங்களா ?? 

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்கான விளம்பரங்களை போல் மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையாம் சிவப்பு அழகு கிரீம் விளம்பரங்கள்.   

1998 இல் 384 கோடி ரூபாயாக இருந்த சிவப்பழகு சாதனங்கள் விற்பனை தற்போது 2 ஆயிரம் கோடியாக  இருக்கிறது என்கிறது ஒரு நாளேடு ?!!! 

முதலாளிகளின் கணக்கு

இந்தியாவில் மட்டும் அதிக அளவிற்கு சிவப்பழகு சாதனங்கள் விற்பனையாவதின் பின்னணியில் ஒரு வியாபார நுட்பம் இருக்கிறது. இந்த சாதனங்கள் வெளிநாடுகளில் அதாவது வெள்ளைகாரர்களிடம் விலைபோகாது, மேலும் கறுப்பின மக்களான ஆப்ரிகர்களிடம் வேலைக்காகாது...இரண்டுக்கும் நடுவில் இரு நிறங்களும் கலந்திருக்கும் இந்தியாவில் தான் அதுவும் 100 கோடிக்கும் மேல மக்கள்தொகை, இவர்களிடம் சிவப்பு நிறம் பற்றிய முக்கியத்துவத்தை/பெருமையை ஏற்படுத்திவிட்டால் சுலபமாக தொழில்/விற்பனை பண்ணிவிடலாம் என்பதுதான் அந்த கணக்கு.....!!
   
உலக அழகிகளாக இந்திய அழகிகளை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதின் பின் இந்த தயாரிப்பாளர்களின் பங்கு இருக்கிறது என்று கூட ஒரு பேச்சு இருக்கிறது. 

அறிவியல் அறிஞர்கள் என்ன சொல்றாங்க ?

முகத்தின் மேற்பரப்பில் போடப்படும் எந்த ஒரு அழகு சாதனமும், நிரந்தரமாக முகத்தின் நிறத்தை மாற்ற முடியாது, அதுவும் தவிர சில வாரங்களில் சிவப்பழகு என்பது எல்லாம் சாத்தியமே இல்லை என்று உறுதியாக சொல்கின்றன ஆய்வுகள். மேலும் இந்த கிரீம்களால் தோலின் நிறமியை குறைத்து தோல் அலர்ஜி, புற்றுநோயில் வேறு கொண்டுபோய் விட்டு விடுகிறது ! 


அழகின் நிறம் சிவப்பு என்று எந்த வேதமும், அறிவியலும் வலியுறுத்தவில்லை. ஆனால் ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று ஆய்வுகள் கூறி வருகின்றன.


கறுப்பை பழிக்காதே !

கறுப்பு நிறம் அழகு என்று என்று விளம்பரமும் சொல்வதில்லை மாறாக கறுப்பை மாற்றுவது எப்படி என்று ஒரு தவறான வழிக்காட்டுதலை பதிய வைக்கிறது. 

கறுப்பு நிறத்தை தாழ்த்தி கேவலப்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் சிவப்பழகு கிரீம் தயாரிப்பாளர்கள் !?       



பெண்களுக்கு என்று இருந்த இந்த சிவப்பழகு கிரீம்கள் இப்போது ஆண்களுக்கும்.....?!! இப்படி மொத்த சமூகத்தையும் சிவப்புதான் சிறப்பு என்று ஒத்துக் கொள்ளவைக்கும் இந்த விளம்பரங்களை எடுப்பவர்களை வெளியிடுபவர்களை, எவ்வாறு கட்டுபடுத்த போகிறோம்....?! விளம்பரம் எடுக்க காரணமான கிரீம் தயாரிப்பவர்களை என்ன செய்ய போகிறோம்.....?!  
  
நம் சமூகமும், மீடியாக்களும் போட்டி போட்டு கொண்டு கருப்பு நிறத்தை பழிக்கின்றன...இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று யாரும்  எண்ணுவதில்லை, அதை பற்றி கவலைபடுவதும் இல்லை. மனதளவில் நொறுங்கிபோகும் அத்தகையவர்களின் தன்னம்பிக்கை சிதறுவதை பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா ?!  

                                    கறுப்பு ஒரு நிறம் ! 
                          கேவலம் அல்ல பழிப்பதற்கு ! 
                                கறுப்பை பழிக்காதே !!



பின்குறிப்பு

நிற வெறி பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற எனது எண்ணத்தின் சிறு முன்னோட்டமே இந்த பதிவு, இது கருப்பு நிறத்தை குறைசொல்லும் சமூகத்தையும், மீடியாக்களை பற்றிய சிறு பகிர்வு. இந்த நிறம் சிறுகுழந்தைகளின் மனதிலும் தவறாக விதைக்கபடுகிறது என்பதை அறிவீர்களா ? மற்றொரு சமயத்தில் விரிவாக பகிர்கிறேன். 


படம் - நன்றி கூகுள்   






இங்கேயும் வாங்க...!


கழுகின் இன்றைய இலக்கு 

Tweet

43 கருத்துகள்:

  1. சிறுவயதில் இதனால் ஏற்படும் கிண்டல்களை தாங்காமல் எனக்கு சிறு தாழ்வு மனப்பான்மை ஏற்ப்பட்டது உண்டு! ஆனால் இன்று அந்த நிலையை கடந்து விட்டேன்! இன்னும் மீளாதோர் எத்தனைபேரோ? சொல்லப்போனால் இந்த நிறம் சருமத்தை காக்க கடவுள் கொடுத்த வரம் என்றே நினைக்கிறேன்! அதிக வெயில் அல்லது அதிக குளிரை சிவப்பானவர்கள் தாங்க முடியாது! இதனால் பல தோல் வியாதிகள் அவர்களுக்கு வரும்..ஆனால் கருமை நிறம் கொண்ட சருமத்திற்கு அந்த பாதிப்பு இல்லை!

    பதிலளிநீக்கு
  2. கருப்பு என்றாலே வேறு மாதிரி பார்க்கிறோம் அது ஏனோ தெரியவில்லை ஆனால் ஆடை விஷயத்தில் கருப்பை தேர்ந்தெடுக்கிறோம்....உங்களுக்கு கருப்பு பிடிக்குமா ....ம்ம்ம் நம்புறேன்...:) கருப்பு நிறத்தை பற்றி நிறைய தகவல்களை எழுதியதற்கு ....பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. கறுப்பின் மீதான உங்கள் பார்வை பாராட்டுக்குரியது. நிறம் பார்த்து தரம் பிரிக்கும் நிர்மூடத் தனம் நம்மில் நிச்சயம் அழிக்கப் பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் கௌஷல்யா.
    சிலவேளை பெற்றோர்கள் தன் மகள் கருப்பாய் இருக்கிறாள் வரன் கிடைக்குமோ என்று கவலை பட்டு அந்த பெண்ணையும் நோகடிக்கிறார்கள்
    என்ன தான் நிறம் திருமணத்திற்கு தடை இல்லை என்றாலும் நடைமுறையில் நீங்கள் சொன்னதை போல் வெள்ளை தன அழகென்று நினைக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  5. 'பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை' - நான் ரசிக்கும் வரிகள்!

    பதிலளிநீக்கு
  6. இருவரும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் சிந்தனை உண்மைதான்..
    இதில் ஊடகங்களின் பங்கு மிகுதியாகவுள்ளது..

    கானல் நீரே!!
    உண்மையான நீர் என ஊடகங்கள் எடுத்துரைக்கின்றன

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா5:52 PM, மார்ச் 21, 2011

    சிவப்பும் ஒரு வண்ணம் தான், ஆனால் இங்கே சிவப்பு - அழகு ( சிவப்பழகு ) என திரிக்கப்பட்டு மூளை மழுங்கடிக்கும் வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நல்ல அலசல் சகோ!

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வுங்க கௌசல்யா.. உங்களுடைய மொத்த பதிவும், எனக்கு

    "கண்ணா கருமை நிறக் கண்ணா... உன்னை காணாத கண் இல்லையே..." இந்த பாடல் வரிகளைத் தான் நினைவு படுத்துகிறது..

    வாழ்த்துக்கள்..! தொடருங்கள்..! :-)

    பதிலளிநீக்கு
  10. மேக்கப் சாதனங்கள் முகத்துக்கும் கேடு. என் உறவினர் ஒருவர் இதை உபயோகித்து முகத்தில் கரும் புள்ளிகள் வந்து, பின்னர் பயாப்ஸி செய்ய வேண்டி வந்தது. வெளிநாட்டிலும் அழகு சாதனப் பொருள்கள் மீது மக்களுக்கு பயங்கர நாட்டம் உண்டு.
    நல்ல பதிவு. கௌஸ்.

    பதிலளிநீக்கு
  11. அறிவியல்படி சூரிய ஒளியில் வண்ணம் பெறும் எதுவும் வானவில் நிறங்களில் அதற்கு பிடிக்காத நிறத்தை வெளியே நிறுத்திவிடுகிறது. எந்த நிறத்தையும் கிரகித்துக் கொள்ளாத இயல்பான நிறமே கறுப்பு. தமிழர்களின் வண்ணமும் இதுவே. தாழ்வு மனப்பான்மையை தவிர்த்தவர்களிடம் கோவில் சிலையின் அழகு ஜொலிப்பதை கண்டுள்ளேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வருத்தப்பட வேண்டிய விசயம். இந்தத் தலைமுறையில் இப்படி நினைப்பது குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான‌ ப‌திவு,

    //நகைச்சுவை என்ற பெயரில் 'ரொம்ப பொங்க வச்சிட்டாங்க போல' என்பது போன்ற வசனங்கள் அந்நிறங் கொண்ட பெண்களின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்//

    கொடுமை என்ன‌வென்றால் ப‌ட‌த்தின் ஹீரோவே நன்கு பொங்க‌வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்

    //(முன்பு அதிகமாக திரையில் ரௌடி/திருடன் என்றால் கருப்பா காட்டுவார்கள்...!??)//

    இப்ப‌வும்தான், என்ன‌ இப்போது சுருட்டை கூந்த‌ல் கொஞ்ச‌ம் கூடுத‌லாக‌ இருக்கிற‌து

    //ஒரு விளம்பரத்தில் 7 நாட்களில் சிவப்பான பெண்ணுக்கு வேலையை கூப்பிட்டு கொடுப்பது போல காட்டுகிறார்கள்.//

    அதுவும் கிரீமை அப்ப‌ அப்ப‌ போட‌க்கூடாதாம், டெய்லி ப‌ய‌ன்ப‌டுத்தனுமாம்

    //அழகின் நிறம் சிவப்பு என்று எந்த வேதமும், அறிவியலும் வலியுறுத்தவில்லை. ஆனால் ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று ஆய்வுகள் கூறி வருகின்றன.//

    க‌ண்ண‌னும், சிவ‌னும் ம‌ட்டும் க‌ருப்பு

    பதிலளிநீக்கு
  14. //இப்படி மொத்த சமூகத்தையும் சிவப்புதான் சிறப்பு என்று ஒத்துக் கொள்ளவைக்கும் இந்த விளம்பரங்களை எடுப்பவர்களை வெளியிடுபவர்களை, எவ்வாறு கட்டுபடுத்த போகிறோம்....?! விளம்பரம் எடுக்க காரணமான கிரீம் தயாரிப்பவர்களை என்ன செய்ய போகிறோம்.....?! //

    இதே மாதிரி இதை குடித்தால் புத்திசாலி இருப்ப‌, இதை குடித்தால் உய‌ர‌மா வ‌ருவன்னு குழ‌ந்தைக‌ளுக்கு வ‌ருகிற‌ அனைத்து ஊக்க பான‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளும் சொல்லுகிற‌து. ந‌ம் ஊரின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் இவ‌ர்க‌ளின் வியாபார‌த்தில் பெரிய‌ பாதிப்பை கொண்டு வ‌ராத‌தால் இவ‌னுங்க‌ பேசாம‌ வாக்குறுதியா அள்ளித்த‌ள்ளுரானுங்க‌,. இதே பான‌ங்க‌ள் ம‌ற்ற‌ நாடுக‌ளில் விள‌ம்ப‌ர‌ம் செய்யும் போது மூளை வ‌ள‌ருதுன்னு சும்மா ஜ‌ஸ்ட் லைக் த‌ட் சொல்ல‌ முடியாது

    பதிலளிநீக்கு
  15. ////மனதளவில் நொறுங்கிபோகும் அத்தகையவர்களின் தன்னம்பிக்கை சிதறுவதை பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா ?! //

    அடுத்த‌வ‌ர்க‌ளை பற்றி இங்கே யார் க‌வ‌லைப்ப‌டுறா?? அவ‌ர‌வ‌ர் வாங்காம‌ விட்டாலே போதும்.

    ந‌ல்ல‌ ப‌திவிற்கு ந‌ன்றி.

    பதிலளிநீக்கு
  16. நிறம் என்பது மட்டுமே வாழ்க்கையாகாது என்பதை நிதானமாக அலசி பதிவிட்டுள்ளீர்கள். படித்த பின்னராவது பாவப்பட்ட மனங்கள் திருந்துமா? பெண்ணே தன மகனுக்கு பெண் பார்க்கும்போது சிவப்பாய் வேண்டும் என்பதை எப்படி ஏற்றுகொள்வது?

    பதிலளிநீக்கு
  17. @@ சங்கவி...

    நன்றி சதீஷ்.

    பதிலளிநீக்கு
  18. @@ வைகை said...

    //இந்த நிறம் சருமத்தை காக்க கடவுள் கொடுத்த வரம் என்றே நினைக்கிறேன்! அதிக வெயில் அல்லது அதிக குளிரை சிவப்பானவர்கள் தாங்க முடியாது! இதனால் பல தோல் வியாதிகள் அவர்களுக்கு வரும்//

    பலரும் சிறு வயதில் இப்படிப்பட்ட கிண்டல்களை சந்தித்து இருப்பார்கள் சகோ. நீங்க இந்த நிறம் பற்றி சொன்ன கருத்துக்களை அப்படியே ஒத்துக்கிறேன், அது உண்மையும் கூட. வயதானாலும் அவர்களின் தோல் மினுமினுப்பாக சுருக்கம் இல்லாமல் இருப்பதை பார்த்து இருக்கிறேன். இது ஒரு கொடுப்பினை என்பதை எல்லோரும் புரிந்துகொண்டால் கருப்பை வெறுக்க மாட்டார்கள், கொண்டாடுவார்கள்.

    உங்கள் கருத்திற்கு நன்றி வைகை.

    பதிலளிநீக்கு
  19. //உலக அழகிகளாக இந்திய அழகிகளை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதின் பின் இந்த தயாரிப்பாளர்களின் பங்கு இருக்கிறது என்று கூட ஒரு பேச்சு இருக்கிறது. //

    இதில் நிறைய உண்மையும் இருக்கும் போலிருக்கிறது!

    தமிழக, இந்திய சமூகத்தின் இழிநிலைக்கான மற்றுமொரு அடையாளம் இந்த நிறப்பற்று! சம்பந்தப்பட்டவர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பொறுப்பான பதிவு, வாழ்த்துக்கள் தோழி....

    பதிலளிநீக்கு
  20. @@ சௌந்தர்...

    ஆடை விசயத்தில் சிலர் அதை துக்கத்திற்கு என்று சொல்பவர்கள் உண்டு...!

    எனக்கு கருப்பு பிடிக்கும் என்பதற்காக இல்லை இந்த பதிவு, பலருக்கு வெறுப்பாக இருப்பது தவறு என்பதை சொல்லவே !! :))

    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  21. @@ வேடந்தாங்கல் - கருன்...

    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @@ தமிழ்க் காதலன்...

    //நிறம் பார்த்து தரம் பிரிக்கும் நிர்மூடத் தனம் நம்மில் நிச்சயம் அழிக்கப் பட வேண்டிய ஒன்று//

    உண்மை நிச்சயம் அழிக்கப்பட வேண்டும். அதை நிர்மூடத்தனம் என்று கண்டித்த உங்களுக்கு என் நன்றிகள் பல ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  23. @@ Harini Nathan said...

    //சிலவேளை பெற்றோர்கள் தன் மகள் கருப்பாய் இருக்கிறாள் வரன் கிடைக்குமோ என்று கவலை பட்டு அந்த பெண்ணையும் நோகடிக்கிறார்கள்//

    இது ரொம்ப கொடுமை ஹரிணி, வார்த்தை சாட்டையால் அந்த பெண்ணை விளாசி தள்ளுவார்கள். ஒரு பக்கம் திருமணம் தள்ளி போகும் நிலை, மற்றொரு புறம் பெற்றோர்களின்/சுற்றத்தாரின் வசை மொழிகள்.

    நிறத்தை பார்க்காமல் மனதை என்று பார்க்கபோகிரார்களோ தெரியவில்லை
    தோழி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  24. @@ middleclassmadhavi said...

    //'பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை'//

    இது தெரியவில்லையே இந்த நிறபேதம் பார்க்கும் மனிதர்களுக்கு...!

    புரிதலுக்கு நன்றி மாதவி.

    பதிலளிநீக்கு
  25. @@ முனைவர்.இரா.குணசீலன் said...

    //இதில் ஊடகங்களின் பங்கு மிகுதியாகவுள்ளது..//

    ஊடகங்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது என்பதே உண்மை.

    புரிதலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. @@ Balaji saravana said...

    //சிவப்பும் ஒரு வண்ணம் தான், ஆனால் இங்கே சிவப்பு - அழகு ( சிவப்பழகு ) என திரிக்கப்பட்டு மூளை மழுங்கடிக்கும் வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது//

    எப்போ இந்த மழுங்கடிக்கும் தொடங்கியது என்பதை பற்றி எழுதினா ஒரு தொடர் போட வேண்டும் போல அவ்வளவு இருக்கு இந்த நிற பாகுபாடு பிரச்சனை.

    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  27. @@ Ananthi (அன்புடன் ஆனந்தி) said...


    //"கண்ணா கருமை நிறக் கண்ணா... உன்னை காணாத கண் இல்லையே..." இந்த பாடல் வரிகளைத் தான் நினைவு படுத்துகிறது.. //

    சமீபத்தில் இந்த பாடலின் படம் தொலைகாட்சியில் பார்த்தேன். நிறத்தால் ஒரு பெண் படும் வேதனை கொடுமை.

    வந்ததுக்கு ஒரு பாட்டு பாடிட்டு போயிட்டீங்க ரொம்ப நன்றிப்பா :)))

    பதிலளிநீக்கு
  28. @@ vanathy said...

    //மேக்கப் சாதனங்கள் முகத்துக்கும் கேடு. என் உறவினர் ஒருவர் இதை உபயோகித்து முகத்தில் கரும் புள்ளிகள் வந்து, பின்னர் பயாப்ஸி செய்ய வேண்டி வந்தது.//

    அட கஷ்டமே. அவங்க இப்போ எப்படி இருக்காங்க பழைய முகம் மாதிரி இப்ப இருக்கா ?

    இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கு வாணி, நம்ம மக்கள் பட்டும் திருந்த மாட்டாங்க.

    //வெளிநாட்டிலும் அழகு சாதனப் பொருள்கள் மீது மக்களுக்கு பயங்கர நாட்டம் உண்டு.//

    எல்லா இடத்திலும் மக்கள் ஒன்றுதான் போல.மேக்கப் போடுவது பரவாஇல்லை ஆனா நிறத்தை மாற்றணும் என்று கிரீம் உபயோகிப்பவங்கள் அதை தவிர்க்கணும்.

    நன்றி வாணி.

    பதிலளிநீக்கு
  29. @@ சாகம்பரி said...

    //அறிவியல்படி சூரிய ஒளியில் வண்ணம் பெறும் எதுவும் வானவில் நிறங்களில் அதற்கு பிடிக்காத நிறத்தை வெளியே நிறுத்திவிடுகிறது. எந்த நிறத்தையும் கிரகித்துக் கொள்ளாத இயல்பான நிறமே கறுப்பு.//

    உண்மை.

    // தமிழர்களின் வண்ணமும் இதுவே. தாழ்வு மனப்பான்மையை தவிர்த்தவர்களிடம் கோவில் சிலையின் அழகு ஜொலிப்பதை கண்டுள்ளேன்.//

    இது தான் முக்கியம் சிலர் தாழ்வு மனப்பான்மையால் தவித்து விடுவார்கள், அது தேவையே இல்லை. இதை புரிந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்கள் நீங்க சொல்வது போல் மிக அழகானவர்கள்.

    உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன், பேர் வித்தியாசமா அழகா இருக்கிறது. உங்களின் புரிதலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. @@ அப்பாதுரை said...

    //வருத்தப்பட வேண்டிய விசயம். இந்தத் தலைமுறையில் இப்படி நினைப்பது குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.//

    அவர்களை குறை சொல்லி தவிர்ப்பது வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் மாநிறமா இருப்பவர்களும் இன்னும் நிறமாகனும் என்று சிவப்பழகு கிரீம்களை தேடி ஓடுவது இந்த தலைமுறையில் மிக அதிகம் என்றே கருதுகிறேன்.

    அப்படி இல்லாமலா இப்போது ஆண்களுக்கும் தனியாக சிவப்பழகு கிரீம்கள் வந்திருக்கும்...?!

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  31. @@ jothi said...

    //இதே மாதிரி இதை குடித்தால் புத்திசாலி இருப்ப‌, இதை குடித்தால் உய‌ர‌மா வ‌ருவன்னு குழ‌ந்தைக‌ளுக்கு வ‌ருகிற‌ அனைத்து ஊக்க பான‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளும் சொல்லுகிற‌து.//

    உங்க ஆதங்கம் நன்றாக புரிகிறது, இப்படி குழந்தைகளின் உணவு விசயத்திலும் விளையாடுபவர்களை என்னவென்று சொல்வது...:((

    // ந‌ம் ஊரின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் இவ‌ர்க‌ளின் வியாபார‌த்தில் பெரிய‌ பாதிப்பை கொண்டு வ‌ராத‌தால் இவ‌னுங்க‌ பேசாம‌ வாக்குறுதியா அள்ளித்த‌ள்ளுரானுங்க‌,.//

    அதுதான் ஏன் என்று கேட்கிறேன், கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வந்தால் என்ன ?

    //இதே பான‌ங்க‌ள் ம‌ற்ற‌ நாடுக‌ளில் விள‌ம்ப‌ர‌ம் செய்யும் போது மூளை வ‌ள‌ருதுன்னு சும்மா ஜ‌ஸ்ட் லைக் த‌ட் சொல்ல‌ முடியாது//

    நம்ம நாட்டை நினைச்சு இப்பதான் வருத்தமா இருக்கு.

    மக்களை பற்றி அதிகம் சிந்திக்கிற தலைமை என்று வருமோ தெரியவில்லை.

    உங்களின் கருத்துக்களை மிக விளக்கமாக பொறுமையாக இங்கே பகிர்ந்ததுக்கு மகிழ்கிறேன்.

    இதற்க்கு உங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  32. @@ FOOD said...

    //படித்த பின்னராவது பாவப்பட்ட மனங்கள் திருந்துமா?//

    கொஞ்சம் யோசிச்சா கூட போதுமே அண்ணா .

    //பெண்ணே தன மகனுக்கு பெண் பார்க்கும்போது சிவப்பாய் வேண்டும் என்பதை எப்படி ஏற்றுகொள்வது?//

    என்ன சொல்ல பெண்ணே பெண்ணுக்கு எதிரி ! கேட்டா அடுத்த தலைமுறையினர் நிறமா இருக்க வேண்டாமா என்று சமாளிப்பார்கள். கருப்பா இருந்ததால் எதை இழந்தார்கள் என்று தெரியவில்லை.

    கருத்திற்கு நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  33. @@ பத்மஹரி said...

    //தமிழக, இந்திய சமூகத்தின் இழிநிலைக்கான மற்றுமொரு அடையாளம் இந்த நிறப்பற்று! சம்பந்தப்பட்டவர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.//

    சம்பந்தப்பட்டவர்கள் மாற எண்ணினாலும் சமூகமும், ஊடகமும் மாற விடாது...இனி மாறும் என்று நம்புவோம்.

    வாழ்த்து எதுக்குப்பா ? சரி வாழ்த்துரீங்க வேண்டாம் சொல்லகூடாது, ஏத்துக்கிறேன் . நன்றி ஹரி. :))

    பதிலளிநீக்கு
  34. நிறத்தில் என்னங்க இருக்கு,குணத்தில் சுத்த தங்கமாக ஜொலிக்கனும்,அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  35. //சிவப்பு அழகான உயர்ந்த தகுதி என்றும் கறுப்பு அவமானச்சின்னம் போல ஏன் பார்க்கப்படவேண்டும்//
    சபாஷ்... ஆனால் இது எப்பவும் மாறும்னு தோணலை தோழி... கதைகளிலும் கவிதைகளிலும் சினிமாவிலும் சின்ன திரையிலும் கூட இது தானே அனுதினமும் போதிக்கப்படுகிறது...

    //குழந்தை கருப்பா பிறந்துவிட்டதே//
    என் தோழியின் பிள்ளையை பார்த்து ஒருவர் இப்படி கூற எனக்கு கோபம் வந்தது... மெலனின் குறைபாடே வெள்ளை நிறம்... ஒரு குறை பாட்டை கொண்டாடுவது பைத்தியகாரத்தனம் என முகத்தில் அடித்தாற் போல் கூறினேன்... என்னை "பைத்தியமா" என்பது போல் பார்த்தது தான் மிஞ்சியது...:(

    பதிலளிநீக்கு
  36. @@ சே.குமார்...

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  37. @@ asiya omar said...

    //நிறத்தில் என்னங்க இருக்கு,குணத்தில் சுத்த தங்கமாக ஜொலிக்கனும்//

    அழகா சொல்லிடீங்க தோழி.

    நன்றி

    பதிலளிநீக்கு
  38. @@ அப்பாவி தங்கமணி said...

    //கதைகளிலும் கவிதைகளிலும் சினிமாவிலும் சின்ன திரையிலும் கூட இது தானே அனுதினமும் போதிக்கப்படுகிறது... //

    இதை தடுக்க ஏன் யாரும் முயல்வது இல்லை என்று தெரியவில்லை.

    //என் தோழியின் பிள்ளையை பார்த்து ஒருவர் இப்படி கூற எனக்கு கோபம் வந்தது... மெலனின் குறைபாடே வெள்ளை நிறம்... ஒரு குறை பாட்டை கொண்டாடுவது பைத்தியகாரத்தனம் என முகத்தில் அடித்தாற் போல் கூறினேன்... என்னை "பைத்தியமா" என்பது போல் பார்த்தது தான் மிஞ்சியது..//

    இந்த சமூகம் இப்படி சில வேண்டாத விஷங்களை(விசயங்களை) மனதில் இருத்தி வைத்திருக்கிறது. மாற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கம் பெருமூச்சுடன் திருப்தி பட்டு கொள்கிறது.

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  39. என் நிறத்துக்கு வக்காலத்து வாங்கிய நண்பிக்கு எனது நன்றிகள்...நான் காதல்வயப்படும் முன் எனக்கும் தாழ்வுமனப்பான்மை இருந்தது உண்மை... இப்போது இல்லை... வைரமுத்து ரொம்ப அழகாக ஒரு வரி சொல்லி இருப்பார்.. இந்த கட்டுரையை வாசிக்கும் போது அந்த வரி ஞாபகத்துக்கு வந்தது...

    என் வீட்டு கண்ணாடி என்னை ஒரு போதும் கருப்பாக காட்டியது இல்லை...

    அவர் சொன்னதைதான் நானும் பாலோ செய்கின்றேன்

    பதிலளிநீக்கு
  40. கருப்பை பற்றிய தவறான புரிதலுக்கு நல்ல விளக்கவுரை.
    நல்லதொரு கட்டுரை

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...